பாடல் #1252

பாடல் #1252: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தனிநாய கன்றனோ டென்னெஞ்ச நாடி
இனியா ரிருப்பிட மேழுல கென்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை யேந்திக்
கனியா நினைவதென் காரண மம்மையே.

விளக்கம்:

பாடல் #1251 இல் உள்ளபடி இறைவனோடு ஏகாந்தத்தில் தனித்து வீற்றிருக்கும் கிடைப்பதற்கு அரிய பேறைப் பெற்று எமது தலைவனாகிய அவனோடு எப்போதும் ஏகாந்தத்தில் இருப்பதையே எமது நெஞ்சம் விரும்புகின்றது. இந்தப் பேறைப் பெற்று பேரின்பத்தை அனுபவித்தவர்களும் இறைவனோடு தாங்கள் ஏகாந்தத்தில் சேர்ந்து இருக்கின்ற இடம் ஏழு உலகங்களும் என்று கூறுவார்கள். இந்தப் பேற்றை யாம் பெறுவதற்கு காரணம் பனிபடர்ந்து புத்தம் புதிதாகப் பூத்து மலர்ந்திருக்கும் வாசனை மிக்க மலர்களை கையில் ஏந்திச் சென்று எமது அம்மையாகிய இறைவியின் மீதுள்ள பேரன்பினால் கசிந்து உருகிய உள்ளத்தோடு அவளை நினைத்து எப்போதும் வணங்கியதை அவள் ஏற்றுக் கொண்டு அருளியதால் ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.