பாடல் #632

பாடல் #632: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

போதுகந் தேறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் உமையவள் காண ஆனந்த நடனம் புரிபவனும் அழகிய மலரின் நறுமனம் கமழும் படர்ந்த சடையுடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகள் எப்படி இருக்கும் என்று காண விருப்பம் கொண்டு தேடுபவர்கள் அமரர்களின் தலைவனாகிய இறைவன் இருக்கும் இடத்திற்கே செல்வார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு என்ன வேண்டும் என்று அறிந்து அதை அருள்புரிவான் சிவபெருமான்.

பாடல் #633

பாடல் #633: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேரலு மாமே.

விளக்கம்:

சிவத்தின் திருவடியை அன்போடு பற்றிக்கொண்டு அவரின் புகழை கற்று அறிந்துகொண்டு அவரின் சிறப்புகளிலேயே எண்ணத்தை வைத்து இருப்பவர்களை இறைவனிடம் இருக்கும் முனிவரெல்லாம் எதிர்கொண்டு அழைப்பார்கள். அவர்கள் மனத் தெளிவு பெற்று சிவபதம் அடைவார்கள்.

பாடல் #634

பாடல் #634: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

விளக்கம்:

சிவபெருமானை நோக்கித் தன்னை வருத்தி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்பவர்களை தேவர்களுக்கு அரசனாக இருந்து பிறவியில்லா உலகத்திற்கு செல்வார் இவர் என குளிர்ந்த சந்தனத்தால் ஆன முரசும் புல்லாங்குழலும் இசைத்துக் கூற சிவபெருமானின் அருளால் இன்பம் பெறுவார்கள்.

கருத்து: சிவனை நோக்கி ஆசனங்கள் வழியாகத் தவம் செய்தவர் பிறவியில்லா நிலையை அடைவர்.

பாடல் #635

பாடல் #635: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

விளக்கம்:

பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் சிவகதி சென்று அடையும் காலத்தில் பூரண கும்பத்தோடு தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து பொன் போல போற்றத்தக்க எங்கள் தலைவர் இவர் என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்து இருப்பார்கள்.

பாடல் #636

பாடல் #636: மூன்றாம் தந்திரம் – 10. அட்டாங்க யோகப் பேறு (அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)

சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

விளக்கம்:

பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடி சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவதால் எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று அவரின் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானை தேவர்கள் தரிசிப்பார்கள்.

பாடல் #618

பாடல் #618: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

சமாதிய மாதியிற் றான்சொல்லக் கேட்டிற்
சமாதிய மாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதிய மாதியில் தங்கினோர்க் கன்றே
சமாதிய மாதி தலைப்படுந் தானே.

விளக்கம்;

அட்டாங்க யோகத்தில் கூறியுள்ள இயமம் முதலான ஏழு யோகங்களையும் (பாடல் #549 இல் உள்ளபடி) முறையாக செய்வது மட்டுமன்றி அந்த யோகங்களையும் தவறாமல் கடைபிடித்தால் எட்டாவது யோகமான சமாதியும் கைகூடும். அவ்வாறு கைகூடிவிட்டால் எட்டுவித சித்திகளும் கைவரப் பெறும்.

பாடல் #619

பாடல் #619: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடில்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்தமி லாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே.

விளக்கம்;

சக்தியாகிய ஒளியையும் சிவமாகிய ஒலியையும் புருவமத்தியில் ஒருமுகப்படுத்தி ஆழ்ந்து இருந்தால் அட்டாங்க யோகத்தின் இறுதியான சமாதி கைகூடும். அவ்வாறு சமாதி நிலையை அடைந்துவிட்டால் அழிவில்லாத அறிவின் உண்மைப் பொருளான சிவம் அழகிய ஜோதியாய் தமக்குள்ளேயே தோன்றிடும்.

பாடல் #620

பாடல் #620: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

விளக்கம்;

இறைவனையே சிந்தித்திருக்கும் மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்கும். இறைவனை சிந்திக்காத மனம் எங்கிருக்கின்றதோ அங்கு பிராணவாயு நிலைத்து இருக்காது. இறைவனையே நினைத்து பேரானந்தத்தில் இருப்பவர்களின் மனதோடு இறைவனும் கலந்து இருப்பான்.

பாடல் #621

பாடல் #621: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதியிருப் பார்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

விளக்கம்:

குதிரையில் ஏறி பல இடங்களைச் சுற்றிப் பார்த்து புல்வெளியில் ஓடவிட்டு பின்பு குதிரையை பசுமையான மலையடிவாரத்தில் கட்டி வைப்பது போல மனமாகிய குதிரையை பிராணவாயுவாகிய கடிவாளத்தின் மூலம் மேல் நோக்கி செலுத்தி சுழுமுனை சேரும் இடத்தையும் அதைச் சுற்றியுள்ள தலை உச்சியையும் சுற்றிப் பார்த்துவிட்டு தலை உச்சிக்கு மேலுள்ள வெற்று வெளியில் செலுத்தி அங்கே வியாபித்திருக்கின்ற சிவபெருமானிடம் கட்டி வைத்து அதன் மூலம் இறைவனை கண்டு உணர்ந்து இறை நினைப்பிலேயே லயித்து இருப்பது சமாதி நிலை ஆகும்.

பாடல் #622

பாடல் #622: மூன்றாம் தந்திரம் – 9. சமாதி (உயிரும் இறைவனும் ஒன்றி இருத்தல்)

மூல நாடி முகட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பீர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.

விளக்கம்:

மூலாதாரத்திருந்து தலை உச்சிக்குச் செல்லும் பாதையின் நடுவில் இருக்கும் கண், காது, மூக்கு, நாக்கு ஆகிய நான்கு உணர்வுகளும் ஒன்று கூடி இருக்கும் புருவ மத்தியில் மனதை வைத்து தலைக்கு உச்சியிலுள்ள சகஸ்ரதளத்திற்கு மேலே அண்ட வெளியில் வியாபித்திருக்கும் சிவபெருமானைத் தரிசித்தப் பிறகு இறப்பு எனும் எண்ணம் கனவிலும் இல்லை.