பாடல் #1633

பாடல் #1633: ஆறாம் தந்திரம் – 6. தவ தூடணம் (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஓதலும் வேண்டா முயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டா மெய்காய மிடங்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓதலும வெணடா முயிரககுயி ருளளுறறாற
காதலும வெணடா மெயகாய மிடஙகணடாற
சாதலும வெணடாஞ சமாதியைக கூடினாற
பொதலும வெணடாம புலனவழி பொகாரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓதலும் வேண்டாம் உயிர்க்கு உயிர் உள் உற்றால்
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால்
சாதலும் வேண்டாம் சமாதியை கூடினால்
போதலும் வேண்டாம் புலன் வழி போகார்க்கே.

பதப்பொருள்:

ஓதலும் (மந்திரங்களை ஓதுதல்) வேண்டாம் (தேவை இல்லை) உயிர்க்கு (தங்களின் உயிருக்கு) உயிர் (உயிராக) உள் (உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை) உற்றால் (உணர்ந்து அடைந்து விட்டால்)
காதலும் (எந்த விதமான விருப்பங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) மெய் (அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள்) காயம் (தங்களின் உடலையே) இடம் (கோயிலாக) கண்டால் (ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால்)
சாதலும் (அழிவு என்பதே) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (கைவரப் பெற்று விட்டால்)
போதலும் (இறைவனை தேடி எங்கும் போவது) வேண்டாம் (தேவை இல்லை) புலன் (ஐந்து புலன்களும்) வழி (காட்டுகின்ற வழிகளில்) போகார்க்கே (போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு).

விளக்கம்:

தங்களின் உயிருக்கு உயிராக உள்ளுக்குள் இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைந்து விட்டால் மந்திரங்களை ஓத வேண்டியது இல்லை. அரியதான பேருண்மையாகிய சிவப் பரம்பொருள் தங்களின் உடலையே கோயிலாக ஏற்றுக் கொண்டு வீற்றிருந்தால் எந்த விதமான தேவைகளும் இல்லை. சமாதி நிலையை கைவரப் பெற்று விட்டால் உடலுக்கு அழிவு என்பதே இருக்காது. ஐந்து புலன்களும் காட்டுகின்ற வழிகளில் போகாமல் அவற்றை தன் இஷ்டத்திற்கு மாற்றி இருப்பவர்களுக்கு இறைவனை தேடி எங்கும் போக வேண்டியது இல்லை.

பாடல் #1634

பாடல் #1634: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதியைக் கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற் றிருக்கிலே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததவும வெணடாங கருததறிந தாறினாற
சததமும வெணடாஞ சமாதியைக கூடினாற
சுததமும வெணடாந துடககறறு நிறறலாற
சிததமும வெணடாஞ செயலற றிருககிலெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தவும் வேண்டாம் கருத்து அறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதியை கூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கு அற்று நிற்றல் ஆல்
சித்தமும் வேண்டாம் செயல் அற்று இருக்கிலே.

பதப்பொருள்:

கத்தவும் (மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க) வேண்டாம் (தேவை இல்லை) கருத்து (மாயை நீங்கிய உண்மையை) அறிந்து (அறிந்து) ஆறினால் (மனம் அமைதி அடைந்து விட்டால்)
சத்தமும் (மனதில் எந்த விதமான எண்ணங்களும்) வேண்டாம் (தேவை இல்லை) சமாதியை (சமாதி நிலையை) கூடினால் (அடைந்து விட்டால்)
சுத்தமும் (வெளிப்புற சுத்தங்கள்) வேண்டாம் (தேவை இல்லை) துடக்கு (உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும்) அற்று (இல்லாமல்) நிற்றல் (நிற்கின்ற) ஆல் (நிலையை அடைந்து விட்டால்)
சித்தமும் (சிந்தனை செய்வதற்கு எதுவுமே) வேண்டாம் (தேவை இல்லை) செயல் (செயல்) அற்று (இல்லாமல்) இருக்கிலே (இருக்கின்ற நிலையை அடைந்து விட்டால்).

விளக்கம்:

மாயை நீங்கிய உண்மையை அறிந்து மனம் அமைதி அடைந்து விட்டால் மந்திரங்களை அசபையாகவோ உரக்கவோ சொல்லி செபிக்க வேண்டியது இல்லை. சமாதி நிலையை அடைந்து விட்டால் எந்த விதமான எண்ணங்களும் இருக்காது. உள்ளுக்குள் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் நிற்கின்ற நிலையை அடைந்து விட்டால் வெளிப்புற சுத்தங்கள் எதுவும் தேவை இல்லை. சிந்தனை செய்வதற்கு எதுவுமே தேவை இருக்காது செயலே இல்லாமல் இருக்கின்ற நிலையை அடைந்து விட்டதால்.

பாடல் #1635

பாடல் #1635: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விளைவறி வாரபணடை மெயததவஞ செயவார
விளைவறி வாரபணடை மெயயுரை செயவார
விளைவறி வாரபணடை மெயயறஞ செயவார
விளைவறி வாரவிணணின மணணினமிக காரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விளைவு அறிவார் பண்டை மெய் தவம் செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் உரை செய்வார்
விளைவு அறிவார் பண்டை மெய் அறம் செய்வார்
விளைவு அறிவார் விண்ணின் மண்ணின் மிக்காரே.

பதப்பொருள்:

விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) தவம் (தவத்தை) செய்வார் (செய்கின்றார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையாக) உரை (தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்கின்ற வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக்) செய்வார் (கொடுப்பார்கள்)
விளைவு (தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) பண்டை (ஆதிகாலத்தில் இருந்து) மெய் (உண்மையான) அறம் (தர்மத்தை) செய்வார் (செய்தவர்கள் ஆகின்றார்கள்)
விளைவு (அதனால் தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை) அறிவார் (அறிந்து உணர்ந்தவர்களே) விண்ணின் (விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும்) மண்ணின் (மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும்) மிக்காரே (உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்).

விளக்கம்:

தவத்தினால் கிடைக்கும் பயன் இது என்பதை அறிந்து உணர்ந்தவர்களே ஆதிகாலத்தில் இருந்து உண்மையான தவத்தை செய்கின்றார்கள். தவத்தினால் கிடைக்கும் பயனை அறிந்து உணர்ந்து கொண்டவர்கள் அந்த பயனை மற்றவர்களும் பெறுவதற்காக தாம் அறிந்து கொண்ட தவத்தை செய்யும் வழிமுறைகளை தகுதியானவர்களும் அறிந்து கொள்ளும் படி காட்டிக் கொடுக்கின்றார்கள். இப்படி மற்றவர்களும் பயன் பெற வழி வகுத்துக் கொடுத்ததினால் உண்மையான தர்மத்தை செய்தவர்கள் ஆகின்றார்கள். ஆகவே இவர்களே விண்ணுலகில் இருக்கும் தேவர்களுக்கும் மண்ணுலகில் இருக்கின்ற உயிர்களுக்கும் உயர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்.

பாடல் #1636

பாடல் #1636: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதமிவை களைந்
தூடிற் பலவுல கோரெத்தவ மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கூடித தவஞசெயது கணடென குரைகழல
தெடித தவஞசெயது கணடென சிவகதி
வாடித தவஞசெயவ தெதமிவை களைந
தூடிற பலவுல கொரெததவ மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கூடி தவம் செய்து கண்டேன் குரை கழல்
தேடி தவம் செய்து கண்டேன் சிவ கதி
வாடி தவம் செய்வது ஏதம் இவை களைந்து
ஊடில் பல உலகோர் எத் தவம் ஆமே.

பதப்பொருள்:

கூடி (மனம் ஒன்று கூடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (தரிசித்தேன்) குரை (இறைவனின் பேரழகு வாய்ந்த) கழல் (திருவடிகளை)
தேடி (அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி) தவம் (தவம்) செய்து (செய்து) கண்டேன் (கண்டு) சிவ (சிவனின்) கதி (திருவடியே சரணாகதியாக அடைந்தேன்)
வாடி (இவ்வாறு மனம் ஒன்று படாமலும், இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், உடலை வருத்திக் கொண்டும், வெறும் உலக ஆசைகளுக்காகவும்) தவம் (தவம்) செய்வது (செய்வது) ஏதம் (குற்றமாகும்) இவை (இவைகளை எல்லாம்) களைந்து (நீக்கி விட்டு தவம் செய்யாமல்)
ஊடில் (தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு) பல (பல) உலகோர் (உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம்) எத் (எந்த) தவம் (தவம்) ஆமே (ஆகும்?).

விளக்கம்:

மனம் ஒன்று கூடி தவம் செய்து இறைவனின் பேரழகு வாய்ந்த திருவடிகளை தரிசித்தேன். அவரை அடைய வேண்டும் என்று எமக்குள்ளே தேடி தவம் செய்து கண்டு சிவனின் திருவடியே சரணாகதியாக அடைந்தேன். இவ்வாறு மனம் ஒன்று படாமலும் இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும் உடலை வருத்திக் கொண்டும் வெறும் உலக ஆசைகளுக்காகவும் தவம் செய்வது குற்றமாகும். இவைகளை எல்லாம் நீக்கி விட்டு தவம் செய்யாமல் தமக்குள்ளே ஒன்றுக்கொன்று மாறுபட்ட சிந்தனைகளால் குழப்பிக் கொண்டு பல உலகத்தவர்கள் செய்கின்றதெல்லாம் எந்த தவம் ஆகும்? ஆகாது.

பாடல் #1637

பாடல் #1637: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

மனத்துறை மாக்கட லேழுங்கை நீங்கித்
தவத்திடை யாளர்தஞ் சர்வத்து வந்தார்
பவத்திடை யாளரவர் பணி கேட்கில்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததுறை மாககட லெழுஙகை நீஙகித
தவததிடை யாளரதஞ சரவதது வநதார
பவததிடை யாளரவர பணி கெடகில
முகததிடை நநதியை முநதலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்து உறை மா கடல் ஏழும் கை நீங்கி
தவத்து இடை ஆளர் தம் சர்வத்து வந்தார்
பவத்து இடை ஆளர் அவர் பணி கேட்கில்
முகத்து இடை நந்தியை முந்தலும் ஆமே.

பதப்பொருள்:

மனத்து (மனதில்) உறை (வீற்றிருக்கின்ற) மா (மாபெரும்) கடல் (கடலாகிய) ஏழும் (மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய ஏழு விதமான மாயைகளாகிய) கை (குற்றங்களும்) நீங்கி (நீங்கி போகும் படி)
தவத்து (தாம் செய்கின்ற தவத்தில்) இடை (தகுதி) ஆளர் (பெற்றவர்கள்) தம் (தமது) சர்வத்து (தவத்தில் முழுமை பெற்று) வந்தார் (வந்தார்கள்)
பவத்து (வாழ்க்கையின்) இடை (நடுவில்) ஆளர் (சிக்கிக் கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள்) அவர் (தமது தவத்தில் முழுமை பெற்ற அவர்களின்) பணி (தொண்டு என்ன விதம் என்பதை) கேட்கில் (கேட்டுத் தெளிந்து அதை கடை பிடித்து தாமும் தவம் புரிந்தால்)
முகத்து (தங்களின் முகத்தின்) இடை (நடுவில்) நந்தியை (குருநாதராகிய இறைவனை) முந்தலும் (தரிசிக்கும்) ஆமே (நிலையை பெறுவார்கள்).

விளக்கம்:

மனதில் வீற்றிருக்கின்ற மாபெரும் கடலாகிய மாயை, காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன் ஆகிய ஏழு விதமான மாயைகளாகிய குற்றங்களும் நீங்கி போகும் படி தாம் செய்கின்ற தவத்தில் தகுதி பெற்றவர்கள் தமது தவத்தில் முழுமை பெற்று வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களிடம் வாழ்க்கையின் நடுவில் சிக்கிக் கொண்டு தவம் செய்ய முயற்சி செய்கின்றவர்கள் அவர்கள் செய்த தொண்டு என்ன விதம் என்பதை கேட்டுத் தெளிந்து அதை கடை பிடித்து தாமும் தவம் புரிந்தால் தங்களின் முகத்தின் நடுவில் குருநாதராகிய இறைவனை தரிசிக்கும் நிலையை பெறுவார்கள்.

பாடல் #1638

பாடல் #1638: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

மனத்திடை நின்ற மதிவா ளுருவி
யினத்திடை நீக்கி யிரண்டற வீர்ந்து
புனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்
றவத்திடை யாறொளி தன்னொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததிடை நினற மதிவா ளுருவி
யினததிடை நீககி யிரணடற வீரநது
புனததிடை நஞசையும பொக மறிததாற
றவததிடை யாறொளி தனனொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்து இடை நின்ற மதி வாள் உருவி
இனத்து இடை நீக்கி இரண்டு அற ஈர்ந்து
புனத்து இடை நஞ்சையும் போக மறித்தால்
தவத்து இடை ஆறு ஒளி தன் ஒளி ஆமே.

பதப்பொருள்:

மனத்து (மனதிற்கு) இடை (நடுவில்) நின்ற (நிற்கின்ற) மதி (அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய) வாள் (வாளினை) உருவி (தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து)
இனத்து (தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய) இடை (தளைகளையெல்லாம்) நீக்கி (அறுத்து நீக்கி) இரண்டு (தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை) அற (அறுத்து) ஈர்ந்து (இறைவனோடு ஒன்றாக சேர்ந்து)
புனத்து (எவ்வளவு நீர் இருந்தாலும்) இடை (அதற்கு நடுவில்) நஞ்சையும் (ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல்) போக (போகும் படி) மறித்தால் (தடுத்து நிறுத்தினால்)
தவத்து (தாம் செய்து வருகின்ற தவத்தின்) இடை (மேன்மை பெற்ற நிலையில்) ஆறு (தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய) ஒளி (ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே) தன் (தமது) ஒளி (ஒளியும்) ஆமே (ஆகி விடும்).

விளக்கம்:

மனதிற்கு நடுவில் நிற்கின்ற அறிவு வடிவான இறைவனின் ஞானமாகிய வாளினை தமது தவத்தின் வழியாக உருவி எடுத்து தம்மை சூழ்ந்து இருக்கின்ற பந்த பாசங்களாகிய தளைகளையெல்லாம் அறுத்து நீக்கி, தாமும் இறைவனும் வேறு வேறு என்கின்ற இருமைத் தத்துவத்தை அறுத்து, இறைவனோடு ஒன்றாக சேர்ந்து, எவ்வளவு நீர் இருந்தாலும் அதற்கு நடுவில் ஒரு துளி நஞ்சை விட்டாலும் மொத்த நீரும் விஷமாகி விடுவது போல ஆசைகள் இல்லாத மனதில் ஒரு சிறு ஆசையும் இனி சேர்ந்து விடாமல் போகும் படி தடுத்து நிறுத்தினால், தாம் செய்து வருகின்ற தவத்தின் மேன்மை பெற்ற நிலையில் தமக்குள் இருக்கும் ஆறு ஆதாரங்களாகிய ஒளிகளின் மூலம் ஏறிச் சென்று, ஏழாவது சக்கரமாகிய சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் பேரொளியாகிய இறைவனாகவே தமது ஒளியும் ஆகி விடும்.

பாடல் #1639

பாடல் #1639: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கு முனிவ னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்றவந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒதது மிகவு நினறானை யுரைபபது
பததி கொடுககும பணிநதடி யாரதொழ
முததி கொடுககு முனிவ னெனுமபதஞ
சததான செயவது தானறவந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒத்து மிகவும் நின்றானை உரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் எனும் பதம்
சத்து ஆன செய்வது தான் தவம் தானே.

பதப்பொருள்:

ஒத்து (தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும்) மிகவும் (பேரான்மாவாக மிகுந்து) நின்றானை (தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின்) உரைப்பது (புகழ்களை தாம் போற்றி உரைப்பது)
பத்தி (பக்தியை) கொடுக்கும் (கொடுக்கும்) பணிந்து (அதனுடன் பணிவும் சேர்ந்து) அடியார் (அடியவர்கள்) தொழ (இறைவனை தொழும் போது)
முத்தி (அதுவே முக்தியையும்) கொடுக்கும் (கொடுப்பதற்கு காரணமாகிய) முனிவன் (முனிவன்) எனும் (என்கின்ற) பதம் (பக்குவத்தில்)
சத்து (தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு) ஆன (சிறப்பாக) செய்வது (செய்வது) தான் (தான்) தவம் (தவத்தை) தானே (தானாகவே கொடுக்கும்).

விளக்கம்:

தம்முடைய பக்குவத்திற்கு இணையாக கூடவே இருந்தாலும் பேரான்மாவாக மிகுந்து தம்மோடு சேர்ந்தே நிற்கின்றவனாகிய இறைவனின் புகழ்களை தாம் போற்றி உரைப்பது பக்தியை கொடுக்கும். அதனுடன் பணிவும் சேர்ந்து அடியவர்கள் இறைவனை தொழும் போது முனிவன் என்கின்ற பக்குவத்தில் தாம் செய்கின்ற சாதகத்தை இறை சக்தியோடு சிறப்பாக செய்வது முக்தியை கொடுப்பதற்கு காரணமாகிய தவத்தை தானாகவே கொடுக்கும்.

பாடல் #1640

பாடல் #1640: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக் கென்றெண்ணி
மலர்தொட்டுக் கண்டேன் வரும்பலன் காணென்
றலைகெட்ட நூல்கண்டு தாழ்ந்தேனென் னுள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் றவங்கண்ட வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இலைதொடடுப பூபபறித தெநதைக கெனறெணணி
மலரதொடடுக கணடென வருமபலன காணென
றலைகெடட நூலகணடு தாழநதெனென னுளளந
தலைதொடடுக கணடென றவஙகணட வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இலை தொட்டு பூ பறித்து எந்தைக்கு என்று எண்ணி
மலர் தொட்டு கண்டேன் வரும் பலன் காண் என்று
தலை கெட்ட நூல் கண்டு தாழ்ந்தேன் என் உள்ளம்
தலை தொட்டு கண்டேன் தவம் கண்ட ஆறே.

பதப்பொருள்:

இலை (பூச்செடிகளில் உள்ள இலைகளை) தொட்டு (தொட்டு) பூ (அதில் மலர்ந்து இருக்கின்ற பூக்களை) பறித்து (பறித்து எடுத்து) எந்தைக்கு (எமது தந்தையாகிய இறைவனுக்கு சாற்ற வேண்டும்) என்று (என்று) எண்ணி (எண்ணிக் கொண்டு)
மலர் (மலர்களை) தொட்டு (கோர்த்து மாலையாக்கி சாற்றி) கண்டேன் (பார்த்துக் கொண்டு இருந்தேன்) வரும் (அதனால் கிடைக்கின்ற) பலன் (பலனை) காண் (பார்க்கலாம்) என்று (என்று)
தலை (உண்மை இல்லாத) கெட்ட (தவறான கருத்துக்களை சொல்லுகின்ற) நூல் (நூல்களில்) கண்டு (உள்ளதை கண்டு) தாழ்ந்தேன் (தாழ்ந்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன்) என் (அப்போது எனது) உள்ளம் (உள்ளத்திற்குள்ளே)
தலை (வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால் தலை உச்சியில் இருக்கின்ற) தொட்டு (பேரொளியாகிய இறை சக்தியை தொட்டு அடைந்து) கண்டேன் (கண்டு கொண்டேன்) தவம் (தவத்தை) கண்ட (காணுக்கின்ற) ஆறே (வழி முறை இதுவே என்று கண்டு உணர்ந்தேன்).

விளக்கம்:

பூச்செடிகளில் உள்ள இலைகளை தொட்டு அதில் மலர்ந்து இருக்கின்ற பூக்களை பறித்து எடுத்து எமது தந்தையாகிய இறைவனுக்கு சாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு மலர்களை கோர்த்து மாலையாக்கி சாற்றி அதனால் கிடைக்கின்ற பலனை பார்க்கலாம் என்று எதிர் பார்த்துக் கொண்டு இருந்தேன். எந்த பலனும் கிடைக்காத போது ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால் உண்மை இல்லாத தவறான கருத்துக்களை சொல்லுகின்ற நூல்களில் உள்ளதை கண்டு அதன் படி செய்து இப்படி தாழ்ந்து விட்டேன் என்று உணர்ந்து கொண்டேன். அப்போது எனது உள்ளத்திற்குள்ளே வீற்றிருக்கின்ற இறைவனின் அருளால் தலை உச்சியில் இருக்கின்ற பேரொளியாகிய இறை சக்தியை தொட்டு அடைந்து தவத்தை காணுக்கின்ற வழி முறை இதுவே என்று கண்டு உணர்ந்து கொண்டேன்.

பாடல் #1641

பாடல் #1641: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ண மீச னருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கி
லுடரடை செய்வ தொருன்மத்த மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

படரசடை மாதவம பறறிய பததரக
கிடரடை யாவணண மீச னருளும
விடரடை செயதவர மெயததவ நொககி
லுடரடை செயவ தொருனமதத மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

படர் சடை மா தவம் பற்றிய பத்தர்க்கு
இடர் அடையா வண்ணம் ஈசன் அருளும்
விடர் அடை செய்தவர் மெய் தவம் நோக்கில்
உடர் அடை செய்வது ஒரு உன்மத்தம் ஆமே.

பதப்பொருள்:

படர் (படர்ந்து விரிந்த) சடை (சடையைக் கொண்டு) மா (மாபெரும்) தவம் (தவத்தைக் கொண்டவனாக இருக்கின்ற இறைவனை) பற்றிய (உறுதியாக பற்றிக் கொண்ட) பத்தர்க்கு (பக்தர்களுக்கு)
இடர் (அவர்களது வாழ்வில் எந்த விதமான துன்பங்களும்) அடையா (வந்து சேராத) வண்ணம் (படி) ஈசன் (இறைவன்) அருளும் (அருளுவான்)
விடர் (தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து காட்டிற்குள்) அடை (வீற்றிருந்து) செய்தவர் (தவம் செய்கின்றோம் என்று முயற்சி செய்கின்றவர்களின்) மெய் (உண்மையான) தவம் (தவத் தன்மை என்னவென்று) நோக்கில் (பார்த்தால்)
உடர் (தவத்திற்கான உடல்) அடை (அடையாளங்களை மட்டுமே கடை பிடித்துக் கொண்டு) செய்வது (செய்வது தவம் ஆகாது) ஒரு (ஒரு விதமான) உன்மத்தம் (பித்துத் தன்மையே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

படர்ந்து விரிந்த சடையைக் கொண்டு மாபெரும் தவத்தைக் கொண்டவனாக இருக்கின்ற இறைவனை உறுதியாக பற்றிக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களது வாழ்வில் எந்த விதமான துன்பங்களும் வந்து சேராத படி இறைவன் அருளுவான். அப்படி இல்லாமல் தாம் செய்ய வேண்டிய கடமைகளைத் துறந்து தவம் செய்கின்றோம் என்று காட்டிற்குள் வீற்றிருந்து முயற்சி செய்கின்றவர்களின் உண்மையான தவத் தன்மை என்னவென்று பார்த்தால் அவர்கள் தவத்திற்கான உடல் அடையாளங்களை மட்டுமே கடை பிடித்துக் கொண்டு செய்வதால் அது தவம் ஆகாது. அது ஒரு விதமான பித்துத் (புத்தி கெட்ட) தன்மையே ஆகும்.

கருத்து:

தவம் செய்கின்றோம் என்ற பெயரில் காட்டிற்குள் செல்வதும் தாடி வளர்த்துக் கொள்வதும் ஜடாமுடி வைத்துக் கொள்வதும் புலித் தோலில் அமர்வதும் போன்ற உடல் சம்பந்தமான செயல்களை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்வது தவம் ஆகாது. உள்ளுக்குள்ளே இருக்கின்ற இறைவனை உறுதியாக பற்றிக் கொண்டு பக்தி செய்வதே உண்மையான தவம் ஆகும்.

பாடல் #1642

பாடல் #1642: ஆறாம் தந்திரம் – 6. தவ நிந்தை (இறைவன் உள்ளுக்குள் இருப்பதை அறியாமல் வெளியில் தேடுவது பயனற்றது என்பதை கூறுவது)

ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போ
யீற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தனொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறறிற கிடநத முதலைகண டஞசிபபொ
யீறறுக கரடிக கெதிரபபடட தனொககும
நொறறுத தவஞசெயயார நூலறி யாதவர
சொறறுககு நினறு சுழலகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆற்றில் கிடந்த முதலை கண்டு அஞ்சி போய்
ஈற்று கரடிக்கு எதிர் பட்ட தன் ஒக்கும்
நோற்று தவம் செய்யார் நூல் அறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆற்றில் (ஆற்றில் / ஆறு போன்ற வாழ்க்கையில்) கிடந்த (அசையாமல் கிடக்கும் / ஒன்றும் இல்லாததாகிய) முதலை (முதலையை / துன்பங்களை) கண்டு (கண்டு / எதிர்காலத்தை நினைத்து கற்பனை செய்து) அஞ்சி (பயந்து) போய் (போய்)
ஈற்று (குட்டிகளை ஈன்ற / உலகப் பற்றுக்கள்) கரடிக்கு (கரடியின் / எனும் பெரிய மாயையில்) எதிர் (எதிரில் சென்று) பட்ட (அகப்பட்டுக் / மாட்டிக்) தன் (கொண்டதை) ஒக்கும் (ஒத்து இருக்கின்றது)
நோற்று (இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி) தவம் (தவம்) செய்யார் (செய்யாமல் இருக்கின்றார்கள்) நூல் (ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை) அறியாதவர் (படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள்)
சோற்றுக்கு (இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு) நின்று (வேண்டி நின்று) சுழல்கின்ற (காட்டை சுற்றி வருவது) ஆறே (இருக்கின்றது).

விளக்கம்:

இறைவனை அடைய வேண்டும் என்று முறைப் படி தவம் செய்யாமல் இருக்கின்றார்கள் ஏனெனில் அதற்கு என்று அருளப்பட்டிருக்கும் ஆகமங்களை படித்து அறியாதவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று தினம் தோறும் பசிக்கு உணவு வேண்டி நின்று காட்டை சுற்றி வருவது எப்படி இருக்கின்றது என்றால் ஆற்றில் அசையாமல் கிடக்கும் முதலையை கண்டு பயந்து போய் குட்டிகளை ஈன்ற கரடியின் எதிரில் சென்று அகப்பட்டுக் கொண்டதை ஒத்து இருக்கின்றது.

தத்துவ விளக்கம்:

ஆறு என்கின்ற வாழ்க்கையில் நடப்பவற்றை மிகப் பெரிய துன்பம் என்று நினைத்தும் வரப்போகின்ற எதிர்காலத்தை நினைத்து பயந்தும் குடும்பத்தை விட்டு காட்டிற்கு சென்று தவம் செய்கின்றேன் என்று காட்டிற்கு சென்றாலும் வீட்டில் விட்டு வந்த உற்றார் உறவினர்களையும் சொத்துக்களையும் நினைத்துக் கொண்டே பசிக்கு உணவு தேடி அலைவது சிறிய துன்பத்திற்கு பயந்து மிகப் பெரிய துன்பத்தில் சிக்கிக் கொண்டது போல் ஆகும்.