பாடல் #543

பாடல் #543: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்
கூடவல் லாரடியே கூடுவன் யானே.

விளக்கம்:

திருத்தலங்களில் யாத்திரை செய்பவர்களுடன் யானும் நடப்போம். இறைவனை பக்தியுடன் பாடக்கூடியவர்களின் பாடலைக் கேட்டு யானும் இன்புற்று இருப்போம். இறைவனைத் தனக்குள்ளே தேடி அடையக்கூடியவர்களுக்கு அருளுகின்ற மகாதேவனுடன் இணையக் கூடிய ஆற்றலுள்ள பெரியோர்களின் திருவடியோடு யானும் இணைந்து இருப்போம்.

உட்கருத்து: இறைவனை அடையக்கூடிய வழிகளில் செல்பவர்களுக்கு இறைவனே பெரியவராக உடன் இருந்து இறைவனை அடைய வழிகாட்டுவார்.

பாடல் #544

பாடல் #544: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப் பட்டிருந் தென்செய்வாய் நெஞ்சமே
போமிடத்து என்னொடும் போதுகண் டாயே.

விளக்கம்:

மனமே நீ வருத்தப்படும் காலங்களில் படர்வதற்குப் பிடிமானம் இல்லாத செடிபோல வாடினாலும் இறைவன் மீது நம்பிக்கை வைத்தது இல்லை. இப்படித் தனியாக வருத்தப்பட்டு என்ன செய்யப் போகின்றாய்? இறைவனை நோக்கி யாம் செல்லும்போது எம்மோடு வந்து உன் துன்பங்கள் போவதைக் காண்பாயாக.

பாடல் #545

பாடல் #545: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

விளக்கம்:

தேவர்களின் தலைவனான சிவபெருமானை உணர்ந்த பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களோடு இணைந்து இருப்பவர்கள் சிவதத்துவத்தைப் பெறுவார்கள். இறைவனை அடையத் தாம் எடுத்துக் கொண்ட நெறியிலிருந்து மாறாமல் நின்று அருள் செய்யும் பெரியாரோடு சேர்ந்திருப்பதே பேரின்பமாகும்.

பாடல் #546

பாடல் #546: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

தார்சடை யான்றன் தமராய் உலகினிற்
போர்புக ழாவெந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளந் தேர்வார்க் கருள்செய்யுங்
கோவடைந் தந்நெறியைக் கூடலு மாமே.

விளக்கம்:

இறைவனின் அடியவர்கள் உலகத்தில் இருக்கும் மன்னர்களை பொய்யாக புகழாமல் கயிறு போல திரித்து விரிந்த சடையைக் கொண்டு வீற்றிருக்கும் எம் தந்தையான இறைவனை உண்மையான பக்தியோடு புகழ்ந்து அவரின் பொன்னான திருவடிகளை சேருவார்கள். இறைவனை வெறும் வார்த்தைகளால் போற்றி வணங்காமல் உண்மையான பக்தியோடு உள்ளம் உருக வேண்டினால் அந்த இறைவனின் அடியவர்களின் துணையைப்பெற்று அவர்களின் வழிசென்று இறைவனை அடையலாம்.

பாடல் #547

பாடல் #547: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழன்மேனி பதியைப் புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.

விளக்கம்:

அனைத்தையும் தனக்குள் உடைய இறைவனின் அடியவர்களான பெரியோர்களுக்கு அடியவர்களாகி தேவலோகப் படைகளை உடைய ஒளி உடம்போடு இருக்கும் சிவபெருமானின் திருக்கயிலாயத்திற்குச் செல்லுபவர்களை அங்கே வாயிற் காவலர்களாக இருக்கும் சிவகணங்கள் கண்டு இறைவனிடம் கூற அனைத்தும் அறிந்த இறைவன் உமக்கு அபயம் உள்ளே வருக என்று அருள் புரிந்தார்.

பாடல் #548

பாடல் #548: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (ஞானம் பெற்ற பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

அருமைவல் லோன்கலை ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந் தூழி யிருக்குந்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே.

விளக்கம்:

கலை ஞானத்தில் சிறந்து இறைவனை அடையக்கூடிய அருமையை உணர்ந்தவர்கள் ஒரு நொடிப் பொழுதும் இறைவனை மறக்காமல் இருப்பதின் பயனால் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கரைசேரும் பெருமையை உடையவர்கள், இறைவனைத் தனக்குள்ளே உணர்ந்து அதிலேயே ஆழ்ந்து அவனது திருவருளைப் பெற்றவர்கள் ஆகியவர்களோடு யாமும் சேர்ந்து இருக்கின்றோம்.

உள்கருத்து: 64 கலைகள் உள்ளது. அதில் ஏதேனும் ஒன்றோ பலவோ கற்று அதில் ஞானம் அடைந்தவர்கள். பக்தி மார்கத்தின் மூலமாக இறைவனை ஒரு நொடிப்பொழுதும் மறக்காமல் இருப்பவர்கள். யோக மார்கத்தின் மூலமாக இறைவனை தனக்குள் உணர்ந்தவர்களுடன் யாம் துணையாக இருக்கன்றோம் என்று அருளுகின்றார்.

பாடல் #539

பாடல் #539: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

பற்றிநின் றார்நெஞ்சில் பல்லிதான் ஒன்றுண்டு
முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையுந்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றா தொழிவது மாகமை யாமே.

விளக்கம்:

உண்மை வழியைப் பற்றி அதிலிருந்து விலகாமல் நிற்கும் யோகியர்களின் நெஞ்சில் இறைவனோடு இரண்டறக் கலக்கவேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கின்றது. பல்லி எப்படி தான் பற்றியதை விடாதோ அதுபோல எண்ணமும் தான் எண்ணியதை விடாது. இந்திரியங்களை (மூக்கின் வழியாக பிராணாயாமமும், நாக்கின் வழியாக மந்திரமும்) அடக்கி சிந்தனையை பல எண்ணங்களில் வீணாக சிதறவிடாமல் பொறுமையாக இருப்பவர்களுக்கு வற்றாத அமுதம் சுரக்கும்.

பாடல் #540

பாடல் #540: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.

விளக்கம்:

சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி இருக்கும் அழிவில்லாத தேவர்கள் அவரின் பால் போன்ற வெண்ணிற உடலின் பாதத்தைப் பணிந்து தாங்கள் முக்தி பெற வேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அவ்வாறு பொறுமையுடன் இருக்கும் தேவர்களை திருமாலுக்கும் ஆதிபிரம்மனுக்கும் மன்னராக இருக்கின்ற சதாசிவமூர்த்தி உலகத்தில் மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.

பாடல் #541

பாடல் #541: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை வளைந்தருள் எட்டலு மாமே.

விளக்கம்:

உண்மை ஞானம் அடைந்தவர்கள் உலகத்தில் இருக்கும் உயிர்களுக்கு மன்னர்கள் ஆவார்கள். படைகள் எவ்வாறு மன்னரைச் சுற்றி நின்று கைகூப்பி வணங்குவார்களோ அதுபோல உண்மை ஞானம் அடைந்தவர்களை ஞானம் பெறவேண்டி பொறுமையுடன் வணங்கி நிற்பவர்கள் தேவர்களுக்குத் தலைவனும் உயிர்களின் உடலை வளர்ப்பவனுமாகிய ஆதி சிவபெருமானின் அருளை அடைவார்கள்.

பாடல் #542

பாடல் #542: இரண்டாம் தந்திரம் – 24. பொறையுடைமை (பொறுமை)

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்
பல்வகை யாலும் பயிற்றிப் பதஞ்செய்யுங்
கொல்லையி னின்று குதிகொள்ளுங் கூத்தனுக்
கெல்லையி லாத விலயமுண் டாமே.

விளக்கம்:

ஆன்மாக்களின் பக்குவத்திற்கேற்ப உடலிலும் உள்ளத்திலும் பலவகையில் இன்பங்களையும் துன்பங்களையும் கொடுத்து பக்குவம் செய்யும் சிவபெருமான் பொறுமையுடன் தவமிருப்பவர்களின் மூலாதாரத்தில் இருந்து திருக்கூத்து ஆடுவதின் பயனால் அவர்களின் மனம் இறைவனுடன் ஒன்றுபட்டு நிற்கும்.