பாடல் #1573

பாடல் #1573: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்திப் பணிந்து பரவும்படி நல்கிச்
சுத்த வுரையாற் றுரிசறச் சோதித்துச்
சத்து மசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்த மிறையே சிவகுரு வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததிப பணிநது பரவுமபடி நலகிச
சுதத வுரையாற றுரிசறச சொதிததுச
சதது மசததுஞ சதசததுங காடடலாற
சிதத மிறையெ சிவகுரு வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தி பணிந்து பரவும் படி நல்கி
சுத்த உரையால் துரிசு அற சோதித்து
சத்தும் அசத்தும் சத சத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவ குரு ஆமே.

பதப்பொருள்:

பத்தி (பக்தியையும்) பணிந்து (இறைவனை வணங்கி பணிவதையும்) பரவும் (செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும்) படி (தெரிந்து கொள்ளும் படி) நல்கி (கொடுத்து அருளி)
சுத்த (தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும்) உரையால் (சத்திய வாக்கையும் கொடுத்து அருளி) துரிசு (ஒரு குற்றமும்) அற (இல்லாமல் போகும் படி) சோதித்து (பல விதமான சோதனைகளால் சோதித்து)
சத்தும் (நிலையானதாகிய சிவமும்) அசத்தும் (நிலையில்லாததாகிய உடலும்) சத (நிலையில்லாத உடலுக்குள்) சத்தும் (நிலையாக நிற்கின்ற ஆன்மாவும்) காட்டலால் (தாமே என்பதை காட்டி அருளியதால்)
சித்தம் (அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும்) இறையே (இறை சக்தியே) சிவ (அருளைக் கொடுக்கின்ற) குரு (குருவாக வந்து) ஆமே (இருக்கின்றான்).

விளக்கம்:

பக்தியையும் இறைவனை வணங்கி பணிவதையும் செய்கின்ற அடியவரின் புகழை மற்றவர்களும் தெரிந்து கொள்ளும் படி கொடுத்து அருளி, தூய்மையான பக்தியால் சொல்வது அனைத்தும் நிகழும் சத்திய வாக்கையும் கொடுத்து அருளி, ஒரு குற்றமும் இல்லாமல் போகும் படி பல விதமான சோதனைகளால் சோதித்து, நிலையானதாகிய சிவமும் நிலையில்லாததாகிய உடலும் நிலையில்லாத உடலுக்குள் நிலையாக நிற்கின்ற ஆன்மாவும் தாமே என்பதை காட்டி அருளியதால் அடியவர்களின் சித்தத்திற்குள் நிலைத்திருக்கும் இறை சக்தியே அருளைக் கொடுக்கின்ற குருவாக வந்து இருக்கின்றான்.

பாடல் #1574

பாடல் #1574: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா னாட்டகத்
தாசற்ற சற்குரு வப்பர மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பாசததைக கூடடியெ கடடிப பறிததிடடு
நெசதத காயம விடுவிதது நெரநெரெ
கூசறற முததியிற கூடடலா னாடடகத
தாசறற சறகுரு வபபர மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பாசத்தை கூட்டியே கட்டி பறித்து இட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர் நேரே
கூசு அற்ற முத்தியில் கூட்டல் ஆல் நாட்டு அகத்து
ஆசு அற்ற சற் குரு அப் பரம் ஆமே.

பதப்பொருள்:

பாசத்தை (அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை) கூட்டியே (ஒன்றாக கூட்டி) கட்டி (அதை ஒரு கட்டாக கட்டி வைத்து) பறித்து (அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி) இட்டு (வெளியில் எறிந்து விட்டு)
நேசத்த (இது வரை என்னுடையது என்று அடியவர்) காயம் (தனது உடலின் மீது) விடுவித்து (வைத்திருந்த ஆசையை விடுவித்து) நேர் (இறைவனுக்கு நேரானதாகவும்) நேரே (சரிசமமாகவும் இருக்கின்ற)
கூசு (ஒரு பழியும்) அற்ற (இல்லாத) முத்தியில் (முக்தியில்) கூட்டல் (சேர்த்து) ஆல் (அருளியதால்) நாட்டு (இந்த உலகத்தில்) அகத்து (இருக்கும் போதே)
ஆசு (ஒரு குற்றமும்) அற்ற (இல்லாத) சற் (உண்மையான) குரு (குருவாக) அப் (அந்த) பரம் (பரம்பொருளே) ஆமே (வந்து வழிகாட்டி அருளுகின்றான்).

விளக்கம்:

அடியவர் உலகப் பற்றுக்களின் மேல் வைத்திருக்கும் பல விதமான பந்த பாசங்களை ஒன்றாக கூட்டி அதை ஒரு கட்டாக கட்டி வைத்து அதை அடியவரிடமிருந்து பறித்து நீக்கி வெளியில் எறிந்து விட்டு இது வரை என்னுடையது என்று அடியவர் தனது உடலின் மீது கொண்டிருந்த ஆசையை விடுவித்து இறைவனுக்கு நேரானதாகவும் சரிசமமாகவும் இருக்கின்ற ஒரு பழியும் இல்லாத முக்தியில் சேர்த்து அருளியதால் இந்த உலகத்தில் இருக்கும் போதே ஒரு குற்றமும் இல்லாத உண்மையான குருவாக அந்த பரம்பொருளே வந்து வழிகாட்டி அருளுகின்றான்.

பாடல் #1575

பாடல் #1575: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சித்திக ளெட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியு மெண்முத்தி தூய்மையும் யோகத்துச்
சத்தியு மந்திரஞ் சாதகம் போதமும்
பத்தியு நாத னருளிற் பயிலுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிததிக ளெடடொடுந திணசிவ மாககிய
சுததியு மெணமுததி தூயமையும யொகததுச
சததியு மநதிரஞ சாதகம பொதமும
பததியு நாத னருளிற பயிலுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்திகள் எட்டோடும் திண் சிவம் ஆக்கிய
சுத்தியும் எண் முத்தி துய்மையும் யோகத்து
சத்தியும் மந்திரம் சாதகம் போதமும்
பத்தியும் நாதன் அருளில் பயிலுமே.

பதப்பொருள்:

சித்திகள் (மாபெரும் சித்திகளாகிய) எட்டோடும் (அட்டமா சித்திகளோடு) திண் (உறுதியான) சிவம் (சிவப் பரம் பொருளாகவே) ஆக்கிய (அடியவரையும் ஆக்குவதற்கு)
சுத்தியும் (பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும்) எண் (பல விதமான எண்ணங்களில் இருந்து) முத்தி (விடுதலை அடைந்து மோன நிலையில்) துய்மையும் (எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும்) யோகத்து (அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும்)
சத்தியும் (அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும்) மந்திரம் (மந்திரம் போன்ற சொற்களும்) சாதகம் (செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும்) போதமும் (முக்காலமும் அறிந்த ஞானமும்)
பத்தியும் (உண்மையான சரணாகதியாகிய பக்தியும்) நாதன் (ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய) அருளில் (இறைவனின் திருவருளால்) பயிலுமே (அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்).

விளக்கம்:

மாபெரும் சித்திகளாகிய அட்டமா சித்திகளோடு உறுதியான சிவப் பரம் பொருளாகவே அடியவரையும் ஆக்குவதற்கு பல விதமான சோதனைகளை செய்து பெற்ற பக்குவமும், பல விதமான எண்ணங்களில் இருந்து விடுதலை அடைந்து மோன நிலையில் எண்ணங்கள் இல்லாத தூய்மையான மனமும், அந்த நிலையிலேயே இருக்கின்ற யோகமும், அதனால் தான் நினைப்பதும் சொல்லுவதும் அப்படியே நிகழ்கின்ற சக்தியும், மந்திரம் போன்ற சொற்களும், செய்கின்ற அனைத்து செயல்களும் சாதகமாகவும், முக்காலமும் அறிந்த ஞானமும், உண்மையான சரணாகதியாகிய பக்தியும், ஆகிய இவை அனைத்தும் தலைவனாக வந்து குருநாதராக வழிகாட்டிய இறைவனின் திருவருளால் அடியவர்கள் கற்றுக் கொள்ளலாம்.

பாடல் #1576

பாடல் #1576: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

எல்லா வுலகிற்கு மப்பாலோ னிப்பாலாய்
நல்லா ருளத்து மிக்கரு ணல்கலா
லெல்லாரு முய்யக் கொண்டிங்கே யளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எலலா வுலகிறகு மபபாலொ னிபபாலாய
நலலா ருளதது மிககரு ணலகலா
லெலலாரு முயயக கொணடிஙகெ யளிததலாற
சொலலாரநத நறகுருச சுதத சிவமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப் பால் ஆய்
நல்லார் உளத்து மிக்கு அருள் நல்கல் ஆல்
எல்லாரும் உய்ய கொண்டு இங்கே அளித்தல் ஆல்
சொல் ஆர்ந்த நல் குரு சுத்த சிவமே.

பதப்பொருள்:

எல்லா (அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து) உலகிற்கும் (உலகங்களையும்) அப்பாலோன் (தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன்) இப் (இந்த) பால் (உலகத்தின் பக்கத்திலும்) ஆய் (இருக்கின்றான்)
நல்லார் (அவன் அன்பு கொண்ட நல்லவர்களின்) உளத்து (உள்ளத்தில் இருந்து) மிக்கு (மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில்) அருள் (அருளை) நல்கல் (கொடுத்துக் கொண்டே) ஆல் (இருப்பதால்)
எல்லாரும் (நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும்) உய்ய (மேல் நிலைக்கு) கொண்டு (கொண்டு செல்ல வேண்டும் என்று) இங்கே (இந்த உலகத்திலேயே) அளித்தல் (அவனது திருவருளை வழங்குகின்றான்) ஆல் (ஆதலால்)
சொல் (சொல்லை) ஆர்ந்த (முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும்) நல் (நன்மையே வடிவான) குரு (குருவாக இருப்பது) சுத்த (பரிசுத்தமான) சிவமே (சிவப் பரம் பொருளே ஆகும்).

விளக்கம்:

அண்ட சராசரங்களில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாண்டி இருக்கின்றவனாகிய இறைவன் இந்த உலகத்தின் பக்கத்திலும் இருக்கின்றான். அவன் அன்பு கொண்ட நல்லவர்களின் உள்ளத்தில் இருந்து மாபெரும் கருணையினால் மிகவும் அதிக அளவில் அருளை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். இந்த அருளால் இந்த உலகத்தில் உள்ள நல்லவர்கள் மட்டுமின்றி அனைவரும் மேல் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று அவனது திருவருளை வழங்குகின்றான். ஆதலால் சொல்லை முழுவதுமாக சொல்லி அடியவரை தெளிவு படுத்தும் நன்மையே வடிவான குருவாக இருப்பது பரிசுத்தமான சிவப் பரம் பொருளே ஆகும்.

பாடல் #1577

பாடல் #1577: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தேவனுஞ் சித்த குருவு முபாயத்துள்
யாவையின் மூன்றா யினகண் டுரையவே
மூவா பசுபாச மாற்றிய முத்திப்பா
லாவையு நல்குங் குருபரனன் புற்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தெவனுஞ சிதத குருவு முபாயததுள
யாவையின மூனறா யினகண டுரையவெ
மூவா பசுபாச மாறறிய முததிபபா
லாவையு நலகுங குருபரனன புறறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தேவனும் சித்த குருவும் உபாயத்து உள்
ஆவையின் மூன்றாயின கண்டு உரையவே
மூவா பசு பாச மாற்றிய முத்திப்பால்
ஆவையும் நல்கும் குரு பரன் அன்பு உற்றே.

பதப்பொருள்:

தேவனும் (அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும்) சித்த (அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு) குருவும் (குருவாகவும்) உபாயத்து (அவரே வழிகாட்டி) உள் (உள்ளே இருந்து)
ஆவையின் (அடியவர்களின் ஆன்மாவானது) மூன்றாயின (மூன்றாக இருப்பதை) கண்டு (மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி) உரையவே (அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து)
மூவா (மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில்) பசு (பசுவாகிய ஆன்மாவையும்) பாச (பாசமாகிய தளையையும்) மாற்றிய (மாற்றி அமைத்து) முத்திப்பால் (ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால்)
ஆவையும் (ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை) நல்கும் (கொடுத்து அருளும்) குரு (குருவாக) பரன் (பரம்பொருளே இருப்பது) அன்பு (அடியவர்களின் மீது கொண்ட அன்பினால்) உற்றே (ஆகும்).

விளக்கம்:

அடியவர்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் இயக்கமாக இருக்கின்ற தேவனாகவும், அடியவரின் சித்தத்தை தெளிவு படுத்தி இறைவனை அடைவதற்கு குருவாகவும் அவரே வழிகாட்டி உள்ளே இருந்து அடியவர்களின் ஆன்மாவானது மூன்றாக இருப்பதை மாயை நீங்கி கண்டு கொள்ளும் படி அருளி அதை புரிந்து கொள்ளும் படி உபதேசித்து மூன்றாக இருக்கின்ற பதி பசு பாச தத்துவத்தில் பசுவாகிய ஆன்மாவையும், பாசமாகிய தளையையும் மாற்றி அமைத்து ஆன்மாவானது பதியாகிய இறைவனை அடைவதற்கான வழியாகிய முக்தியை கொடுப்பதால் ஆன்மாவிற்குள் இவை மூன்றையும் உணர்வதை கொடுத்து அருளும் குருவாக பரம்பொருளே இருப்பது அடியவர்களின் மீது கொண்ட அன்பினால் ஆகும்.

பாடல் #1578

பாடல் #1578: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சுத்த சிவன்குரு வாய்வந்த துய்மைசெய்
தத்தனை நல்லருள் காணா வதிமூடர்
பொய்யத்தகு கண்ணா னமரென்பர் புண்ணி
யரத்த னிவனென் றடிபணி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுதத சிவனகுரு வாயவநத துயமைசெய
தததனை நலலருள காணா வதிமூடர
பொயயததகு கணணா னமரெனபர புணணி
யரதத னிவனென றடிபணி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்த சிவன் குருவாய் வந்தது உய்மை செய்து
அத்தனை நல் அருள் காணா அதி மூடர்
பொய்ய தகு கண்ணான் நமர் என்பர் புண்ணியர்
அத்தன் இவன் என்று அடி பணிவாரே.

பதப்பொருள்:

சுத்த (பரிசுத்தமான) சிவன் (சிவப் பரம்பொருளே) குருவாய் (குருவாக) வந்தது (வந்தது) உய்மை (அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும்) செய்து (என்கின்ற மாபெரும் கருணை செய்து)
அத்தனை (அனைவருக்கும் தந்தையாக இருந்து) நல் (நன்மையான) அருள் (அருளை வழங்குதற்காகவே ஆகும்) காணா (இதை கண்டு உணராத) அதி (மிகவும் குருடர்களான) மூடர் (மூடர்களே)
பொய்ய (தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு) தகு (தகுந்தது போல) கண்ணான் (மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன்) நமர் (எமனே) என்பர் (என்று அறிவின்மையால் கூறுவார்கள்) புண்ணியர் (ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ)
அத்தன் (அனைவருக்கும் தந்தையாக இருப்பவன்) இவன் (இவனே) என்று (என்று) அடி (குருவாக வந்த இறைவனின் திருவடிகளை) பணிவாரே (தொழுது வணங்குவார்கள்).

விளக்கம்:

பரிசுத்தமான சிவப் பரம்பொருளே குருவாக வந்தது அனைத்து உயிர்களும் மேல் நிலைக்கு செல்ல வேண்டும் என்கின்ற மாபெரும் கருணை செய்து அனைவருக்கும் தந்தையாக இருந்து நன்மையான அருளை வழங்குதற்காகவே ஆகும். இதை கண்டு உணராத மிகவும் குருடர்களான மூடர்களே தங்களின் பொய்யான எண்ணங்களுக்கு தகுந்தது போல மூன்றாவது கண்ணைக் கொண்டு எரித்து அழிக்கும் இவன் எமனே என்று அறிவின்மையால் கூறுவார்கள். ஆனால் இதை கண்டு உணர்ந்த புண்ணியர்களாகிய அடியவர்களோ அனைவருக்கும் தந்தையாக இருப்பவன் இவனே என்று குருவாக வந்த இறைவனின் திருவடிகளை தொழுது வணங்குவார்கள்.

பாடல் #1579

பாடல் #1579: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

உண்மையும் பொய்மை யொழித்தலு முண்மைபாற்
றிண்மையு மொண்மைச் சிவமாய னல்வரன்
வண்மையு மெட்டெட்டுச் சித்த மயக்கவந்
தண்ண லருளன்றி யாரறி வாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணமையும பொயமை யொழிததலு முணமைபாற
றிணமையு மொணமைச சிவமாய னலவரன
வணமையு மெடடெடடுச சிதத மயககவந
தணண லருளனறி யாரறி வாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப் பால்
திண்மையும் ஒண்மை சிவம் ஆய நல் அரன்
வண்மையும் எட்டு எட்டு சித்த மயக்க வந்த
அண்ணல் அருள் அன்றி யார் அறிவாரே.

பதப்பொருள்:

உண்மையும் (அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கி) பொய்மை (பொய்யான உலக அறிவினை) ஒழித்தலும் (அழிப்பதையும்) உண்மைப் (பரம்பொருளாகிய உண்மையின்) பால் (மேல்)
திண்மையும் (மன உறுதியுடன்) ஒண்மை (ஒன்றி இருக்கின்ற) சிவம் (சிவத்தோடு) ஆய (இருக்க வைப்பதையும்) நல் (தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல) அரன் (பாதுகாப்பு அரனாக)
வண்மையும் (வலிமையுடன் நிற்பதையும் ஆகிய இவை அனைத்தையும்) எட்டு (எட்டும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் அறுபத்து நான்கு உலக அறிவாகிய கலைகளால்) சித்த (சித்தம்) மயக்க (மயங்கி) வந்த (வந்தவர்களால் அறிந்து கொள்ள முடியுமா?)
அண்ணல் (தலைவனாகிய இறைவனின்) அருள் (திருவருள்) அன்றி (இல்லாமல்) யார் (இவற்றை யாரால்) அறிவாரே (அறிந்து கொள்ள முடியும்?).

விளக்கம்:

அடியவர்கள் உலகத்தில் பார்க்கின்ற அனைத்தும் உண்மை என்று நினைக்கின்ற மாயையை நீக்கி பொய்யான உலக அறிவினை அழிப்பதையும், பரம்பொருளாகிய உண்மையின் மேல் மன உறுதியுடன் சிவத்தோடு ஒன்றி இருக்க வைப்பதையும், தீமையை நெருங்க விடாமல் தடுக்கும் நல்ல பாதுகாப்பு அரனாக வலிமையுடன் நிற்பதையும், ஆகிய இவை அனைத்தையும் உலக அறிவாகிய அறுபத்து நான்கு கலைகளால் சித்தம் மயங்கி வந்தவர்களால் அறிந்து கொள்ள முடியுமா? தலைவனாகிய இறைவனின் திருவருள் இல்லாமல் இவற்றை யாரால் அறிந்து கொள்ள முடியும்? ஆகவே சிவ குருவாக வந்த இறைவனின் திருவருளாலேயே அனைத்தையும் அடியவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1580

பாடல் #1580: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனவடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவனெ சிவஞானி யாதலாற சுதத
சிவனெ யெனவடி செரவல லாரககு
நவமான தததுவ நனமுததி நணணும
பவமான தினறிப பரலோக மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவனே சிவ ஞானி ஆதலால் சுத்த
சிவனே என அடி சேர வல்லார்க்கு
நவம் ஆன தத்துவம் நல் முத்தி நண்ணும்
பவம் ஆனது இன்றி பர லோகம் ஆமே.

பதப்பொருள்:

சிவனே (சிவப் பரம்பொருளே) சிவ (சிவத்தை அறிந்த) ஞானி (ஞானியாகவும்) ஆதலால் (இருப்பதால்) சுத்த (சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே)
சிவனே (சிவப் பரம்பொருள்) என (என்று) அடி (குருவின் திருவடியை) சேர (சரணடைய) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
நவம் (அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான) ஆன (அற்புதமான) தத்துவம் (ஞானத்தின் மூலம்) நல் (நன்மையைத் தரும்) முத்தி (முக்தியை) நண்ணும் (அடைந்து)
பவம் (இந்த உலக வாழ்கை) ஆனது (என்பது) இன்றி (இனி எப்போதும் இல்லாத நிலையில்) பர (இறைவன் இருக்கின்ற) லோகம் (உலகத்தை) ஆமே (அடைவார்கள்).

விளக்கம்:

சிவப் பரம்பொருளே சிவத்தை அறிந்த ஞானியாகவும் இருப்பதால், சிவத்தை அறிந்த உண்மை ஞானியாகிய குருவையே சிவப் பரம்பொருள் என்று குருவின் திருவடியை சரணடைய முடிந்தவர்களுக்கு, அவர்களுக்குள் தோன்றுகின்ற புதுமையான அற்புதமான ஞானத்தின் மூலம் நன்மையைத் தரும் முக்தியை அடைந்து இந்த உலக வாழ்கை என்பது இனி எப்போதும் இல்லாத நிலையில் இறைவன் இருக்கின்ற உலகத்தை அடைவார்கள்.

பாடல் #1581

பாடல் #1581: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

குருவே சிவமென்னக் கூறின னந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவமாகக் கோனுமாய் நிற்குங்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குருவெ சிவமெனனக கூறின னநதி
குருவெ சிவமெனபது குறித தொரார
குருவெ சிவமாகக கொனுமாய நிறகுங
குருவெ யுரையுணர வறறதொர கொவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குருவே சிவம் என்ன கூறினன் நந்தி
குருவே சிவம் என்பது குறித்து ஓரார்
குருவே சிவம் ஆக கோனும் ஆய் நிற்கும்
குருவே உரை உணர்வு அற்றது ஓர் கோவே.

பதப்பொருள்:

குருவே (தமக்கு குருவாக அமைந்தவரே) சிவம் (சிவப் பரம்பொருள்) என்ன (என்று) கூறினன் (கூறியருளினார்) நந்தி (குருநாதராகிய இறைவன்)
குருவே (ஆயினும் குருவாக இருப்பது) சிவம் (சிவப் பரம்பொருளே) என்பது (என்பதை) குறித்து (தமக்குள் சிந்தித்து) ஓரார் (ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள்)
குருவே (அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால் தமது குருவே) சிவம் (அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருள்) ஆக (ஆகவும்) கோனும் (வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவன்) ஆய் (ஆகவும்) நிற்கும் (நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம்)
குருவே (அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு தமது குரு என்பவர்) உரை (சொற்களால் விவரிக்க முடியாதவராகவும்) உணர்வு (ஐம் புல உணர்வினால் முழுமையாக) அற்றது (உணர முடியாதவராகவும்) ஓர் (இருக்கின்ற ஒரு) கோவே (இறைவனாக இருப்பார்).

விளக்கம்:

தமக்கு குருவாக அமைந்தவரே சிவப் பரம்பொருள் என்று கூறியருளினார் குருநாதராகிய இறைவன். ஆயினும் குருவாக இருப்பது சிவப் பரம்பொருளே என்பதை தமக்குள் சிந்தித்து ஆராய்ந்து அறிந்து கொள்ளாமல் பலர் இருக்கின்றார்கள். அவ்வாறு ஆராய்ந்து அறிந்து கொண்டால், தமது குருவே அன்பையும் அருளையும் கொடுக்கும் சிவப் பரம்பொருளாகவும், வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் நிற்கின்றதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு, தமது குரு என்பவர் சொற்களால் விவரிக்க முடியாதவராகவும், ஐம் புல உணர்வினால் முழுமையாக உணர முடியாதவராகவும் இருக்கின்ற ஒரு இறைவனாக இருப்பார்.

பாடல் #1582

பாடல் #1582: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சித்த மியாவையுஞ் சிந்தித் திருந்தாரு
மத்த னுணர்த்து வதாகு மருளாலே
சித்த மியாவையுந் திண்சிவ மாண்டக்கா
லத்தனு மவ்விடத் தேயமர்ந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிதத மியாவையுஞ சிநதித திருநதாரு
மதத னுணரதது வதாகு மருளாலெ
சிதத மியாவையுந திணசிவ மாணடககா
லததனு மவவிடத தெயமரந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சித்தம் யாவையும் சிந்தித்து இருந்தாரும்
அத்தன் உணர்த்துவது ஆகும் அருளாலே
சித்தம் யாவையும் திண் சிவம் ஆண்ட கால்
அத்தனும் அவ் இடத்தே அமர்ந்தானே.

பதப்பொருள்:

சித்தம் (தங்களின் எண்ணத்தில்) யாவையும் (முழுவதும் இறைவனையே வைத்து) சிந்தித்து (அவனையே சிந்தித்து) இருந்தாரும் (இருக்கின்ற அடியவர்களுக்கு)
அத்தன் (இறைவனே தந்தையாக) உணர்த்துவது (வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது) ஆகும் (எதனால் என்றால்) அருளாலே (அவனது திருவருளாலே ஆகும்)
சித்தம் (அப்போது அடியவரின் எண்ணங்கள்) யாவையும் (முழுமையும்) திண் (உறுதியாக பற்றிக் கொண்டு) சிவம் (சிவப் பரம்பொருளே) ஆண்ட (ஆட்கொள்ளும்) கால் (காலத்தில்)
அத்தனும் (தந்தையாக இருந்து வழி காட்டுகின்ற இறைவனும்) அவ் (அடியவரின் எண்ணங்கள்) இடத்தே (இருக்கின்ற சித்தத்திலேயே) அமர்ந்தானே (குருவாக வந்து வீற்றிருப்பான்).

விளக்கம்:

தங்களின் எண்ணத்தில் முழுவதும் இறைவனையே வைத்து அவனையே சிந்தித்து இருக்கின்ற அடியவர்களுக்கு இறைவனே தந்தையாக வந்து அனைத்தையும் வழி காட்டி உணர வைப்பது எதனால் என்றால் அவனது திருவருளாலே ஆகும். அப்போது அடியவரின் எண்ணங்கள் முழுமையும் உறுதியாக பற்றிக் கொண்டு சிவப் பரம்பொருளே ஆட்கொள்ளும் காலத்தில் தந்தையாக இருந்து வழி காட்டுகின்ற இறைவனும் அடியவரின் எண்ணங்கள் இருக்கின்ற சித்தத்திலேயே குருவாக வந்து வீற்றிருப்பான்.