பாடல் #1184

பாடல் #1184: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற வின்ப மறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்
திருந்த விலக்கி லினிதிருந் தாளே.

விளக்கம்:

பாடல் #1183 இல் உள்ளபடி பேரின்பத்தைக் கொடுத்து அருளுகின்ற பெரும் கருணை வள்ளலாக இருக்கின்ற இறைவியானவள் சாதகருடன் எவ்வாறு சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகருக்கு அருள் புரிந்து பேரின்பத்தைக் கொடுக்கின்ற மாபெரும் சக்தியாகிய இறைவி சாதகருக்குள் வீற்றிருந்து தமது அருளினால் புரிகின்ற பேரின்பத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமல் சில சாதகர்கள் இருக்கின்றனர். பேரின்பத்தை அறிந்து கொண்ட சாதகர்களுக்குள் அண்டத்தில் இருக்கும் பராசக்தியின் ஒரு துளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் பூவும் நிறமும் போல சாதகரும் தாமும் ஒன்றாகக் கலந்து வீற்றிருக்கின்றாள். இப்படி இறைவியோடு தாமும் கலந்து வீற்றிருக்கின்ற நிலையை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வீற்றிருக்கின்ற சாதகர்களோடு அவளும் இன்பமாக வீற்றிருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.