பாடல் #1183

பாடல் #1183: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

விளக்கம்:

பாடல் #1182 இல் உள்ளபடி உண்மை ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்ற இறைவியானவள் அவருக்கு எவ்வாறு அருள் புரிகிறாள் என்பதை இப்பாடலில் அறிந்து கொள்ளலாம். சாதகரின் உள்ளத்திற்கு உள்ளே வந்து அவருடனே சேர்ந்து நிற்கின்ற இறைவியானவள் அவரின் ஐந்து புலன்களும் இறைவனை நோக்கி செல்வதை தடுத்து ஆசைகளின் வழியே செல்ல வைக்கின்ற கள்ளத் தனத்தை (வஞ்சகத் தன்மையை) அகற்றி அவருடன் ஒன்றாகக் கலந்து நின்று அவரை தம்மோடு அணைத்துக் கொண்டு அவர் கொண்ட தவத்தின் வழிப்படியே செல்வதில் இருந்து தவறிவிடாமல் காப்பாற்றி அவர் செய்கின்ற தவம் கைகூடும் காலத்தில் பேரின்பத்தை அளித்து அதிலேயே அவர் லயித்து இருக்குமாறு அருளுகின்ற பெருங்கருணை கொண்ட வள்ளல் தலைவியாக இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.