பாடல் #441

பாடல் #441: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

எட்டுத் திசையும் அடிக்கின்ற காற்றவன்
வட்டத் திரையனல் மாநிலம் ஆகாசம்
ஒட்டி உயிர்நிலை என்னும்இக் காயப்பை
கட்டி அவிழ்க்கின்ற கண்ணுதல் காணுமே.

விளக்கம்:

எட்டுத் திசைகளிலும் வீசுகின்ற காற்றும் வட்ட வடிவ உலகைச் சூழ்ந்து இருக்கும் அலை கடல் நீரும் உலகம் தனக்குள்ளிருந்தும் தன்னைச் சுற்றியிருக்கும் வளி மண்டலங்களிலிருந்தும் பெறும் நெருப்பும் உள்ளிருக்கும் நெருப்பை மூடி விரிந்து பரவி இருக்கும் இந்த மாபெரும் நிலமும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வளிமண்டலத்தைத் தாண்டி இருக்கும் ஆகாயமும் ஆகிய பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கி ஆன்மாவோடு உயிரைச் சேர்த்து அதை நிலைபெற வைக்கும் மூச்சுக்காற்றை அடைத்து வைத்த தோலால் ஆன பையைப் போன்ற உடலை அவரவர் வினைகளுக்கு ஏற்ப இறக்கும் காலம் வரும் வரை பாதுகாப்பாக கட்டி வைத்தும் காலம் வரும்போது அவிழ்த்துப் போட்டும் விளையாடுவது நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமானின் அருளே.

உட்கருத்து: வினைகள் முடியும் வரை உயிர்களை உலகத்தில் பஞ்ச பூதங்களை அடக்கிய உடலில் பிறக்க வைத்து அவற்றை காலம் வரும் வரை காப்பாற்றி வந்து முடியும் காலம் வந்தபின் அழித்து அடுத்த நிலைக்குச் செல்லும்படி செய்வது அனைத்தும் இறைவனின் திருவருளே ஆகும்.

பாடல் #442

பாடல் #442: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியே இன்பங்கொள் வார்க்கு நமனில்லை
விச்சும் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்
தச்சும் அவனேதான் சமைக்கவல் லானே.

விளக்கம்:

தலை உச்சியிலுள்ள சகஸ்ரரதளத்தில் ஒளிவீசித் திகழும் நாத வடிவான இறைவனை அன்பு செய்து அவனோடு சேர்ந்து பேரின்பத்தை உணர்ந்தவர்களுக்கு மரணம் என்பது இல்லாததால் எமன் கிடையாது. விரிந்து பரந்திருக்கின்ற இந்த உலகத்தில் கண்களால் காணக்கூடிய சூரியன் சந்திரன் நெருப்பில் இருந்து வரும் மூன்றுவித ஒளிகளைக் கொடுத்து அருளிய அவனேதான் கண்களால் காண முடியாத ஒளியாக சகஸ்ரரதளத்தில் கலந்து இருக்கின்றான். அந்த ஒளியில் தன்னை நாடி வருகின்றவர்களுக்கு பேரின்பத்தை வழங்கி மரணமில்லாத பெருவாழ்வை அருளக்கூடியவனாக இறைவன் இருக்கின்றான்.

பாடல் #443

பாடல் #443: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனத்துற்ற தெல்லாம் வனைவன்
குசவனைப் போல்எங்கள் கோன்நந்தி வேண்டில்
அசையில் உலகம் அதுவிது வாமே.

விளக்கம்:

குயவன் களிமண்ணைப் பிடித்து தனது மனதுக்கு எதுவெல்லாம் நன்மை தரும் என்று தோன்றுகின்றதோ அந்த மாதிரியெல்லாம் பாத்திரங்கள் வரும்படி வளைத்து உருவாக்குவான். அந்தக் குயவனைப் போலவே குருநாதனாக இருக்கும் எம் இறைவனும் ஆன்மாக்களின் வேண்டுதலுக்கு இணங்கி எதுவாக இருந்தால் அவர்கள் வேண்டிக்கொண்டது நிறைவேறும் என்பதை அறிந்து அதுவாகவே அவர்களை, அசைவில்லாத இந்த அண்டசராசரத்தில் அசைவு பெற்றுச் சுழலும் உலகங்களில் பல்வேறு வித உயிர்களாகப் படைத்து அருளுகின்றான்.

உட்கருத்து: உயிர்கள் உலகத்தில் பிறப்பது அவற்றின் ஆசையினால்தான். ஆன்மாவாக இருக்கும் உயிர் ஆசைப்பட்டுவிடும் போது இறைவனை வேண்டி உயிர் எடுத்து உலகத்தில் பிறக்கிறது. அப்படிப் பிறக்கும் உயிர் எந்த உருவத்தில் இருந்தால் விரைவில் ஆசைகளைத் தீர்த்துக்கொண்டு தனது வினைகளையும் கழித்துக் கொள்ளும் என்பதை அறிந்த இறைவன் அந்த விதத்திலேயே அவர்களைப் படைத்து அருளுகின்றான்.

பாடல் #444

பாடல் #444: இரண்டாம் தந்திரம் – 13. அநுக்கிரகம் (அருளல்)

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குண மேகுண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

விளக்கம்:

காளையை வாகனமாகக் கொண்டவனும் வேறு பட்ட பலவித உருவங்களில் ஒன்றாக இருப்பவனும் பூத கணங்களைப் படையாகக் கொண்டவனும் ஆன்மாக்களுக்குக் கொடுத்த மிகப்பெரிய பரிசு உலகத்துப் பிறவியாகும். பிறவியைப் பரிசாகக் கொடுத்த மாபெரும் வள்ளலாகிய இறைவன் அந்தப் பிறவியில் உயிர்கள் அனுபவிக்க வேண்டிய ஆசைகளையும் வினைகளையும் அடைய வேண்டிப் பலவித குணங்களையும் வைத்து அருளுகின்றான். குணங்களையும் மீறித் தம்மை சிந்திக்கும் அடியவர்களுக்கு அவர்களின் சிந்தனையிலேயே திரிசடையைத் தலையில் தரித்த இறைவன் பேரின்பமாக சேர்ந்து இருந்து அருளுகின்றான்.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசைக்கும் வினைக்கும் பிறவி எடுக்கும்போது அதற்கேற்ற உடலையும் உள்ளத்தையும் குணங்களையும் கொடுத்து அருளும் இறைவன் தன் தலையில் திரித்துச் சூடிய சடைபோல வினைகளால் முற்றும் சூழப்பட்ட ஆன்மாக்கள் அதையும் தாண்டி இறைவனை நினைக்கும் போது அவர்களின் சிந்தனையில் பேரின்பமாக வந்து அருளுகின்றான்.

பாடல் #431

பாடல் #431: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனது உருவறி யாதே.

விளக்கம்:

ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக் கூடிய ஜோதி உருவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூட விலகி நிற்பதில்லை. எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனே சேர்ந்து இறைவன் இருந்தாலும் மாயையினால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியாது.

பாடல் #432

பாடல் #432: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இன்பப் பிறவி படைத்த இறைவனும்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொளுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாக்குமே.

விளக்கம்:

இறைவனோடு இருந்த ஆன்மாக்கள் ஆசைப்பட்டுவிடும் போது அந்த ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டி உலகத்தில் பிறவி எடுக்கும்படி உயிர்களாகப் படைக்கின்றான் இறைவன். அந்த உயிர்கள் ஆசைகளைத் தீர்த்துக் கொள்ளும் போது சில வினைகளும் சேர்த்து விடுகிறது. இந்த வினைகளை அனுபவிக்க வேண்டி உலகப்பற்று குடும்பம் பாசம் என்னும் துயரத்துக்குள் உயிர்களை மாயையால் பூட்டி அடைத்துவிடுகின்றான். எலும்பை முழுவதும் தோல் தசைகளால் மூடி அந்த எலும்போடு ஒன்றாகச் சேர்ந்து செயல்படும் இந்த உலக உடம்பானது உயிர்களின் பிறவிக்கு காரணமாகிய வினைகள் முடியும் வரை ஒன்றாகச் சேர்ந்து இருக்கும். இந்தப் பிறவியின் வினைகள் முடிந்ததும் உயிரை முடிப்பதாக இருக்கின்றது.

உட்கருத்து: ஆன்மாக்கள் ஆசையினால் இன்பம் பெறுவதற்காகப் பிறவி எடுப்பதால் அந்த இன்பத்தை அனுபவித்து தீர்க்கும்வரை பேரின்பத்தை மறைத்து அருளும் இறைவன் அந்த ஆன்மாக்கள் எடுத்த பிறவியில் இன்பத்தை அனுபவிப்பதினால் கிடைக்கும் வினைகளையும் அதன் விளைவுகளால் ஏற்படும் துன்பத்தையும் அந்தத் துன்பத்திற்குக் காரணமாக இருக்கும் உலகப் பற்றுக்களையும் சேர்த்து பிறவிக்குள் அடைத்துவிடுகின்றான். இதில் எலும்பும் தோலும் போர்த்திய உடலே சிறையாகவும் உலகப் பற்று எனும் மாயை பூட்டாகவும் வினைகள் சாவியாகவும் இருக்கின்றது. எப்போது உயிர்கள் தமது வினைகளை அனுபவித்துக் கழித்து முடிக்கின்றதோ அப்போது இந்தப் பூட்டு திறந்து உலகத்தில் அதுவரை ஆன்மா அனைத்தையும் அனுபவிக்க உதவிய உடலையும் உயிரையும் அழித்து ஆன்மா விடுதலை பெறுகின்றது.

பாடல் #433

பாடல் #433: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

விளக்கம்:

இறைவன் உயிர்களை படைக்கும் தொழிலுக்கு காரியம் புரியும் தெய்வங்களாகிய உருத்திரன் மாபெரும் தவம் புரிபவனாகிய திருமால் வேதங்கள் ஓதி உயிர்களையும் அவை உலகத்தில் அடையும் இன்பத்தையும் படைத்த பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப செய்த வலிமை மிக்க இரும்பாலான இயந்திரம் போன்ற உடலுக்குள் மாயையால் மறைத்து இறைவன் வைத்த ஒரு மாபெரும் பரிசு இருக்கின்றது. அதை உயிர்கள் அறியவில்லை.

உட்கருத்து: உலகத்தில் உயிர்களை படைத்த இறைவன் அதன் வினைகளை அனுபவித்துக் கழிக்கும் வரை அந்த உயிர்களைப் பாதுகாக்க இறைவனே மாபெரும் பரிசாக உயிர்களின் உள்ளத்திற்குள் இருக்கின்றதை மாயையால் மறைத்து அருளுகின்றான்.

பாடல் #434

பாடல் #434: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

காண்கின்ற கண்ணொளி காதல்செய் யீசனை
ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியைப்
பூண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
சேண்படு பொய்கையின் செயல்அணை யாரே.

விளக்கம்:

உயிர்களின் மேலுள்ள மாபெரும் அன்பினால் உயிர்களுடனே இருந்து அவர்களின் கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருக்கின்றான் இறைவன். ஆதியாக இருக்கும் இறைவனே அனைத்து உயிர்களின் உருவத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருக்கின்றான். உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே தமது தலையின் உச்சியில் இறைவனாக இருக்கும் அமிர்தத்தை நெஞ்சத்தில் உணராத உயிர்கள் பேரின்பத்தைக் கொடுக்கும் அமிர்தத்தின் செயலை உணராமல் இருக்கின்றார்கள்.

உட்கருத்து: உண்ணும் உணவை நாக்கினால் சுவைத்து அதன் இன்பத்தை நெஞ்சத்தில் உணர்வதைப்போலவே கண்ணில் காணும் ஒளியாகவும் காட்சிகளைக் காட்டும் ஒளியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் நெஞ்சத்தில் உணர்ந்து விட்டால் ஆணாகவும் பெண்ணாகவும் அலியாகவும் இருப்பவன் இறைவன் என்பதையும் தலை உச்சியில் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவனாக இருக்கும் அமிர்தத்தையும் உணர்ந்து கொள்ளலாம். ஆனால் உயிர்கள் உணவு உண்ணும் ருசிக்கு ஆசைப்பட்டு அதனால் கிடைக்கும் வினையின் காரணமாக மறைக்கப்பட்டு உணராமல் இருக்கின்றார்கள்.

பாடல் #435

பாடல் #435: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

தெருளும் உலகிற்கும் தேவர்க்கும் இன்பம்
அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
சுருளுஞ் சுடருறு தூவெஞ் சுடரும்
இருளும் அறிநின் றிருட்டறை யாமே.

விளக்கம்:

உண்மை ஞானத்தை அடைந்த உலக உயிர்களுக்கும் விண்ணுலகத் தேவர்களுக்கும் பேரின்பத்தைப் பெறும் வழியை அருளிச் செய்கின்றான் ஆதியிலிருந்தே இருக்கின்ற தலைவனாகிய இறைவன். உண்மை ஞானத்தை அடையாமல் உலக ஆசையில் இருக்கின்ற உயிர்களுக்கு தினமும் மாறி மாறி வரும் சூரியனின் ஒளியையும் அந்தச் சூரியனின் ஒளியை தன்னுள் வாங்கிக் கொடுக்கும் நிலாவின் ஒளியையும் வெப்பமான தீயினால் கிடைக்கும் ஒளியையும், இந்த மூன்றுவித ஒளியும் இல்லாதபோது இருக்கும் இருளை உணர்வினால் அறிந்திருக்கின்ற உயிர்களுக்கு உணர்வினால் அறியமுடியாத மாயை எனும் இருளைக் கொண்ட உள்ளம் எனும் இருட்டறையில் வீற்றிருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உண்மை ஞானம் பெற்ற உலகத்து உயிர்களுக்கும் விண்ணுலக உயிர்களுக்கும் பேரின்பத்தைக் கொடுக்கும் இறைவன் உண்மை ஞானம் பெறாத உயிர்களுக்கு மாயை எனும் இருட்டையே கொடுக்கின்றான்.

பாடல் #436

பாடல் #436: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.

விளக்கம்:

இன்ப துன்பத்திற்கு ஓர் காரணமாய் இருக்கும் உடல் உறுப்புகள் கேட்கின்ற ஓசை பேசுகின்ற உரை இவற்றிலெல்லாம் உணருகின்ற ஆசை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாமல் வித்தியாசமாய் பலவித உருவங்களில் எங்கும் பரவி இருக்கும் உயிர்கள் பரந்து விரிந்த உலகம் ஆகிய இவை அனைத்தும் இறைவனாகவே இருக்கின்ற பெரிய உண்மையை மறைத்து உயிர்களுக்குள் உணர்ந்து காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.

உட்கருத்து: உயிர்கள் தமது ஐந்து புலன்களால் பார்த்து கேட்டு பேசி சுவைத்து உணர்ந்து ஆசையைத் தீர்த்துக் கொண்டு வினைகளைப் புரிந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஐம்புலன்களால் இறைவனை அறிய முடியாது. உள்ளத்துக்குள்ளே உணர்ந்தால் மட்டுமே காணக்கூடியவனாக இருக்கின்றான் இறைவன்.