பாடல் #199

பாடல் #199: முதல் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (அசைவம் சாப்பிடாமல் இருத்தல்)

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை
எல்லாரும் காண இயமன்றன் தூதுவர்
செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தினுள்
மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பார்களே.

விளக்கம்:

பிற உயிர்களை கொன்று அதன் உடலிலிருந்து பெறுவதாலும் மனித உடலுக்கு தீமை தருவதாலும் பொல்லாத புலாலை (அசைவத்தை) விரும்பிச் சாப்பிடும் கீழ்மையான மக்களை அவர்கள் இறக்கும் தறுவாயில் அவர்களைச் சுற்றி நின்ற அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே எமதர்மனின் தூதுவர்கள் வந்து கரையானைப் போல இறுக்கமாகப் பற்றி இழுத்துக் கொண்டு போய் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் கொடிய நரகத் தீயினுள் அவர்களின் முதுகு கீழே பட முகமும் உடலும் மற்றவர்கள் பார்க்கும் படி மேலே தெரிய மல்லாக்கத் தள்ளிவிட்டு அவர்கள் சுடும் தீயிலிருந்து தப்பிச்செல்லாமல் இருக்க கதவுகளையும் மூடிவிடுவார்கள்.

கருத்து: பிற உயிர்களுக்குத் துன்பம் தந்து பெற்ற கொடிய புலாலை விரும்பி சாப்பிடுபவர்கள் இறந்த பின் கொடிய நரகத் தீயில் எப்போதும் வெந்துகொண்டே இருப்பார்கள்.

பாடல் #200

பாடல் #200: முதல் தந்திரம் – 7. புலால் மறுத்தல் (அசைவம் சாப்பிடாமல் இருத்தல்)

கொலையே களவுகள் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாம்அவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாம் இவைஞானா னந்தத் திருத்தலே.

விளக்கம்:

பிற உயிர்களைக் கொல்லுதல் பிறரின் பொருட்களைத் திருடுதல் புத்தியை மயக்கும் கள்ளை குடித்தல் (மது அருந்துதல்) பெண்களின் மேல் காம வயப்படுதல் பொய் பேசுதல் ஆகிய இந்த ஐந்தும் உயிர்கள் செய்யக்கூடிய பாவங்களிலேயே மிகவும் பெரிய பாவங்களாகும். இந்த பாவங்களைச் செய்யாமல் இறைவனது திருவடிகளைத் தனது சிந்தனையில் வைத்து இறைவனைப் பற்றிய எண்ணங்களிலேயே திளைத்து இருப்பவர்களுக்கு பேரறிவு ஞானத்தினால் விளங்கும் பேரின்பம் எப்போதும் கிடைக்கும்.