பாடல் #1614

பாடல் #1614: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

இறப்பும் பிறப்பு மிருமையு நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டு மமரர் பிரானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறபபும பிறபபு மிருமையு நீஙகித
துறககுந தவஙகணட சொதிப பிரானை
மறபபில ராயநிததம வாயமொழி வாரகட
கறபபதி காடடு மமரர பிரானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கி
துறக்கும் தவம் கண்ட சோதி பிரானை
மறப்பு இலர் ஆய் நித்தம் வாய் மொழிவார்களுக்கு
அற பதி காட்டும் அமரர் பிரானே.

பதப்பொருள்:

இறப்பும் (இறப்பு) பிறப்பும் (பிறப்பு) இருமையும் (ஆகிய இரண்டு விதமான தன்மைகளும்) நீங்கி (நீங்கி விட)
துறக்கும் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய) தவம் (தவ நிலையில்) கண்ட (சாதகர் கண்ட) சோதி (ஜோதி மயமாகிய) பிரானை (இறைவனை)
மறப்பு (மறந்து விடுவதே) இலர் (இல்லாதவர்கள்) ஆய் (ஆக) நித்தம் (எப்போதும்) வாய் (தமது வாயால்) மொழிவார்களுக்கு (சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு)
அற (தர்மம் இருக்கின்ற) பதி (இடமாகிய சிவலோகத்தை) காட்டும் (காட்டி அருளுவான்) அமரர் (அமரர்களின்) பிரானே (தலைவனாகிய இறைவன்).

விளக்கம்:

இறைவனின் திருவருளால் பெற்ற ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்து மும்மலங்களையும் அறுத்து இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான தன்மைகளும் நீங்கி விட அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவாகிய தவ நிலையில் சாதகர் கண்ட ஜோதி மயமாகிய இறைவனை எப்போதும் மறந்து விடாமல் தமது வாயால் சொல்லுவதெல்லாம் இறைவனின் சொல்லாகவே சொல்லுபவர்களுக்கு தர்மம் இருக்கின்ற இடமாகிய சிவலோகத்தை காட்டி அருளுவான் அமரர்களின் தலைவனாகிய இறைவன்.

பாடல் #1615

பாடல் #1615: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

பிறந்து மிறந்தும் பல்பேதைமை யாலே
மறந்து மலவிரு ணீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர் பருவத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பிறநது மிறநதும பலபெதைமை யாலெ
மறநது மலவிரு ணீஙக மறைநது
சிறநத சிவனருள செர பருவததுத
துறநத வுயிரககுச சுடரொளி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பிறந்தும் இறந்தும் பல் பேதைமை ஆலே
மறந்து மல இருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர் பருவத்து
துறந்த உயிர்க்கு சுடர் ஒளி ஆமே.

பதப்பொருள்:

பிறந்தும் (பிறவி எடுத்தும்) இறந்தும் (இறந்தும்) பல் (பல முறை எடுக்கும் பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற) பேதைமை (அறிவு) ஆலே (இல்லாததால்)
மறந்து (தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து இருக்கின்ற) மல (மாயையாகிய மலத்தின்) இருள் (இருளானது) நீங்க (தம்மை விட்டு நீங்கி) மறைந்து (மறைந்து போகும் படி)
சிறந்த (சிறப்பான) சிவன் (இறைவனின்) அருள் (பேரருளை) சேர் (அடைகின்ற) பருவத்து (காலத்தில்)
துறந்த (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற) உயிர்க்கு (உயிர்களுக்கு) சுடர் (இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர்) ஒளி (ஒளி) ஆமே (ஆக விளங்கும்).

விளக்கம்:

பல முறைகள் பிறவி எடுத்து எடுத்து இறக்கின்ற பிறவிச் சுழலில் இருந்து விடுதலை பெறுகின்ற அறிவு இல்லாததால் தனக்குள் இறைவன் இருப்பதையே மறந்து மாயையாகிய மலத்தின் இருளில் இருக்கின்றார்கள். அப்போது அவர்களை விட்டு அந்த இருளானது நீங்கி மறைந்து போகும் படி சிறப்பான இறைவனின் பேரருளை அவர்கள் அடைகின்ற காலத்தில் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவாகிய தவ நிலையில் இருக்கின்ற உயிர்களுக்கு இறைவனுடைய பேரருளானது பிரகாசமாக திகழ்கின்ற சுடர் ஒளியாக விளங்கும்.

பாடல் #1616

பாடல் #1616: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அறவன் பிறப்பிலி யாரு மில்லாதா
னுறைவது காட்டக முண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறவன பிறபபிலி யாரு மிலலாதா
னுறைவது காடடக முணபது பிசசை
துறவனுங கணடீர துறநதவர தமமைப
பிறவி யறுததிடும பிததனகண டீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறவன் பிறப்பு இலி யாரும் இல்லாதான்
உறைவது காட்ட அகம் உண்பது பிச்சை
துறவனும் கண்டீர் துறந்தவர் தம்மை
பிறவி அறுத்திடும் பித்தன் கண்டீரே.

பதப்பொருள்:

அறவன் (அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும்) பிறப்பு (பிறப்பு என்பதே) இலி (இல்லாதவனும்) யாரும் (தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும்) இல்லாதான் (இல்லாதவனும்)
உறைவது (ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை) காட்ட (உணர்வதற்கு) அகம் (உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது) உண்பது (தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற) பிச்சை (ஞானத்தினால்)
துறவனும் (தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும்) கண்டீர் (பார்த்தீர்கள்) துறந்தவர் (அப்படி பார்த்த அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற) தம்மை (அடியவர்கள் தம்முடைய)
பிறவி (பிறவிகளை) அறுத்திடும் (அறுத்து நீக்கிவிடும்) பித்தன் (இறைவனும் அவனே) கண்டீரே (என்பதையும் துறவிகள் காண்பார்கள்).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருப்பவனும், பிறப்பு என்பதே இல்லாதவனும், தனக்கு சொந்தமானவர்கள் என்று எவரும் இல்லாதவனும் ஆகிய இறைவன் தமக்குள்ளே வீற்றிருக்கின்ற இடத்தை உணர்வதற்கு உள்ளுக்குள்ளே இருக்கின்ற பொருளாகிய ஆன்மாவானது தமக்குள் ஆராய்ந்து அறிந்து உணர்ந்து கொள்ளுகின்ற ஞானத்தினால் தமக்குள் அனைத்தையும் துறந்து வீற்றிருக்கின்ற மாபெரும் துறவியாகிய இறைவனையும் பார்த்தீர்கள். அவனைப் போலவே அனைத்தையும் துறந்து இருக்கின்ற அடியவர்கள் தம்முடைய பிறவிகளை அறுத்து நீக்கிவிடும் இறைவனும் அவனே என்பதையும் துறவிகள் காண்பார்கள்.

கருத்து:

தமக்குள்ளே மறைந்து இருக்கின்ற இறைவனை உணர்வதற்கு ஆன்மாவானது ஞானத்தை அறிந்து உணர்ந்து தகுதி பெறுகின்றது. அப்படி தகுதி பெற்று தமக்குள் உணர்ந்த இறைவனைப் போலவே நீங்களும் அனைத்தையும் துறந்து ஞானத்தை பற்றிக் கொண்டு இருந்தால் உங்களின் பிறவிகளை இறைவன் அறுத்து விடுவதையும் காண்பீர்கள்.

பாடல் #1617

பாடல் #1617: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நெறியைப் படைத்தா னெருஞ்சில் படைத்தா
னெறியில் வழுவில் நெருஞ்சில் முட்பாயு
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முட்பாயகில் லாவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெறியைப படைததா னெருஞசில படைததா
னெறியில வழுவில நெருஞசில முடபாயு
நெறியில வழுவா தியஙகவல லாரககு
நெறியில நெருஞசில முடபாயகில லாவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நெறியை படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவில் நெருஞ்சில் முள் பாயும்
நெறியில் வழுவாது இயங்க வல்லார்க்கு
நெறியில் நெருஞ்சில் முள் பாய இல்லாவே.

பதப்பொருள்:

நெறியை (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை) படைத்தான் (படைத்தான் இறைவன்) நெருஞ்சில் (அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும்) படைத்தான் (படைத்தான் இறைவன்)
நெறியில் (கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவில் (சிறிது விலகி நடந்தாலும்) நெருஞ்சில் (அந்த கடினமான) முள் (முள் போன்ற துன்பங்களும்) பாயும் (பாய்ந்து சாதகருக்கு நினைவூட்டும்)
நெறியில் (சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து) வழுவாது (விலகி விடாமல்) இயங்க (செயல் பட) வல்லார்க்கு (முடிந்தவர்களுக்கு)
நெறியில் (அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில்) நெருஞ்சில் (ஒரு பொழுதும் கடினமான) முள் (முள்கள் போன்ற துன்பங்கள்) பாய (பாய்வது) இல்லாவே (இருக்காது).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற துறவறத்தை மேற்கொள்ளுபவர்கள் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளை படைத்த இறைவனே அந்த வழிமுறைகளை சரியாக கடைபிடிக்காத போது அதை உணர்த்துவதற்கு கடினமான முள்ளை போன்ற துன்பங்களையும் படைத்தான். கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து சிறிது விலகி நடந்தாலும் அந்த கடினமான முள் போன்ற துன்பங்களும் பாய்ந்து சாதகருக்கு அவர்கள் வழி தவறி செல்வதை நினைவூட்டும். சிறுதளவும் கூட தாம் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகளில் இருந்து விலகி விடாமல் செயல் பட முடிந்தவர்களுக்கு அவர்கள் கடை படிக்கின்ற வழிமுறைகளில் ஒரு பொழுதும் கடினமான முள்கள் போன்ற துன்பங்கள் பாய்வது இருக்காது.

பாடல் #1618

பாடல் #1618: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

கேடுங் கடமையுங் கேட்டுவந் தைவரு
நாடி வளைந்தது நான் கடைவேனல
னாடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கைதந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கெடுங கடமையுங கெடடுவந தைவரு
நாடி வளைநதது நான கடைவெனல
னாடல விடையுடை யணணல திருவடி
கூடுந தவஞசெயத கொளகைதந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கேடும் கடமையும் கேட்டு வந்த ஐவரும்
நாடி வளைந்த அது நான் கடைவேன் அலன்
ஆடல் விடை உடை அண்ணல் திரு அடி
கூடும் தவம் செய்த கொள்கை தந்தானே.

பதப்பொருள்:

கேடும் (பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும்) கடமையும் (அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும்) கேட்டு (இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு) வந்த (பிறவியோடு கூட வந்த) ஐவரும் (ஐந்து புலன்களும்)
நாடி (அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே) வளைந்த (வளைந்து என்னை நடக்க) அது (வைக்கின்றதை) நான் (யான்) கடைவேன் (கடைபிடிப்பது) அலன் (இல்லை)
ஆடல் (தில்லையில் ஆடுகின்ற) விடை (விடை வாகனமாகிய நந்தியை) உடை (உடையவனாகிய) அண்ணல் (இறைவனின்) திரு (மதிப்பிற்குரிய) அடி (திருவடிகளை)
கூடும் (சென்று அடைகின்ற) தவம் (தவமுறையான) செய்த (இந்த செயலை) கொள்கை (செய்கின்ற கொள்கையை) தந்தானே (இறைவன் எமக்குத் தந்து அருளினான்).

விளக்கம்:

பிறவிக்கு காரணமாக இருக்கின்ற வினைகளையும் அந்த வினைகளை தீர்ப்பதற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் இறைவனிடம் பிறவி எடுப்பதற்கு முன்பே கேட்டுக் கொண்டு பிறவியோடு கூட வந்த ஐந்து புலன்களும் அதனதன் கடமையை செய்வதற்கு ஏற்றபடி ஆசைகளின் வழியே வளைந்து என்னை நடக்க வைக்கின்றதை யான் கடைபிடிப்பது இல்லை. தில்லையில் ஆடுகின்ற விடை வாகனமாகிய நந்தியை உடையவனாகிய இறைவனின் மதிப்பிற்குரிய திருவடிகளை சென்று அடைகின்ற தவமுறையான இந்த செயலை செய்கின்ற கொள்கையை இறைவன் எமக்குத் தந்து அருளினான்.

பாடல் #1619

பாடல் #1619: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

உழவனு ழவுழ வானம் வழங்க
வுழவனு ழவினிற் பூத்த குவளை
யுழவனு ழத்தியர் கண்ணொக்கு மென்றிட்
டுழவன தனையுழ வொழிந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உழவனு ழவுழ வானம வழஙக
வுழவனு ழவினிற பூதத குவளை
யுழவனு ழததியர கணணொககு மெனறிட
டுழவன தனையுழ வொழிந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உழவன் உழ உழ வானம் வழங்க
உழவன் உழவினில் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண் ஒக்கும் என்று இட்டு
உழவன் அதனை உழவு ஒழிந்தானே.

பதப்பொருள்:

உழவன் (இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி) உழ (தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய) உழ (செய்ய) வானம் (ஆகாயத்திலிருந்து இறைவனின்) வழங்க (அருளானது மழை போல் அவருக்கு கிடைத்து)
உழவன் (உழவனாகிய துறவி) உழவினில் (செய்த உழவாகிய சாதனையில்) பூத்த (இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று) குவளை (அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது)
உழவன் (அப்போது உழவனாகிய துறவி) உழத்தியர் (தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த) கண் (இறை சக்திக்கு) ஒக்கும் (ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது) என்று (என்று) இட்டு (அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி)
உழவன் (உழவனாகிய துறவி) அதனை (அந்த சக்தியைக் கொண்டே) உழவு (தான் செய்கின்ற கொள்கையை) ஒழிந்தானே (விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்).

விளக்கம்:

பாடல் #1618 இல் உள்ளபடி இறைவன் அருளிய துறவு முறை கொள்கையை கடைபிடிக்கின்ற உழவனாகிய துறவி தாம் கடைபிடிக்கின்ற கொள்கையில் சாதகம் செய்ய செய்ய ஆகாயத்திலிருந்து இறைவனின் அருளானது மழை போல் அவருக்கு கிடைக்கின்றது. அப்போது உழவனாகிய துறவி செய்த உழவாகிய சாதனையில் இறைவனது அருளால் கிடைத்த பக்குவத்தில் மேல் நிலைக்கு செல்ல செல்ல அவரது குண்டலினி சக்தியானது சகஸ்ரதளத்திற்கு ஏறிச் சென்று அங்கே உள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரை மலரச் செய்கின்றது. அதன் பிறகு உழவனாகிய துறவி தமது சகஸ்ரதளத்தில் தரிசித்த இறை சக்திக்கு ஒப்பாக தமது பக்குவம் இருக்கின்றது என்று அதை தமது சமாதி நிலைக்கு தொடக்கமாக கொண்டு தொடங்கி அந்த சக்தியைக் கொண்டே தான் செய்கின்ற கொள்கையை விட்டு தான் என்கின்ற உணர்வே இல்லாமல் அனைத்தையும் விட்டு விலகி சமாதி நிலையிலேயே வீற்றிருப்பார்.

பாடல் #1620

பாடல் #1620: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூறுவன்
நாள்துறந் தார்க்கவ னண்ப னவாவலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய்ய லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலதுறந தணணல விளஙகொளி கூறுவன
நாளதுறந தாரககவ னணப னவாவலி
காரதுறந தாரககவன கணணுத லாயநிறகும
பாரதுறந தாரககெ பதஞசெயய லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் துறந்து அண்ணல் விளங்கு ஒளி கூறுவன்
நாள் துறந்தார்க்கு அவன் நண்பன் அவா வலி
கார் துறந்தார்க்கு அவன் கண் நுதல் ஆய் நிற்கும்
பார் துறந்தார்க்கே பதம் செய்யல் ஆமே.

பதப்பொருள்:

மேல் (துறவின் மேலான நிலையில்) துறந்து (தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அண்ணல் (அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன்) விளங்கு (உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற) ஒளி (ஒளியாக) கூறுவன் (உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான்)
நாள் (அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவனே) நண்பன் (உற்ற நண்பனாக இருப்பான்) அவா (ஆசைகள்) வலி (எனும் வலிமை மிக்க)
கார் (மாய இருளை) துறந்தார்க்கு (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு) அவன் (அந்த இறைவன்) கண் (ஞானமாகிய) நுதல் (நெற்றிக் கண்) ஆய் (ஆகவே) நிற்கும் (நின்று அருளுவான்)
பார் (அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும்) துறந்தார்க்கே (விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே) பதம் (இறை நிலையை அடையும் பக்குவத்தை) செய்யல் (செய்து கொடுத்து) ஆமே (அருளுவான் இறைவன்).

விளக்கம்:

பாடல் #1619 இல் உள்ளபடி துறவின் சமாதியாகிய மேலான நிலையில் தான் எனும் உணர்வை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அனைத்தையும் காத்து அருளுபவனாகிய இறைவன் உண்மையை காண்பித்து உணர வைக்கின்ற ஒளியாக உள்ளுக்குள் இருந்து சொல்லிக் கொடுத்து வழி நடத்துவான். அதன் படியே கடை பிடித்து தமது வாழ்நாளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவனே உற்ற நண்பனாக இருப்பான். ஆசைகள் எனும் வலிமை மிக்க மாய இருளை விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கு அந்த இறைவன் ஞானமாகிய நெற்றிக் கண்ணாகவே நின்று அருளுவான். அவன் காட்டிய ஞான வழியில் உலகத்தையும் உலக பற்றுக்களையும் விட்டு விலகி இருக்கின்ற துறவிகளுக்கே இறை நிலையை அடையும் பக்குவத்தை செய்து கொடுத்து அருளுவான் இறைவன்.

பாடல் #1621

பாடல் #1621: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

நாகமு மொன்று படமைந்தி னாலது
போகமாழ் புற்றிற் பொருந்தி நிறைந்தது
வாக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேக படஞ்செய் துடம்பிட லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாகமு மொனறு படமைநதி னாலது
பொகமாழ புறறிற பொருநதி நிறைநதது
வாக மிரணடும படமவிரித தாடடொழிந
தெக படஞசெய துடமபிட லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாகமும் ஒன்று படம் ஐந்தின் ஆல் அது
போகம் ஆழ் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம் விரித்து ஆட்டு ஒழிந்து
ஏக படம் செய்து உடம்பு இடல் ஆமே.

பதப்பொருள்:

நாகமும் (உயிர்களின் உடல்) ஒன்று (ஒன்று) படம் (அதன் உணர்வுகள்) ஐந்தின் (பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்கள்) ஆல் (ஆல்) அது (கட்டி இழுக்கப் பட்டு)
போகம் (அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே) ஆழ் (ஆழ்ந்து) புற்றில் (ஆசைகளாகிய புற்றில்) பொருந்தி (பொருந்தி) நிறைந்தது (அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருந்து)
ஆகம் (தூல உடல் சூட்சும மனம் ஆகிய) இரண்டும் (இரண்டும்) படம் (தமது ஆசைகளின் வழியே படம்) விரித்து (விரித்து) ஆட்டு (ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி) ஒழிந்து (வாழ்க்கை ஒழிந்து போகின்றது)
ஏக (இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே) படம் (உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி) செய்து (செய்து) உடம்பு (அதை தமது உடலின்) இடல் (கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில்) ஆமே (வீற்றிருக்கலாம்).

விளக்கம்:

உயிர்களின் உடல் ஒன்று அதன் உணர்வுகள் பார்த்தல் கேட்டல் சுவைத்தல் மணத்தல் உணர்தல் ஆகிய ஐந்து விதமான புலன்களால் கட்டி இழுக்கப்பட்டு அதன் மூலம் உடல் அனுபவிக்கின்ற இன்பத்திலேயே ஆழ்ந்து ஆசைகளாகிய புற்றில் பொருந்தி அதிலேயே வாழ்க்கை முழுவதும் நிறைந்து இருக்கின்றது. அதனால் தூல உடல் சூட்சும மனம் ஆகிய இரண்டும் தமது ஆசைகளின் வழியே படம் விரித்து ஆடுகின்ற பாம்பைப் போல ஆடி வாழ்க்கை ஒழிந்து போகின்றது. இதை மாற்ற ஐந்து புலன்களையும் ஒரே உடலாகிய மனம் அடக்கி ஆளும் படி செய்து அதை தமது உடலின் கட்டுப் பாட்டில் வைத்து தியானத்தில் வீற்றிருக்கலாம். இந்த நிலையே துறவு ஆகும்.

பாடல் #1622

பாடல் #1622: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

அகன்றார் வழிமுத லாதிப் பிரானு
மிவன்றா னெனநின் றெளியனு மல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகு
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அகனறார வழிமுத லாதிப பிரானு
மிவனறா னெனநின றெளியனு மலலன
சிவனறான பலபல சீவனு மாகு
நயனறான வருமவழி நாமறி யொமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அகன்றார் வழி முதல் ஆதி பிரானும்
இவன் தான் என நின்று எளியனும் அல்லன்
சிவன் தான் பல பல சீவனும் ஆகும்
நயன்று தான் வரும் வழி நாம் அறியோமே.

பதப்பொருள்:

அகன்றார் (அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள்) வழி (தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த) முதல் (அந்த கணம் முதலே) ஆதி (ஆதியிலிருந்தே) பிரானும் (அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன்)
இவன் (இந்த துறவியே) தான் (தாம் தான்) என (என்று) நின்று (துறவியாகவே நின்றாலும்) எளியனும் (ஜீவாத்மா போன்ற எளியவன்) அல்லன் (இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான்)
சிவன் (அந்த பரமாத்மாவாகிய சிவனே) தான் (தான்) பல (பல) பல (பல விதமான) சீவனும் (ஜீவாத்மாக்களாகவும்) ஆகும் (இருக்கின்றான்)
நயன்று (ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி) தான் (தாமே) வரும் (வருகின்ற) வழி (வழி முறையை) நாம் (நாம்) அறியோமே (அறிவது இல்லை).

விளக்கம்:

அனைத்தையும் விட்டு விலகி நிற்கின்ற துறவிகள் தாம் செல்லுகின்ற வழியில் மேன்மை நிலையை அடைந்த அந்த கணம் முதலே ஆதியிலிருந்தே அனைத்திற்கும் தலைவனாக இருக்கின்ற இறைவன் இந்த துறவியே தாம் தான் என்று துறவியாகவே நின்றாலும் ஜீவாத்மா போன்ற எளியவன் இல்லை. பரமாத்மாவாகவே இருக்கின்றான். அந்த பரமாத்மாவாகிய சிவனே தான் பல பல விதமான ஜீவாத்மாக்களாகவும் இருக்கின்றான். ஆனாலும் அவன் துறவிகளிடத்தில் விரும்பி தாமே வருகின்ற வழி முறையை நாம் அறிவது இல்லை.

கருத்து:

அனைத்து உயிர்களுக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்றாலும் அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற உயிர்களுக்குள் இறைவன் தமது பரமாத்ம நிலையிலியே விருப்பத்தோடு வந்து வீற்றிருக்கின்றான்.

பாடல் #1623

பாடல் #1623: ஆறாம் தந்திரம் – 4. துறவு (அனைத்தையும் விட்டு விலகி இருக்கின்ற தவ நிலை)

தூம்பு துறந்தன வொன்பது வாய்தலு
மாம்பற் குழியி லகஞ்சுழிப் பட்டது
வேம்பேறி நோக்கினென் மீகாமன் கூறையிற்
கூம்பேறிக் கோயில் பழுக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தூமபு துறநதன வொனபது வாயதலு
மாமபற குழியி லகஞசுழிப படடது
வெமபெறி நொககினென மீகாமன கூறையிற
கூமபெறிக கொயில பழுககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தூம்பு துறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பல் குழியில் அகம் சுழி பட்டது
வேம்பு ஏறி நோக்கின் என் மீகாமன் கூறையில்
கூம்பு ஏறி கோயில் பழுக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

தூம்பு (தமது துளைகளாகிய கர்மங்களை) துறந்தன (துறந்தன) ஒன்பது (உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது) வாய்தலும் (கர்மங்களின் செயல்களாகிய நுழை வாயில்கள்)
ஆம்பல் (இதுவரை துன்பக்) குழியில் (குழியில்) அகம் (ஆன்மாவனது) சுழி (தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே) பட்டது (அகப் பட்டுக் கொண்டு இருந்தது)
வேம்பு (கர்மங்களை துறந்த பிறகு சுழுமுனை நாடியின் வழியே) ஏறி (குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி) நோக்கின் (பார்க்கும் போது) என் (அங்கே எமது ஆன்மாவை) மீகாமன் (காக்கின்றவனாகிய இறைவனை) கூறையில் (எனது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து)
கூம்பு (சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில்) ஏறி (ஏறி) கோயில் (அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து) பழுக்கின்ற (முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை) ஆறே (அடைகின்ற வழி கிடைத்தது).

விளக்கம்:

இதுவரை துன்பக் குழியில் ஆன்மாவனது தனது கர்மங்களை அனுபவிக்கின்ற வாழ்க்கை சுழலிலேயே அகப் பட்டுக் கொண்டு இருந்தது. அனைத்தையும் விட்டு விலகி துறவு எனும் தவ நிலையில் மேன்மை நிலையை அடையும் போது தமது உடலில் உள்ள இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு நாசிகள், வாய், கருவாய், எருவாய் ஆகிய ஒன்பது துளைகளாகிய கர்மங்களின் செயல்களை துறந்து விடுகின்றது. அதன் பிறகு பிறகு சுழுமுனை நாடியின் வழியே குண்டலினி சக்தியானது மேல் நோக்கி ஏறி பார்க்கும் போது அங்கே அவரது ஆன்மாவை காக்கின்றவனாகிய இறைவனை அவரது ஆன்மாவை மூடியிருந்த திரையை விலக்கிப் பார்த்து சுழுமுனையின் உச்சித் துளைக்கு மேலே இருக்கின்ற சகஸ்ரதளத்தில் ஏறி அங்கே கோயில் கொண்டு வீற்றிருந்து முக்தியை அளிக்கின்ற பேரோளியாகிய இறைவனை அடைகின்ற வழி அவருக்கு கிடைத்தது.