பாடல் #1319

பாடல் #1319: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்
நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாக
நவாக்கிரி யெண்பத் தொருவகை யாக
நவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி சககரம நானுரை செயயில
நவாககிரி யொன்று நவாககிரி யாக
நவாககிரி யெணபத தொருவகை யாக
நவாககிரி யாகககிலீஞ சௌம முதலீறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி சக்கரம் நான் உரை செய்யில்
நவ அக்கிரி ஒன்று நவ அக்கிரி ஆக
நவ அக்கிரி எண்பத்து ஒரு வகை ஆக
நவ அக்கிரி ஆக கிலீம் சௌம் முதல் ஈறே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) நான் (யான்) உரை (எடுத்துக் கூற) செய்யில் (ஆரம்பித்தால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஒன்று (ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாகிய அட்சரமே) நவ (ஒன்பது) அக்கிரி (அட்சரங்கள்) ஆக (ஆக இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) எண்பத்து (ஒன்பதும் ஒன்பதும் பெருக்கினால் வரும் மொத்தம் எண்பதும்) ஒரு (ஒன்றும் சேர்ந்து மொத்தம் எண்பத்தோரு) வகை (வகையான அட்சரங்களாக) ஆக (விரிவடைந்து இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆக (சக்கரமாக வடிவமைப்பு) கிலீம் (க்லீம் அட்சரமும்) சௌம் (ஸெளம் அட்சரமும்) முதல் (முதலும்) ஈறே (கடைசியுமாக உள்ளது).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்ற சக்கரமாகும். இந்த சக்கரத்தில் இருக்கின்ற ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால் மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்து இருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும் போது ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் முடிவதாக இருக்கின்றது. அதனை தலை கீழாகப் பார்க்கும் போது ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் முடிவதாகவும் இருக்கின்றது.

குறிப்பு: அக்கிரி என்ற சொல்லுக்கான விளக்கம்

அக்ஷரி – சமஸ்கிருதம் – சக்தியின் திருமேனியாக எழுத்து இருக்கும் வடிவம்
அட்சரி – தற்காலத் தமிழ்
அக்கிரி – திருமந்திரத் தமிழ்

பாடல் #1320

பாடல் #1320: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சௌம முதல வெளவொட வெறளவுளுமீறிக
கௌவுளு மையுளுங கலந்தி றீசிறீயென
ரொவவி லெழுஙகிலீ மநதிர பாதமாச
செவவி லெழுநது சிவாய நமவெனனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சௌம் முதல் வௌவ் வோடு ஹௌ உளும் ஈறிக்
கௌ உளும் ஐ உளும் கலந்து இறீ சிறீ என்று
ஓவ் இல் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வில் எழுந்து சிவாய நம என்னே.

பதப்பொருள்:

சௌம் (ஸௌம் எனும் அட்சரம்) முதல் (முதலாக) வௌவ் (ஔம் எனும்) வோடு (அட்சரத்தோடு சேர்த்து) ஹௌ (ஹௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஈறிக் (இறுதியில்)
கௌ (கௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஐ (ஐம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) கலந்து (ஒன்றாகக் கலந்து) இறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) சிறீ (ஶ்ரீம் எனும் அட்சரம்) என்று (என்றும்)
ஓவ் (ஓம் எனும்) இல் (அட்சரத்திலிருந்து) எழும் (எழுகின்ற) கிலீ (க்லீம் எனும் அட்சரம் வரை உள்ள) மந்திர (மந்திரத்தின்) பாதம் (அடியாகவும் கொண்டு) ஆச் (அந்த மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற)
செவ்வில் (சமயத்தில்) எழுந்து (மனதை ஒருநிலைப் படுத்தி) சிவாய நம என்னே (ஒன்பது அட்சரங்கள் உள்ள இந்த மந்திரத்தை சொல்லி சிவாய நம என்று சொல்லுங்கள்).

விளக்கம்:

‘ஸௌம்’ எனும் அட்சரம் முதலாக ‘ஔம்’ எனும் அட்சரத்தோடு சேர்த்து ‘ஹௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் ‘கௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ‘ஐம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து ‘ஹ்ரீம்’ எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்’ எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு ‘ஓம்’ எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற ‘க்லீம்’ எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

பாடல் #1321

பாடல் #1321: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி யாவது நானறி வித்தை
நவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்
நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோத
நவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி யாவது நானறி விததை
நவாககிரி யுளளெழு நனமைக ளெலலா
நவாககிரி மநதிரம நாவுளளெ யொத
நவாககிரி சததி நலநதருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி ஆவது நான் அறி வித்தை
நவ அக்கிரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவ அக்கிரி மந்திரம் நாவுள்ளே ஓத
நவ அக்கிரி சத்தி நலம் தரும் தானே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆவது (சக்கரமாவது) நான் (யான்) அறி (அறிந்து கொண்ட) வித்தை (ஞானக் கலையாகும்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) உள் (சக்கரத்திற்குள்ளிருந்து) எழும் (எழுகின்ற) நன்மைகள் (நன்மைகளை) எல்லாம் (எல்லாம் அடைய வேண்டுமென்றால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) மந்திரம் (இந்த மந்திரத்தை) நாவுள்ளே (நாக்குக்குள்ளேயே வைத்து) ஓத (சத்தமில்லாமல் ஓதினால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சத்தி (இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள்) நலம் (அனைத்து நலங்களையும்) தரும் (கொடுத்து) தானே (தானே அருளுவார்கள்).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது யான் அறிந்து கொண்ட கலைகளாகிய கர்மாக்களை அழித்து பிறவி அறுத்தல், இனியும் கர்மங்கள் சேராமல் தடுத்தல், இறைவனை தமக்குள் உணர்ந்து அடைவது ஆகியவை ஆகும். இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்த சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். அதனை அடைய வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை நாக்கை மட்டும் அசைத்து சத்தமில்லாமல் ஓதினால் இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.

இப்பாடலை திருமந்திர சுவடி எழுத்துக்கள் மற்றும் பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பாடல் #1307

பாடல் #1307: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரதி யொரைநதுங காணிய பொனமை
யகராதி யொர ககரததமெ பொலுஞ
சராதி நாலஞசு தானசுதத வெணமை
மகராதி மூவிததை காமிய முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ககர ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர ஆதி ஓர் அக் அரத்தமே போலும்
சகர ஆதி நால் அஞ்சு தான் சுத்த வெண்மை
மகர ஆதி மூவித்தை காமிய முத்தியே.

பதப்பொருள்:

ககர (ககாரம் / க எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) ஐந்தும் (ஐந்து எழுத்துக்களும்) காணிய (தங்களுக்குள் தரிசித்தால்) பொன்மை (அவை பொன் நிறத்தில் இருக்கும்)
அகர (அகாரம் / அ எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அக் (சுத்த) அரத்தமே (சிவப்பு நிறமே) போலும் (போல இருக்கும்)
சகர (சகாரம் / ச எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) நால் அஞ்சு (நான்கும் ஐந்தும் பெருக்கி வரும் இருபது எழுத்துக்களும்) தான் (தமது தன்மையில்) சுத்த (சுத்தமான) வெண்மை (வெள்ளை நிறத்தில் இருக்கும்)
மகர (உயிர்களுக்கு) ஆதி (ஆதியிலிருந்தே தொடர்ந்து வருகின்ற) மூவித்தை (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து மேலுள்ள மந்திரங்களைத் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால்) காமிய (ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்மங்களும் அழிந்து) முத்தியே (முத்தியை இறையருளால் அடையலாம்).

விளக்கம்:

ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.

பாடல் #1308

பாடல் #1308: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பதப்பொருள்:

ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1309

பாடல் #1309: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமே
யாகப் பராவித்தை யாமுத்தி சித்தியே
யேகப் பராசத்தி யாகச் சிவகுரு
யோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எகப பராசததி யீசறகா மஙகமெ
யாகப பராவிததை யாமுததி சிததியெ
யெகப பராசததி யாகச சிவகுரு
யொகப பராசததி யுணமை யெடடாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏகப் பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகப் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகப் பராசத்தி ஆகச் சிவ குரு
யோகப் பராசத்தி உண்மை எட்டாமே.

பதப்பொருள்:

ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஈசற்கு (இறை) ஆம் (அவருக்கு) அங்கமே (சரி பாதி அங்கமாக இருக்கின்றாள்)
ஆகப் (அவளே தனது திருமேனியில்) பராவித்தை (சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும்) ஆம் (இருக்கின்றாள்) முத்தி (முக்தியாகவும்) சித்தியே (சாதகர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்)
ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஆகச் (பார்க்கின்ற) சிவ குரு (குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்)
யோகப் (யோகத்தினால் அடையக் கூடிய எட்டுவிதமான சித்திகளில்) பராசத்தி (பரா சக்தியானவள்) உண்மை (பேருண்மையின்) எட்டாமே (எட்டு விதமான சக்திகளாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1308 இல் உள்ளபடி சாதகர்கள் அறிந்து கொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றாகிய பரா சக்தியே. அவளே இறைவனுக்கு சரி பாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில் சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும், சாதகர்களுக்கு கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக் கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றாகிய பரா சக்தியே சாதகர்கள் பார்க்கின்ற குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் பேருண்மையாக இருக்கின்ற எட்டு விதமான சக்திகளாகவும் பரா சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1310

பாடல் #1310: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்து
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எடடாகிய சததி யெடடாகும யொகததுக
கடடாகி நாதாநதத தெடடுங கலபபித
தொடடாத விநதுவுந தானற றெழிநது
கிடடா தொழிநதது கீழான மூடரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாத அந்தத்து எட்டும் கலப்பித்து
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்து
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பதப்பொருள்:

எட்டாகிய (எட்டு விதமாக இருக்கின்ற) சத்தி (சக்திகளே) எட்டாகும் (எட்டு விதமான) யோகத்துக் (யோகங்களின் பூரண சக்தியாக இருக்கின்றார்கள்)
கட்டாகி (இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து) நாத (நாதமாகிய) அந்தத்து (எல்லையாக இருக்கின்ற பராசக்தியில்) எட்டும் (எட்டு சக்திகளும்) கலப்பித்து (கலந்து ஒன்றாகும் போது)
ஒட்டாத (அந்தப் பராசக்தியோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற) விந்துவும் (சாதகரின் ஆன்ம ஒளியும்) தான் (தான் எனும் அகங்காரத்தை) அற்று (நீக்கி) ஒழிந்து (அழிந்து இல்லாமல் போகும்)
கிட்டாது (இந்த நிலை கிடைக்காமல்) ஒழிந்தது (அழிந்து போய்விடும்) கீழான (இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கீழ்மையான) மூடர்க்கே (முட்டாள்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1309 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் இருக்கின்ற எட்டு விதமான சக்திகளே எட்டு விதமான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றார்கள். இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாத எல்லையாக இருக்கின்ற பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும் போது அவர்களோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற சாதகரின் ஆன்ம ஒளியும் தான் எனும் அகங்காரம் நீங்கி அழிந்து போகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கின்ற இந்த நிலை இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தாத கீழ்மையான முட்டாள்களுக்கு கிடைக்காமல் அழிந்து போகும்.

திருமந்திரத்தில் அருச்சனை

திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் 3 ஆவதாக உள்ள “அருச்சனை” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 20-11-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

பாடல் #1311

பாடல் #1311: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏதும் பலமா மியந்திரா சன்னடி
யோதிக் குருவி னுபதேச முட்கொண்டு
நீதங்கு மங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எதும பலமா மியநதிரா சனனடி
யொதிக குருவி னுபதெச முடகொணடு
நீதஙகு மஙக நியாசந தனைபபண்ணிச
சாதங கெடசசெமபிற சடகொணந தானிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏதும் பலமாம் இயந்திர ஆசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம் தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட் கோணம் தான் இடே.

பதப்பொருள்:

ஏதும் (எந்த விதமான) பலமாம் (சக்திகளையும் பெறுவதற்கு) இயந்திர (உதவுகின்ற புவனாபதிச் சக்கரத்திற்கு) ஆசன் (சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின்) அடி (திருவடிகளை பற்றிக் கொண்டு)
ஓதிக் (அந்தத் திருவடிகளைப் போற்றி வணங்கி) குருவின் (சாதகர் தமது குருவிடம்) உபதேசம் (முறைப்படி உபதேசம் கேட்டுப் பெற்றுக் கொண்ட மந்திரங்களை) உட்கொண்டு (முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு)
நீ (சாதகர் தாம்) தங்கும் (வீற்றிருக்கும் இடத்தில்) அங்க (தமது உடல் அங்கங்களால்) நியாசம் (குரு உபதேசித்த நியமங்களை) தனைப் (அவர் உபதேசித்த முறைப்படியே) பண்ணிச் (சரியாகச் செய்து)
சாதம் (தமது பிறவி முழுவதும்) கெடச் (இல்லாமல் போகும்படி) செம்பில் (செப்புத் தகட்டில்) சட் (ஆறு) கோணம் (கோணம் வரும்படி) தான் (இரண்டு பெரிய முக்கோணங்களை) இடே (வரைந்து வையுங்கள்).

விளக்கம்:

பாடல் #1310 இல் உள்ளபடி அட்டாங்க யோகத்தின் மூலம் பெறுகின்ற அட்டமா சித்திகளைப் போன்ற எந்த விதமான சக்திகளையும் பெறுவதற்கு உதவும் புவனாபதிச் சக்கரத்திற்கு சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு போற்றி வணங்க வேண்டும். அதன் பலனாக இறைவன் சாதகருக்கு சரியான குருவைக் காண்பித்து அருளுவார். அந்த குருவிடம் முறைப்படி உபதேசம் பெற்ற மந்திரங்களையும் நியமங்களையும் முழுவதுமாக உள் வாங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குரு உபதேசித்த மந்திரங்களையும் நியமங்களையும் அவர் உபதேசித்த முறைப்படியே ஓதி தமது உடல் அங்கங்களால் சரியாகச் செய்து தமக்கு இனிப் பிறவியே வேண்டாம் என்று வேண்டி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து வைக்க வேண்டும்.

பாடல் #1312

பாடல் #1312: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

சட்கோணம் தன்னிற் சிரீயிரீ தானிட்டு
வக்கோண மாறின் றலையிலிரீங் காரமிட்
டெக்கோண முஞ்சூழெ ழில்வட்ட மிட்டுப்பின்
மிக்கீரெட் டக்கர மம்முதல் மேலிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சடகொணந தனனிற சிரீயிரீ தானிடடு
வககொண மாறின றலையிலிரீங காரமிட
டெககொண முஞசூழெ ழிலவடட மிடடுபபின
மிககீரெட டககர மமமுதல மெலிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சட் கோணம் தன்னில் சிரீம் யிரீம் தான் இட்டு
அக் கோணம் ஆறின் தலையில் இரீங்காரம் இட்டு
எக் கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்க ஈர் எட்டு அக்கரம் அம் முதல் மேலிடே.

பதப்பொருள்:

சட் (ஆறு) கோணம் (முக்கோணங்களாக அமைத்த) தன்னில் (இரண்டு பெரிய முக்கோணங்களின் நடுவில்) சிரீம் (ஸ்ரீம்) யிரீம் (ஹ்ரீம்) தான் (ஆகிய பீஜங்களை) இட்டு (எழுதி விட்டு)
அக் (அந்த) கோணம் (முக்கோணங்கள்) ஆறின் (ஆறுக்கும்) தலையில் (முனையில்) இரீங்காரம் (ஹ்ரீம் பீஜத்தை) இட்டு (எழுதி விட்டு)
எக் (அனைத்து) கோணமும் (முக்கோணங்களும்) சூழ (சூழ்ந்து இருக்கும் படி) எழில் (அழகான) வட்டம் (வட்டமாக) இட்டுப் (வரைந்து விட்டு) பின் (பிறகு)
மிக்க (அதற்கு மேலே) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு) அக்கரம் (அட்சரங்களாக) அம் (ஹம்) முதல் (முதலாகிய பதினாறு உயிர் எழுத்துக்களையும்) மேலிடே (மேலே சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1311 இல் உள்ளபடி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து அதற்கு நடுவில் ‘ஸ்ரீம்’ மற்றும் ‘ஹ்ரீம்’ ஆகிய இரண்டு பீஜ எழுத்துக்களை எழுத வேண்டும். அந்த ஆறு கோணங்களுக்கும் தலைப்பகுதியாக இருக்கின்ற ஒவ்வொரு முனையிலும் ‘ஹ்ரீம்’ பீஜ எழுத்தை எழுத வேண்டும். இந்த ஆறு கோணங்களையும் சூழ்ந்து இருக்கும் படி அழகான வட்டமாக வரைய வேண்டும். அந்த வட்டத்திற்கு மேல் ஆதி காலத் தமிழ் எழுத்துக்களில் ‘ஹம்’ முதலாக இருக்கும் பதினாறு அட்சர எழுத்துக்களை சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்.

குறிப்பு புவானபதி சக்கரம் வரையும் முறை இப்பாடலில் ஆரம்பித்து 3 பாடல்களில் வருகிறது. இப்பாடலுடன் கொடுக்கப்பட்ட புவானபதி சக்கரம் படம் முழுமையான படம் இல்லை அடுத்த 2 பாடல்களிலும் வரையும் முறை தொடரும்.