பாடல் #1680

பாடல் #1680: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

குருட்டினை நீங்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீங்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

குருடடினை நீஙகுங குருவினைக கொளளார
குருடடினை நீஙகாக குருவினைக கொளவர
குருடுங குருடுங குருடடாடட மாடிக
குருடுங குருடுங குழிவிழு மாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

குருட்டினை நீங்கும் குருவினை கொள்ளார்
குருட்டினை நீங்கா குருவினை கொள்வர்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடி
குருடும் குருடும் குழி விழும் ஆறே.

பதப்பொருள்:

குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கும் (விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட) குருவினை (உண்மை குருவினை) கொள்ளார் (தேடி அடையாதவர்கள்)
குருட்டினை (மாயையாகிய இருள்) நீங்கா (தம்மை விட்டு இன்னமும் நீங்காத) குருவினை (பொய்யான குருவிடமே) கொள்வர் (சென்று சிக்கிக் கொள்கிறார்கள்)
குருடும் (இது ஒரு குருடனும்) குருடும் (இன்னொரு குருடனும்) குருட்டு (சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல்) ஆட்டம் (தடுமாறி) ஆடி (ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி)
குருடும் (இந்த குருடனும்) குருடும் (அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும்) குழி (சேர்ந்து பிறவிக் குழியில்) விழும் (மீண்டும் மீண்டும் விழுவதற்கே) ஆறே (வழியாகவே இருக்கும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் விலகுகின்ற உயர்ந்த தன்மை கொண்ட உண்மை குருவினை தேடி அடையாதவர்கள் மாயையாகிய இருள் தம்மை விட்டு இன்னமும் நீங்காத பொய்யான குருவிடமே சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இது ஒரு குருடனும் இன்னொரு குருடனும் சேர்ந்து பார்வை இல்லாமல் இருளில் இடம் தெரியாமல் தடுமாறி ஆடுவது போல இறைவனை அடையும் வழி தெரியாமல் ஆடி இந்த குருடனும் அவன் உண்மை என்று நம்பிய பொய்யான குருவாகிய குருடனும் சேர்ந்து பிறவிக் குழியில் மீண்டும் மீண்டும் விழுவதற்கான வழியாகவே இருக்கும்.

பாடல் #1681

பாடல் #1681: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

மனத்தி லெழுந்ததோர் மாயக் கண்ணாடி
நினைக்கி லதனி னிழலையுங் காணார்
வினைப் பயன்போக விளக்கியுங் கொள்ளார்
புழைக்கடைக் கிச்சித்துப் போகின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனததி லெழுநததொர மாயக கணணாடி
நினைககி லதனி னிழலையுங காணார
வினைப பயனபொக விளககியுங கொளளார
புழைககடைக கிசசிததுப பொகினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மனத்தில் எழுந்தது ஓர் மாய கண்ணாடி
நினைக்கில் அதனின் நிழலையும் காணார்
வினை பயன் போக விளக்கியும் கொள்ளார்
புழை கடைக்கு இச்சித்து போகின்ற ஆறே.

பதப்பொருள்:

மனத்தில் (உயிர்கள் தங்களின் மனதினில்) எழுந்தது (எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால்) ஓர் (அது ஒரு) மாய (மாய / பொய்யான) கண்ணாடி (கண்ணாடியாக இருக்கின்றது)
நினைக்கில் (அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்கள்) அதனின் (அதனுடைய) நிழலையும் (நிழலைக் கூட) காணார் (காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள்)
வினை (தாங்கள் செய்கின்ற வினையின்) பயன் (பயன்) போக (தீர்ந்து போவதற்கான) விளக்கியும் (வழிமுறைகளை உபதேசித்தாலும்) கொள்ளார் (அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல்)
புழை (கீழ் நிலைக்கு) கடைக்கு (செல்லும்) இச்சித்து (தங்களின் ஆசைகளினால்) போகின்ற (மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற) ஆறே (வழியிலேயே செல்கிறார்கள்).

விளக்கம்:

உயிர்கள் தங்களின் மனதினில் எழுகின்ற எண்ணங்களை மாயை மறைத்து இருப்பதால் அது ஒரு பொய்யான கண்ணாடியாக இருக்கின்றது. அந்த மனதில் நினைத்துப் பார்க்கின்ற கற்பனையான எண்ணங்களின் நிழலைக் கூட காண முடியாதவர்களாக இருக்கின்றார்கள். தாங்கள் செய்கின்ற வினையின் பயன் தீர்ந்து போவதற்கான வழிமுறைகளை உபதேசித்தாலும் அதை கடை பிடித்து தங்களின் வினைகளை தீர்த்துக் கொண்டு மேல் நிலைக்குப் போகும் வழியில் செல்லாமல், கீழ் நிலைக்கு செல்லும் தங்களின் ஆசைகளினால் மேலும் மேலும் பிறவிகள் எடுக்கின்ற வழியிலேயே செல்கிறார்கள்.

பாடல் #1682

பாடல் #1682: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

ஏயெனி லேயென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளொ
ருவூனிலை செய்யு முருவிலி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எயெனி லெயென மாடடார பிரசைகள
வாயமுலை பெயய மதுரநின றூறிடுந
தாயமுலை யாவ தறியார தமருளொ
ருவூனிலை செயயு முருவிலி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏய் எனில் ஏய் என மாட்டார் பிரசைகள்
வாய் முலை பெய்ய மதுர நின்று ஊறிடும் (மாதர் நின்று ஊட்டிடும்)
தாய் முலை ஆவது அறியார் தமர் உள் (தமர் உள்ளோர்)
ஒரு ஊன் நிலை செய்யும் உரு இலி தானே.

பதப்பொருள்:

ஏய் (ஏய்) எனில் (என்று அழைத்தால்) ஏய் (மறுபடியும் ஏய்) என (என்று) மாட்டார் (சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற) பிரசைகள் (சாதாரண மனிதர்கள் கூட)
வாய் (தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த) முலை (தாயின் மார்பில் இருந்து) பெய்ய (வருகின்ற) மதுர (இனிமையான பாலாக) நின்று (இருந்து) ஊறிடும் (ஊறுகின்ற)
தாய் (தமது தாயின்) முலை (மார்பகம்) ஆவது (ஆக இருப்பது எது என்பதை) அறியார் (அறியாமல் இருக்கின்றார்கள்) தமர் (தமக்கு) உள் (உள்ளே இருக்கின்ற)
ஒரு (ஒரு சக்தியாக இருந்து) ஊன் (தமது உடலை) நிலை (நிலையாக) செய்யும் (பிடித்து வைத்து இருக்கின்றது) உரு (உருவம்) இலி (இல்லாத) தானே (இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை).

விளக்கம்:

ஏய் என்று அழைத்தால் மறுபடியும் ஏய் என்று சொல்லாமல் தன்னை அழைக்கிறார்கள் என்ன என்று கேட்போம் என்கிற அடிப்படை அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாம் குழந்தையாக இருந்த பருவத்தில் வாய்க்குள் வைத்த தாயின் மார்பில் இருந்து வருகின்ற இனிமையான பால் ஊறுகின்ற தமது தாயின் மார்பகமாக இருப்பது எது என்பதை அறியாமல் இருக்கின்றார்கள். தமக்கு உள்ளே இருக்கின்ற ஒரு சக்தியாக இருந்து தமது உடலை நிலையாக பிடித்து வைத்து இருக்கின்றது உருவம் இல்லாத இறைவனே என்பதை அவர்கள் அறிவது இல்லை.

கருத்து:

இயல்பான அறிவு இருக்கின்ற சாதாரண மனிதர்கள் கூட தாங்கள் குழந்தையாக இருக்கின்ற போது கிடைத்த முதல் உணவான பாலில் இருந்து தமக்குள் இயங்குகின்ற அனைத்தும் தமக்குள் இருக்கின்ற இறைவனே செய்கின்றான் என்பதை உணராமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1683

பாடல் #1683: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்ய வுறுதி நடந்தாகா
தீயென்றிங் குன்னைத் தெளிந்தேன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னை பிறர்தெளி யாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வாயொனறு சொலல மனமொனறு சிநதிகக
நீயொனறு செயய வுறுதி நடநதாகா
தீயெனறிங குனனைத தெளிநதென தெளிநதபின
பெயெனறிங கெனனை பிறரதெளி யாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வாய் ஒன்று சொல்ல மனம் ஒன்று சிந்திக்க
நீ ஒன்று செய்ய உறுதி நடந்து ஆகா
தீ என்று இங்கு உன்னை தெளிந்தேன் தெளிந்த பின்
பேய் என்று இங்கு என்னை பிறர் தெளியாரே.

பதப்பொருள்:

வாய் (வாயின் மூலம்) ஒன்று (ஒன்று) சொல்ல (சொல்லவும்) மனம் (மனமானது) ஒன்று (வேறொன்றை) சிந்திக்க (சிந்திக்கவும்)
நீ (நீங்கள்) ஒன்று (வேறொன்றை) செய்ய (செய்வதாகவும் இருந்தால்) உறுதி (உறுதியாக) நடந்து (நடப்பது எதுவும்) ஆகா (பயன் ஆகாது)
தீ (எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம்) என்று (என்று) இங்கு (இந்த உலகத்திலேயே) உன்னை (இறைவனாகிய உன்னை) தெளிந்தேன் (யான் தெளிவாக அறிந்து கொண்டேன்) தெளிந்த (அவ்வாறு தெளிவாக அறிந்த) பின் (பிறகு)
பேய் (இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன்) என்று (என்று) இங்கு (இந்த உலகத்தில்) என்னை (என்னை) பிறர் (வேறு யாரும்) தெளியாரே (நினைக்க மாட்டார்கள்).

விளக்கம்:

வாயின் மூலம் ஒன்று சொல்லவும், அதே நேரம் மனமானது வேறொன்றை சிந்திக்கவும், அப்போது நீங்கள் வேறொன்றை செய்வதாகவும் இருந்தால் உறுதியாக நடப்பது எதுவும் பயன் ஆகாது. எனக்குள்ளேயே இருக்கின்ற பேரொளியான தீயின் உருவம் என்று இந்த உலகத்திலேயே இறைவனாகிய உன்னை யான் தெளிவாக அறிந்து கொண்டேன். அவ்வாறு தெளிவாக அறிந்த பிறகு இறந்து பேயாகின்ற மற்றவர்களைப் போன்றவன் என்று இந்த உலகத்தில் என்னை வேறு யாரும் நினைக்க மாட்டார்கள்.

கருத்து:

மனமும் வாக்கும் உடலும் ஒன்றாக செயல் படும் படி எதையும் செய்தால் அது நம்மை ஞானியாக்கி நமக்குள் இருக்கின்ற இறைவனை அறிந்து கொள்ள வைத்து இனி பிறவி எடுக்காத நிலைக்கு நம்மை கொண்டு செல்லும்.

பாடல் #1684

பாடல் #1684: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

பஞ்சத் துரோகத் ததிபாதகர் தம்மைப்
பஞ்ச சமையத்தோர் வேந்த னருந்தெண்டம்
விஞ்சத்த வப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத் துள்ளாகிப் புவியெங்கும் பாட்குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பஞசத துரொகத ததிபாதகர தமமைப
பஞச சமையததொர வெநத னருநதெணடம
விஞசதத வபபுவி வெறெ விடாவிடிற
பஞசத துளளாகிப புவியெஙகும பாடகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பஞ்ச துரோகத்து அதி பாதகர் தம்மை
பஞ்ச சமையத்தோர் வேந்தன் அரும் தெண்டம்
விஞ்சு அத் தவப் புவி வேறே விடா விடில்
பஞ்சத்து உள் ஆகி புவி எங்கும் பாழ்குமே.

பதப்பொருள்:

பஞ்ச (கொலை களவு கள் காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும்) துரோகத்து (ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது) அதி (அந்த மகா பாவங்களுக்கும் மேலான) பாதகர் (பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது) தம்மை (அப்படிப் பட்டவர்களை)
பஞ்ச (அந்த ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை) சமையத்தோர் (செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி) வேந்தன் (அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு) அரும் (மிகவும் கொடுமையான) தெண்டம் (தண்டனையைக் கொடுத்து)
விஞ்சு (விலக்கி) அத் (அவர்களின்) தவப் (புண்ணியமான) புவி (நாட்டை விட்டு) வேறே (வேறு இடத்திற்கு போகும் படி) விடா (கொண்டு சென்று விடாமல்) விடில் (இருந்தால்)
பஞ்சத்து (பஞ்சத்திற்கு) உள் (உள்ளே) ஆகி (அகப்பட்டுக் கொண்டு) புவி (அவர்களின் புண்ணிய நாடு) எங்கும் (முழுவதும்) பாழ்குமே (பாழாக போய் விடும்).

விளக்கம்:

கொலை களவு கள் (மது) காமம் பொய் கூறல் ஆகிய ஐந்து வகையான மகா பாவங்களையும் ஒரு உண்மையான ஞானியைப் போல பொய்யான வேடம் அணிந்தவர்கள் தம்மை நம்புகிறவர்களை ஏமாற்றி துரோகம் செய்வது அந்த மகா பாவங்களுக்கும் மேலான பாதகர்களாக அவர்களை ஆக்குகின்றது. அப்படி ஐந்து வகையான மகா பாவங்களுக்கும் மேலான பாவங்களை செய்பவர்களை பார்த்து அவர்களைப் போலவே மற்றவர்களும் அந்த பாவங்களை கடை பிடித்து விடாத படி அந்த நாட்டை ஆளுகின்ற அரசன் அந்த பஞ்ச மகா துரோகிகளுக்கு மிகவும் கொடுமையான தண்டனையைக் கொடுத்து தங்களின் புண்ணியமான நாட்டை விட்டு அவர்களை விலக்கி வைத்து வேறு இடத்திற்கு போகும் படி கொண்டு சென்று விடாமல் இருந்தால் அவர்களின் புண்ணிய நாடு பஞ்சத்தில் அகப்பட்டுக் கொண்டு முழுவதும் பாழாக போய் விடும்.

பாடல் #1685

பாடல் #1685: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

தவத்திடை நின்றவர் தாமுண்ணுங் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவ ரறியார்
தவத்திடை நின்றறி யாதவ ரெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தவததிடை நினறவர தாமுணணுங கனமஞ
சிவததிடை நினறது தெவ ரறியார
தவததிடை நினறறி யாதவ ரெலலாம
பவததிடை நினறதொர பாடது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தவத்து இடை நின்றவர் தாம் உண்ணும் கன்மம்
சிவத்து இடை நின்றது தேவர் அறியார்
தவத்து இடை நின்று அறியாதவர் எல்லாம்
பவத்து இடை நின்றது ஓர் பாடு அது ஆமே.

பதப்பொருள்:

தவத்து (இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற) இடை (வழியில்) நின்றவர் (நிற்கின்ற தவசிகள்) தாம் (தாங்கள்) உண்ணும் (அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய) கன்மம் (கர்மங்கள் அனைத்தும்)
சிவத்து (அதை உருவாக்கிய இறைவன்) இடை (இடத்திலேயே) நின்றது (சென்று சேர்ந்து விடுவதை) தேவர் (தேவர்களும்) அறியார் (அறிய மாட்டார்கள்)
தவத்து (தவத்தின்) இடை (வழியில்) நின்று (நின்று) அறியாதவர் (இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள்) எல்லாம் (எல்லாரும்)
பவத்து (பிறவி எனும்) இடை (கட்டுக்குள் அகப்பட்டு) நின்றது (நின்றது) ஓர் (ஒரு) பாடு (முடிவில்லாத வினைகளை) அது (அனுபவிக்கும் நிலையிலேயே) ஆமே (இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை மட்டுமே எண்ணிக் கொண்டு தவம் புரிகின்ற வழியில் நிற்கின்ற தவசிகள் தாங்கள் அனுபவிக்க வேண்டியதும் இனி சேருவதும் ஆகிய கர்மங்கள் அனைத்தும் அதை உருவாக்கிய இறைவன் இடத்திலேயே சென்று சேர்ந்து விடுவதை தேவர்களும் அறிய மாட்டார்கள். தவத்தின் வழியில் நின்று இந்த பேருண்மையை அறிந்து கொள்ளாதவர்கள் எல்லாரும் பிறவி எனும் கட்டுக்குள் அகப்பட்டு நின்றது ஒரு முடிவில்லாத வினைகளை அனுபவிக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள்.

பாடல் #1686

பாடல் #1686: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

கன்றல் கருதலுங் கருமை சேர்தலுந்
தின்றல் சுவைத்தலுந் தீமைகள் செய்தலும்
பின்றமை யென்றலும் பெருமை கூறலு
மென்றிவை யிறைபா லிசைகை யல்லவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கனறல கருதலுங கருமை செரதலுந
தினறல சுவைததலுந தீமைகள செயதலும
பினறமை யெனறலும பெருமை கூறலு
மெனறிவை யிறைபா லிசைகை யலலவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கன்றல் கருதலும் கருமை சேர்தலும்
தின்றல் சுவைத்தலும் தீமைகள் செய்தலும்
பின் தமை என்றலும் பெருமை கூறலும்
என்ற இவை இறை பால் இசைகை அல்லவே.

பதப்பொருள்:

கன்றல் (அகங்காரத்தினால் வரும் கோபத்தை) கருதலும் (எண்ணி இருப்பதும்) கருமை (நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களை செய்து கர்மங்களை) சேர்தலும் (சேர்த்துக் கொள்வதும்)
தின்றல் (உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல்) சுவைத்தலும் (வாய் சுவைக்காக ஆசைப் பட்டு சாப்பிடுவதும்) தீமைகள் (தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை) செய்தலும் (செய்வதும்)
பின் (அனைவரும் பின்னால்) தமை (தாமே முன்னால்) என்றலும் (என்கின்ற சுய நலத்தோடு இருப்பதும்) பெருமை (தற்பெருமை) கூறலும் (பேசுவதும்)
என்ற (ஆகிய) இவை (இந்த ஆறு விதமான தன்மைகளும்) இறை (இறைவனின்) பால் (மேல்) இசைகை (பொருந்தி இருக்கும் நிலைக்கு) அல்லவே (கொண்டு செல்லாது).

விளக்கம்:

அகங்காரத்தினால் வரும் கோபத்தை எண்ணி இருப்பதும், நான் என்கின்ற எண்ணத்தோடு செயல்களை செய்து கர்மங்களை சேர்த்துக் கொள்வதும், உயிரை வளர்ப்பதற்காக சாப்பிடாமல் வாய் சுவைக்காக ஆசைப் பட்டு சாப்பிடுவதும், தர்மத்திற்கு எதிரான தீய செயல்களை செய்வதும், தமக்கு பின்பு தான் மற்றவர்கள் என்கிற சுய நலத்தோடு இருப்பதும், தற்பெருமை பேசுவதும், ஆகிய இந்த ஆறு விதமான தன்மைகளும் இறைவனோடு சேர்ந்து இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லாது.

பாடல் #1687

பாடல் #1687: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருன்னிமை கட்டுமின் காண்மின்
விடியாமைக் காக்கும் விளக்கது வாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

விடிவ தறியார வெளிகாண மாடடார
விடியில வெளியில விழிககவு மாடடார
கடியதொ ருனனிமை கடடுமின காணமின
விடியாமைக காககும விளககது வாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

விடிவது அறியார் வெளி காண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியது ஓர் உன்னி மை கட்டுமின் காண்மின்
விடியாமைக்கு ஆக்கும் விளக்கு அது ஆமே.

பதப்பொருள்:

விடிவது (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை) அறியார் (அறிய மாட்டார்கள்) வெளி (அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை) காண (பார்க்க) மாட்டார் (மாட்டார்கள்)
விடியில் (மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில்) வெளியில் (தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை) விழிக்கவும் (காணவும்) மாட்டார் (மாட்டார்கள் அபக்குவர்கள்)
கடியது (அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற) ஓர் (ஒரு இறை சக்தியில்) உன்னி (மனதை வைத்து தியானித்து) மை (மாயையை) கட்டுமின் (கட்டுங்கள்) காண்மின் (அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள்)
விடியாமைக்கு (இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு) ஆக்கும் (உங்களை கொண்டு செல்லும்) விளக்கு (ஜோதி) அது (அதுவே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சம் கிடைப்பதை அறிய மாட்டார்கள். அந்த வெளிச்சம் காட்டுகின்ற பரவெளியை பார்க்க மாட்டார்கள். மாயையாகிய இருள் நீங்கி ஜோதியாகிய வெளிச்சத்தில் தம்மை சுற்றி உள்ள அனைத்திலும் மாயையாகிய இருள் நீங்கிய உண்மை ஞானத்தை காணவும் மாட்டார்கள் அபக்குவர்கள். அவர்களைப் போல இல்லாமல் தமக்குள் கிடைப்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற ஒரு இறை சக்தியில் மனதை வைத்து தியானித்து மாயையை கட்டுங்கள். அப்போது இருள் நீங்கி தெரியும் ஜோதியாகிய இறைவனை காணுங்கள். இனி எப்போதும் மாயையாகிய பிறவியை எடுக்காத நிலைக்கு உங்களை கொண்டு செல்லும் ஜோதி அதுவே ஆகும்.

பாடல் #1688

பாடல் #1688: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

வைத்த பசுபாச மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வைதத பசுபாச மாறறு நெறிவைகிப
பெதத மறமுதத னாகிப பிறழவுறறுத
தததுவ முனனித தலைபபடா தவவாறு
பிததான சீடனுக கீயப பெறாதானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வைத்த பசு பாச மாற்று நெறி வைகி
பெத்தம் அற முத்தன் ஆகி பிறழ் உற்று
தத்துவம் உன்னி தலை படாது அவ்வாறு
பித்து ஆன சீடனுக்கு ஈய பெறாது ஆனே.

பதப்பொருள்:

வைத்த (பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த) பசு (இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும்) பாச (அதை கட்டி இருக்கின்ற மலங்களையும்) மாற்று (நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான) நெறி (வழி முறையையும்) வைகி (வைத்து அருளி இருப்பதை உணர்ந்து)
பெத்தம் (அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை) அற (இல்லாமல் செய்து) முத்தன் (முக்தி நிலையை பெற்றவன்) ஆகி (ஆகி இல்லாமல்) பிறழ் (தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல்) உற்று (அடைந்து)
தத்துவம் (உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே) உன்னி (நினைத்துக் கொண்டு) தலை (இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக) படாது (எடுத்துக் கொள்ளாமல்) அவ்வாறு (உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து)
பித்து (உலக ஆசைகளில் மயங்கி) ஆன (இருக்கின்ற) சீடனுக்கு (பக்குவமில்லாத சீடனுக்கு) ஈய (உண்மையான ஞானத்தை கொடுக்க) பெறாது (மாட்டார்கள்) ஆனே (குருவானவர்கள்).

விளக்கம்:

பிறக்கும் போதே உடலுக்குள் வைத்த இருளுக்குள் இருக்கின்ற ஆன்மாவையும் அதை கட்டி இருக்கின்ற மலங்களையும் நீக்கி வெளிச்சத்திற்கு மாற்றுவதற்கான வழி முறையையும் வைத்து அருளி இருப்பதை உணர்ந்து, அந்த வழி முறைகளின் மூலம் பாசமாகிய கட்டுக்களை இல்லாமல் செய்து, முக்தி நிலையை பெற்றவன் ஆகி இல்லாமல், தாம் செல்ல வேண்டிய வழி முறையில் இருந்து மாறுதல் அடைந்து, உலக பற்றுக்களுக்கான தத்துவங்களையே நினைத்துக் கொண்டு, இறைவனை அடைவதை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக் கொள்ளாமல், உலக ஆசைகளுக்கு ஏற்றபடியே நடந்து, உலக ஆசைகளில் மயங்கி இருக்கின்ற பக்குவமில்லாத சீடனுக்கு உண்மையான ஞானத்தை கொடுக்க மாட்டார்கள் குருவானவர்கள்.

பாடல் #1689

பாடல் #1689: ஆறாம் தந்திரம் – 13. அபக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சி இல்லாதவர்கள்)

மன்னு மலமைந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதா
னன்னிய னாவா னசற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மனனு மலமைநது மாறறும வகையொரான
துனனிய காமாதி தொயுந தொழிலநீஙகான
பினனிய பொயயன பிறபபிறப பஞசாதா
னனனிய னாவா னசறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மன்னும் மலம் ஐந்தும் மாற்றும் வகை ஓரான்
துன்னிய காம ஆதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பு இறப்பு அஞ்சாதான்
அன்னியன் ஆவான் அசற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

மன்னும் (உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற) மலம் (மலங்களாகிய) ஐந்தும் (ஐந்து புலன்களையும்) மாற்றும் (மாற்றுகின்ற) வகை (வழி முறையை) ஓரான் (ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன்)
துன்னிய (தன்னைப் பெருந்தி இருக்கின்ற) காம (காமம்) ஆதி (முதலாகிய ஆசைகளில்) தோயும் (தோய்ந்து இருக்கின்ற) தொழில் (செயல்களை) நீங்கான் (விட்டு நீங்காமல் இருக்கின்றவன்)
பின்னிய (ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே) பொய்யன் (இருக்கின்ற பொய்களை கூறுபவன்) பிறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ) இறப்பு (மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ) அஞ்சாதான் (தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன்)
அன்னியன் (குருவுக்கு நெருக்கம் இல்லாதவன்) ஆவான் (ஆகி) அசற் (உண்மையில்லாத) சீடன் (சீடனாகவே) ஆமே (இருப்பான்).

விளக்கம்:

உலக பற்றுக்களிலேயே நிலை பெற்று இருக்கின்ற மலங்களாகிய ஐந்து புலன்களையும் மாற்றுகின்ற வழி முறையை ஆராய்ந்து அறிந்து கொள்ளாதவன், தன்னைப் பெருந்தி இருக்கின்ற காமம் முதலாகிய ஆசைகளில் தோய்ந்து இருக்கின்ற செயல்களை விட்டு நீங்காமல் இருக்கின்றவன், ஒன்றன் பின் ஒன்றாக பின்னிக் கொண்டே இருக்கின்ற பொய்களை கூறுபவன், மீண்டும் மீண்டும் வருகின்ற பிறவிகளுக்கோ அல்லது மீண்டும் மீண்டும் வருகின்ற இறப்பிற்கோ தன் மூடத்தனத்தால் அச்சப் படமால் இருக்கின்றவன் ஆகிய தன்மைகளைக் கொண்டவன் குருவுக்கு நெருக்கம் இல்லாதவனாகி உண்மையில்லாத சீடனாகவே இருப்பான்.