பாடல் #1145: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர் எச்சது ரத்து மிடம்பெற வோடிடக் கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெற எச்சது ரத்து மிருந்தனள் தானே.
விளக்கம்:
பாடல் #1144 இல் உள்ளபடி மூன்று கோணங்களை உடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச் சுடரானது ஒவ்வொரு சக்கரங்களுக்கும் சென்று அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்று அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்று விட்டால் அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து அவருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் அமர்ந்து விடுவாள்.
பாடல் #1144: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
அடுக்குந் தாமரை யாதி யிருப்பிடம் எடுக்கும் தாமரை யில்லகத் துள்ளது மடுக்கும் தாமரை மத்தகத் தேசெல முடுக்கும் தாமரை முச்சது ரத்தே.
விளக்கம்:
பாடல் #1143 இல் உள்ளபடி ஒன்பது விதமான சக்திகளும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கு ஆதார சக்தியாக இருக்கும் சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர் இறைவனின் இருப்பிடமாகும். உடலுக்குத் தேவையான சக்தியை கொடுக்கும் அமிழ்தம் சாதகரின் உடலுக்குள்ளிருந்து ஊறிக்கொண்டே இருக்கின்றது. உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்ற இந்த சக்தியினால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் நெற்றியின் உச்சியில் இருந்து சகஸ்ரதள சக்தி தடுத்துக் காக்கின்றது. சாதகரின் உடலை இயக்கத் தேவைப்படுகின்ற சக்தியை மூலாதாரம் சகஸ்ரதளத்திலிருந்து சிறிதளவு எடுத்து கொள்கிறது.
கருத்து:
சாதகரின் தலை உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரின் மேல் இறைவன் ஜோதி வடிவமாக இருந்து உலகங்கள் இயங்குவதின் காரணமாக இருக்கின்றார். இதனால் சாதகருக்கு தாமே இயக்குகின்றோம் என்கிற அகங்காரம் வந்துவிடாமல் இருக்க நெற்றியின் உச்சியிலிருந்து சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவன் தடுத்து காப்பாற்றுகின்றார். சாதகரின் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தியை சகஸ்ரதளத்திலிருந்து ஊறும் அமிழ்தத்தில் சிறிதளவு மூலாதாரத்திற்கு கொடுத்து இயங்க வைக்கின்றார்.
பாடல் #1142 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் சகஸ்ரதளத்தில் வீற்றிருக்கும் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக இருக்கும் இறைவி அங்கிருந்து வெளிப்பட்டு உலகங்கள் அனைத்தையும் இயங்க வைப்பதற்கு ஒன்பது விதமான அம்சங்களாக வெளிப்படுகிறாள். இந்த அம்சங்கள் எட்டு விதமான தேவியர்களாகவும் இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் அம்சமான மனோன்மணியும் சேர்ந்து மொத்தம் ஒன்பது விதமான சக்திகளாக அவரவர்களுக்கு ஏற்ற தனித்தன்மையான வழிகளின் மூலம் ஜோதி வடிவாய் கொடி போல சகஸ்ரதளத்திலிருந்து வெளிப்பட்டு வளர்ந்து சென்று உலகங்கள் அனைத்தையும் இயக்குகின்றார்கள். இவர்கள் தத்தமது வழிகளின் மூலம் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருப்பதற்கான ஆதார சக்தியாக சகஸ்ரதளத்தில் இருக்கும் ஜோதி இருக்கின்றது.
பாடல் #1141 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து பசுமையான கொடி போல வெளிப்பட்ட சக்தியானவள் இறைவனோடு சேர்ந்து பூரண சக்தியாக ஒரு பருமனான பிரகாசத்தைத் தருகின்ற ஜோதியாக வானம் வரை கொடி போல் வளர்ந்து உலகங்கள் அனைத்தையும் இயங்க வைக்கின்றாள்.
பாடல் #1140 இல் உள்ளபடி இறைவனை தமது நெஞ்சத்திற்குள் அடையும்படி பெற்ற சாதகருக்குள் இறைவன் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிஷ்டான சக்கரத்தில் வந்து பின்பு அங்கிருந்து நான்கு இதழ்கள் கொண்ட மூலாதார சக்கரத்தில் உள்ள குண்டலினி சக்தியை சாதகரின் 3600 சுவாசங்களின் மூலம் எழுப்பி விடுகிறார். அங்கிருந்து வெளிப்பட்ட சக்தியானவள் ஆறு சக்கரங்களையும் கடந்து ஏழாவதாக இருக்கும் சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை வெளிப்படுத்துவாள். உலகங்கள் அனைத்திலும் பரவி வீற்றிருக்கின்ற இறைவியே சகஸ்ரதள சக்தியாக அங்கிருந்து பசுமையான கொடி போல வெளிப்படுவாள்.
கருத்து:
இறைவியும் தாமும் வேறில்லை என்று எண்ணுகின்ற சாதகரின் நெஞ்சத்தில் இறைவன் வந்து வீற்றிருக்கின்றார். அந்த இறைவன் சாதகரின் மூச்சுக்காற்றில் 3000 எண்ணிக்கையை எடுத்து சுவாதிஷ்டான சக்கரத்தை எழுப்பி விடுகின்றார். அதன் பிறகு சாதகரின் மூச்சுக்காற்றில் 3600 எண்ணிக்கையை எடுத்து மூலாதார சக்கரத்தில் இருக்கின்ற குண்டலினி சக்தியை எழுப்பி விடுகின்றார். அந்த குண்டலினி சக்தியானது அதற்கு மேலுள்ள ஐந்து சக்கரங்களையும் தாண்டி மேலே ஏறிச் சென்று ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தில் உள்ள ஆயிரம் தாமரை இதழ்களின் மேல் வீற்றிருக்கும் சக்தியை எழுப்பி விடுகின்றது. அங்கிருக்கும் சக்தியானவள் பசுமையான கொடி போல சாதகரின் உடலுக்குள்ளிருந்து வெளிப்படுவாள்.
குறிப்பு:
மனிதன் ஒரு நாளுக்கு மொத்தம் 21,600 முறை சுவாசிக்கின்றான். யோகப் பயிற்சிகள் செய்யும் சாதகர்களுக்கு இந்த சுவாசக் காற்றானது நுரையீரலில் இருந்து உடலுக்குள் இருக்கும் ஆறு சக்கரங்களுக்கும் முறையே 3000 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகிறது (6 x 3000 = 18,000). மூலாதார சக்கரத்தில் 3600 சுவாசங்களாக சென்று சக்தியூட்டுகின்றது (18,000 + 3,600 = 21,600). ஆக மொத்தம் 21,600 சுவாசங்களும் சக்கரங்களுக்கு சென்று சக்தியூட்டுகிறது.
பாடல் #1139 இல் உள்ளபடி உள்ளத்திற்குள் தெளிவு பெற்ற சாதகர்களுக்கு மீதி இருக்கும் கர்மங்களையும் பிறவிகளையும் எரித்து அழிக்கும் அக்னியாக உருத்திரனின் அம்சம் ஜோதியாக காளையின் மேல் வீற்றிருந்து சாதகருக்கு தரிசனம் கொடுக்கின்றார். இதை தரிசித்ததால் தமது நெஞ்சத்திற்குள் இறைவனை அடையும் படி வீற்றிருக்கப் பெற்றவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.
குறிப்பு: இறையருளால் இறைவனின் அம்சத்தை தரிசித்து தமது கர்மங்களையும் பிறவிகளையும் நீக்கப் பெற்றவர்களே சாதகர்கள் ஆவார்கள்.
அனைத்து உயிர்களுக்குள்ளும் மறைந்து இருக்கின்ற அமிழ்தமான பாலை வழங்குகின்ற இறைவியை தமக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து தெளிவு பெற்று அந்த அமிழ்தமான பாலை உண்மை ஞானத்தை தரும் பேரொளியாக மாற்றுகின்ற வழியை அறிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. அந்த வழியை குருவின் உபதேசத்தாலோ அல்லது இறைவியின் அருளாலோ அறிந்து கொண்டு அதன்படியே தமக்குள் ஆராய்ந்து இறைவியை அறிந்து கொண்டு தெளிவு அடைந்தவர்களின் உள்ளுக்குள் இருந்து இறைவி அமிழ்தப் பாலை உண்மை ஞானத்தையும் பேரின்பத்தையும் கொடுக்கின்ற பேரொளி தீபமாக ஊறிக் கொண்டே இருப்பாள்.
பாடல் #1138: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்தி விந்துவும் நாதமு மாயே விரிந்தனள் சந்திர பூமி சடாதரி சாத்தவி அந்தமொ டாதியதாம் வண்ணத் தாளே.
விளக்கம்:
பாடல் #1137 இல் உள்ளபடி இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கின்ற சாதகரின் சிந்தைக்குள் வீற்றிருக்கின்ற இறைவியும் இறைவனும் சேர்ந்த பூரண சக்தி அவரின் உடலுக்குள்ளிருந்து வெளிச்சமாகவும் சத்தமாகவும் உலகம் முழுவதும் விரிந்து பரவி அனைத்தையும் இயக்குகின்றது. இறைவனைப் போலவே சாதகரும் சந்திரனை சூடிக்கொண்டு சடை முடி தரித்துக் கொண்டு சாத்வீக குணத்துடன் இறைவனும் இறைவியும் சேர்ந்த பூரண சக்தியின் உருவமாகவே ஆகிவிடுகின்றார்.
பாடல் #1137: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)
மருவொத்த மங்கையுந் தானு முடனே உருவொத்து நின்றமை யொன்று முணரார் கருவொத்து நின்று கலக்கின்ற போது திருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
விளக்கம்:
பாடல் #1136 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் இருக்கும் அனைத்து அம்சங்களாகவும் இறைவியே மாறி நிற்பதை உணர்ந்தாலும் தம்முடைய உருவமும் இறைவியாகவே மாறி நிற்பதை உணராமல் இருக்கின்றார்கள். ஆணின் அம்சமும் பெண்ணின் அம்சமும் ஒன்று சேர்ந்து கருவாக உருவாகுவது போலவே இறைவியும் தாமும் ஒன்றாக கலந்து நிற்பதை சாதகர்கள் உணருகின்ற போது இறைவியும் தாமும் ஒன்றே என்று சிந்திக்கும் அவர்களின் சிந்தனைக்குள் இறைவனும் வந்து வீற்றிருப்பான்.
பாடல் #1135 இல் உள்ளபடி சாதகருக்குள் அனைத்துமாக நின்ற ஆதி பரம்பொருளாகிய இறைவியே அசையா சக்தியாகிய இறைவனோடு சேர்ந்து நிற்கின்ற போது ஞானா சக்தியாகவும் இச்சா சக்தியாகவும் நிற்கின்றாள் என்பதையும் அவளை நன்மையே வடிவானவளாக அறிகின்ற போது கிரியா சக்தியாகவும் நிற்கின்றாள் என்பதையும் அறிந்து கொண்டு அவளின் எண்ணங்களிலேயே வீற்றிருக்கும் சாதகர்கள் தமக்குள் இருக்கின்ற அனைத்தும் அவளின் அம்சமாகவே மாறி விடுவதை உணர்ந்து கொள்வார்கள்.
குறிப்பு:
அசையா சக்தியாக இருக்கும் இறைவனுடன் இருக்கும் பூரண சக்தியானவள் உலகங்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றுகிற போது அது இச்சா சக்தியாகவும், அதை எப்படியெல்லாம் உருவாக்கலாம் என்று எண்ணுகின்ற போது அது ஞானா சக்தியாகவும், அதை எண்ணிய படியே உருவாக்குகின்ற போது கிரியா சக்தியாகவும் இருக்கின்றாள். அசையா சக்தியான இறைவனும் அசையும் சக்தியாகிய இறைவியும் சேர்ந்து இருக்கும் பூரண சக்தியை தமக்குள் உணர்ந்த சாதகர்கள் இந்த மூன்று சித்திகளையும் பெற்று அதை உலகத் தேவைக்கேற்ப செயல் படுத்துவார்கள்.