பாடல் #347

பாடல் #347: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமாத வஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.

விளக்கம்:

ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று சக்தி உறுதி எடுத்துக் கொண்டு இமய மலையின் அரசனாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்து பல காலம் உறுதியுடன் மாபெரும் தவம் செய்து தேவர்களும் அறியாத வழிபாட்டு முறைகளை தேவர்களும் அறிய முறையாக பூஜை செய்து இறைவனை அடைந்தாள்.

உட்கருத்து: ஆதிமூலமாகிய சிவ பரம்பொருளை அடைய வேண்டும் என்று ஆசைப்படும் உயிர்கள் தமது உறுதியிலிருந்து சற்றும் விலகாமல் தியானமும் தவமும் செய்து அசையும் சக்தியாகிய குண்டலினி சக்தியை மேலேற்றி தனது சிரசின் இடப்பக்கம் இருக்கும் அசையா சக்தியாகிய சிற்சக்தியுடன் சேர்த்தால் தேவர்களும் அறியாத இறைவனின் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் தனக்குள்ளேயே உணர்ந்து இறைவனின் திருவடிகளைச் சென்று அடையலாம்.

Related image

பாடல் #348

பாடல் #348: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.

விளக்கம்:

எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன் கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிக்கொண்டு சோர்ந்து போக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மை பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்ல. பாடல் #347 ல் உள்ளபடி தனக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடன் பெருங்கருணையோடு நின்று அவர்களின் பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.

Related image

பாடல் #349

பாடல் #349: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழிப் பிரமருக்கும் வாள்கொடுத் தானே.

விளக்கம்:

கடல் போல் வலிமை கொண்ட பிரமன் திருமால் இருவரும் நெடுங்காலம் ஒளி வடிவாக இருக்கின்ற ஆதி இறைவனை வழிபட திருமாலுக்கு சக்ராயுதமும் பிரம்மனுக்கு வாளும் கொடுத்து அருளினான்.

உட்கருத்து: பாடல் #347 ல் உள்ளபடி அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர முதல் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் அசையும் சக்தியான குண்டலினி கடல் போல் வலிமை கொண்ட 2வது சக்கரமாகிய பிரம்மன் வீற்றீருக்கும் சுவாதிட்டானம், 3வது சக்கரமாகிய திருமால் வீற்றிருக்கும் மணிப்பூரகத்தை உணர்ந்தும் அசையா சக்தியாகிய நற்சக்தியுடன் சேர்ந்து தனக்குள் லிங்க உருவத்தை உணர்ந்தும் தத்துவத்தை உணர்ந்தும் நெடுங்காலம் ஒளி வடிவாய் இருக்கும் ஆதி இறைவனை வழிபட்டால் திருமால் செய்யும் காக்கும் வேலையும் பிரம்மன் செய்யும் படைக்கும் வேலையையும் இறைவன் கொடுத்து அருளுவான்.

இதனை திருமந்திர பாடல் #302, பாடல் #321 ன் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக பல புராண வரலாறுகளில் பல மகான்கள் சித்தர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றில் இறந்தவர்களை மீண்டும் மீட்டு படைக்கும் பிரம்மனின் தொழிலை செய்துள்ளார்கள். கர்மவினைகளின் படி இறக்கவேண்டியவர்களை காத்து காக்கும் திருமாலின் தொழிலை செய்துள்ளார்கள்.

Related image

பாடல் #350

பாடல் #350: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்காத அருள்செய்தான் நின்மலன் தானே.

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த இலங்கையின் அரசன் ராவணன் ஒரு முறை அவரைப் பார்க்க எண்ணி கையிலாய மலைக்கு வந்தான். அவன் மானிடனாக இருப்பதால் உள்ளே விட முடியாது என்று வாயிற் காவலர்கள் தடுத்துவிட இறைவனைக் காண முடியவில்லையே என்ற கோபத்தில் தனது இருபது தோள்களால் கையிலாய மலையை தூக்கி இலங்கைக்கு எடுத்துச் செல்ல முயன்றான். ராவணனை நிகரில்லாத பேராற்றலை உடைய இறைவன் தமது திருவடியின் பெருவிரலால் சிறிது அழுத்தம் கொடுக்க அதன் அழுத்தத்தால் தாங்க முடியாத பெரும் வேதனையை அடைந்த இராவணன் கோபம் நீங்கி இறைவா எம்மைக் காப்பாற்று என்று உரக்க அழைத்தான். ஒரு மாசும் இல்லாத இறைவனும் அவனின் உண்மையான பக்தியை மெச்சி அவன் முன்னே தோன்றி அவனுக்கு என்றும் நீங்காத திருவருளை வழங்கி அருளினார்.

உட்கருத்து: உயிர்கள் பாடல் #347 ல் உள்ளபடி லிங்க தத்துவத்தையும் லிங்கத்தையும் தனக்குள் உணரும் போது மனிதனின் குணங்கள் பத்தும், ஞானேந்திரியங்கள் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் அவற்றால் ஏற்படங்கூடிய உலகப்பற்றுகள் இறைவனை அடையவிடாமல் தடுக்கும் போது இறைவா காப்பாற்று என்று உயிர்கள் வேண்டிட அவர்களுக்கு திருவடி தீட்சை வழங்கி அவர்களின் குணங்கள் ஞானேந்திரிய கன்மேந்திரியங்களை நீங்கி மீண்டும் வராமல் அருள் செய்வான்.

குணங்கள் உயிரை மனதால் பாதிப்பது குணங்களுக்கான விளக்கம்:

  1. காமம்-சிற்றின்பம்
  2. குரோதம்-கோபம்
  3. உலோபம்-பேராசை,கருமித்தனம்
  4. மோகம்-மாயை யால் நிகழும் மயக்க உணர்ச்சி,
  5. மதம்-கொள்கை,செருக்கு,வெறி,மதுபானக் களிப்பு,பெருமை
  6. மாச்சரியம்-பொறாமை,பகைமை
  7. டம்பம்-ஆடம்பரம்
  8. தர்ப்பம்-ஆசைகள், கர்வம்
  9. அசூயை-பொறாமை
  10. ஈரிசை-பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.

ஞானேந்திரிய கர்மங்கள் என்பது ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவற்றால் உயிரை பாதிப்பது,

கன்மேந்திரியம் என்றால் செயல் மனித உடல் செய்யும் ஐந்து வகையான செயல்கள் இந்த ஐந்து வகையான செயல்கள் தொடர்ந்து செயல்படுவதால் ஆத்மா உடலோடு கலந்து இருக்கிறது.

Image result for lingam

பாடல் #351

பாடல் #351: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலை பெற்றானே.

விளக்கம்:

இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த தண்டி மணல்களைச் சேர்த்து ஒரு லிங்கம் செய்து அந்த மணல் லிங்கத்தை பசும்பாலால் வழிபட்டான். பசும்பால் வீணாவதைப் பார்த்துக் கோபப்பட்ட தண்டியின் தந்தை அந்த மணல் லிங்கத்தைக் காலால் எட்டி உதைத்தார். தந்தையின் இந்த செயலால் கோபம் கொண்ட தண்டி பசுவை மேய்க்க வைத்திருந்த கம்பை கையில் எடுக்க அந்தக் கம்பு மழு என்னும் ஆயுதமாக மாறியது. அந்த மழுவால் தன் தந்தையின் இரண்டு கால்களையும் வெட்டினான். தண்டீசனின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் சண்டேசுரருக்கு அணிவித்தான்.

உட்கருத்து: லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்துக்கும் காரணமாணவன் ஈசன் என்பதை அறிந்த உயிர் உடலில் இருந்து உயிரை பிரிக்கவும் மீண்டும் பிறவாமல் பிறவியை அறுக்கவும் தான் உணர்ந்த இறைவனை பூஜை செய்யும் பொழுது உடல் தனது ஐம்புலன்களால் அதை தடுக்கிறது. குண்டலினி சக்தி என்னும் கம்பால் ஐம்புலன்களை அடிக்க குண்டலினி என்னும் கம்பு மழுவாக மாறி உடலில் இருக்கும் இடகலை பிங்கலை முச்சுக்காற்றை வெட்டி உடலில் இருந்து உயிரை பிரிக்கிறது. உயிரின் பக்தியைப் பார்த்த சிவபெருமான் தான் சூடியிருக்கும் கொன்றை மாலையை எடுத்து மகிழ்வுடன் அந்த உயிருக்கு அணிவித்து தனது அடியவர்களின் தலைவன் என்னும் பதவி அளிப்பார்.

பாடல் #352

பாடல் #352: இரண்டாம் தந்திரம் – 3. இலிங்க புராணம் (லிங்க வடிவின் தத்துவம்)

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடுஇல் புகழோன் எழுகவென் றானே.

விளக்கம்:

தேவர்கள் எல்லாம் தமக்குத் துன்பம் நேரும் போதெல்லாம் வாடிய முகத்துடன் மனம் வருந்தி இறைவனை விரும்பிச்சென்று இறைவா நமசிவாய என்று திருவடி பணிந்து கும்பிட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் துயரங்களைத் தீர்த்தான்.

உட்கருத்து: தனக்குள் லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தை உணர்ந்த உயிர்களுக்கு படைக்கும் பிரம்மாவின் தொழிலையும் காக்கும் திருமாலின் தொழிலையும் அளித்து அந்த உயிருக்கு தேவர்கள் என்னும் தகுதியை அளிக்கும் இறைவன் (இதனை திருமந்திர பாடல் எண் #349 மூலம் அறியலாம்) அவர்கள் உணர்ந்த லிங்க தத்துவத்தை இறைவா நமசிவாய என்று வழிபட ஈடு இணையில்லாத புகழை உடைய இறைவன் அவர்கள் மேல் கருணை கொண்டு எழுக என்று கூறி அவர்களின் உடலில் இருந்து உயிரை பிரித்து பிறவா நிலையை அந்த உயிருக்கு அளிப்பார். லிங்க வடிவின் தத்துவமும் இறைவனும் ஒன்றே என்பதை இப்பாடலின் மூலம் உணரலாம்.

Image result for lingam