பாடல் #1438

பாடல் #1438: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

வேடங் கடந்து விகிர்தன்றன் பால்மேவி
யாடம்பர மின்றி யாசாபாசஞ் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவபோதகர் சுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடங கடநது விகிரதனறன பாலமெவி
யாடமபர மினறி யாசாபாசஞ செறறுப
பாடொனறு பாசம பசுததுவம பாழபடச
சாடுஞ சிவபொதகர சுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேடம் கடந்து விகிர்தன் தன் பால் மேவி
ஆடம்பரம் இன்றி ஆசா பாசம் செற்று
பாடு ஒன்று பாசம் பசுத்துவம் பாழ் பட
சாடும் சிவ போதகர் சுத்த சைவரே.

பதப்பொருள்:

வேடம் (வெளிப்புற வேடங்கள்) கடந்து (எதுவும் இன்றி) விகிர்தன் (உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவன்) தன் (அவனின்) பால் (மேல் மட்டும்) மேவி (எண்ணங்களை வைத்து)
ஆடம்பரம் (எந்தவிதமான ஆடம்பரங்களும்) இன்றி (இல்லாமல்) ஆசா (ஆசைகளையும்) பாசம் (பாசங்களையும்) செற்று (நீக்கி விட்டு)
பாடு (பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே) ஒன்று (ஒரே குறிக்கோளாக கொண்டு) பாசம் (பாசத் தளைகளும்) பசுத்துவம் (இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும்) பாழ் (அழிந்து) பட (போகும் படி செய்து)
சாடும் (இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து) சிவ (இறைவன் அருளிய) போதகர் (போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

வெளிப்புற வேடங்கள் எதுவும் இன்றி உலக நியதிகளைக் கடந்து இருக்கின்ற இறைவனின் மேல் மட்டும் எண்ணங்களை வைத்து எந்தவிதமான ஆடம்பரங்களும் இல்லாமல் ஆசைகளையும் பாசங்களையும் நீக்கி விட்டு பதியாகிய இறைவனை அடைவது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாசத் தளைகளும் இறைவனிடமிருந்து ஆன்மா தனித்து இருக்கும் பசு தத்துவமும் அழிந்து போகும் படி செய்து இறைவனை மட்டுமே சார்ந்து இருந்து இறைவன் அருளிய போதனைகளை முறைப்படி கடை பிடிப்பவரே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1439

பாடல் #1439: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

உடலான வைந்தையு மோரொன்று மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவலப் பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்கமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலான வைநதையு மொரொனறு மைநது
மடலான மாமாயை மறறுளள நீவப
படலான கெவலப பாசந துடைததுத
திடமாயத தனையுறறல சிததாநத மாரகமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடல் ஆன ஐந்தையும் ஓர் ஒன்று ஐந்து
மடல் ஆன மா மாயை மற்று உள்ள நீவ
படல் ஆன கேவல பாசம் துடைத்து
திடம் ஆய் தனை உற்றல் சித்தாந்த மார்கமே.

பதப்பொருள்:

உடல் (மனித உடலாக) ஆன (இருக்கின்ற) ஐந்தையும் (பஞ்ச பூதங்களையும் [நிலம் – தசைகளும் எலும்புகளும், நீர் – இரத்தமும், உமிழ் நீரும், நெருப்பு – உணவை செரிக்கும் சூடு, காற்று – மூச்சுக் காற்று, ஆகாயம் – மனம், புத்தி, அறிவு]) ஓர் (அதை ஒன்றின் மேல்) ஒன்று (ஒன்றாக மூடி இருக்கின்ற) ஐந்து (ஐந்து வகையான கோசங்களையும் [அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம்] கடந்து நின்று)
மடல் (அதையும் தாண்டி விரிந்து) ஆன (இருக்கின்ற) மாமாயை (சுத்த மாயையும்) மற்று (மற்றும்) உள்ள (இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும்) நீவ (தாண்டிச் சென்று)
படல் (இறைவனை அடைவதற்கு தடையாக) ஆன (இருக்கின்ற) கேவல (மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற) பாசம் (பாசங்களையும்) துடைத்து (முழுவதுமாக நீக்கி விட்டு)
திடம் (உறுதி) ஆய் (ஆக) தனை (தனக்குள் இருக்கும் இறைவனை) உற்றல் (உற்று கவனித்த படியே இருப்பதே) சித்தாந்த (சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற) மார்கமே (கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்).

விளக்கம்:

மனித உடலாக இருக்கின்ற ஐந்து விதமான பஞ்ச பூதங்களையும் அதை ஒன்றின் மேல் ஒன்றாக மூடி இருக்கின்ற ஐந்து வகையான கோசங்களையும் கடந்து நின்று அதையும் தாண்டி விரிந்து இருக்கின்ற சுத்த மாயையும் மற்றும் இருக்கின்ற அனைத்து தத்துவங்களையும் தாண்டிச் சென்று இறைவனை அடைவதற்கு தடையாக மாயையிலேயே மயங்கி இருக்கின்ற கேவல நிலைக்குக் காரணமாக இருக்கின்ற பாசங்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உறுதியாக தனக்குள் இருக்கும் இறைவனை மட்டுமே உற்று கவனித்த படியே இருப்பதே சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற கடும் சுத்த மார்க்கத்தின் வழியாகும்.

பஞ்ச பூதங்கள்:

  1. நிலம் – தசைகளும் எலும்புகளும்
  2. நீர் – இரத்தமும் உமிழ் நீரும்
  3. நெருப்பு – உணவை செரிக்கும் சூடு
  4. காற்று – மூச்சுக் காற்று
  5. ஆகாயம் – மனம் புத்தி அறிவு

பஞ்ச கோசங்கள்:

  1. அன்ன மய கோசம் – உணவால் ஆகிய உறை
  2. பிராண மய கோசம் – காற்றால் ஆகிய உறை
  3. மனோ மய கோசம் – மனம் / எண்ணங்களால் ஆகிய உறை
  4. விஞ்ஞான மய கோசம் – அறிவு / புத்தி ஆகிய உறை
  5. ஆனந்த மய கோசம் – பேரின்பத்தால் ஆகிய உறை

பாடல் #1440

பாடல் #1440: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சுத்தஞ் சிவனுரை தானதுட் டோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூல
மத்தகை யான்மா வரனை யடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சுததஞ சிவனுரை தானதுட டொயாமல
முததர பதபபொருள முததிவித தாமூல
மததகை யானமா வரனை யடைநதறறாற
சுதத சிவமாவ ரெசுதத சைவரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சுத்த சிவன் உரை தான் அது உட் ஓயாமல்
முத்தர் பத பொருள் முத்தி வித்து ஆம் மூலம்
அத்தகை ஆன்மா அரனை அடைந்து அற்றால்
சுத்த சிவம் ஆவரே சுத்த சைவரே.

பதப்பொருள்:

சுத்த (மாசு இல்லாத பரம்பொருளாகிய) சிவன் (இறைவன்) உரை (சொல்லி அருளிய போதனைகளை) தான் (தமக்கு) அது (அந்த போதனைகளை) உட் (உள்ளே வைத்து) ஓயாமல் (ஓயாமல் அவற்றை சிந்தித்து ஆராய்ந்து)
முத்தர் (முத்தி நிலைக்கு) பத (இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின்) பொருள் (பொருளும்) முத்தி (முத்தி நிலைக்கு) வித்து (விதை) ஆம் (ஆக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம்) மூலம் (முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின்)
அத்தகை (தன்மையை தானும் பெற்ற) ஆன்மா (சாதகரின் ஆன்மாவானது) அரனை (இறைவனை) அடைந்து (சென்று அடைந்து) அற்றால் (அவன் அருளால்)
சுத்த (மாசு இல்லாத) சிவம் (சிவம் எனும் பரம்பொருளாக) ஆவரே (தாமும் ஆகி இருப்பவர்களே) சுத்த (கடும் சுத்த) சைவரே (சைவர்கள் ஆவார்கள்).

விளக்கம்:

மாசு இல்லாத பரம்பொருளாகிய இறைவன் பாடல் #1438 இல் உள்ளபடி சொல்லி அருளிய போதனைகளை தமக்குள் உள்வாங்கிக் கொண்டு அவற்றையே ஓயாமல் சிந்தித்து ஆராய்ந்து இறைவன் அருளிய போதனைகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளின் பொருளும் முத்தி நிலைக்கு விதையாக இருக்கின்றதை உணர்ந்து அதன் மூலம் முக்திக்கு மூலப் பொருளாக இருக்கின்ற இறைவனின் தன்மையை தானும் பெற்ற சாதகரின் ஆன்மாவானது இறைவனை சென்று அடைந்து அவன் அருளால் மாசு இல்லாத சிவம் எனும் பரம்பொருளாக தாமும் ஆகி இருப்பவர்களே கடும் சுத்த சைவர்கள் ஆவார்கள்.

பாடல் #1441

பாடல் #1441: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

நானென்றுந் தானென்று நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலாற்
றானென்று நானென்றுஞ் சாற்றுகி லேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நானெனறுந தானெனறு நாடிநான சாரவெ
தானெனறு நானென றிரணடிலாத தறபதந
தானெனறு நானெனற தததுவ நலகலாற
றானெனறு நானெனறுஞ சாறறுகி லெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நான் என்றும் தான் என்றும் நாடி நான் சாரவே
தான் என்று நான் என்று இரண்டு இலா தற் பதம்
தான் என்று நான் என்ற தத்துவம் நல்கலால்
தான் என்று நான் என்றும் சாற்றுகிலேனே.

பதப்பொருள்:

நான் (நானாகிய ஆன்மா) என்றும் (எங்கே இருக்கின்றது என்றும்) தான் (தனக்குள் இருக்கும் இறைவன்) என்றும் (எங்கே இருக்கின்றான் என்றும்) நாடி (தேடி அலைந்து) நான் (நான் இறைவனை) சாரவே (சார்ந்து இருக்கவே)
தான் (இறைவன்) என்று (என்றும்) நான் (ஆன்மா) என்று (என்றும்) இரண்டு (தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும்) இலா (இல்லாமல்) தற் (தானே அனைத்துமாய் நிற்கின்ற) பதம் (பரம்பொருளாகிய இறைவன்)
தான் (தான்) என்று (என்றும்) நான் (நான்) என்ற (என்றும் ஆகிய அனைத்தும்) தத்துவம் (தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை) நல்கலால் (எனக்கு தந்து அருளியதால்)
தான் (இனி தான்) என்று (என்றும்) நான் (நான்) என்றும் (என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை) சாற்றுகிலேனே (சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்).

விளக்கம்:

நானாகிய ஆன்மா எங்கே இருக்கின்றது என்றும் தனக்குள் இருக்கும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்றும் தேடி அலைந்து நான் இறைவனை சார்ந்து இருக்கும் போது இறைவன் என்றும் ஆன்மா என்றும் தனித்தனியாக இருக்கின்ற இரண்டுவிதமான தத்துவங்களும் இல்லாமல் தானே அனைத்துமாய் நிற்கின்ற பரம்பொருளாகிய இறைவன் தான் என்றும் நான் என்றும் ஆகிய அனைத்தும் தாமாகவே இருக்கின்ற தத்துவத்தை எனக்கு தந்து அருளியதால் இனி தான் என்றும் நான் என்றும் ஆன்மாவையும் இறைவனையும் வேறு வேறு என்று பார்க்கின்ற தத்துவத்தை சார்ந்து நிற்காமல் அனைத்தும் இறைவன் ஒருவனே என்று இருக்கின்றேன்.

பாடல் #1442

பாடல் #1442: ஐந்தாம் தந்திரம் – 4. கடுஞ் சுத்த சைவம் (இறைவனை உணர்ந்து கொள்ள உதவும் நான்கு வகையான சைவ நெறிமுறைகளில் நான்காவது)

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்த
லாற்றரி தாகிய வைந்து மடங்கிடு
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பார்ப்பர சாயுச்சிய மாகும் பதியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாறறரி தாகிய தததுவஞ சிததிதத
லாறறரி தாகிய வைநது மடஙகிடு
மெறறிகள ஞானம விளககொளி யாயநிறகும
பாரபபர சாயுசசிய மாகும பதியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாற்ற அரிது ஆகிய தத்துவம் சித்தித்தல்
ஆற்ற அரிது ஆகிய ஐந்தும் அடங்கிடும்
மேல் திகழ் ஞானம் விளக்கு ஒளி ஆய் நிற்கும்
பார் பர சாயுச்சியம் ஆகும் பதியே.

பதப்பொருள்:

சாற்ற (சார்ந்து நிற்பதற்கு) அரிது (மிகவும் அரியது) ஆகிய (ஆக இருக்கின்ற) தத்துவம் (அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம்) சித்தித்தல் (இறையருளால் கிடைக்கப் பெற்றால்)
ஆற்ற (ஆசைகளை நீக்குவதற்கு) அரிது (மிகவும் அரியது) ஆகிய (ஆகிய) ஐந்தும் (ஐந்து புலன்களும்) அடங்கிடும் (அடங்கி விடும்)
மேல் (அதன் பிறகு மேலே) திகழ் (திகழ்கின்ற) ஞானம் (உண்மை ஞானமானது) விளக்கு (இருளான வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு) ஒளி (ஒளியை கொடுப்பது போல) ஆய் (மாயை நீங்கிய உண்மையை விளங்க வைக்கும் ஒளியாக) நிற்கும் (நிற்கும்)
பார் (அப்போது இந்த உலகத்திலேயே) பர (பரம்பொருளோடு) சாயுச்சியம் (எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும்) ஆகும் (நிலை கிடைக்கப் பெறும்) பதியே (கடும் சுத்த சைவத்தை கடைபிடிக்கின்ற சைவர்கள் இருக்கின்ற இடத்திலேயே).

விளக்கம்:

சார்ந்து நிற்பதற்கு மிகவும் அரியதாக இருக்கின்ற அனைத்தும் இறைவன் ஒருவனே எனும் தத்துவம் இறையருளால் கிடைக்கப் பெற்றால் ஆசைகளை நீக்குவதற்கு மிகவும் அரியதாகிய ஐந்து புலன்களும் அடங்கி விடும். அதன் பிறகு மேலே திகழ்கின்ற உண்மை ஞானமானது இருளான வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு ஒளியை கொடுப்பது போல மாயை நீங்கிய உண்மையை விளங்க வைக்கும் ஒளியாக நிற்கும். அப்போது இந்த உலகத்திலேயே கடும் சுத்த சைவத்தை கடைபிடிக்கின்ற சைவர்கள் தாம் இருக்கின்ற இடத்திலேயே பரம்பொருளோடு எப்போதும் ஒன்றாக சேர்ந்தே இருக்கின்ற சாயுச்சியம் எனும் நிலை கிடைக்கப் பெறுவார்கள்.