பாடல் #1214

பாடல் #1214: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின்
சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1213 இல் உள்ளபடி சாதகருக்குள் முழுவதும் பரவி வீற்றிருக்கும் இறைவியானவள் நிலவைப் போன்ற குளிர்ந்த ஒளியை வீசும் நீண்ட படிகக் கல்லைப் போன்ற வெண்மையை உடையவள். கல்லால் செதுக்கப்பட்ட சிலையைப் போன்ற அழகிய வடிவத்துடன் சிறந்த முத்துப் போன்ற இயல்பிலேயே பிரகாசிக்கும் தன்மையை உடையவள். சுருண்டு இருக்கும் அழகிய கூந்தலில் வாசனை மிக்க மலர்களை சூடியிருப்பவள். அவள் சாதகருக்குள்ளிருந்து பாடல் #1189 இல் உள்ளபடி உடலின் இயக்கத்திற்கு உதவும் பதினாறு கலைகளாகக் கலந்து நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.