பாடல் #1706

பாடல் #1706: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

மேலென்று கீழென் றிரண்டறக் காணுங்கால்
தானென்று நானென்றுந் தன்மைக ளோராறு
பாரெங்கு மாகிப் பரந்த பராபரங்
காரொன்று கற்பக மாகிநின் றானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெலெனறு கீழென றிரணடறக காணுஙகால
தானெனறு நானெனறுந தனமைக ளொராறு
பாரெஙகு மாகிப பரநத பராபரங
காரொனறு கறபக மாகிநின றானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேல் என்றும் கீழ் என்றும் இரண்டு அற காணுங்கால்
தான் என்றும் நான் என்றும் தன்மைகள் ஓர் ஆறும்
பார் எங்கும் ஆகி பரந்த பரா பரம்
கார் ஒன்றும் கற்பகம் ஆகி நின்றானே.

பதப்பொருள்:

மேல் (மேன்மையானது) என்றும் (என்றும்) கீழ் (கீழ்மையானது) என்றும் (என்றும்) இரண்டு (இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது) அற (இல்லாமல்) காணுங்கால் (அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது)
தான் (தான்) என்றும் (என்று நினைக்கின்ற ஆத்மாவும்) நான் (நான்) என்றும் (என்று நினைக்கின்ற உடம்பும்) தன்மைகள் (தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற) ஓர் (ஒரு) ஆறும் (ஆறு ஆதார சக்கரங்களும்)
பார் (உலகங்கள்) எங்கும் (அனைத்தும்) ஆகி (ஆகி) பரந்த (அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரம் (பரம்பொருளே என்பதை உணர்ந்தால்)
கார் (வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில்) ஒன்றும் (சேமித்து வைத்து இருக்கும்) கற்பகம் (தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே) ஆகி (உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக) நின்றானே (நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்).

விளக்கம்:

மேன்மையானது என்றும் கீழ்மையானது என்றும் இரண்டு விதமாக பிரித்து பார்ப்பது இல்லாமல் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பொழுது, தான் என்று நினைக்கின்ற ஆத்மாவும், நான் என்று நினைக்கின்ற உடம்பும், தன்மைகளாக தமக்குள் இருக்கின்ற ஆறு ஆதார சக்கரங்களும், உலகங்கள் அனைத்தும் ஆகி அண்டசராசரங்கள் எங்கும் பரந்து விரிந்து இருக்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளே என்பதை உணர்ந்தால், வேரால் பருகிய நீரை தங்களின் தலை உச்சியில் இருக்கும் பழங்களில் சேமித்து வைத்து இருக்கும் தென்னை பனை ஆகிய மரங்களைப் போலவே உயிர்களின் தலை உச்சிக்குள்ளும் ஜோதியாக நிற்கின்றவன் அந்த இறை சக்தியே என்பதை உணரலாம்.

பாடல் #1705

பாடல் #1705: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

ஈராறு நாதத்தி லீரெட்டா மந்தத்தில்
மேதாதி நாதாந்த மீதாம் பாராசத்தி
போதா லயாந்த விகாரந் தனிற்போத
மேதாரி வாதார மீதானமுண் மையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஈராறு நாதததி லீரெடடா மநதததில
மெதாதி நாதாநத மீதாம பராசததி
பொதா லயாநத விகாரந தனிறபொத
மெதாரி வாதார மீதானமுண மையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஈர் ஆறு நாதத்தில் ஈர் எட்டாம் அந்தத்தில்
மேத ஆதி நாத அந்த மீது ஆம் பரா சத்தி
போத ஆலய அந்த விகாரம் தனில் போத
மேத ஆர் இவ் ஆதாரம் ஈது ஆனம் உண்மையே.

பதப்பொருள்:

ஈர் (இரண்டும்) ஆறு (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு சூரிய கலைகளாகிய) நாதத்தில் (ஓசை மயத்திலும்) ஈர் (இரண்டும்) எட்டாம் (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு சந்திர கலைகளாகிய) அந்தத்தில் (அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும்)
மேத (தலை உச்சியில்) ஆதி (அனைத்திற்கும் முதலாகவும்) நாத (ஓசையின்) அந்த (எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின்) மீது (மீது) ஆம் (வீற்றிருப்பது) பரா (அசையும்) சத்தி (சக்தியாகிய பரம்பொருள் ஆகும்)
போத (அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி) ஆலய (வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு) அந்த (உள்ளே) விகாரம் (இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின்) தனில் (ஆன்மாவிற்குள்) போத (ஞானமாகவும்)
மேத (அக்னியாகவும்) ஆர் (முழுவதும் நிறைந்து) இவ் (இந்த உடலுக்குள் இருக்கின்ற) ஆதாரம் (ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது) ஈது (அந்த இறை சக்தியே) ஆனம் (என்று யாம் உரைப்பது) உண்மையே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

பன்னிரண்டு சூரிய கலைகளாகிய ஓசை மயத்திலும், பதினாறு சந்திர கலைகளாகிய அனைத்தும் ஓடுங்குகின்ற மயத்திலும், தலை உச்சியில் அனைத்திற்கும் முதலாகவும், ஓசையின் எல்லையாகவும் இருக்கின்ற சகஸ்ரதளத்தின் மீது வீற்றிருப்பது அசையும் சக்தியாகிய பரம்பொருள் ஆகும். அங்கே அறிவு வடிவாக இருக்கின்ற இறை சக்தி வீற்றிருக்கும் ஆலயமாகிய உடலுக்கு உள்ளே இறை சக்தியோடு வேறுபட்டு இருக்கின்ற உயிர்களின் ஆன்மாவிற்குள் ஞானமாகவும், அக்னியாகவும் முழுவதும் நிறைந்து இந்த உடலுக்குள் இருக்கின்ற ஆறு ஆதாரங்களாகவும் இருப்பது அந்த இறை சக்தியே என்று யாம் உரைப்பது உண்மையே ஆகும்.

பாடல் #1704

பாடல் #1704: ஏழாம் தந்திரம் – 1. ஆறு ஆதாரம் (ஆறு ஆதார சக்கரங்களின் மூலம் பெறும் பயன்கள்)

நாலு மிருமூன்று மீரைந்து மீராறுங்
கோலின் மேல்நின்ற குறிகள் பதினாறு
மூலங் கண்டாங்கே முடிந்த முதலிரண்
டுங்காலங் கண்டானடி காணலு மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாலு மிருமூனறு மீரைநது மீராறுங
கொலின மெலநினற குறிகள பதினாறு
மூலங கணடாஙகெ முடிநத முதலிரண
டுஙகாலங கணடானடி காணலு மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாலும் இரு மூன்றும் ஈர் ஐந்தும் ஈர் ஆறும்
கோலின் மேல் நின்ற குறிகள் பதினாறும்
மூலம் கண்டு ஆங்கே முடிந்த முதல் இரண்டும்
காலம் கண்டான் அடி காணலும் ஆமே.

பதப்பொருள்:

நாலும் (நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும்) இரு (இரண்டும்) மூன்றும் (மூன்றும் பெருக்கி வரும் மொத்தம் ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும்) ஈர் (இரண்டும்) ஐந்தும் (ஐந்தும் பெருக்கி வரும் மொத்தம் பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும்) ஈர் (இரண்டும்) ஆறும் (ஆறும் பெருக்கி வரும் மொத்தம் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும்)
கோலின் (சுழுமுனை நாடியின்) மேல் (மேல்) நின்ற (நிற்கின்ற) குறிகள் (இந்த சக்கரங்களாகிய குறிகளோடு) பதினாறும் (பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி)
மூலம் (இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற) கண்டு (நீல நிற ஜோதியை கண்டு) ஆங்கே (நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில்) முடிந்த (வினைகள் முடிவதற்கு) முதல் (முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில்) இரண்டும் (பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட)
காலம் (காலத்தை படைத்தவனும்) கண்டான் (இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின்) அடி (திருவடிகளை) காணலும் (தரிசிக்கவும்) ஆமே (முடியும்).

விளக்கம்:

நான்கு இதழ்கள் கொண்ட மூலாதாரமும், ஆறு இதழ்கள் கொண்ட சுவாதிட்டானமும், பத்து இதழ்கள் கொண்ட மணிப்பூரகமும், பன்னிரண்டு இதழ்கள் கொண்ட அநாகதமும், சுழுமுனை நாடியின் மேல் நிற்கின்ற இந்த சக்கரங்களாகிய குறிகளோடு பதினாறு இதழ்கள் கொண்ட விசுக்தியும் தாண்டி, இறைவனின் திருவடிகளை காண்பதற்கு மூலமாக இருக்கின்ற நீல நிற ஜோதியை கண்டு, நெற்றிக்கு நடுவில் புருவ மத்தியில் வினைகள் முடிவதற்கு முதலாக இருக்கின்ற ஆக்ஞா சக்கரத்தில் பிறவிக்கு காரணமாகிய நல் வினை தீ வினை ஆகிய இரண்டும் நீங்கி விட, காலத்தை படைத்தவனும் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் கண்டு அறிந்தவனும் ஆகிய இறைவனின் திருவடிகளை தரிசிக்கவும் முடியும்.

பாடல் #1703

பாடல் #1703: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சற்குணம் வாய்மை தயாவிவேகந் தண்மை
சற்குரு பாதமே சாயைபோ னீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புதமே தோன்ற லாகுஞ்சற் சீடனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சறகுணம வாயமை தயாவிவெகந தணமை
சறகுரு பாதமெ சாயைபொ னீஙகாமெ
சிறபர ஞானந தெளியத தெளிவொரதல
அறபுதமெ தொனற லாகுஞசற சீடனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சற் குணம் வாய்மை தயா விவேகம் தண்மை
சற் குரு பாதமே சாயை போல் நீங்காமே
சிற் பர ஞானம் தெளிய தெளிவு ஓர்தல்
அற்புதமே தோன்றல் ஆகும் சற் சீடனே.

பதப்பொருள்:

சற் (எதிலும் உண்மையாகவே) குணம் (இருத்தல்) வாய்மை (எப்போதும் உண்மையையே பேசுதல்) தயா (அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல்) விவேகம் (உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல்) தண்மை (எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல்)
சற் (உண்மையான) குரு (குருவின்) பாதமே (திருவடிகளை) சாயை (அதன் நிழல்) போல் (போல) நீங்காமே (எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல்)
சிற் (சித்தத்தில்) பர (இறைவனது பேரறிவு) ஞானம் (ஞானத்தை) தெளிய (தெளிவாக உணரும் படி) தெளிவு (குருவின் அருளோடு தெளிவாக) ஓர்தல் (ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்)
அற்புதமே (மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான) தோன்றல் (சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல்) ஆகும் (ஆகிய இவைகளோடு இருப்பவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).

விளக்கம்:

எதிலும் உண்மையாகவே இருத்தல், எப்போதும் உண்மையையே பேசுதல், அனைத்து உயிர்களின் மேலும் அன்பும் கருணையும் கொண்டு இருத்தல், உண்மையான ஞானமாகிய அறிவோடு இருத்தல், எது நடந்தாலும் அதனால் பாதிக்கப் படாமல் இருத்தல், உண்மையான குருவின் திருவடிகளை அதன் நிழல் போல எப்போதும் நீங்கி விடாமல் சேர்ந்தே இருத்தல், சித்தத்தில் இறைவனது பேரறிவு ஞானத்தை தெளிவாக உணரும் படி குருவின் அருளோடு தெளிவாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல், மனிதர்களுக்கு மேலான நிலையில் அற்புதமான சக்திகளை உலக நன்மைக்காக செய்து காட்டுதல், ஆகிய இவைகளோடு இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.

பாடல் #1702

பாடல் #1702: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புலன்வழி மாற்றிச் சித்தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

வெடகை விடுநெறி வெதாநத மாதலால
வாழககைப புலனவழி மாறறிச சிததாநததது
வெடகை விடுமிகக வெதாநதி பாதமெ
தாழககுந தலையினொன சறசீட னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

வேட்கை விடு நெறி வேத அந்தம் ஆதல் ஆல்
வாழ்க்கை புலன் வழி மாற்றி சித்த அந்தத்து
வேட்கை விடும் மிக்க வேத அந்தி பாதமே
தாழ்க்கும் தலையினோன் சற் சீடன் ஆமே.

பதப்பொருள்:

வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடு (விடுகின்ற) நெறி (வழி முறையே) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய) ஆதல் (அனைத்தும்) ஆல் (சொல்லுவதால்)
வாழ்க்கை (உலக வாழ்க்கையை) புலன் (ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின்) வழி (வழியே சென்று கொண்டு இருப்பதை) மாற்றி (மாற்றி விட்டு) சித்த (அனைத்து விதமான எண்ணங்களையும்) அந்தத்து (நீக்கி ஒடுங்குதலை செய்து)
வேட்கை (அனைத்து விதமான ஆசைகளையும்) விடும் (விட்டு விடுவதில்) மிக்க (மிகவும் சிறந்து இருக்கின்றவரும்) வேத (அனைத்து வேதங்களுக்கும்) அந்தி (எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின்) பாதமே (திருவடிகளை)
தாழ்க்கும் (பணிந்து வணங்குவதை மட்டுமே) தலையினோன் (தலையாக கொண்டு வாழ்பவனே) சற் (உண்மையான) சீடன் (சீடன்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

அனைத்து விதமான ஆசைகளையும் விடுகின்ற வழி முறையே வேதத்தின் எல்லையாகிய அனைத்தும் சொல்லுவதால், உலக வாழ்க்கையை ஐந்து புலன்களாகிய கண், காதுகள், மூக்கு, வாய், தொடுதல் ஆகியவற்றின் வழியே சென்று கொண்டு இருப்பதை மாற்றி விட்டு, அனைத்து விதமான எண்ணங்களையும் நீக்கி ஒடுங்குதலை செய்து, அனைத்து விதமான ஆசைகளையும் விட்டு விடுவதில் மிகவும் சிறந்து இருக்கின்றவரும், அனைத்து வேதங்களுக்கும் எல்லையாக இருக்கின்ற இறை நிலையில் இருக்கின்றவரும் ஆகிய குருவின் திருவடிகளை பணிந்து வணங்குவதை மட்டுமே தலையாக கொண்டு வாழ்பவனே உண்மையான சீடன் ஆகும்.

பாடல் #1701

பாடல் #1701: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

இறையடி தாழ்ந்தை வணக்கமு மெய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றிச்
சிறையுடன் னீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இறையடி தாழநதை வணககமு மெயதிக
குறையது கூறிக குணஙகொணடு பொறறிச
சிறையுடன னியறக காடடிச சிவததொ
டறிவுக கறிவிபபொன சனமாரககி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இறை அடி தாழ்ந்து ஐ வணக்கமும் எய்தி
குறை அது கூறி குணம் கொண்டு போற்றி
சிறை உடன் நீ அற காட்டி சிவத்தோடு
அறிவுக்கு அறிவிப்போன் சன் மார்க்கி ஆமே.

பதப்பொருள்:

இறை (உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின்) அடி (திருவடிகளை) தாழ்ந்து (பணிந்து வணங்கி) ஐ (இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து) வணக்கமும் (அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற) எய்தி (நிலையை அடைந்தவராகவும்)
குறை (தமக்குள் இருக்கின்ற குறைகள்) அது (எது என்பதை) கூறி (இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு) குணம் (இறையருளால் புனிதமான குணத்தை) கொண்டு (கொண்டு) போற்றி (அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும்)
சிறை (மாயை எனும் சிறை) உடன் (உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு) நீ (நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை) அற (மாயையை நீக்கி) காட்டி (காட்டி அருளுபவராகவும்) சிவத்தோடு (இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து)
அறிவுக்கு (சீடருடைய அறிவுக்கு புரியும் படி) அறிவிப்போன் (உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும்) சன் (இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத) மார்க்கி (சன் மார்க்கத்தில் இருப்பவர்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தை அறிந்தவராகிய குருவானவர் இறைவனின் திருவடிகளை பணிந்து வணங்கி இறையருளால் அண்டத்தில் இருக்கின்ற ஐந்து பூதங்களையும் தமக்குள் இருக்கின்ற ஐந்து பூதங்களோடு இணைத்து அவற்றை இறைவனாகவே உணர்ந்து வணங்குகின்ற நிலையை அடைந்தவராகவும், தமக்குள் இருக்கின்ற குறைகள் எது என்பதை இறைவனிடம் எடுத்துக் கூறி அவனருளால் அவற்றை நீக்கி விட்டு இறையருளால் புனிதமான குணத்தை கொண்டு அதற்கு நன்றி கூறி இறைவனை போற்றி வணங்குபவராகவும், மாயை எனும் சிறை உடன் சேர்ந்து தன்னுடன் இருக்கின்ற உடல் பொருள் ஆகிய அனைத்தும் தான் என்று நினைக்கின்ற சீடருக்கு நீ என்பது இந்த உடம்போ உடமைகளோ அல்ல நீ என்பது உனக்குள் இருக்கின்ற ஆன்மா என்பதை மாயையை நீக்கி காட்டி அருளுபவராகவும், இறைவனுடைய அருளோடு சேர்ந்து இருந்து சீடருடைய அறிவுக்கு புரியும் படி உண்மை அறிவை அறிவிக்கின்றவராகவும் இருக்க வேண்டும். இப்படி இருக்கின்ற குருவே அழிவில்லாத சன் மார்க்கத்தில் இருப்பவர் ஆகும்.

பாடல் #1700

பாடல் #1700: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

உணர்த்து மதிபக்கு வற்கே உணர்த்தி
யிணக்கில் பராபரத் தெல்லை யுன்னிட்டுக்
குணக்கோடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்து மின்னாவுடை யான்றன்னை யுன்னியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உணரதது மதிபககு வறகெ உணரததி
யிணககில பராபரத தெலலை யுனனிடடுக
குணககொடு தெறகுத தரபசசி மஙகொண
டுணரதது மினனாவுடை யானறனனை யுனனியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உணர்த்தும் அதி பக்குவற்கே உணர்த்தி
இணக்கு இல் பரா பரத்து எல்லை உள் இட்டு
குணக்கோடு தெற்கு உத்தர பச்சிமம் கொண்டு
உணர்த்துமின் ஆவுடையான் தன்னை உன்னியே.

பதப்பொருள்:

உணர்த்தும் (பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர்) அதி (மிகவும்) பக்குவற்கே (பக்குவம் பெற்ற சீடனுக்கே) உணர்த்தி (அவற்றை உணர்த்தி)
இணக்கு (அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து) இல் (இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற) பரா (அசையா சக்தியாகிய) பரத்து (பரம்பொருளின்) எல்லை (எல்லைக்கு) உள் (உள்ளே) இட்டு (சீடனை கொண்டு சென்று)
குணக்கோடு (கிழக்கோடு) தெற்கு (தெற்கு) உத்தர (வடக்கு) பச்சிமம் (மேற்கு ஆகிய நான்கு திசைகளையும்) கொண்டு (கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை)
உணர்த்துமின் (உணர்த்துவார்கள்) ஆவுடையான் (ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய) தன்னை (ஆண்டவனை) உன்னியே (தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்).

விளக்கம்:

பரம்பொருளின் பேருண்மைகளை உணர்த்துகின்ற ஞான குருவானவர் மிகவும் பக்குவம் பெற்ற சீடனுக்கே அவற்றை உணர்த்தி, அனைத்துமாக இருந்தாலும் அதனோடு சேர்ந்து இல்லாமல் விட்டு விலகி நிற்கின்ற அசையா சக்தியாகிய பரம்பொருளின் எல்லைக்கு உள்ளே சீடனை கொண்டு சென்று, கிழக்கோடு தெற்கு வடக்கு மேற்கு ஆகிய நான்கு திசைகளையும் கொண்டு இருக்கின்ற அனைத்து பொருள்களிலும் மறைந்து இருக்கின்ற பேருண்மையாகிய பரம்பொருளை உணர்த்துவார்கள். ஆன்மாக்களுக்கெல்லாம் அதிபதியாகிய ஆண்டவனை தமது மனதிற்குள் தியானித்தே இவை அனைத்தையும் அவர்கள் செய்வார்கள்.

பாடல் #1699

பாடல் #1699: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சீராரு ஞானத்தி னிச்சை செலச்செல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றா
ராராயு ஞானத்த னாமடிவைக் கவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சீராரு ஞானததி னிசசை செலசசெல
வாராத காதல குருபரன பாலாகச
சாராத சாதக நானகுநதன பாலுறறா
ராராயு ஞானதத னாமடிவைக கவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சீர் ஆரும் ஞானத்தின் இச்சை செல செல
வாராத காதல் குரு பரன் பால் ஆக
சாராத சாதக நான்கும் தன் பால் உற்றார்
ஆராயும் ஞானத்தன் ஆம் அடி வைக்கவே.

பதப்பொருள்:

சீர் (சீரும் சிறப்பும்) ஆரும் (மிகுந்து இருக்கின்ற) ஞானத்தின் (உண்மையான ஞானத்தை பெற்றதால்) இச்சை (உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள்) செல (விலகிப் போக) செல (விலகிப் போக)
வாராத (அவற்றின் மேல் இனி வராத) காதல் (பற்றானது) குரு (குருநாதர்) பரன் (இறைநிலையில் இருக்கின்றவரின்) பால் (மேல்) ஆக (கூடி வர)
சாராத (இதுவரை தமது கைக்கு சரிவர கிடைக்காத) சாதக (சாதகங்கள்) நான்கும் (சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கும்) தன் (தமது) பால் (கைவசப் படும்படி) உற்றார் (பேறு பெற்று)
ஆராயும் (அக புற ஆராய்ச்சியின் மூலம்) ஞானத்தன் (ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்) ஆம் (சாதகர்) அடி (தமது தலையின் மேல் குருநாதரின் திருவடிகள்) வைக்கவே (வைத்த பொழுதிலிருந்து).

விளக்கம்:

பாடல் #1698 இல் உள்ளபடி குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகிய சாதகரிடம் இதுவரை உலக பற்றுக்களின் மேல் இருந்த ஆசைகள் விலகிப் போக விலகிப் போக அவற்றின் மேல் இனி பற்று வராது. அந்த பற்றானது இறைநிலையில் இருக்கின்ற தமது குருநாதரின் மேலேயே அதிகமாக கூடி வரும். அதன் பிறகு இதுவரை அவரது கைக்கு சரிவர கிடைக்காத சாந்தி, தாந்தி, உபாதனை, தீட்சை ஆகிய நான்கு விதமான சாதகங்களும் அவரது கைவசப் படும்படி பேறு பெறுவார். அதன் பிறகு அக (உள்ளுக்குள்ளும்) புற (வெளியிலும்) ஆராய்ச்சியின் மூலம் ஞானத்தின் உச்ச நிலைக்கு சென்று கொண்டே இருப்பார்.

நான்கு விதமான சாதகங்கள்:

  1. சாந்தி – அசைவற்ற நிலையில் சாதகம் செய்தல் / பேரமைதி
  2. தாந்தி – எண்ணங்களற்ற நிலையில் சாதகம் செய்தல் / மன அடக்கம்
  3. உபாதனை – வினைகளை சாதகம் செய்து எரித்து தீர்த்தல்
  4. தீட்சை – சந்தேகம் வரும் போது சாதகத்தின் மூலம் ஒரு கண நேரத்தில் குரு வார்த்தை கேட்டல்

மேலுள்ள நான்கு விதமான சாதகங்களைப் பற்றிய குறிப்புகள் சுவடியில் உள்ளது.

பாடல் #1698

பாடல் #1698: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

அடிவைத் தருளுதி யாசானின் றென்னாய்
வடிவைத்த மாமுடி மாயாப் பிறவி
யடிவைத்த காய வருட்சத்தி யாலே
யடிபெற்ற ஞானத்த னாசற்று ளானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடிவைத தருளுதி யாசானின றெனனாய
வடிவைதத மாமுடி மாயாப பிறவி
யடிவைதத காய வருடசததி யாலெ
யடிபெறற ஞானதத னாசறறு ளானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடி வைத்து அருளுதி ஆசான் நின்று என் ஆய்
அடி வைத்த மா முடி மாயா பிறவி
அடி வைத்த காய அருள் சத்தி ஆலே
அடி பெற்ற ஞானத்தன் ஆசு அற்று உளானே.

பதப்பொருள்:

அடி (தங்களின் திருவடியை) வைத்து (என் தலை மீது வைத்து) அருளுதி (அருளுங்கள்) ஆசான் (குருநாதரே) நின்று (என்று வேண்டி நிற்கின்ற) என் (தனது) ஆய் (உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின்)
அடி (வேண்டுகோளுக்கு இணங்கி அதன் படியே திருவடியை) வைத்த (வைத்த) மா (மாபெரும்) முடி (தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால்) மாயா (மாயையாகிய) பிறவி (பிறவி நீங்கப் பெற்று)
அடி (அவரின் திருவடியை) வைத்த (வைத்த) காய (சீடனின் உடல்) அருள் (இறைவனது திருவருள்) சத்தி (சக்தியின்) ஆலே (மூலம் முழுமையடையும் போது)
அடி (குருவின் திருவடியினால்) பெற்ற (பெற்ற) ஞானத்தன் (ஞானத்தினால் உண்மை ஞானியாகி) ஆசு (ஒரு குற்றமும்) அற்று (இல்லாமல்) உளானே (இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்).

விளக்கம்:

தங்களின் திருவடியை என் தலை மீது வைத்து அருளுங்கள் குருநாதரே என்று வேண்டி நிற்கின்ற, தனது உடல் பொருள் ஆவியெல்லாம் குருவிற்கே உடமையாக்கிய சீடனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அதன் படியே திருவடியை வைத்த மாபெரும் தலைவனாகிய இறைவனாகவே இருக்கின்ற குருவின் திருவருளால் மாயையாகிய பிறவி நீங்கப் பெற்று, அவரின் திருவடியை வைத்த சீடனின் உடல் இறைவனது திருவருள் சக்தியின் மூலம் முழுமையடையும் போது, குருவின் திருவடியினால் பெற்ற ஞானத்தினால் உண்மை ஞானியாகி, ஒரு குற்றமும் இல்லாமல் இருப்பவனே உண்மையான சீடன் ஆவான்.

பாடல் #1697

பாடல் #1697: ஆறாம் தந்திரம் – 14. பக்குவன் (இறைவனை அறிவதற்கான மன முதிர்ச்சியை பெற்றவர்கள்)

சத்து மசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிச் சிவனருள் கைகாட்டப்
பத்தியில் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியி லிச்சை தருவோன்சற் சீடனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சதது மசததுமெவ வாறெனத தானுனனிச
சிததை யுருககிச சிவனருள கைகாடடப
பததியில ஞானம பெறபபணிந தானநதச
சததியி லிசசை தருவொனசற சீடனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சத்தும் அசத்தும் எவ்வாறு என தான் உன்னி
சித்தை உருக்கி சிவன் அருள் கை காட்ட
பத்தியில் ஞானம் பெற பணிந்து ஆனந்த
சத்தியில் இச்சை தருவோன் சற் சீடனே.

பதப்பொருள்:

சத்தும் (நிலையானதும்) அசத்தும் (நிலை இல்லாததும்) எவ்வாறு (எவ்வாறு இருக்கின்றது) என (என்பதை) தான் (தனக்குள்ளேயே) உன்னி (ஆராய்ந்து அறிந்து நிலையான இறைவனை உணர்ந்து)
சித்தை (அவன் மேல் உண்மையான அன்பினால்) உருக்கி (உருகும் போது) சிவன் (இறைவன்) அருள் (தனது திருவருளால்) கை (ஒரு உண்மையான குருவினை) காட்ட (காட்டி அருள)
பத்தியில் (அந்த குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம்) ஞானம் (உண்மை ஞானத்தை) பெற (பெறுவதற்கு) பணிந்து (அவரது திருவடிகளை பணிந்து) ஆனந்த (குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த)
சத்தியில் (சக்தியே) இச்சை (வேண்டும் என்று) தருவோன் (தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே) சற் (உண்மையான) சீடனே (சீடன் ஆவான்).

விளக்கம்:

நிலையானதும் நிலை இல்லாததும் எவ்வாறு இருக்கின்றது என்பதை தனக்குள்ளேயே ஆராய்ந்து அறிந்து, நிலையான இறைவனை உணர்ந்து அவன் மேல் உண்மையான அன்பினால் உருகும் போது, இறைவன் தனது திருவருளால் ஒரு உண்மையான குருவினை காட்டி அருளுவான். அப்படி இறைவன் காட்டி அருளிய குருவின் மீது கொண்ட பக்தியின் மூலம் உண்மை ஞானத்தை பெறுவதற்கு அவரது திருவடிகளை பணிந்து, அந்த குருவின் அருளால் கிடைக்கின்ற பேரானந்த சக்தியே வேண்டும் என்று தன்னையே முழுவதுமாக குருவிடம் ஒப்படைத்து தருபவனே உண்மையான சீடன் ஆவான்.