பாடல் #914

பாடல் #914: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈரா றிருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்
றிருந்த மனையொன்றி லெய்துவன் றானே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பல சக்கரத்தை வடிவமைக்க மேலிருந்து கீழாக பன்னிரண்டு கோடுகளும் இடமிருந்து வலமாக பன்னிரண்டு கோடுகளும் வரைந்தால் மொத்தம் 121 கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதி அமைத்தால் அந்த சக்கரத்தோடு இறைவன் அமர்ந்திருப்பான்.

பாடல் #915

பாடல் #915: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

தானொன்றி வாழிடந் தன்னெழுத் தேயாகுந்
தானொன்று மந்நான்குந் தன்பே ரெழுத்தாகுந்
தானொன்று நாற்கோணந் தன்னைந் தெழுத்தாகுந்
தானொன்றி லேயொன்று மவ்வரனும் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி சக்கரத்தில் அமர்ந்திருக்கும் இறைவன் வாழுகின்ற இடம் சக்கரத்தின் நடுவில் இருக்கும் சி என்கின்ற முதல் எழுத்தாகும். அந்த சக்கரத்தில் இருக்கும் மற்ற நான்கு எழுத்துக்களாகிய வ ய ந ம ஆகியவை இறைவனின் பேரெழுத்தாகும். சக்கரத்தின் நான்கு மூலைகளிலும் இறைவன் வாழுகின்ற சி என்ற முதல் எழுத்தே அரனாக இருந்து மொத்தம் ஐந்து எழுத்தாகின்றது. சக்கரத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களும் வேறு வேறாக இருந்தாலும் அவை அனைத்தும் இறைவனின் திருவுருவமாக இருக்கும் ஓம் என்னும் ஓங்கார எழுத்தாகவே இருக்கின்றது.

பாடல் #916

பாடல் #916: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

அரகர என்ன அரியதொன் றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப் பன்றே.

விளக்கம்:

இறைவனின் திருஉருவாக இருக்கும் ஓங்கார மந்திரத்தைக் குறிப்பதே ஹரஹர எனும் மந்திரமாகும். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் சிவசிவ என்று அமர்ந்திருக்கும். இதைவிட அறிந்து உணர்ந்து கொள்வதற்கு மிகவும் கடினமான மந்திரம் வேறொன்று இல்லை. அதனாலேயே உலகத்து உயிர்கள் இதை அறிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தால் அனைத்து பிறவிகளும் அன்றே அழிந்து பிறவி இல்லாத நிலையை அடைந்து தேவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

குறிப்பு: திருவம்பல சக்கரத்தை வரைந்து செபிப்பவர்களுக்கு சிவசிவ மந்திரம் பயனளிப்பது போல ஹரஹர மந்திரத்தை அறிந்து உணர்ந்து செபித்தாலே பலன் அளிக்கும்.

பாடல் #917

பாடல் #917: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரமும் பான்மொழி பாலே.

விளக்கம்:

திருவம்பல சக்கரத்தில் நடுவில் இருக்கும் சி மந்திர எழுத்தை சுற்றி உள்ள எட்டு கட்டங்களும் எமது தலைவனாகிய இறைவன் வீற்றிருக்கும் இடங்களாகும். இந்த எட்டு கட்டங்களில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தும் சக்கரத்தில் எழுதியிருக்கும் சிவயநம எழுத்துக்களும் ஒன்றாக சேரும் போது ஓம் நமசிவாய என்னும் மந்திரமாகிறது. தூய்மையான எண்ணங்களோடு இந்த மந்திரத்தை ஜெபிக்க ஈரேழு பதினான்கு உலகங்களிலும் ஒலியாகவும் ஒளியாகவும் விளங்குகின்ற சிவசக்தி திருவம்பல சக்கரத்தில் சிறந்து வீற்றிருக்கும்.

பாடல் # 918

பாடல் # 918 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி யிருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிரைக் காக்கவல் லாரே.

விளக்கம்:

உயிர்கள் தமக்குள் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் இறைவன் சிவசக்தியாய் ஒன்றிணைந்து வீற்றிருக்கும் விதத்தை அறிவதில்லை. திருவம்பல சக்கரத்தில் பாடல் #915 இல் உள்ளபடி மறைந்திருக்கும் ஒங்கார எழுத்தையும் மறையாமல் வீற்றிருக்கும் சிவயநம எழுத்துக்களையும் ஒன்றாக சேர்த்து தூய்மையான எண்ணத்தோடு ஜெபிக்க முடிந்தவர்களின் சகஸ்ரதள தாமரை மலர் மலர்ந்து என்றும் இறவாத நிலையை அடைவார்கள்.

பாடல் # 919

பாடல் # 919: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்போய்
ஆலய மாக வருகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்துஇருந் தானே.

விளக்கம்:

பாடல் #914 இல் உள்ளபடி திருவம்பலச் சக்கரத்தில் இருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தையே கோயிலாக கொண்டு இறைவன் அமர்ந்த பிறகு சாதகர்கள் சக்கரத்தில் வரிவடிவமாக இருக்கும் சிவயநம மந்திர எழுத்துக்களில் வீற்றிருக்கும் இறைவன் மேல் எண்ணத்தை வைத்து செபித்தால் பாடல் #915 இல் உள்ளபடி சக்கரத்தில் சூட்சுமமாக மறைந்திருக்கும் ஓங்கார மந்திரத்தை அறிந்து கொள்ள முடியும். அறிந்தபின் அதையும் சேர்த்து ஓம் நமசிவாய எனும் திருமந்திரமாக செபிக்கும் சாதகர்கள் பஞ்சாட்சர மந்திரம் கொண்ட திருவம்பலச் சக்கரத்தைக் கோயிலாக கொண்டு அமர்ந்ததைப் போலவே அந்த மந்திரத்தை செபிக்கும் தமது உடலையும் கோயிலாக கொண்டு இறைவன் தமக்குள்ளும் வீற்றிருக்கிறான் என்பதை உணர்ந்து கொள்வார்கள்.

பாடல் #920

பாடல் #920: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இருந்தஇவ் வட்டம் இருமூன்றி ரேகை
இருந்த வதனுள் இரேகை யைந்தாக
இருந்த அறைகள் இருபத்தஞ் சாக
இருந்தறை யொன்றி லெய்து மகாரமே.

விளக்கம்:

திருவம்பல சக்கரம் வடிவமைக்க இடமிருந்து வலமாக ஆறு கோடுகள் வரைந்து அதனோடு இணைந்து மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் வரைந்தால் வரும் சக்கரத்தில் இருபத்தைந்து கட்டங்கள் இருக்கும். இந்த கட்டங்களுக்கு நடுவில் இருக்கும் ம எழுத்து உயிர்களின் ஆன்மாவாக திருவம்பல சக்கரத்தோடு இணைந்து இருக்கின்றது.

பாடல் #921

பாடல் #921: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

மகாரம் நடுவே வளைத்திடுஞ் சத்தி
ஒகாரம் வளைத்திட்டு மப்பிளந் தேற்றி
யகாரந் தலையா யிருகண் சிகாரமாய்
நகார வகார நற்காலு நாடுமே.

விளக்கம்:

பாடல் #920 இல் உள்ளபடி நடுவே எழுதப்பட்டுள்ள ம என்ற எழுத்தை சுற்றி வ என்ற எழுத்தை எழுதி பின்பு அந்த இரண்டையும் ஒ என்ற எழுத்தால் வளைத்து அந்த ஒ எழுத்துக்கள் உ என்ற எழுத்தை தொடங்கி அடுத்த அறைகள் இரண்டு இரண்டாகும் படி பிரித்து மேலே ஏறும்படி வரைந்து வெளிப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைத் தலைகளாகவும் கீழ்ப்புற வட்டத்தில் இருபக்கமும் இருக்கும் அறைகளைக் கால்களாகவும் கருதிக் கொண்டு தலைகளாகின்ற அறைகளில் ய என்ற எழுத்தையும் கால்களாகின்ற அறைகளில் இடதுபுறம் ந என்ற எழுத்தையும் வலதுபுறம் அ என்ற எழுத்தையும் எழுதி செபித்தால் அதனோடு இறைவன் ஒன்றி இருப்பான்.

குறிப்பு: எழுத்து முறை அமைத்து தலை, கண், கால் முதலிய உறுப்புக்களோடு அமைந்த ஓர் உருவமாக பாவித்தால் திருவம்பல சக்கர நடுவில் இறைவனை மனித உருவமாகக் காணலாம்.

பாடல் #922

பாடல் #922: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

நாடும் பிரணவ நடுவிரு பக்கம்
ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநம சிவாய
வாடுஞ் சிவாயநம புறத் தாயதே.

விளக்கம்:

பாடல் #921 இல் உள்ளபடி எழுதி அமைத்த உருவத்தின் நடுவில் இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு மேலே இருக்கும் ய எழுத்துக்கு இரண்டு பக்கமும் இருக்கும் சி எழுத்துக்கள் திருவம்பலத்தில் ஆடுகின்ற நடராஜரின் திருவாயாகவும் அதற்கு நடுவில் நிற்கின்ற நமசிவாய மந்திரம் நடராஜரின் திருமுகமாகவும் அதற்கு கீழே இருக்கின்ற சிவாயநம மந்திரம் நடராஜரைச் சுற்றியுள்ள நெருப்பு வட்டமாகவும் இருக்கின்றது.

பாடல் #923

பாடல் #923: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

ஆயுஞ் சிவாய நமமசி வாயந
வாயு நமசிவா யயநம சிவா
வாயு வாய நமசியெனு மந்திர
மாயுந் சிகாரந் தொட்டந்தத் தடைவிலே.

விளக்கம்:

சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஆராய்ந்து தியானிக்க சிவாயநம, மசிவாயந, நமசிவாய, யநமசிவா, வாயநமசி, என்று ஐந்து வகையாக சி எழுத்தில் ஆரம்பித்து ந எழுத்தில் முடியும் வகையில் அமையும்.

(நுண்மையாய் சிவாயநம என்னும் மந்திரத்தினை நான்கு முறை எழுத்துக்களை மாற்றியமைத்து ஒவ்வோர் எழுத்தும் முதலெழுத்தாக வரும்படி எழுதினால் திருவம்பலச்சக்கரத்தில் உள்ள இருபத்தைந்து கட்டத்திலும் சிவாயநம ஐந்தெழுத்து அமைந்திருக்கும் உண்மை தெரியும்.)