பாடல் #339

முன்னுரை: இரண்டாம் தந்திரம் எண் -2 பதிவலியில் வீரட்டம் என்னும் தலைப்பில் வரும் 8 பாடல்களும் இறைவன் தமது வீரத்தால் மறக்கருணை என்னும் அறியாமையால் ஆட்கொள்ளப்பட்ட அசுரர்களை வதம்செய்து அவர்களை ஆட்கொண்ட புராணக்கதைகளை பாடல்களில் கூறுவதாக இருந்தாலும் இதன் உட்கருத்து உயிர்கள் தமக்குள் இருக்கும் எட்டுவித அசுரர்களை வதம் செய்து இறைவனை அடையும் வழிகளை இப்பாடல்களின் மூலம் அறியலாம்.

பாடல் #339: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே.

விளக்கம்:

கருத்த நிற மேனியோடு இரு கண்களும் தெரியாத அந்தகன் என்கிற அசுரன் மிகக் கடுமையான தவம் செய்து சாகா வரம் பெற்று ஈரேழு பதினான்கு உலகத்தையும் வெற்றி பெற்று அதில் வாழும் அனைத்து உயிர்களையும் கொடுமை படுத்தினான். இவனது கொடுமை தாங்காத தேவர்கள் இறைவனிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து குருத்து போன்ற மூன்று இலைகளில் நடு இலை மட்டும் மிகவும் நீண்டு இருக்கும் கூர்மையான சூலாயுதத்தால் அந்தகாசுரனின் கொன்று தேவர்களைக் காப்பாற்றினார்.

உட்கருத்து: அறியாமையால் மாயையில் மயங்கி கண் தெரியாமல் இருட்டில் இருக்கும் மனம் உயிரை இறைவனை அடையவிடாமல் தீய எண்ணத்துடன் வதைத்துக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் உயிர் இறைவா என்னை காப்பாற்று என்று வேண்ணிக்கொள்ள இறைவன் மாயையில் சிக்கி இருட்டில் கண் தெரியாமல் இருக்கும் மனதில் ஒளியைக் கொடுத்து அறியாமை என்னும் தீய எண்ணங்களை கொன்று உயிரை காப்பாற்றி அருளினார்.

மனித முதுகெலும்பு முடியும் பகுதி கழுத்து எலும்பு களுக்கு மேல் உள்ளது இது பின் மூளைப் பகுதிக்கும் முன்மூளை பகுதிக்கும் இடையில் முடிவுறுகிறது இதற்கு குருந்தம் என்று பெயர். இதன்மேல் சோம ஒளி, சூரிய ஒளி, ஆன்ம ஒளி என்னும் மூன்று ஒளிகள் உள்ளன. இவைதான் குருத்துயர் சூலமாகும். இந்த குருத்துயர் சூலத்தின் மூலம் இறைவன் அருளால் அறியாமை என்னும் இருட்டை அகற்றி இறைவனை உணர்ந்துகொள்ளலாம்.

Related image

பாடல் #340

பாடல் #340: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

கொலையிற் பிழைத்த பிரசா பதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தானங்கி யிட்டு
நிலையுல குக்கிவன் வேண்டுமென் றெண்ணித்
தலையைப் பரிந்திட்டுச் சந்திசெய் தானே.

விளக்கம்:

பிரம்மாவின் மூத்தகுமாரனாகிய தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவியைத் தனது மகளாக அடைந்தான். பார்வதி தேவி ஈசனைக் கண்டு தனது மாயை மறைந்து அவருடன் இணைந்துவிட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் இறைவனுடன் இணைந்துவிட்டாள் என்ற கோபத்தில் இறைவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக்குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான். அவன் குற்றத்தில் கோபம் கொண்ட இறைவன் பைரவர் அவதாரம் எடுத்து அவனது தலையைத் துண்டித்து வேள்வித் தீயில் போட்டு எரித்துவிட்டார். அதன்பிறகு பார்வதி தேவியும் பிரம்ம தேரும் உலக நன்மைக்கு தட்சன் தேவை என்று வேண்டிக்கொள்ள மனமிறங்கிய இறைவன் ஒரு ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தி அவன் வாழும்படி செய்தார். தட்சனும் தனது ஆணவம் அழிந்து இறைவனை வணங்கினான். இந்த புராணம் நிகழ்ந்த இடம் திருப்பறியலூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்கள் தனது கர்மாக்களை தீர்க்க பிறந்து கர்மாக்கள் தீர்ந்ததும் இறைவனை அடைய காத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் உயிர்களிடம் ஆணவம் தலைவன் போல் குடிகொண்டு தான் சொல்லுவது தான் சரி. அடுத்தவர் சொல்வதை கேட்கமாட்டேன் என்று தன் சொல்படி உயிரை ஆட்டிப்படைத்துக் கொண்டு இறைவனிடம் உயிர் செல்லவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது. உயிர் இறைவா ஆணவத்திடம் இருந்து என்னைக்காப்பாற்று என்று வேண்டிட இறைவன் ஆணவம் என்னும் தலைவனின் தலையை வெட்டி உயிர்களுக்கு அருள் செய்தான். ஆணவம் முற்றிலும் அழிந்தால் இறைவனை அடைந்து விடலாம். ஆனால் உயிர்கள் தனது கர்மாக்கள் தீர்ந்தால் மட்டுமே இறைவனை அடையமுடியும் ஆகவே கர்மாக்கள் தீரும்வரை நன்மை, தீமை என எது நடந்தாலும் எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணும் ஆட்டுத்தலை போன்ற எண்ணத்தை படைத்து உயிர்களுக்கு அருளினான்.

Related image

பாடல் #341

பாடல் #341: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு வீரச்செயல்கள்)

எங்கும் பரந்தும் இருநிலந் தாங்கியும்
தங்கும் படித்தவன் தாளுணர் தேவர்கள்
பொங்கும் சினத்துள் அயன்தலை முன்னற
அங்குஅச் சுதனை உதிரங்கொண் டானே.

விளக்கம்:

அண்டசராசரமெங்கும் பரவி இருப்பவனும் வாணுலகம் மண்ணுலகம் என்று இரண்டு நிலங்களையும் தாங்கி இருப்பவனும் தம்மை நாடி வருபவர்களுக்கு தஞ்சம் கொடுப்பவனுமாகிய இறைவனின் திருவடிகளின் பெருங்கருணையை உணர்ந்து இருக்கும் தேவர்கள் பிரம்மனைப் பார்த்துக் கோபம் கொண்டனர். பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்வதாலும் ஐந்து தலைகளைக் கொண்டதாலும் மும்மூர்த்திகளிலேயே தாம்தான் உயர்ந்தவர் என்று தற்பெருமை கொண்டிருந்ததால் இறைவனது திருவடிக் கருணையை உணராமல் இருந்தார். பிரம்மனின் தற்பெருமையால் படைப்பு பாதிக்கப்படுவதைக் கண்ட இறைவன் பைரவ அவதாரம் எடுத்து பிரம்மனின் ஐந்து தலைகளின் ஒன்றைத் தனது விரல் நகத்தால் கிள்ளி எடுத்துவிட்டார். பிரம்மாவின் கிள்ளி எடுக்கப்பட்ட தலையிலிருந்து வந்த குருதியை அந்த கபாலத்திலேயே எடுத்து திருமாலை ஏற்றுக்கொள்ளச் செய்து அருளினார். இது நிகழ்ந்த இடம் திருக்கண்டியூர் தலமாகும்.

உட்கருத்து: உயிர்களிடம் இருக்கும் நான் என்னும் அகங்காரம் அகந்தை தான் யார் என்பதை உணரவிடாமல் செய்து நல்ல எண்ணம் குணங்களை அழிப்பதுடன் இறைவனையும் அடையவிடாமல் செய்து விடுகிறது. மேலும் அகந்தை அகங்காரத்தினால் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து அதன் அடுத்த பிறவியையும் பாதிக்கிறது. (உதாரணமாக உயிருக்கு கர்மவினையின்படி 10 பிறவிகள் என்று எடுத்துக்கொண்டால் அகந்தை அகங்காரத்தினால் மேலும் பிறவிகள் எண்ணிக்கை கூடி அடுத்து வரும் பிறவிகளையும் பாதிக்கிறது) பிறவிகள் உயிர்கள் இறைவா என்னை காப்பாற்று என்று இறைவனை வேண்டிட தன்னை நாடி வருபவர்களுக்கு பெருங்கருணை செய்யும் இறைவன் அந்த அகந்தை அகங்காரத்தை அடியோடு வெட்டி எடுத்து உயிர்களை காக்கும் திருமாலிடம் அளித்து மீண்டும் இந்த உயிருக்கு மீண்டும் அகந்தை அகங்காரம் வராமல் இருக்க அருளினார்.

Related image

பாடல் #342

பாடல் #342: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

எங்கும் கலந்துமென் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபால்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித்து ஆழிசெய் தானே.

விளக்கம்:

அனைத்து உயிருக்குள்ளும் எங்கும் எதிலும் இரண்டறக் கலந்திருப்பவனும் அனைத்து உயிர்களும் உய்ய வேதங்களை உலகிற்கு ஓதி அந்த வேதத்திற்கு முதல்வனாயும் இருக்கும் இறைவனை உணராமல் உயிர்கள் வீணாக ஒருவர்மேல் ஒருவர் குரோதம் கொண்டு ஆத்திரத்தில் அறிவிழந்து அடுத்த உயிருக்குள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை உணராமல் அந்த உயிரை அழிக்க பல கெட்ட செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் இறைவா காப்பாற்று என்று வேண்டிட குரோதம் என்னும் அசுர குணத்தை உயிர்களிடம் உள்ள சக்திமய சக்கரங்களை கருவியாக பயன்படுத்தி இறைவன் தனது திருவடி மூலம் அழித்தான்.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருவிற்குடி தலமாகும். ஒரு முறை இந்திரன் தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்திற்கு வந்தான். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவெடுத்து கைலாய வாசலில் நின்று உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். கோபமடைந்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தான். கோபத்தால் சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர் சிவன் என்பதை அறிந்த இந்திரன் ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினான். கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளி பாற்கடலில் விழுந்தது. அதில் ஒரு குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான குழந்தைக்கு ஜலந்தராசூரன் என பெயர் வைக்கப்பட்டது. அவன் பெரியவனானதும் மூவுலகும் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும் சாகாவரமும் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அதற்கு ஜலந்தராசூரன் தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும் என வரம் வாங்கி விட்டான். இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு அசுரன் முன் வந்து நின்று தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார் இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான். இந்த நேரத்தில் திருமாலை அழைத்த சிவன் நீர் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில் மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்நேரத்தில் சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது.

Related image

பாடல் #343

பாடல் #343: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பார்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாருமறி யாரே.

விளக்கம்:

கங்கையைத் தன் சிவந்த சடையில் சூடியவனும் எல்லாவற்றிற்கும் முதலாயும் மூலமாயும் இருப்பவனுமாகிய இறைவனை முப்புரம் என்னும் இடத்தை எரித்தவன் என்று கூறுபவர்கள் மூடர்கள். அவர்களுக்கும் முப்புரமாக இருப்பது மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை என்பது புரியவில்லை. அவற்றை இறைவன் அழிக்கிறான் என்பதை உணராமல் மூன்று புரங்களை எரித்ததாக கூறுபவர்களில் எவரும் அந்தப் புரங்கள் எரிந்த விதத்தை அறிந்தவர்கள் இல்லை.

இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவதிகை தலமாகும். தாருகாசுரன் என்கிற அசுரனின் மகன்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் மிகச்சிறந்த இறை பக்தர்கள். அவர்கள் மூவரும் பிரம்மனை நோக்கிக் கடுந்தவம் செய்து நினைத்த இடத்திற்கு உடனே பறந்து செல்லும் மூன்று கோட்டைகளையும் அவை மூன்றும் ஒன்றாக இருக்கும்போது ஒரேயொரு அம்பினால் மட்டுமே தாங்கள் அழியவேண்டும் என்றும் வரம் பெற்றனர். வரம் கிடைத்ததும் அவர்கள் தேவலோகம் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்தனர். அவர்களின் அதிகாரம் தாங்காமல் தேவர்களும் பிரம்மரும் திருமாலும் இறைவனை வேண்ட மனமிறங்கிய இறைவன் அழகிய பைரவ அவதாரம் எடுத்து தேவதச்சன் விஸ்வகர்மாவிடம் ஒரு தேர் செய்யச் சொல்லி சந்திர சூரியரே தேர்ச் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களே தேரில் பூட்டிய குதிரைகளாகவும் பிரம்ம தேவரே தேரை ஓட்டும் சாரதியாகவும், மேரு மலையே வில்லாகவும், வாசுகி நாகமே வில்லைப் பூட்டும் நாணாகவும், அக்கினி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் வாலாகவும், திருமாலே அம்பாகவும் ஆக்கி எடுத்துக்கொண்டு முப்புரத்தை வந்து சேர்ந்தார். இறை பக்தியில் மிகவும் சிறந்து விளங்கும் அசுரர்களை அழிக்க வேண்டாமென்ற பெருங்கருணையில் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்க்க மூன்று கோட்டைகளும் உடனே எரிந்து சாம்பலாகி மூவரும் இறைவனின் காலடியில் விழுந்து வணங்க இறைவனும் அவர்களை ஆட்கொண்டு தமது கோயிலின் வாயிற் காவலர்களாகவும் இருவரையும் கோயிலில் செய்யும் குடமுழுக்கை ஏற்பவராக ஒருவரையும் ஏற்றுக்கொண்டார்.

குறிப்பு: 113, 114, 115, 118, 210, 212, 218 ஆகிய திருமந்திர பாடல்களில் உயிர்களிடம் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை இறைவன் எப்படி அழித்து உயிர்களை காக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த பாடல்களை நமது https://www.kvnthirumoolar.com/topics/thirumanthiram/ வலைதளத்தில் தேடல் பகுதியில் பார்த்து அறிந்து கொள்ளலாம்.

Related image

பாடல் #344

பாடல் #344: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

முத்தீக் கொளுவி முழங்கெரி வேள்வியுள்
அத்தி யுரியர னாவ தறிகிலர்
சத்தி கருதிய தாம்பல தேவரும்
அத்தீயின் உள்ளெழுந்த தன்று கொலையே.

விளக்கம்:

தாருகா வனத்திலிருந்த முனிவர்கள் இறைவனை வணங்காமல் இறைவனின் அருளை விட தங்களின் மந்திர சக்தியே பெரிது தாம் கற்ற மந்திரங்களின் மூலமாக எதையும் அடையலாம் என்ற அகங்காரத்தில் இருந்தனர். இவர்களின் அறியாமையைப் போக்க இறைவன் அழகிய உருவம் கொண்ட பிக்‌ஷாடனராகத் தோன்றி அந்த முனிவர்களின் வீட்டுக்குச் சென்று அங்கு இருந்த முனி பத்தினிகளின் முன்னால் பிச்சை கேட்டு நின்றார். அவரின் அழகில் மயங்கிய முனி பத்தினிகள் அவர் பின்னாலேயே மயக்கத்தில் கூடி வர ஆரம்பித்தனர். தங்களது பத்தினிகள் இப்படி ஒரு ஆடவனின் பின்னால் மயங்கி வருவதைக் கண்டு கோபமுற்ற முனிவர்கள் தமது தவ வலிமையால் மூன்றுவிதமான தீயை வளர்த்து மந்திரங்கள் மூலமாக (ஆகவனீயம் – காட்டுத்தீ, காருகபத்தியம் – வீட்டுத்தீ, தட்சிணாக்கினியம் – ஏட்டுத்தீ) கரிய நிறமுடைய ஒரு பெரிய யானையைத் தோன்றுவித்தனர். யாகத் தீயில் தோன்றிய யானை அவரை அழித்துவிடும் என்று நினைத்தார்கள். ஆனால் அந்தத் தீயிலிருந்து வெளிவந்த யானையைக் காடே அதிரும்படி பிளந்து கொன்று அதன் தோலை தனக்குப் போர்வையாக போர்த்திக்கொண்டு மூன்று வகையாக நெருப்பும் அதில் சொல்லும் மந்திரங்களும் மந்திரத்தின் பலனாக அதிலிருந்து வரும் பலனும் அனைத்தும் யாமே என்று தாருகா வனத்திலிருந்த முனிவர்களுக்கு உணர்த்தினார். இந்த புராணநிகழ்வு நடந்த இடம் திருவழுவூர் தலமாகும்.

உள்விளக்கம்: உயிர்களுக்கு வரும் கோபத்தினால் நான் என்ற அகங்காரம் அதிகரித்து என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் மதம் பிடித்த யானை போல் இருக்கும் போது உயிர்கள் இறைவனை சரணடைய இறைவன் கோபத்தையும் அகங்காரத்தையும் அழித்து அனைத்தும் யாமே என்று உணர்த்துகிறார்.

Related image

பாடல் #345

பாடல் #345: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.

விளக்கம்:

மூலாதாரத்தில் எரிந்து கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி அங்கே சகஸ்ரரதளத்தில் சேர்த்து அதைத்தாண்டிய பரவெளியில் இருக்கும் இறைவனை உணரும் உயிர்களுக்கு காலனை உதைத்து சாகா வரம் அளிப்பான் இறைவன். இதை உலகத்தவர்க்கு உணர்த்தும் விதமாகவே திருக்கடவூரின் திருத்தலம் இறைவனின் அருளால் நன்றாக அமைந்தது.

இந்த பாடலுக்கான புராணம் நிகழ்ந்த இடம் திருக்கடவூர் தலமாகும். மிருகண்டு முனிவரும் அவருடைய மனைவியான மருத்துவவதி தேவியாரும் தங்களுக்கு குழந்தை பாக்கியம் தரும்படி இறைவனை வேண்ட குறைந்த ஆயுட்கொண்ட அறிவாளியான குழந்தை வேண்டுமா அல்லது அதிக ஆயுட்கொண்ட முட்டாளான குழந்தை வேண்டுமா என்று இறைவன் கேட்க அறிவாளியான குழந்தையே வேண்டும் என்று கேட்டு மார்க்கண்டேயன் எனும் குழந்தையைப் பெற்றுக் கொண்டனர். மார்க்கண்டேயர் பிறந்ததிலிருந்து ஆயுள் அதிகரிக்க இறைவனே சரணடைய வேண்டும் என்று போதித்து வந்தனர். அதனால் மிகச்சிறந்த இறை பக்தனான மார்க்கண்டேயர் எப்போதும் இறை பூஜையிலேயே வாழ்க்கையைக் கழித்து வந்தார். அவரது ஆயுட்காலம் முடியும்போது அவரை மேலுலகம் அழைத்துச்செல்ல எமதருமரும் எந்தப் பூஜையில் இருந்தாலும் அவரது ஆயுள் முடிந்தால் அழைத்துச் செல்லவேண்டியது தமது கடமை என்று எண்ணி அவரை அழைத்துச் செல்ல பாசக் கயிற்றை வீசுகிறார். சிவபூஜையில் இருந்த மார்க்கண்டேயர் சிவலிங்கத்தைக் கட்டி அணைத்திருக்கும்போது பாசக்கயிறு அவரோடு சிவலிங்கத்தின் மீதும் விழ அதிலிருந்து இறைவன் வெளிவந்து எமது பூஜையில் இருக்கும் அடியவர் எவரையும் கொண்டு செல்லும் உரிமை உமக்கு இல்லை என்று கூறி எமதருமரை காலால் எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு, மார்க்கண்டேயருக்கும் என்றும் 16 வயதுடன் சிரஞ்சீவியாக இருக்கும் வரமளித்தார்.

உட்கருத்து: தியானத்தில் இருந்து மூச்சுக்காற்றை உள்ளிழுத்து அடக்கி அதன் மூலம் மூலாதாரத்தில் எரிந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை எழுப்பி சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று ஏழாவதான சக்கரமான சகஸ்ரரதளத்தில் சேர்த்து அங்கு இருக்கும் இறைவனை உணர்ந்து விட்டால் மரண பயம் இன்றி சிரஞ்சீவியாக இறைவனிடம் பேரானந்தத்திலேயே இருக்கலாம்.

பாடல் #346

பாடல் #346: இரண்டாம் தந்திரம் – 2. பதிவலியில் வீரட்டம் (இறைவன் மறக்கருணையில் ஆட்கொண்ட எட்டு இடங்கள்)

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்தி இலிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்தே.

விளக்கம்:

உலக நன்மைக்காக இன்னொரு உயிரை உருவாக்க தனது துணையுடன் சேரும் உயிர்கள் இறைவனை அடைய தடையாய் இருக்கும் காமம் என்னும் நோயில் சிக்காமல் இருக்க இறைவனை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒரு நிலைப்பட்ட மனமுடன் இறைவனை வேண்ட இறைவன் காமம் என்னும் நோயிலிருந்து உயிரை காப்பாற்றி உலக நன்மைக்காக இன்னொரு உடலுடன் கூடிய உயிரை உருவாக்க மட்டுமே இறை எண்ணத்துடன் தன்னுடைய துணையுடன் சேரும் உயிருக்கு அருந்தவ யோகத்தை அருளுவார்.

இந்த புராண நிகழ்வு நடந்த இடம் திருக்கொறுக்கை தலமாகும். சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது உலக நன்மைக்காக அவர் தியானத்தை கலைக்க வேண்டும் என்று இந்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மன்மதன் இறைவனின் மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அப்போதும் இறைவன் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனைப் பார்க்க அந்த நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட நெருப்பில் மன்மதன் எரிந்து சாம்பலானான். பிறகு மன்மதனின் மனைவியான ரதி தேவி இறைவனை வேண்டிக்கொள்ள உருவமில்லாத அருவமாக மன்மதனை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுத்தார்.