பாடல் #1307

பாடல் #1307: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காரதி யொரைநதுங காணிய பொனமை
யகராதி யொர ககரததமெ பொலுஞ
சராதி நாலஞசு தானசுதத வெணமை
மகராதி மூவிததை காமிய முததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ககர ஆதி ஓர் ஐந்தும் காணிய பொன்மை
அகர ஆதி ஓர் அக் அரத்தமே போலும்
சகர ஆதி நால் அஞ்சு தான் சுத்த வெண்மை
மகர ஆதி மூவித்தை காமிய முத்தியே.

பதப்பொருள்:

ககர (ககாரம் / க எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) ஐந்தும் (ஐந்து எழுத்துக்களும்) காணிய (தங்களுக்குள் தரிசித்தால்) பொன்மை (அவை பொன் நிறத்தில் இருக்கும்)
அகர (அகாரம் / அ எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) ஓர் (ஒரு) அக் (சுத்த) அரத்தமே (சிவப்பு நிறமே) போலும் (போல இருக்கும்)
சகர (சகாரம் / ச எழுத்து) ஆதி (எழுத்திற்கு மூலமாக இருக்கின்ற) நால் அஞ்சு (நான்கும் ஐந்தும் பெருக்கி வரும் இருபது எழுத்துக்களும்) தான் (தமது தன்மையில்) சுத்த (சுத்தமான) வெண்மை (வெள்ளை நிறத்தில் இருக்கும்)
மகர (உயிர்களுக்கு) ஆதி (ஆதியிலிருந்தே தொடர்ந்து வருகின்ற) மூவித்தை (படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து மேலுள்ள மந்திரங்களைத் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால்) காமிய (ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்மங்களும் அழிந்து) முத்தியே (முத்தியை இறையருளால் அடையலாம்).

விளக்கம்:

ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.

பாடல் #1308

பாடல் #1308: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஓரு மிதுவே யுரையுமித் தெய்வத்தைத்
தேரிற் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண் மனவின்ப முத்தியுந்
தேரி லறியுஞ் சிவகாயந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒரு மிதுவெ யுரையுமித தெயவததைத
தெரிற பிறிதிலலை யானொனறு செபபககெள
வாரித திரிகொண மனவினப முததியுந
தெரி லறியுஞ சிவகாயந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓரும் இதுவே உரையும் இத் தெய்வத்தை
தேரில் பிறிது இல்லை யான் ஒன்று செப்பக் கேள்
வாரித் திரிகோண் மனம் இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவ காயம் தானே.

பதப்பொருள்:

ஓரும் (சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிகின்ற) இதுவே (இந்த புவனாபதி சக்கரமே) உரையும் (யானும் எடுத்துச் சொல்கின்ற) இத் (இந்த) தெய்வத்தை (தெய்வத்தைப் பற்றி)
தேரில் (உணர்ந்து அறிந்து கொண்டால்) பிறிது (வேறொரு தெய்வமே) இல்லை (தேவை இல்லை) யான் (யாம்) ஒன்று (ஒரு விஷயத்தை) செப்பக் (சொல்லும்படி) கேள் (கேளுங்கள்)
வாரித் (உங்களுக்கும் மானசீகமாக வருவித்த) திரிகோண் (மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில்) மனம் (உங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால்) இன்ப (பேரின்பமும்) முத்தியும் (முக்தியும்)
தேரில் (என்ன என்பதை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும்) அறியும் (அப்படி அறிந்து கொண்ட பிறகு) சிவ காயம் (சிவ உருவம் எது என்பதையும்) தானே (உங்களால் அறிந்து கொள்ள முடியும்).

விளக்கம்:

பாடல் #1307 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களுக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட மூன்று வித்தைகளால் தெரிந்து கொண்ட புவனாபதி சக்கரத்தில் வீற்றிருக்கும் இந்த தெய்வத்தைப் பற்றியே யாம் எடுத்துச் சொல்கிறோம். இந்த தெய்வத்தை முழுவதுமாக உணர்ந்து கொண்டால் வேறு ஒரு தெய்வம் எதுவும் தேவை இல்லை. யாம் சொல்கின்ற ஒரு விஷயத்தை கவனமாகக் கேளுங்கள். சாதகர்கள் தங்களுக்குள் மானசீகமாக வருவித்த மூன்று கோணங்களைக் கொண்ட இந்த புவனாபதி சக்கரத்தில் தங்களின் மனதை அசையாமல் வைத்து தியானித்தால் பேரின்பமும் முக்தியும் என்ன என்பதை முழுவதுமாக அவர்களால் அறிந்து கொள்ள முடியும். அப்படி அறிந்து கொண்ட பிறகு சிவ உருவம் எது என்பதையும் அவர்களால் அறிந்து கொள்ள முடியும்.

பாடல் #1309

பாடல் #1309: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏகப் பராசத்தி யீசற்கா மங்கமே
யாகப் பராவித்தை யாமுத்தி சித்தியே
யேகப் பராசத்தி யாகச் சிவகுரு
யோகப் பராசத்தி யுண்மை யெட்டாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எகப பராசததி யீசறகா மஙகமெ
யாகப பராவிததை யாமுததி சிததியெ
யெகப பராசததி யாகச சிவகுரு
யொகப பராசததி யுணமை யெடடாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏகப் பராசத்தி ஈசற்கு ஆம் அங்கமே
ஆகப் பராவித்தை ஆம் முத்தி சித்தியே
ஏகப் பராசத்தி ஆகச் சிவ குரு
யோகப் பராசத்தி உண்மை எட்டாமே.

பதப்பொருள்:

ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஈசற்கு (இறை) ஆம் (அவருக்கு) அங்கமே (சரி பாதி அங்கமாக இருக்கின்றாள்)
ஆகப் (அவளே தனது திருமேனியில்) பராவித்தை (சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும்) ஆம் (இருக்கின்றாள்) முத்தி (முக்தியாகவும்) சித்தியே (சாதகர்கள் அடையக்கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள்)
ஏகப் (ஒன்றாகிய) பராசத்தி (பரா சக்தியே) ஆகச் (பார்க்கின்ற) சிவ குரு (குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள்)
யோகப் (யோகத்தினால் அடையக் கூடிய எட்டுவிதமான சித்திகளில்) பராசத்தி (பரா சக்தியானவள்) உண்மை (பேருண்மையின்) எட்டாமே (எட்டு விதமான சக்திகளாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1308 இல் உள்ளபடி சாதகர்கள் அறிந்து கொண்ட சிவ உருவமாக இருப்பவள் ஒன்றாகிய பரா சக்தியே. அவளே இறைவனுக்கு சரி பாதி அங்கமாகவும் இருக்கின்றாள். தனது திருமேனியில் சாதகர்கள் அனுபவத்தில் உணருகின்ற பரா வித்தையாகவும், சாதகர்களுக்கு கிடைக்கும் முக்தியாகவும், அவர்கள் அடையக் கூடிய சித்திகளாகவும் அவளே இருக்கின்றாள். ஒன்றாகிய பரா சக்தியே சாதகர்கள் பார்க்கின்ற குருவாக இருக்கும் இறைவனாகவும் இருக்கின்றாள். சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் பேருண்மையாக இருக்கின்ற எட்டு விதமான சக்திகளாகவும் பரா சக்தியே இருக்கின்றாள்.

பாடல் #1310

பாடல் #1310: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

எட்டா கியசத்தி யெட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாதாந்தத் தெட்டுங் கலப்பித்
தொட்டாத விந்துவுந் தானற் றொழிந்து
கிட்டா தொழிந்தது கீழான மூடர்க்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எடடாகிய சததி யெடடாகும யொகததுக
கடடாகி நாதாநதத தெடடுங கலபபித
தொடடாத விநதுவுந தானற றெழிநது
கிடடா தொழிநதது கீழான மூடரககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

எட்டாகிய சத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகி நாத அந்தத்து எட்டும் கலப்பித்து
ஒட்டாத விந்துவும் தான் அற்று ஒழிந்து
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே.

பதப்பொருள்:

எட்டாகிய (எட்டு விதமாக இருக்கின்ற) சத்தி (சக்திகளே) எட்டாகும் (எட்டு விதமான) யோகத்துக் (யோகங்களின் பூரண சக்தியாக இருக்கின்றார்கள்)
கட்டாகி (இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து) நாத (நாதமாகிய) அந்தத்து (எல்லையாக இருக்கின்ற பராசக்தியில்) எட்டும் (எட்டு சக்திகளும்) கலப்பித்து (கலந்து ஒன்றாகும் போது)
ஒட்டாத (அந்தப் பராசக்தியோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற) விந்துவும் (சாதகரின் ஆன்ம ஒளியும்) தான் (தான் எனும் அகங்காரத்தை) அற்று (நீக்கி) ஒழிந்து (அழிந்து இல்லாமல் போகும்)
கிட்டாது (இந்த நிலை கிடைக்காமல்) ஒழிந்தது (அழிந்து போய்விடும்) கீழான (இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத கீழ்மையான) மூடர்க்கே (முட்டாள்களுக்கு).

விளக்கம்:

பாடல் #1309 இல் உள்ளபடி சாதகர்கள் தங்களின் யோகத்தினால் அடையக் கூடிய எட்டு விதமான சித்திகளில் இருக்கின்ற எட்டு விதமான சக்திகளே எட்டு விதமான யோகங்களுக்கும் பூரண சக்திகளாக இருக்கின்றார்கள். இந்த எட்டு விதமான சக்திகளும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாத எல்லையாக இருக்கின்ற பராசக்தியோடு ஒன்றாகக் கலந்து நிற்கும் போது அவர்களோடு ஒட்டாமல் தனியாக பிரிந்து நிற்கின்ற சாதகரின் ஆன்ம ஒளியும் தான் எனும் அகங்காரம் நீங்கி அழிந்து போகும். தான் என்பது முற்றிலும் அழிந்து இறைவியோடு ஒன்றாக நிற்கின்ற இந்த நிலை இறைவனைப் பற்றிய ஞானம் கிடைத்தும் அதை சரியாகப் பயன்படுத்தாத கீழ்மையான முட்டாள்களுக்கு கிடைக்காமல் அழிந்து போகும்.

பாடல் #1311

பாடல் #1311: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

ஏதும் பலமா மியந்திரா சன்னடி
யோதிக் குருவி னுபதேச முட்கொண்டு
நீதங்கு மங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணந் தானிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

எதும பலமா மியநதிரா சனனடி
யொதிக குருவி னுபதெச முடகொணடு
நீதஙகு மஙக நியாசந தனைபபண்ணிச
சாதங கெடசசெமபிற சடகொணந தானிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஏதும் பலமாம் இயந்திர ஆசன் அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீ தங்கும் அங்க நியாசம் தனைப் பண்ணிச்
சாதம் கெடச் செம்பில் சட் கோணம் தான் இடே.

பதப்பொருள்:

ஏதும் (எந்த விதமான) பலமாம் (சக்திகளையும் பெறுவதற்கு) இயந்திர (உதவுகின்ற புவனாபதிச் சக்கரத்திற்கு) ஆசன் (சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின்) அடி (திருவடிகளை பற்றிக் கொண்டு)
ஓதிக் (அந்தத் திருவடிகளைப் போற்றி வணங்கி) குருவின் (சாதகர் தமது குருவிடம்) உபதேசம் (முறைப்படி உபதேசம் கேட்டுப் பெற்றுக் கொண்ட மந்திரங்களை) உட்கொண்டு (முழுவதுமாக உள் வாங்கிக் கொண்டு)
நீ (சாதகர் தாம்) தங்கும் (வீற்றிருக்கும் இடத்தில்) அங்க (தமது உடல் அங்கங்களால்) நியாசம் (குரு உபதேசித்த நியமங்களை) தனைப் (அவர் உபதேசித்த முறைப்படியே) பண்ணிச் (சரியாகச் செய்து)
சாதம் (தமது பிறவி முழுவதும்) கெடச் (இல்லாமல் போகும்படி) செம்பில் (செப்புத் தகட்டில்) சட் (ஆறு) கோணம் (கோணம் வரும்படி) தான் (இரண்டு பெரிய முக்கோணங்களை) இடே (வரைந்து வையுங்கள்).

விளக்கம்:

பாடல் #1310 இல் உள்ளபடி அட்டாங்க யோகத்தின் மூலம் பெறுகின்ற அட்டமா சித்திகளைப் போன்ற எந்த விதமான சக்திகளையும் பெறுவதற்கு உதவும் புவனாபதிச் சக்கரத்திற்கு சரிசமமான அதிபதிகளாக இருக்கின்ற இறைவன் இறைவியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு போற்றி வணங்க வேண்டும். அதன் பலனாக இறைவன் சாதகருக்கு சரியான குருவைக் காண்பித்து அருளுவார். அந்த குருவிடம் முறைப்படி உபதேசம் பெற்ற மந்திரங்களையும் நியமங்களையும் முழுவதுமாக உள் வாங்கி உணர்ந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு குரு உபதேசித்த மந்திரங்களையும் நியமங்களையும் அவர் உபதேசித்த முறைப்படியே ஓதி தமது உடல் அங்கங்களால் சரியாகச் செய்து தமக்கு இனிப் பிறவியே வேண்டாம் என்று வேண்டி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து வைக்க வேண்டும்.

பாடல் #1312

பாடல் #1312: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

சட்கோணம் தன்னிற் சிரீயிரீ தானிட்டு
வக்கோண மாறின் றலையிலிரீங் காரமிட்
டெக்கோண முஞ்சூழெ ழில்வட்ட மிட்டுப்பின்
மிக்கீரெட் டக்கர மம்முதல் மேலிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சடகொணந தனனிற சிரீயிரீ தானிடடு
வககொண மாறின றலையிலிரீங காரமிட
டெககொண முஞசூழெ ழிலவடட மிடடுபபின
மிககீரெட டககர மமமுதல மெலிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சட் கோணம் தன்னில் சிரீம் யிரீம் தான் இட்டு
அக் கோணம் ஆறின் தலையில் இரீங்காரம் இட்டு
எக் கோணமும் சூழ எழில் வட்டம் இட்டுப் பின்
மிக்க ஈர் எட்டு அக்கரம் அம் முதல் மேலிடே.

பதப்பொருள்:

சட் (ஆறு) கோணம் (முக்கோணங்களாக அமைத்த) தன்னில் (இரண்டு பெரிய முக்கோணங்களின் நடுவில்) சிரீம் (ஸ்ரீம்) யிரீம் (ஹ்ரீம்) தான் (ஆகிய பீஜங்களை) இட்டு (எழுதி விட்டு)
அக் (அந்த) கோணம் (முக்கோணங்கள்) ஆறின் (ஆறுக்கும்) தலையில் (முனையில்) இரீங்காரம் (ஹ்ரீம் பீஜத்தை) இட்டு (எழுதி விட்டு)
எக் (அனைத்து) கோணமும் (முக்கோணங்களும்) சூழ (சூழ்ந்து இருக்கும் படி) எழில் (அழகான) வட்டம் (வட்டமாக) இட்டுப் (வரைந்து விட்டு) பின் (பிறகு)
மிக்க (அதற்கு மேலே) ஈர் (இரண்டும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் பதினாறு) அக்கரம் (அட்சரங்களாக) அம் (ஹம்) முதல் (முதலாகிய பதினாறு உயிர் எழுத்துக்களையும்) மேலிடே (மேலே சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1311 இல் உள்ளபடி செப்புத் தகட்டில் ஆறு கோணங்கள் வரும்படி இரண்டு பெரிய முக்கோணங்களை வரைந்து அதற்கு நடுவில் ‘ஸ்ரீம்’ மற்றும் ‘ஹ்ரீம்’ ஆகிய இரண்டு பீஜ எழுத்துக்களை எழுத வேண்டும். அந்த ஆறு கோணங்களுக்கும் தலைப்பகுதியாக இருக்கின்ற ஒவ்வொரு முனையிலும் ‘ஹ்ரீம்’ பீஜ எழுத்தை எழுத வேண்டும். இந்த ஆறு கோணங்களையும் சூழ்ந்து இருக்கும் படி அழகான வட்டமாக வரைய வேண்டும். அந்த வட்டத்திற்கு மேல் ஆதி காலத் தமிழ் எழுத்துக்களில் ‘ஹம்’ முதலாக இருக்கும் பதினாறு அட்சர எழுத்துக்களை சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்.

குறிப்பு புவானபதி சக்கரம் வரையும் முறை இப்பாடலில் ஆரம்பித்து 3 பாடல்களில் வருகிறது. இப்பாடலுடன் கொடுக்கப்பட்ட புவானபதி சக்கரம் படம் முழுமையான படம் இல்லை அடுத்த 2 பாடல்களிலும் வரையும் முறை தொடரும்.

பாடல் #1313

பாடல் #1313: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

இட்ட விதழ்க ளிடையந் தரத்திலே
யட்ட வாவிட்டதின் மேலே யுவ்விட்டுக்
கிட்ட விதழ்களின் மேலே குரோஞ்சுரோம்
விட்ட வாமாத்தாங் குரோங்கென்று மேவிடே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

இடட விதளக ளிடையந தரததிலெ
யடட வாவிடடதின மெலெ யுவவிடடுக
கிடட விதழகளின மெலெ குரொஞசுரொம
விடட வாமாததாங குரொஙகெனறு மெவிடெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

இட்ட இதழ்கள் இடை அந்தரத்திலே
அட்ட ஆ இட்டு அதன் மேலே உவ் இட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே குரோம் சுரோம்
இட்டு ஆம் ஆத்து ஆம் குரோம் என்று மேவிடே.

பதப்பொருள்:

இட்ட (ஏற்கனவே வரைந்த வட்டத்தைச் சுற்றி) இதழ்கள் (இதழ்களை வரைந்து) இடை (அதன் நடுவில்) அந்தரத்திலே (வெற்று இடத்திலே)
அட்ட (எட்டு முறை) ஆ (ஹா எனும் எழுத்தை) இட்டு (வரைந்து) அதன் (அதற்கு) மேலே (உச்சியில்) உவ் (உ எழுத்தை சேர்த்து) இட்டுக் (எழுத வேண்டும்)
கிட்ட (இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு) இதழ்களின் (இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு) மேலே (மேல் இதழ்களை ஒட்டியவாறு) குரோம் (க்ரோம்) சுரோம் (ஸ்ரோம் என்ற பீஜங்களை)
இட்டு (எழுதி விட்டு அந்த இதழ்களுக்கு மேலே) ஆம் (ஹாம்) ஆத்து (ஹாத்) ஆம் (ஹாம்) குரோம் (க்ரோம்) என்று (ஆகிய பீஜங்களை) மேவிடே (எழுத வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1312 இல் உள்ளபடி வரைந்த பதினாறு அட்சர எழுத்துக்களைக் கொண்ட வட்டத்தைச் சுற்றி எட்டு இதழ்களை வரைந்து அந்த இதழ்களின் நடுவில் இருக்கும் வெற்று இடத்தில் எட்டு முறை ‘ஹா’ எனும் எழுத்தை வரைந்து அதற்கு உச்சியில் ‘உ’ எழுத்தை சேர்த்து எழுத வேண்டும். இப்படி நெருக்கமாக வரையப்பட்ட எட்டு இதழ்களுக்குள் அவை அமர்ந்திருக்கும் வட்டத்திற்கு மேல் இதழ்களை ஒட்டியவாறு ‘க்ரோம்’ ‘ஸ்ரோம்’ என்ற பீஜங்களை எழுதி விட்டு அந்த இதழ்களுக்கு மேலே ‘ஹாம் ஹாத்’ மற்றும் ‘ஹாம் க்ரோம்’ ஆகிய பீஜங்களை எழுத வேண்டும்.

பாடல் #1314

பாடல் #1314: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை யடைவே குரோங்சுரோங் கென்றிட்டுத்
தாவிலீறீங் காரத்தாற் சக்கரஞ் சூழ்ந்து
பூவை புவனா பதியைப்பின் பூசியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மெவிய சககர மீது வலததிலெ
கொவை யடைவெ குரொஞ்சுரொங் கெனறிடடுத
தாவிலீறீங காரததாற சககரஞ சுழநது
பூவை புவனா பதியைபபின பூசியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மேவிய சக்கரம் மீது வலத்திலே
கோவை அடைவே குரோங் சுரோங் என்று இட்டுத்
தாவில் இரீங்காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவை புவனா பதியைப் பின் பூசியே.

பதப்பொருள்:

மேவிய (ஏற்கனவே வரைந்த) சக்கரம் (புவனாபதி சக்கரத்தின்) மீது (மேல்) வலத்திலே (வலது புறத்திலும்)
கோவை (இறைவனது கோயிலாக இருக்கும் சக்கரத்திற்கு நான்கு நுழைவு வாசல்கள் வைத்து) அடைவே (அடையும் படி இடது புறத்திலும்) குரோங் (க்ரோம்) சுரோங் (ஸ்ரோம்) என்று (எனும் பீஜங்களை) இட்டுத் (எழுதி விட்டுத்)
தாவில் (தாமரைப் பூ போன்று இருக்கின்ற வடிவத்தில்) இரீங்காரத்தால் (ஹ்ரீம் எனும் பீஜ எழுத்தினால்) சக்கரம் (ஏற்கனவே வரைந்த சக்கரத்தை) சூழ்ந்து (சுற்றிலும் முழுவதுமாக சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும்)
பூவை (இந்த முறைகளின்படி வரையப்பட்ட தாமரைப் பூ போல இருக்கின்ற) புவனா (உலகங்களுக்கு) பதியைப் (அதிபதியாக சேர்ந்து இருக்கின்ற இறைவன் இறைவியின் புவனாபதி சக்கரத்தை) பின் (இதன் பிறகு) பூசியே (பூஜை செய்யுங்கள்).

விளக்கம்:

பாடல் #1313 இல் உள்ளபடி வரையப்பட்ட இறைவனது கோயிலாக இருக்கும் புவனாபதி சக்கரத்தைச் சுற்றி அடைத்து இருக்கும் படி நான்கு வாசல்கள் வைத்து இரண்டு வரிகள் கொண்ட ஒரு கட்டத்தை வரைந்து அதில் வலது புறத்திலும் இடது புறத்திலும் ‘க்ரோம்’ ‘ஸ்ரோம்’ எனும் பீஜங்களை எழுதி விட்டுத் தாமரைப் பூ போன்று இருக்கின்ற வடிவத்தில் ‘ஹ்ரீம்’ எனும் பீஜ எழுத்தை மறுபடியும் மறுபடியும் சக்கரத்தை முழுவதுமாக சுற்றி இருக்கும் படி எழுத வேண்டும். பாடல் #1311 இலிருந்து பாடல் #1314 வரை கொடுக்கப்பட முறைகளின்படி வரையப்பட்ட பிறகு தாமரைப் பூ போல இருக்கின்ற உலகங்களுக்கு அதிபதியாக சேர்ந்து இருக்கின்ற இறைவன் இறைவியின் புவனாபதி சக்கரத்தை பூஜை செய்ய வேண்டும்.

பாடல் #1315

பாடல் #1315: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

பூசிக்கும் போது புவனாபதி தன்னை
யாசற் றகத்தினி லாவாகனம் பண்ணிப்
பேசிப் பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பூசிககும பொது புவனாபதி தனனை
யாசற றகததினி லாவாகனம பணணிப
பெசிப பிராணப பிரதிடடை யதுசெயது
தெசுற றிடவெ தியான மதுசெயயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பூசிக்கும் போது புவனா பதி தன்னை
ஆசு அற்று அகத்தினில் ஆவாகனம் பண்ணிப்
பேசிப் பிராணப் பிரதிட்டை அது செய்து
தேசு உற்று இடவே தியானம் அது செய்யே.

பதப்பொருள்:

பூசிக்கும் (பூஜையை) போது (செய்யும் போது) புவனா (உலகங்களுக்கு) பதி (அதிபதியாக இருக்கின்ற இறைவனையும் இறைவியையும்) தன்னை (சாதகர் தமது)
ஆசு (மனதினில் எந்த விதமான அழுக்குகளும்) அற்று (இல்லாமல் தூய்மையான) அகத்தினில் (மனதிற்குள் மானசீகமாக) ஆவாகனம் (வெளியில் இருக்கின்ற புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி) பண்ணிப் (செய்து)
பேசிப் (சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை அசபையாக செபித்து) பிராணப் (மூச்சுக் காற்றின் மூலம் உயிர் கொடுத்து) பிரதிட்டை (தமக்குள் வைக்கின்ற) அது (செயலை முறைப்படி) செய்து (செய்த பிறகு)
தேசு (இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை) உற்று (மனதிற்குள் வைத்த சக்கரத்தோடு) இடவே (ஒன்றாகப் பொருந்தும் படி செய்து) தியானம் (தியானத்தை) அது (முறைப்படி) செய்யே (செய்ய வேண்டும்).

விளக்கம்:

பாடல் #1314 இல் உள்ளபடி புவனாபதி சக்கரத்தை முறைப்படி வரைந்து அதற்கு பூஜைகள் செய்யும் போது உலகங்களுக்கு அதிபதியாக இருக்கின்ற இறைவனையும் இறைவியையும் சாதகர் தமது மனதினில் எந்த விதமான அழுக்குகளும் இல்லாமல் தூய்மையான மனதிற்குள் மானசீகமாக வெளியில் இருக்கின்ற புவனாபதி சக்கரத்தின் ஆற்றலை உள்ளுக்குள் வரும்படி செய்ய வேண்டும். அதன் பிறகு சக்கரத்திலுள்ள மந்திர பீஜங்களை சத்தமாக உச்சரிக்காமல் அசபையாக மனதிற்குள் செபித்து மூச்சுக் காற்றின் மூலம் அதற்கு உயிர் கொடுத்து தமக்குள் வைக்க வேண்டும். அதன் பிறகு இறையின் பேரொளி பொருந்திய ஆற்றலை மனதிற்குள் வைத்த சக்கரத்தோடு ஒன்றாகப் பொருந்தும் படி செய்து முறைப்படி தியானம் செய்ய வேண்டும்.

பாடல் #1316

பாடல் #1316: நான்காம் தந்திரம் – 12. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)

செய்ய திருமேனி செம்பட் டுடைதானுங்
கையிற் படையங்குச பாசத் தோடவை
மெய்யி லணிகல னிரற்றின மாமேனி
துய்ய முடியு மவையத்தின் ரோற்றமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

செயய திருமெனி செமபட டுடைதானுங
கையிற படையங்குச பாசத தொடவை
மெயயி லணிகல னிரறறின மாமெனி
துயய முடியு மவையததின ரொறறமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

செய்ய திரு மேனி செம் பட்டு உடை தானும்
கையில் படை அங்குசம் பாசத்தோடு அவை
மெய்யில் அணிகலன் இரத்தினம் ஆம் மேனி
துய்ய முடியும் அவ் வையத்தின் தோற்றமே.

பதப்பொருள்:

செய்ய (பூஜை செய்தால்) திரு (இறைவி தனது) மேனி (திருமேனியில்) செம் (செம்மையான) பட்டு (பட்டு போல் பிரகாசிக்கும்) உடை (உடையை) தானும் (அணிந்து கொண்டவளாக)
கையில் (தனது திருக்கரங்களில்) படை (ஆயுதங்களாகிய) அங்குசம் (அங்குசமும் / ஆசையை அடக்கி அருளுவது) பாசத்தோடு (பாசக் கயிறும் / உலகப் பற்றை அறுப்பது) அவை (தரித்துக் கொண்டு)
மெய்யில் (தனது உடலில்) அணிகலன் (நகைகளை அணிந்து கொண்டு) இரத்தினம் (நவரத்தினம்) ஆம் (போல) மேனி (பிரகாசிக்கின்ற உடலோடும்)
துய்ய (தூய்மையான) முடியும் (திருமுடியையும் / கிரீடம் அணிந்து கொண்டு) அவ் (சாதகரின்) வையத்தின் (முன்பு உலகத்தின் அதிபதியான) தோற்றமே (தோற்றமாகவே வந்து நிற்பாள்).

விளக்கம்:

பாடல் #1315 இல் உள்ளபடி பூஜை செய்தால் இறைவனுடன் சேர்ந்து இருக்கும் இறைவியானவள் தனது திருமேனியில் செம்மையான பட்டு போல் பிரகாசிக்கும் உடையை அணிந்து கொண்டு தனது திருக்கரங்களில் ஆசையை அடக்கி அருளும் அங்குசமும் உலகப் பற்றை அறுத்து அருளும் பாசக் கயிறும் தரித்துக் கொண்டு நவரத்தினங்கள் போல பிரகாசிக்கின்ற தனது திருமேனியில் நகைகளை அணிந்து கொண்டு தனது தலையில் தூய்மையான திருமுடியையும் (கிரீடம்) அணிந்து கொண்டு சாதகரின் முன்பு உலகத்தின் தோற்றமாகவே வந்து நிற்பாள்.