பாடல் #1237

பாடல் #1237: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

விளக்கம்:

பாடல் #1236 இல் உள்ளபடி சாதகருக்குள் எப்போதும் பொருந்தி நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்ற இறைவியானவள் அவரின் சக்திக்குத் தகுதியான ஆபரணங்களை சூடிக்கொண்டு இருக்கின்றாள். அவளோடு உண்மையான ஞானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சாதகர்கள் தங்களின் உள்ளுக்குள் இருக்கும் இறை ஒளியின் மூலம் அவளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு வீற்றிருக்கும் போது இதுவரை உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் எண்ணத்தில் அவர்கள் வேண்டிக் கொண்ட வேண்டுகோள்கள் அனைத்தும் வந்து சேரும். அப்போது அவர்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.