பாடல் #1319

பாடல் #1319: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்
நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாக
நவாக்கிரி யெண்பத் தொருவகை யாக
நவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி சககரம நானுரை செயயில
நவாககிரி யொன்று நவாககிரி யாக
நவாககிரி யெணபத தொருவகை யாக
நவாககிரி யாகககிலீஞ சௌம முதலீறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி சக்கரம் நான் உரை செய்யில்
நவ அக்கிரி ஒன்று நவ அக்கிரி ஆக
நவ அக்கிரி எண்பத்து ஒரு வகை ஆக
நவ அக்கிரி ஆக கிலீம் சௌம் முதல் ஈறே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) நான் (யான்) உரை (எடுத்துக் கூற) செய்யில் (ஆரம்பித்தால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஒன்று (ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாகிய அட்சரமே) நவ (ஒன்பது) அக்கிரி (அட்சரங்கள்) ஆக (ஆக இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) எண்பத்து (ஒன்பதும் ஒன்பதும் பெருக்கினால் வரும் மொத்தம் எண்பதும்) ஒரு (ஒன்றும் சேர்ந்து மொத்தம் எண்பத்தோரு) வகை (வகையான அட்சரங்களாக) ஆக (விரிவடைந்து இருக்கின்றது)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆக (சக்கரமாக வடிவமைப்பு) கிலீம் (க்லீம் அட்சரமும்) சௌம் (ஸெளம் அட்சரமும்) முதல் (முதலும்) ஈறே (கடைசியுமாக உள்ளது).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி யான் உங்களுக்கு எடுத்துக் கூறினால் அது ஒரே சக்தியாக இருக்கின்ற இறைவியின் திருமேனியாக விளங்கும் அட்சரமே ஒன்பது அட்சரங்களாக மாறி இருக்கின்ற சக்கரமாகும். இந்த சக்கரத்தில் இருக்கின்ற ஒன்பது அட்சரங்களையும் ஒன்பது அறைகளில் மாறி மாறி எழுதினால் மொத்தம் எண்பத்தொன்று அறைகளைக் கொண்டு விரிவடைந்து இருக்கும். ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற இந்த ஒன்பது அட்சரங்களும் நேராகப் பார்க்கும் போது ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் முடிவதாக இருக்கின்றது. அதனை தலை கீழாகப் பார்க்கும் போது ‘க்லீம்’ எனும் அட்சரத்தில் ஆரம்பித்து ‘ஸெளம்’ எனும் அட்சரத்தில் முடிவதாகவும் இருக்கின்றது.

குறிப்பு: அக்கிரி என்ற சொல்லுக்கான விளக்கம்

அக்ஷரி – சமஸ்கிருதம் – சக்தியின் திருமேனியாக எழுத்து இருக்கும் வடிவம்
அட்சரி – தற்காலத் தமிழ்
அக்கிரி – திருமந்திரத் தமிழ்

பாடல் #1320

பாடல் #1320: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்
கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்
றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்
செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சௌம முதல வெளவொட வெறளவுளுமீறிக
கௌவுளு மையுளுங கலந்தி றீசிறீயென
ரொவவி லெழுஙகிலீ மநதிர பாதமாச
செவவி லெழுநது சிவாய நமவெனனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சௌம் முதல் வௌவ் வோடு ஹௌ உளும் ஈறிக்
கௌ உளும் ஐ உளும் கலந்து இறீ சிறீ என்று
ஓவ் இல் எழும் கிலீ மந்திர பாதம் ஆச்
செவ்வில் எழுந்து சிவாய நம என்னே.

பதப்பொருள்:

சௌம் (ஸௌம் எனும் அட்சரம்) முதல் (முதலாக) வௌவ் (ஔம் எனும்) வோடு (அட்சரத்தோடு சேர்த்து) ஹௌ (ஹௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஈறிக் (இறுதியில்)
கௌ (கௌம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) ஐ (ஐம் எனும் அட்சரத்தின்) உளும் (உள்ளும்) கலந்து (ஒன்றாகக் கலந்து) இறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) சிறீ (ஶ்ரீம் எனும் அட்சரம்) என்று (என்றும்)
ஓவ் (ஓம் எனும்) இல் (அட்சரத்திலிருந்து) எழும் (எழுகின்ற) கிலீ (க்லீம் எனும் அட்சரம் வரை உள்ள) மந்திர (மந்திரத்தின்) பாதம் (அடியாகவும் கொண்டு) ஆச் (அந்த மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற)
செவ்வில் (சமயத்தில்) எழுந்து (மனதை ஒருநிலைப் படுத்தி) சிவாய நம என்னே (ஒன்பது அட்சரங்கள் உள்ள இந்த மந்திரத்தை சொல்லி சிவாய நம என்று சொல்லுங்கள்).

விளக்கம்:

‘ஸௌம்’ எனும் அட்சரம் முதலாக ‘ஔம்’ எனும் அட்சரத்தோடு சேர்த்து ‘ஹௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் இறுதியில் ‘கௌம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ‘ஐம்’ எனும் அட்சரத்தின் உள்ளும் ஒன்றாகக் கலந்து ‘ஹ்ரீம்’ எனும் அட்சரமாகவும் ஸ்ரீம்’ எனும் அட்சரமாகவும் வெளிப்பட்டு ‘ஓம்’ எனும் அட்சரத்திலிருந்து எழுகின்ற ‘க்லீம்’ எனும் அட்சரம் வரை உள்ளது. இந்த ஒன்பது அட்சரங்கள் கொண்ட மந்திரத்தை முதலாகக் கொண்டு மந்திரத்தை செபிப்பதற்கு ஏற்ற சமயத்தில் மனதை ஒருநிலைப் படுத்தி இந்த மந்திரத்தை சொல்லி பின்பு சிவாய நம என்று தொடர்ச்சியாகச் சொல்லுங்கள்.

பாடல் #1321

பாடல் #1321: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நவாக்கிரி யாவது நானறி வித்தை
நவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்
நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோத
நவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நவாககிரி யாவது நானறி விததை
நவாககிரி யுளளெழு நனமைக ளெலலா
நவாககிரி மநதிரம நாவுளளெ யொத
நவாககிரி சததி நலநதருந தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நவ அக்கிரி ஆவது நான் அறி வித்தை
நவ அக்கிரி உள் எழும் நன்மைகள் எல்லாம்
நவ அக்கிரி மந்திரம் நாவுள்ளே ஓத
நவ அக்கிரி சத்தி நலம் தரும் தானே.

பதப்பொருள்:

நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) ஆவது (சக்கரமாவது) நான் (யான்) அறி (அறிந்து கொண்ட) வித்தை (ஞானக் கலையாகும்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) உள் (சக்கரத்திற்குள்ளிருந்து) எழும் (எழுகின்ற) நன்மைகள் (நன்மைகளை) எல்லாம் (எல்லாம் அடைய வேண்டுமென்றால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) மந்திரம் (இந்த மந்திரத்தை) நாவுள்ளே (நாக்குக்குள்ளேயே வைத்து) ஓத (சத்தமில்லாமல் ஓதினால்)
நவ (ஒன்பது) அக்கிரி (சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட) சத்தி (இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள்) நலம் (அனைத்து நலங்களையும்) தரும் (கொடுத்து) தானே (தானே அருளுவார்கள்).

விளக்கம்:

ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கின்ற அட்சரங்களைக் கொண்ட நவாக்கிரி சக்கரமாவது யான் அறிந்து கொண்ட கலைகளாகிய கர்மாக்களை அழித்து பிறவி அறுத்தல், இனியும் கர்மங்கள் சேராமல் தடுத்தல், இறைவனை தமக்குள் உணர்ந்து அடைவது ஆகியவை ஆகும். இந்த மூன்று விதமான நன்மைகளும் இந்த சக்கரத்திற்குள்ளிருந்தே கிடைக்கும். அதனை அடைய வேண்டுமென்றால் இந்த மந்திரத்தை நாக்கை மட்டும் அசைத்து சத்தமில்லாமல் ஓதினால் இந்த சக்கரத்தில் வீற்றிருக்கும் சக்திகள் அனைத்து நலங்களையும் தானே கொடுத்து அருளுவார்கள்.

இப்பாடலை திருமந்திர சுவடி எழுத்துக்கள் மற்றும் பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

பாடல் #1322

பாடல் #1322: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லா
முரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நலநதரு ஞானமுங கலவியு மெலலா
முரநதரு வலவினை யுமமை விடடொடிச
சிரநதரு தீவினை செயவ தகறறி
வரநதரு சொதியும வாயததிடுங காணெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நலம் தரும் ஞானமும் கல்வியும் எல்லாம்
உரம் தரும் வல் வினை உம்மை விட்டு ஓடிச்
சிரம் தரும் தீ வினை செய்வது அகற்றி
வரம் தரும் சோதியும் வாய்த்திடும் காணே.

பதப்பொருள்:

நலம் (நன்மைகள் அனைத்தையும்) தரும் (கொடுத்து) ஞானமும் (இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து) கல்வியும் (உலக அறிவை அறிகின்ற கல்விகள்) எல்லாம் (அனைத்தையும் கொடுத்து)
உரம் (மன பலத்தையும்) தரும் (கொடுத்து) வல் (பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான) வினை (வினைகள் அனைத்தும்) உம்மை (சாதகரை) விட்டு (விட்டு விட்டு) ஓடிச் (ஓடி விடும்படியும் செய்து)
சிரம் (மேன்மையான நிலையைக்) தரும் (கொடுத்து) தீ (இனி மேலும் தீமையான) வினை (வினைகளை எதுவும்) செய்வது (செய்து விடுகின்ற நிலையையும்) அகற்றி (இல்லாமல் செய்து)
வரம் (நினைத்ததை அடையும் வரங்களையும்) தரும் (கொடுத்து) சோதியும் (இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற) வாய்த்திடும் (நிலையும் கிடைக்கப் பெறுவதைக்) காணே (காணலாம்).

விளக்கம்:

நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்களுக்கு பாடல் #1321 இல் உள்ளபடி மூன்று விதமான நன்மைகள் அனைத்தையும் கொடுத்து, இறைவனை அடைய வேண்டிய ஞானத்தையும் கொடுத்து, உலக அறிவை அறிகின்ற கல்விகள் அனைத்தையும் கொடுத்து, மன பலத்தையும் கொடுத்து அதன் பயனாகப் பல பிறவிகளாகத் தொடர்ந்து வருகின்ற வலிமையான வினைகள் அனைத்தும் சாதகரை விட்டு விட்டு ஓடி விடும்படியும் செய்து, மேன்மையான நிலையைக் கொடுத்து அதன் பயனாக இனி மேலும் தீமையான வினைகளை எதுவும் செய்து விடுகின்ற நிலையையும் இல்லாமல் செய்து, நினைத்ததை அடையும் வரங்களையும் கொடுத்து, இறைவனின் சோதி வடிவத்தை அடைகின்ற நிலையும் கிடைக்கப் பெறுவதைக் காணலாம்.

பாடல் #1323

பாடல் #1323: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடு முன்னே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கு
நின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடிடுஞ சககரம வெளளிபொன செமபிடை
கொணடிடு முனனெ குறிதத வினைகளை
வெனறிடு மணடலம வெறறி தருவிககு
நினறிடு சககரம நினைககு மளவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் முன்னே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பதப்பொருள்:

கண்டிடும் (சாதகர் கண்டு அறிந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம்) வெள்ளி (வெள்ளி போன்ற தூய்மையுடனும்) பொன் (பொன் போன்ற பிரகாசத்தோடும்) செம்பு (செம்பு போன்ற உறுதியுடனும்) இடை (மனதிற்கு உள்ளே)
கொண்டிடும் (உள் வாங்கி வைக்கும் போது) முன்னே (இந்த பிறவிக்கு முன்பே) குறித்த (குறிக்கப்பட்ட / முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும்) வினைகளை (அனைத்து வினைகளையும்)
வென்றிடும் (வென்று அழித்துவிடும்) மண்டலம் (இந்த சக்தி மண்டலம்) வெற்றி (ஐந்து புலன்களையும் வெற்றி) தருவிக்கும் (பெறுவதற்கும் வழி கொடுக்கும்)
நின்றிடும் (உறுதியாக நிற்கின்ற) சக்கரம் (இந்த நவாக்கிரி சக்கரமானது) நினைக்கும் (எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ) அளவே (அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1322 இல் உள்ளபடி சாதகர் கண்டு அறிந்த நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்தோடும், செம்பு போன்ற உறுதியுடனும் மனதிற்கு உள்ளே உள் வாங்கி வைக்கும் போது சாதகரின் இந்த பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் அனைத்து வினைகளையும் இந்த சக்கரத்தின் சக்தி மண்டலமானது வென்று அழித்துவிடும். ஐந்து புலன்களையும் வெற்றி பெறுவதற்கும் வழி கொடுக்கும். இந்த நவாக்கிரி சக்கரமானது எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்.

பாடல் #1324

பாடல் #1324: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நினைத்திடு மச்சிறீயிக் கிறீ யீரா
நினைத்திடு சக்கர மாதியு மீறு
நினைத்திடு நெல்லொடு புல்வினை யுள்ளே
நினைத்திடு மற்சனை நேர்தரு வாளே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினைததிடு மசசிறீயிக கிறீ யீரா
நினைததிடு சககர மாதியு மீறு
நினைததிடு நெலலொடு புலவினை யுளளெ
நினைததிடு மறசனை நெரதரு வாளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நினைத்திடும் அச் சிறீ இக் கிறீ ஈரா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல் வினை உள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர் தருவாளே.

பதப்பொருள்:

நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அச் (அந்த சக்கரத்தில் உள்ள) சிறீ (ஸ்ரீம் எனும் அட்சரம்) இக்கிறீ (ஹ்ரீம் எனும் அட்சரம்) ஈரா (ஆகிய இரண்டு அட்சரங்களும்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தில்) ஆதியும் (முதலாகவும்) ஈறு (முடிவாகவும் வைத்து)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற போது) நெல்லொடு (நெல்லை விதைத்து) புல் (அதிலிருந்து புல்லை விளைவிக்கும்) வினை (செயலைப் போலவே) உள்ளே (மனதிற்குள்)
நினைத்திடும் (சாதகர் நினைத்து தியானிக்கின்ற) அருச்சனை (மந்திரத்தை சாற்றுகின்ற போது) நேர் (அதற்கு இணையான பலன்களை) தருவாளே (சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்).

விளக்கம்:

பாடல் #1323 இல் உள்ளபடி சாதகர் நினைத்து தியானிக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் உள்ள ஸ்ரீம் எனும் அட்சரம் ஹ்ரீம் எனும் அட்சரம் ஆகிய இரண்டு அட்சரங்களையும் முதலாகவும் முடிவாகவும் வைத்து தியானிக்க வேண்டும். அப்படி தியானிக்கும் போது நெல்லை விதைத்தால் அதிலிருந்து புல்லாக முளைத்து விளைவிக்கும் செயலைப் போலவே மனதிற்குள் சாதகர் நினைத்து தியானிக்கின்ற மந்திரத்தை சாற்றுகின்ற போது அதற்கு இணையான பலன்களை சக்கரத்திலிருக்கும் சக்தியானவள் தந்து அருளுவாள்.

பாடல் #1325

பாடல் #1325: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நேர்தரு மத்திரு நாயகி யானவள்
யாதொரு வண்ண மறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணங் கருதின கைவரும்
நாள்தரு வண்ணம் நடத்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெரதரு மததிரு நாயகி யானவள
யாதொரு வணண மறிந்திடும பொறபூவை
காரதரு வணணங கருதின கைவரும
நாளதரு வணணம நடததிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நேர் தரும் அத் திரு நாயகி ஆனவள்
யாது ஒரு வண்ணம் அறிந்திடும் பொன் பூவை
கார் தரு வண்ணம் கருதின கை வரும்
நாள் தரு வண்ணம் நடத்திடு நீயே.

பதப்பொருள்:

நேர் (இணையான பலனை) தரும் (தந்து அருளுகின்ற) அத் (அந்த) திரு (திருவருள்) நாயகி (தலைவியாக இருக்கின்ற) ஆனவள் (இறைவியானவள்)
யாது (எந்த) ஒரு (விதமான) வண்ணம் (வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதை) அறிந்திடும் (தமக்குள் தரிசித்து அறிந்து கொண்டால்) பொன் (அவள் தங்கம் போல ஜொலிக்கும் பிரகாசத்துடனும்) பூவை (மென்மையான பூவைப் போலவும் இருப்பதை உணர்ந்து கொண்டு)
கார் (மழையைக்) தரு (கொடுக்கின்ற மேகத்தைப்) வண்ணம் (போலவே இறைவியானவள்) கருதின (தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும்) கை (அவர்கள் எண்ணியது கிடைக்கும்) வரும் (படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்து கொண்டு)
நாள் (தினந்தோறும்) தரு (அவள் அருளுகின்ற) வண்ணம் (விதத்திலேயே) நடத்திடு (உலக நன்மைக்குத் தேவையானதை நடத்துங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1324 இல் உள்ளபடி தியானிக்கின்ற மந்திரத்தை சாற்றுகின்ற போது அதற்கு இணையான பலன்களை தந்து அருளுகின்ற திருவருள் தலைவியான இறைவியானவள் எந்த விதமான வண்ணத்தில் இருக்கின்றாள் என்பதை தமக்குள் தரிசித்து அறிந்து கொண்டால் அவள் தங்கம் போல ஜொலிக்கும் பிரகாசத்துடனும் மென்மையான பூவைப் போலவும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். மழையைக் கொடுக்கின்ற மேகத்தைப் போலவே இறைவியானவள் தன்னை நினைத்து வணங்கும் எவருக்கும் அவர்கள் எண்ணியது கிடைக்கும் படி செய்து அருளுவாள் என்பதை உணர்ந்து கொண்டு தினந்தோறும் அவள் அருளுகின்ற விதத்திலேயே உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் நடத்துவார்கள்.

பாடல் #1326

பாடல் #1326: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நடந்திடும் பாரி னன்மைக ளெல்லாங்
கடந்திடுங் காலனு மெண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
வடைந்திடு மவ்வண்ண மடைந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நடநதிடும பாரி னனமைக ளெலலாங
கடநதிடுங காலனு மெணணிய நாளும
படரநதிடு நாமமும பாயகதிர பொல
வடைநதிடு மவவணண மடைநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நடந்திடும் பாரின் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய் கதிர் போல
அடைந்திடும் அவ் வண்ணம் அடைந்திடு நீயே.

பதப்பொருள்:

நடந்திடும் (உலக நன்மைக்கு வேண்டியது என்று சாதகர்கள் எண்ணியபடியே நடத்தப்படும்) பாரின் (உலகிலுள்ள) நன்மைகள் (நன்மையான காரியங்கள்) எல்லாம் (அனைத்தும்)
கடந்திடும் (கடந்து போய்விடும்) காலனும் (எமன் சாதகர்களுக்கு) எண்ணிய (குறித்த) நாளும் (ஆயுள் முடியும் நாளும்)
படர்ந்திடும் (உலகம் முழுவதும் பரந்து செல்லும்) நாமமும் (சாதகரின் பெயரும் புகழும்) பாய் (சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற) கதிர் (ஒளிக்கதிர்களைப்) போல (போலவே)
அடைந்திடும் (இதன் மூலம் இறையை நோக்கி) அவ் (செல்லுகின்ற சாதகத்தின்) வண்ணம் (முறைப்படியே) அடைந்திடு (இறையைச் சென்று அடையுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1325 இல் உள்ளபடி உலக நன்மைக்குத் தேவையானதை சாதகர்கள் எண்ணியபடியே நவாக்கிரி சக்கரம் சக்தியால் அனைத்து விதமான நன்மையான காரியங்களும் உலகினில் நடக்கும். எமன் சாதகர்களுக்கு குறித்த ஆயுள் முடியும் நாளும் அவர்களைக் கடந்து போய்விடும். சாதகரின் பெயரும் புகழும் சூரியனிலிருந்து பாய்ந்து வருகின்ற ஒளிக் கதிர்களைப் போலவே உலகம் முழுவதும் பரந்து செல்லும். இப்படி தாம் செய்கின்ற சாதகத்தின் மூலம் உலகத்திற்கு நன்மைகள் செய்து இறையை நோக்கிச் சென்று அடைவார்கள் சாதகர்கள்.

பாடல் #1327

பாடல் #1327: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுட னெல்லா
மடைந்திடு மாதி யருளுந் திருவு
மடைந்திடு மண்டத் தமரர்கள் வாழ்வு
மடைந்திடு மவ்வண்ண மறிந்திடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடைநதிடு பொனவெளளி கலலுட னெலலா
மடைநதிடு மாதி யருளுந திருவு
மடைநதிடு மணடத தமரரகள வாழவு
மடைநதிடு மவவணண மறிநதிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடைந்திடும் பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் அவ் வண்ணம் அறிந்திடு நீயே.

பதப்பொருள்:

அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) பொன் (பொன் போல பிரகாசிக்கின்ற உடல்) வெள்ளி (வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா) கல்லுடன் (வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம்) எல்லாம் (ஆகிய அனைத்தும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) ஆதி (ஆதிப் பரம்பொருளான இறைவனின்) அருளும் (திருவருளும்) திருவும் (இறைவனது திருமேனியும்)
அடைந்திடும் (சாதகர்கள் அடைவார்கள்) அண்டத்து (அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும்) அமரர்கள் (இறவா நிலை பெற்ற அமரர்களின்) வாழ்வும் (தெய்வீக வாழ்க்கையும்)
அடைந்திடும் (சாதகத்தின் மூலம் அடையக்கூடிய) அவ் (அனைத்தையும் அதனதன்) வண்ணம் (முறைப்படியே அடையும்) அறிந்திடு (முறைகளை அறிந்து கொள்ளுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1326 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர்கள் பொன் போல பிரகாசிக்கின்ற உடல், வெள்ளி போல தூய்மையாக மலங்கள் நீங்கிய ஆன்மா, வைரக் கல்லைப் போல எதனாலும் அசையாத உறுதியான மனம் ஆகிய அனைத்தும் அடைவார்கள். அது மட்டுமின்றி ஆதிப் பரம்பொருளான இறைவனின் திருவருளும் இறைவனது திருமேனியையும் அடைவார்கள். மேலும் அண்ட சராசரங்களில் வீற்றிருக்கும் இறவா நிலை பெற்ற அமரர்களின் தெய்வீக வாழ்க்கையும் அடைவார்கள். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்வதன் மூலம் அனைத்தையும் அதனதன் முறைப்படியே அடையும் முறைகளை சாதகர்கள் அறிந்து கொள்வார்கள்.

பாடல் #1328

பாடல் #1328: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

அறிந்திடு வார்க ளமரர்க ளாகத்
தெரிந்திடும் வானோருந் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றிடு நீயே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதிடு வாரக ளமரரக ளாகத
தெரிநதிடும வானொருந தெவரகள தெவன
பரிநதிடும வானவன பாயபுனல சூடி
முரிநதிடு வானை முயனறிடு நீயெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்திடுவார்கள் அமரர்கள் ஆகத்
தெரிந்திடும் வானோரும் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வான் அவன் பாய் புனல் சூடி
முரிந்திடுவானை முயன்றிடு நீயே.

பதப்பொருள்:

அறிந்திடுவார்கள் (மேலே உள்ளபடி அறிந்து கொண்ட சாதகர்கள்) அமரர்கள் (அமரர்களாகவே) ஆகத் (ஆகிவிடுகின்ற முறைகளை)
தெரிந்திடும் (அவர்களுக்குத் தெரிந்திடும்) வானோரும் (விண்ணவர்களுக்கும்) தேவர்கள் (தேவர்களுக்கும்) தேவன் (தலைவனானவனும்)
பரிந்திடும் (பெருங்கருணையில் உலகங்களுக்கு) வான் (மழை போல் பொழியும் வானத்தைப்) அவன் (போன்றவனும்) பாய் (பாய்ந்து வருகின்ற) புனல் (கங்கையை) சூடி (உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி)
முரிந்திடுவானை (அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை) முயன்றிடு (முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள்) நீயே (நீங்கள்).

விளக்கம்:

பாடல் #1327 இல் உள்ளபடி அனைத்தையும் அதனதன் முறைப்படியே அறிந்து கொண்ட சாதகர்கள் அமரர்களாகவே ஆகிவிடுகின்ற முறைகளை அறிந்து கொள்வார்கள். அதனால் அவர்களுக்குத் தெரிந்திடும் விண்ணவர்களுக்கும் தேவர்களுக்கும் தலைவனானவனும் பெருங்கருணையில் உலகங்களுக்கு மழை போல் பொழியும் வானத்தைப் போன்றவனும் பாய்ந்து வருகின்ற கங்கையை உலக நன்மைக்காகத் தன் தலையின் மேல் தாங்கி அதன் வேகத்தைத் தடுத்து அருளுகின்றவனும் ஆகிய இறைவனை முழுவதும் உணர்ந்து அடைவதற்கு முயற்சி செய்யுங்கள் சாதகர்களே.