பாடல் #1676

முன்னுரை:

இறைவன் உருவமோ குணமோ தன்மையோ இல்லாதவன். ஆகவே அவனுக்கு என்று எந்த வேடமும் கிடையாது. உண்மையான அடியவர்கள் இறைவனை உணரும் பொழுது எந்த வேடத்தில் இருந்தார்களோ அதுவே இறைவனின் வேடமாக ஆகின்றது. அந்த அடியவர்களின் வேடத்தையே இறைவனாக பாவித்து பல காலமாக வணங்கிக் கொண்டு வருகின்றோம். உதாரணம் கண்ணப்பர் போன்ற பல நாயன்மார்கள்.

பாடல் #1676: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

அருளா லரனுக் கடிமை யதாகிப்
பொருளாந் தனதுடல் பொற்பதி நாடி
யிருளான தின்றி யிருஞ்செய லற்றோ
தெருளா மடிமை சிவவேடத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அருளா லரனுக கடிமை யதாகிப
பொருளாந தனதுடல பொறபதி நாடி
யிருளான தினறி யிருஞசெய லறறொ
தெருளா மடிமை சிவவெடத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அருளால் அரனுக்கு அடிமை அது ஆகி
பொருள் ஆம் தனது உடல் பொன் பதி நாடி
இருள் ஆனது இன்றி இரும் செயல் அற்றோர்
தெருள் ஆம் அடிமை சிவ வேடத்தாரே.

பதப்பொருள்:

அருளால் (இறைவனது திருவருளால்) அரனுக்கு (இறைவனுக்கு) அடிமை (தானாகவே அடிமையாக) அது (தாம்) ஆகி (ஆகி)
பொருள் (பொருளாக) ஆம் (இருக்கின்ற) தனது (தமது) உடல் (உடலே) பொன் (பொன்) பதி (அம்பலமாக மாறி) நாடி (அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து)
இருள் (ஆணவம், கன்மம், மாயை என்று) ஆனது (இருக்கின்ற மும்மலங்கள்) இன்றி (இல்லாமலும்) இரும் (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) செயல் (செயல்களும்) அற்றோர் (இல்லாமலும் ஆகி)
தெருள் (தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு) ஆம் (அடைந்த) அடிமை (உண்மையான அடியவர்களே) சிவ (இறைவனது) வேடத்தாரே (வேடத்தை கொண்டவர்கள் ஆகும்).

விளக்கம்:

இறைவனது திருவருளால் இறைவனுக்கு தானாகவே அடிமையாக தாம் ஆகி பொருளாக இருக்கின்ற தமது உடலே பொன் அம்பலமாக மாறி அதில் நடனமாடும் இறைவனை தமக்குள் தேடி அடைந்து ஆணவம் கன்மம் மாயை என்று இருக்கின்ற மும்மலங்கள் இல்லாமலும் நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான செயல்களும் இல்லாமலும் ஆகி தாம் பெற்ற ஞானத்தில் தெளிவு அடைந்த உண்மையான அடியவர்களே இறைவனது வேடத்தை கொண்டவர்கள் ஆகும்.

பாடல் #1677

பாடல் #1677: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

உடலிற் றுலக்கிய வேடமுயிர்க் காகா
வுடல்கழன் றால்வேட முடனே கழலு
முடலுயி ருள்ளமை யொன்றோர்ந்து கொள்ளாதார்
கடலி லகப்பட்ட கட்டையொத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உடலிற றுலககிய வெடமுயிரக காகா
வுடலகழன றாலவெட முடனெ கழலு
முடலுயி ருளளமை யொனறொரநது கொளளாதார
கடலி லகபபடட கடடையொத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உடலில் துலக்கிய வேடம் உயிர்க்கு ஆகா
உடல் கழன்றால் வேடம் உடனே கழலும்
உடல் உயிர் உள் அமை ஒன்று ஓர்ந்து கொள்ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டை ஒத்தாரே.

பதப்பொருள்:

உடலில் (ஞானிகளின் உடலில் இருந்து) துலக்கிய (வெளிப்படுகின்ற) வேடம் (வேடமானது) உயிர்க்கு (அவர்களின் உயிர் நிலையை) ஆகா (குறிப்பது ஆகாது)
உடல் (அவர்கள் தங்களின் உடலை) கழன்றால் (நீக்கி விட்டால்) வேடம் (அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும்) உடனே (அதனுடனே சேர்ந்து) கழலும் (நீங்கி விடும்)
உடல் (உடலோடு இருக்கும்) உயிர் (உயிருக்கு) உள் (உள்ளே) அமை (அமைந்து இருக்கின்ற) ஒன்று (ஒரு பரம்பொருளை) ஓர்ந்து (ஆராய்ந்து) கொள்ளாதார் (உணர்ந்து கொள்ளாதவர்கள்)
கடலில் (கடல் அலைகளில்) அகப்பட்ட (அகப்பட்டுக் கொண்ட) கட்டை (கட்டையைப்) ஒத்தாரே (போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்).

விளக்கம்:

ஞானிகளின் உடலில் இருந்து வெளிப்படுகின்ற வேடமானது அவர்களின் உயிர் நிலையை குறிப்பது ஆகாது. அவர்கள் தங்களின் உடலை நீக்கி விட்டால் அவர்களிடமிருந்து வெளிப்பட்ட வேடமும் அதனுடனே சேர்ந்து நீங்கி விடும். உடலோடு இருக்கும் உயிருக்கு உள்ளே அமைந்து இருக்கின்ற ஒரு பரம்பொருளை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர்கள் கடல் அலைகளில் அகப்பட்டுக் கொண்ட கட்டையைப் போலவே பிறவி எனும் சுழற்சியில் சிக்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து துன்பத்தில் உழல்வார்கள்.

பாடல் #1678

பாடல் #1678: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணிதன் கைப்பிணக் கற்றுத்
தயவற் றவரோடுந் தாமே தாமாகிச்
செயலற் றிருந்தார் சிவவேடத் தாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மயலற றிருளறறு மாமன மறறுக
கயலுறற கணணிதன கைபபிணக கறறுத
தயவற றவரொடுந தாமெ தாமாகிச
செயலற றிருநதார சிவவெடத தாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மயல் அற்று இருள் அற்று மா மனம் அற்று
கயல் உற்ற கண்ணி தன் கை பிணக்கு அற்று
தயவு அற்ற அவரோடும் தாமே தாம் ஆகி
செயல் அற்று இருந்தார் சிவ வேடத்தாரே.

பதப்பொருள்:

மயல் (மாயையாகிய மயக்கம்) அற்று (இல்லாமல்) இருள் (ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள்) அற்று (இல்லாமல்) மா (வலிமையான எண்ணங்களுடைய) மனம் (மனம்) அற்று (இல்லாமல்)
கயல் (எப்போதும் விழிப்போடு) உற்ற (இருக்கின்ற) கண்ணி (கண்களை பெற்று இருந்தாலும்) தன் (அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ) கை (அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின்) பிணக்கு (தொடர்போ) அற்று (இல்லாமல்)
தயவு (எவ்வித குணங்களும்) அற்ற (இல்லாத) அவரோடும் (இறைவனோடு சேர்ந்து) தாமே (தாமும்) தாம் (இறைவனைப் போலவே) ஆகி (ஆகி)
செயல் (எந்தவிதமான செயல்களும்) அற்று (இல்லாமல்) இருந்தார் (இருப்பவர்களே) சிவ (உண்மையான சிவ) வேடத்தாரே (வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்).

விளக்கம்:

மாயையாகிய மயக்கம் இல்லாமல், ஆணவம் கன்மம் ஆகிய மலங்கள் இல்லாமல், வலிமையான எண்ணங்களுடைய மனம் இல்லாமல், எப்போதும் விழிப்போடு இருக்கின்ற கண்களை பெற்று இருந்தாலும் அந்த கண்களில் காணும் காட்சியின் தொடர்போ அந்த காட்சியினால் செயல்படும் ஆற்றலின் தொடர்போ இல்லாமல், எவ்வித குணங்களும் இல்லாத இறைவனோடு சேர்ந்து தாமும் இறைவனைப் போலவே ஆகி எந்தவிதமான செயல்களும் இல்லாமல் இருப்பவர்களே உண்மையான சிவ வேடத்தைக் கொண்ட ஞானிகள் ஆவார்கள்.

பாடல் #1679

பாடல் #1679: ஆறாம் தந்திரம் – 12. சிவ வேடம் (உண்மையான அடியவரின் வேடமே சிவ வேடம் ஆதல்)

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமி னந்தியை நம்பெருமான் றன்னைத்
தேடுமி னின்பபொருள் சென்றெய்த லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஓடுங குதிரைக குசைதிணணம பறறுமின
வெடஙகொண டெனசெயவீர வெணடா மனிதரெ
நாடுமி னநதியை நமபெருமான றனனைத
தெடுமி னினபபொருள செனறெயத லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஓடும் குதிரை குசை திண்ணம் பற்றுமின்
வேடம் கொண்டு என் செய்வீர் வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம் பெருமான் தன்னை
தேடுமின் இன்ப பொருள் சென்று எய்தல் ஆமே.

பதப்பொருள்:

ஓடும் (கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற) குதிரை (குதிரையைப் போல அலைகின்ற மனதை) குசை (கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம்) திண்ணம் (உறுதியாக) பற்றுமின் (பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள்)
வேடம் (ஞானியைப் போல வெறும் வேடம்) கொண்டு (மட்டும் போட்டுக் கொண்டு) என் (என்ன) செய்வீர் (செய்வீர்கள்?) வேண்டா (இந்த வீணான வேலை வேண்டாம்) மனிதரே (மனிதர்களே)
நாடுமின் (உங்களுக்குள் வீற்றிருக்கும்) நந்தியை (குருநாதனாகிய இறைவன்) நம் (நமக்கெல்லாம்) பெருமான் (தலைவனாக) தன்னை (இருக்கின்ற அவனை)
தேடுமின் (தேடி அடைந்தால்) இன்ப (பேரின்ப) பொருள் (பொருளாகிய இறைவனை) சென்று (சென்று) எய்தல் (பேரின்பத்தை அடைய) ஆமே (முடியும்).

விளக்கம்:

கடிவாளம் கட்டாமல் அங்கும் இங்கும் அலைந்து ஓடுகின்ற குதிரையைப் போல அலைகின்ற மனதை கடிவாளத்தை கட்டி குதிரையை அடக்குவது போல மனதை தியானத்தின் மூலம் உறுதியாக பற்றிக் கொண்டு மனதை அடக்குங்கள். ஞானியைப் போல வெறும் வேடம் மட்டும் போட்டுக் கொண்டு என்ன செய்வீர்கள்? இந்த வீணான வேலை வேண்டாம் மனிதர்களே. உங்களுக்குள் வீற்றிருக்கும் குருநாதனாகிய இறைவன் நமக்கெல்லாம் தலைவனாக இருக்கின்ற அவனை தேடி அடைந்தால் பேரின்ப பொருளாகிய இறைவனை சென்று பேரின்பத்தை அடைய முடியும்.