பாடல் #1238

பாடல் #1238: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடு மாங்கவ ளெய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

விளக்கம்:

பாடல் #1237 இல் உள்ளபடி உலகத்தை கடந்து சென்ற ஆன்மாக்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும் போது அப்படி வேண்டிக்கொண்ட ஆன்மாக்களின் விருப்பமான தெய்வத்தின் உருவமாகவே சாதகரும் மாறி அவர்கள் வேண்டிக் கொண்டதை அடைவதற்கான தூய்மையான வழியைக் கொடுத்து அருளும் இறைவியாகவே வீற்றிருந்து பலவிதமான செயல்களைச் செய்து அருளுகின்றார். அப்படி அருளுகின்ற போது அழகிய மானைப் போன்ற கண்களைக் கொண்ட இறைவியும் பேரழகனாகிய இறைவனும் ஒன்றாக அவருக்கு எதிரில் வந்து வேண்டிக்கொண்ட ஆன்மாக்களுக்கு அருள் புரியும் போது இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரும் அதற்கு சாட்சியாக வீற்றிருக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.