பாடல் #1530

பாடல் #1530: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆயத்துள் நின்ற அறுசமை யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலா
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்துட் பட்டுப் பதைக்கின்ற வாறே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆயததுள நினற அறுசமை யஙகளுங
காயததுள நினற கடவுளைக காணகிலா
மாயக குழியில விழுவர மனைமககள
பாசததுட படடுப பதைககினற வாறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆயத்து உள் நின்ற அறு சமையங்களும்
காயத்து உள் நின்ற கடவுளை காண்கிலா
மாய குழியில் விழுவர் மனை மக்கள்
பாசத்து உள் பட்டு பதைக்கின்ற ஆறே.

பதப்பொருள்:

ஆயத்து (மக்கள் கூட்டத்திற்கு) உள் (உள்ளே) நின்ற (வழிகாட்டிகளாக நிற்கின்ற) அறு (ஆறு விதமான) சமையங்களும் (சமயங்களும்)
காயத்து (உடலுக்கு) உள் (உள்ளே) நின்ற (நிற்கின்ற) கடவுளை (இறைவனை) காண்கிலா (காண்பது இல்லை)
மாய (அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய) குழியில் (குழியிலேயே) விழுவர் (விழுந்து கிடப்பார்கள்) மனை (அவர்களுடைய மனைவியின் மீதும்) மக்கள் (பிள்ளைகளின் மீதும்)
பாசத்து (இருக்கின்ற பாசத்தினால்) உள் (ஆட் கொள்ளப்) பட்டு (பட்டு) பதைக்கின்ற (எப்போதும் பரிதவிப்பில்) ஆறே (இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்).

விளக்கம்:

மக்கள் கூட்டத்திற்கு உள்ளே வழிகாட்டிகளாக நிற்கின்ற ஆறு விதமான சமயங்களும் உடலுக்கு உள்ளே நிற்கின்ற இறைவனை காண்பது இல்லை. அதனால் இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக வெளிப்புறமாக இந்த ஆறு விதமான சமயங்களைப் பின் பற்றி அவற்றின் வழியே நடக்கின்றவர்கள் உண்மையை அறியாத மாய குழியிலேயே விழுந்து கிடப்பார்கள். அவர்களுடைய மனைவியின் மீதும் பிள்ளைகளின் மீதும் இருக்கின்ற பாசத்தினால் ஆட் கொள்ளப் பட்டு எப்போதும் பரிதவிப்பில் இருக்கின்ற வழியிலேயே வாழ்கின்றார்கள்.

கருத்து:

சமையங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கு முறைப்படி கடைபிடித்து செல்லும் வழிகளாகும். இவற்றை தமக்கு உள்ளே இருக்கின்ற இறைவனை உணர்ந்து அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு அன்போடும் பக்தியோடும் செய்யாமல் வெளிப்புறமாக உலக ஆசைகளுக்காக செய்வதால் இறைவனை அடைய முடியாது. ஆகையால் புறத்தில் செய்கின்ற ஆறு வழிகளும் நிந்தனை செய்யப் படுகின்றது.

இறைவனை அடையும் முறையான ஆறு வித வழிகள்:

  1. தியானம் – மந்திரத்தை மனதிற்குள் தியானித்தல்
  2. செபம் – அக வழிபாடு மூலம் செபித்தல்
  3. பூஜை – புற வழிபாடு மூலம் செபித்தல்
  4. சக்கரம் – சக்கரங்கள் அமைத்து செபித்தல்
  5. ஞானம் – மந்திரத்தின் பொருளை தேடி ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்
  6. புத்தி – மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்

பாடல் #1531

பாடல் #1531: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உள்ளத்து ளேதானுகந் தெங்கு நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பை புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளதது ளெதானுகந தெஙகு நினறவன
வளளற றலைவன மலருறை மாதவன
பொளளற குரமபை புகுநது புறபபடுங
களளத தலைவன கருததறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளத்து உள்ளே தான் உகந்து எங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலர் உறை மாதவன்
பொள்ளல் குரம்பை புகுந்து புறப்படும்
கள்ள தலைவன் கருத்து அறியார்களே.

பதப்பொருள்:

உள்ளத்து (உயிர்களின் உள்ளத்திற்கு) உள்ளே (உள்ளே) தான் (தானாகவே வீற்றிருந்து) உகந்து (விரும்பி இருக்கின்றவனும்) எங்கும் (அண்ட சராசரங்கள் எங்கும்) நின்றவன் (நிறைந்து நிற்கின்றவனும்)
வள்ளல் (உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும்) தலைவன் (அனைத்திற்கும் தலைவனும்) மலர் (உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல்) உறை (வீற்றிருக்கின்ற) மாதவன் (மாபெரும் தவத்தை உடையவனும்)
பொள்ளல் (துவாரங்களை கொண்ட) குரம்பை (உடலுக்குள்) புகுந்து (கருவிலேயே புகுந்து இருப்பவனும்) புறப்படும் (அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும்)
கள்ள (இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற) தலைவன் (தலைவனும் ஆகிய இறைவனை) கருத்து (அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள்) அறியார்களே (அறியாமல் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

உயிர்களின் உள்ளத்திற்கு உள்ளே தானாகவே விரும்பி வீற்றிருக்கின்றவனும், அண்ட சராசரங்கள் எங்கும் நிறைந்து நிற்கின்றவனும், உயிர்களுக்குத் தேவையான அனைத்தையும் அருளுகின்ற வள்ளலும், அனைத்திற்கும் தலைவனும், உயிர்களின் நெஞ்சத் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்ற மாபெரும் தவத்தை உடையவனும், துவாரங்களை கொண்ட உடலுக்குள் கருவிலேயே புகுந்து இருப்பவனும், அந்த உடலின் ஆயுள் முடியும் போது வெளியேறி செல்பவனும், இவை அனைத்தையும் மறைந்து இருந்தே செய்கின்ற தலைவனும் ஆகிய இறைவனை அறிந்து கொள்ளும் முறையை ஆசைகளுக்காக புற வழிபாடு செய்கின்றவர்கள் அறியாமல் இருக்கின்றார்கள்.

பாடல் #1532

பாடல் #1532: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

உள்ளத்து முள்ளன் புறத்துள னென்பவர்க்
குள்ளத்து முள்ளன் புறத்துள னெம்மிறை
யுள்ளத்து மில்லைப் புறத்தில்லை யென்பவர்க்
குள்ளத்து மில்லைப் புறத்தில்லைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உளளதது முளளன புறததுள னெனபவரக
குளளதது முளளன புறததுள னெமமிறை
யுளளதது மிலலைப புறததிலலை யெனபவரக
குளளதது மிலலைப புறததிலலைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் என்பவர்க்கு
உள்ளத்தும் உள்ளன் புறத்து உள்ளன் எம் இறை
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை என்பவர்க்கு
உள்ளத்தும் இல்லை புறத்து இல்லை தானே.

பதப்பொருள்:

உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) என்பவர்க்கு (என்று நம்புபவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) உள்ளன் (கலந்து இருக்கின்றான்) புறத்து (வெளியேயும்) உள்ளன் (அனைத்திலும் கலந்து இருக்கின்றான்) எம் (எமது உரிமையான) இறை (இறைவன்)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளேயும்) இல்லை (இல்லை) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (இல்லை) என்பவர்க்கு (என்று நினைப்பவர்களுக்கு)
உள்ளத்தும் (உள்ளத்திற்கு உள்ளே) இல்லை (உணரும் படியும் இல்லாமல்) புறத்து (வெளியேயும் எங்கும்) இல்லை (அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல்) தானே (இருக்கின்றான் இறைவன்).

விளக்கம்:

உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் என்று நம்புபவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளேயும் கலந்து இருக்கின்றான் வெளியேயும் அனைத்திலும் கலந்து இருக்கின்றான் எமது உரிமையான இறைவன். உள்ளத்திற்கு உள்ளேயும் இல்லை வெளியேயும் எங்கும் இல்லை என்று நினைப்பவர்களுக்கு உள்ளத்திற்கு உள்ளே உணரும் படியும் இல்லாமல் வெளியேயும் எங்கும் அறிந்து கொள்ளும் படியும் இல்லாமல் இருக்கின்றான் இறைவன்.

பாடல் #1533

பாடல் #1533: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

ஆறு சமையமுங் கண்டவர் கண்டில
ராறு சமையப் பொருளும் பயனில்லைத்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஆறு சமையமுங கணடவர கணடில
ராறு சமையப பொருளும பயனிலலைத
தெறுமின தெறித தெளிமின தெளிநதபின
மாறுத லினறி மனைபுக லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஆறு சமையமும் கண்டு அவர் கண்டு இலர்
ஆறு சமைய பொருளும் பயன் இல்லை
தேறுமின் தேறி தெளிமின் தெளிந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே.

பதப்பொருள்:

ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளையும்) கண்டு (கண்டு) அவர் (அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள்) கண்டு (அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து) இலர் (கொள்ள வில்லை)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமைய (வழி முறைகளும்) பொருளும் (சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத) பயன் (காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும்) இல்லை (இல்லை)
தேறுமின் (ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்) தேறி (அறிந்த பிறகு) தெளிமின் (அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்) தெளிந்த (அவ்வாறு தெளிவாக உணர்ந்த) பின் (பிறகு)
மாறுதல் (எந்த விதமான மாறுபாடும்) இன்றி (இல்லாமல் உறுதியாக) மனை (வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை) புகல் (அடைவது) ஆமே (கைகூடும்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளையும் கண்டு அதன் பொருளை மேம்போக்காக அறிந்து கொண்டவர்கள் அந்த வழிமுறைகளின் உட் பொருளாக இருக்கின்ற தத்துவங்களை அறிந்து கொள்ள வில்லை. இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளும் சொல்லுகின்ற உட் பொருளான தத்துவங்களை அறிந்து கொள்ளாத காரணத்தால் அவர்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே ஆறு விதமான வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். அறிந்த பிறகு அதனை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள். அவ்வாறு தெளிவாக உணர்ந்த பிறகு எந்த விதமான மாறுபாடும் இல்லாமல் உறுதியாக வீடு பேறு என்று அறியப்படுகின்ற முக்தியை அடைவது கைகூடும்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1534

பாடல் #1534: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவமல்ல தில்லை யிறையோ சிவமாந்
தவமல்ல தில்லைத் தலைப்படு வோர்க்கிங்
கவமல்ல தில்லை யறுசமை யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய் யீரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமலல திலலை யிறையொ சிவமாந
தவமலல திலலைத தலைபபடு வொரககிங
கவமலல திலலை யறுசமை யஙகள
தவமலல நநதிதாள சாரநதுய யீரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் அல்லது இல்லை இறையோ சிவம் ஆம்
தவம் அல்லது இல்லை தலை படுவோர்க்கு இங்கு
அவம் அல்லது இல்லை அறு சமையங்கள்
தவ மல்ல நந்தி தாள் சார்ந்து உய்யீரே.

பதப்பொருள்:

சிவம் (சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு பரம்பொருள் எதுவும் இல்லை) இறையோ (இறை என்று அறியப்படுவது) சிவம் (சிவப் பரம்பொருளே) ஆம் (ஆகும்)
தவம் (தவம் என்கின்ற உயர்ந்த நிலையை) அல்லது (தவிர) இல்லை (வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை) தலை (இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக) படுவோர்க்கு (செயல் படுபவர்களுக்கு) இங்கு (இந்த உலகத்தில்)
அவம் (பயனில்லாததைத்) அல்லது (தவிர) இல்லை (வேறு எதுவும் இல்லை) அறு (ஆறு விதமான) சமையங்கள் (வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
தவ (தவத்திற்கு) மல்ல (உறுதியாக நிற்கின்ற) நந்தி (குருநாதனாகிய இறைவனின்) தாள் (திருவடியை) சார்ந்து (சரணடைந்து) உய்யீரே (மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே).

விளக்கம்:

சிவம் என்று அறியப்படுகின்ற பரம்பொருளைத் தவிர வேறு பரம்பொருள் எதுவும் இல்லை. இறை என்று அறியப்படுவது சிவப் பரம்பொருளே ஆகும். இந்த உலகத்தில் இறைவனை அடைய வேண்டும் என்று உறுதியாக செயல் படுபவர்களுக்கு தவம் என்கின்ற உயர்ந்த நிலையை தவிர வேறு உயர்ந்த நிலை எதுவும் இல்லை. ஆனால் ஆறு விதமான வழி முறைகளையும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு இந்த உலகத்தில் பயனில்லாததைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதனால் தவத்திற்கு உறுதியாக நிற்கின்ற குருநாதனாகிய இறைவனின் திருவடியை சரணடைந்து மேன்மை நிலையை அடையாமல் இருக்கின்றீர்களே.

பாடல் #1535

பாடல் #1535: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

அண்ணலை நாடிய வாறு சமையமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முன்னின் றழியு முயன்றில ராதலால்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அணணலை நாடிய வாறு சமையமும
விணணவ ராக மிகவும விருமபியெ
முனனின றழியு முயனறில ராதலால
மணணின றொழியும வகையறி யாரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அண்ணலை நாடிய ஆறு சமையமும்
விண்ணவர் ஆக மிகவும் விரும்பியே
முன் நின்று அழியும் முயன்று இலர் ஆதலால்
மண் நின்று ஒழியும் வகை அறியார்களே.

பதப்பொருள்:

அண்ணலை (அண்ணலாகிய இறைவனை) நாடிய (தேடி அடைய உதவும்) ஆறு (ஆறு விதமான) சமையமும் (வழி முறைகளும்)
விண்ணவர் (முக்தி அடையவும் தேவர்களாக) ஆக (ஆக வேண்டும்) மிகவும் (என்று மிகவம்) விரும்பியே (விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன)
முன் (முன்னால் / ஆசைப் படுகின்ற) நின்று (இருக்கின்ற / பொருள்கள்) அழியும் (அனைத்தும் அழிந்து போவதை) முயன்று (அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை) இலர் (இல்லாதவர்களாக இருக்கின்றார்கள்) ஆதலால் (ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு)
மண் (இந்த உலகத்தில் / மற்றவர்கள் ஆசைப் படுகின்ற) நின்று (உள்ள அனைத்தும் / பொருள்கள் அனைத்தும்) ஒழியும் (அழிந்து போவதையும் அறிந்து கொண்டு) வகை (அழியாமல் இருக்கின்ற முறையை) அறியார்களே (அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்).

விளக்கம்:

அண்ணலாகிய இறைவனை தேடி அடைய உதவும் ஆறு விதமான வழி முறைகளும் முக்தி அடையவும் தேவர்களாக ஆக வேண்டும் என்று மிகவம் விரும்புகின்ற உயிர்களுக்கு வழி காட்டவே உருவாக்கப் பட்டுள்ளன. ஆனாலும் அந்த ஆறு வழி முறைகளின் உட் பொருளை ஆராய்ந்து அறிந்து கொண்டு உணர்ந்து தெளிவடைவதற்கான முயற்சியை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். ஆதலால் வெறும் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் மற்றவர்கள் ஆசைப் படுகின்ற அனைத்தும் அழிந்து போவதையும் அறிந்து கொண்டு அழியாமல் இருக்கின்ற முறையை அறிந்து கொள்ளாமலேயே இவர்கள் இருக்கின்றார்கள்.

குறிப்பு:

ஆறு சமயங்கள் என்பது இறைவனை அடைவதற்கான ஆறு வழி முறைகளாகும். இதனை பாடல் #1530 இல் பார்க்கவும்.

பாடல் #1536

பாடல் #1536: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

சிவகதி யேகெதி மற்றுள்ள தெல்லாம்
பவகதிப் பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னோடு நேரொன்று தோன்றி
லவகதி மூவரு மவ்வகை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவகதி யெகெதி மறறுளள தெலலாம
பவகதிப பாசப பிறவியொன றுணடு
தவகதி தனனொடு நெரொனறு தொனறி
லவகதி மூவரு மவவகை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ கதியே கெதி மற்று உள்ளது எல்லாம்
பவ கதி பாச பிறவி ஒன்று உண்டு
தவ கதி தன்னோடு நேர் ஒன்று தோன்றில்
அவ கதி மூவரும் அவ் வகை ஆமே.

பதப்பொருள்:

சிவ (சிவப் பரம்பொருளை) கதியே (சரணடைவதே) கெதி (முக்திக்கான வழியாகும்) மற்று (சரணாகதியைத் தவிர வேறு விதமாக) உள்ளது (இருக்கின்ற வழி முறைகள்) எல்லாம் (அனைத்தும்)
பவ (உலக வாழ்க்கைக்கான) கதி (வழியாக) பாச (பாசத் தளைகளுடன்) பிறவி (மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே) ஒன்று (இருக்கின்ற) உண்டு (வழி முறைகளாகும்)
தவ (சரணாகதியாக தவம் செய்கின்ற) கதி (வழி முறையை) தன்னோடு (சாதகர்கள்) நேர் (முக்திக்கு நேரான) ஒன்று (ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு) தோன்றில் (செய்யாமல் போனால்)
அவ (துன்பமான பிறவிகளுக்கே) கதி (வழியாக இருக்கின்ற) மூவரும் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும்) அவ் (துன்பமான பிறவி எடுப்பதற்கான) வகை (வழி முறைகளாகவே) ஆமே (இருக்கும்).

விளக்கம்:

சிவப் பரம்பொருளை சரணடைவதே முக்திக்கான வழியாகும். சரணாகதியைத் தவிர வேறு விதமாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் உலக வாழ்க்கைக்கான வழியாக பாசத் தளைகளுடன் மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பதற்காகவே இருக்கின்ற வழி முறைகளாகும். சரணாகதியாக தவம் செய்கின்ற வழி முறையை சாதகர்கள் முக்திக்கு நேரான ஒரே வழிமுறையாக எடுத்துக் கொண்டு செய்யாமல் போனால் துன்பமான பிறவிகளுக்கே வழியாக இருக்கின்ற ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விதமான மலங்களும் துன்பமான பிறவி எடுப்பதற்கான வழி முறைகளாகவே இருக்கும்.

பாடல் #1537

பாடல் #1537: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

நூறு சமைய முளவால் நுகருங்கா
லாறு சமைய மவ்வாறுட் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறிநில்லா
நீறு பரநெறி யில்லாநெறி நின்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நூறு சமைய முளவால நுகருஙகா
லாறு சமைய மவவாறுட படுவன
கூறு சமையஙகள கொணட நெறிநிலலா
நீறு பரநெறி யிலலாநெறி நினறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நூறு சமையம் உள ஆல் நுகரும் கால்
ஆறு சமையம் அவ் ஆறு உள் படுவன
கூறு சமையங்கள் கொண்ட நெறி நில்லா
நீறு பர நெறி இல்லா நெறி நின்றே.

பதப்பொருள்:

நூறு (இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான) சமையம் (வழி முறைகள்) உள (இருக்கின்றன) ஆல் (ஆதலால்) நுகரும் (அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும்) கால் (போது)
ஆறு (இறைவனை அடைவதற்கான ஆறு விதமான) சமையம் (வழி முறைகளில்) அவ் (அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும்) ஆறு (இந்த ஆறு வழி முறைகளுக்கு) உள் (உள்ளேயே) படுவன (அடங்கி விடும்)
கூறு (இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற) சமையங்கள் (வழி முறைகள் அனைத்தும்) கொண்ட (தாம் எடுத்துக் கொண்ட) நெறி (வழி முறையிலேயே) நில்லா (நின்று விடாமல்)
நீறு (ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய) பர (பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான) நெறி (வழி முறை ஒன்று இருக்கின்றது) இல்லா (ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல்) நெறி (வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே) நின்றே (நிற்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்காக என்று சொல்லப் படுகின்ற நூற்றுக் கணக்கான வழி முறைகள் இருக்கின்றன ஆதலால் அவற்றில் அவரவர்க்கு ஏற்றதை எடுத்துக் கொண்டு கடைபிடிக்கும் போது இறைவனை அடைவதற்கான ஆறு விதமான வழி முறைகளுக்கு உள்ளேயே அந்த நூற்றுக் கணக்கான வழி முறைகளும் அடங்கி விடும். இப்படி ஆறு பிரிவுகளாக இருக்கின்ற வழி முறைகள் அனைத்தும் தாம் எடுத்துக் கொண்ட வழி முறையிலேயே நின்று விடாமல் ஒவ்வொரு வழி முறையிலும் பக்குவம் பெற்ற மிகவும் மேன்மையான நிலையாகிய பரம் பொருளை சென்று அடைகின்ற முக்திக்கான வழி முறை ஒன்று இருக்கின்றது. ஆனால் அதில் நின்று இறைவனை அடையாமல் வெறும் உலக ஆசைகளுக்காக செய்யப் படுகின்ற வழி முறைகளிலேயே நிற்கின்றார்கள்.

பாடல் #1538

பாடல் #1538: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவனெங்குந் தோய்வுற்று நிற்கின்றான்
குத்தந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததுங கழுதைகள பொலுங கலதிகள
சுதத சிவனெஙகுந தொயவுறறு நிறகினறான
குததந தெரியார குணஙகொணடு கொதாடடார
பிததெறி நாளும பிறநதிறப பாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தும் கழுதைகள் போலும் கலதிகள்
சுத்த சிவன் எங்கும் தோய்வு உற்று நிற்கின்றான்
குத்தம் தெரியார் குணம் கொண்டு கோது ஆட்டார்
பித்து ஏறி நாளும் பிறந்து இறப்பாரே.

பதப்பொருள்:

கத்தும் (காரணமே தெரியாமல் கத்துகின்ற) கழுதைகள் (கழுதைகள்) போலும் (போலவே) கலதிகள் (தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள்)
சுத்த (அதனால் தூய்மையான) சிவன் (சிவப் பரம்பொருள்) எங்கும் (எங்கும்) தோய்வு (அவர்களால் அறிய முடியாத படி மாயையால்) உற்று (மறைத்துக் கொண்டு) நிற்கின்றான் (நிற்கின்றான்)
குத்தம் (தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை) தெரியார் (அறிந்து கொள்ளாமல்) குணம் (நல்ல குணங்களை) கொண்டு (மேற் கொண்டு / கடை பிடித்து) கோது (தீய குணங்களை) ஆட்டார் (நீக்கிக் கொள்ளாதவர்கள்)
பித்து (தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து) ஏறி (அதிகமாகி) நாளும் (தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து) பிறந்து (மீண்டும் மீண்டும் பிறந்து) இறப்பாரே (இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்).

விளக்கம்:

காரணமே தெரியாமல் கத்துகின்ற கழுதைகள் போலவே தீய குணம் உள்ளவர்கள் இருக்கின்றார்கள். அதனால் எங்கும் இருக்கின்ற தூய்மையான சிவப் பரம்பொருள் அவர்களால் அறிய முடியாத படி தம்மை மாயையால் மறைத்துக் கொண்டு நிற்கின்றான். தம்மிடம் இருக்கின்ற தீய குணங்களை அறிந்து கொள்ளாமல் நல்ல குணங்களை கடை பிடித்து தீய குணங்களை நீக்கிக் கொள்ளாதவர்கள் தீய குணத்திலேயே மூழ்கி அதனால் பித்து அதிகமாகி தினந்தோறும் வாழ் நாளை வீணடித்து மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கின்ற பிறவி சுழலிலேயே சிக்கிக் கொண்டு இருப்பார்கள்.

பாடல் #1539

பாடல் #1539: ஐந்தாம் தந்திரம் – 21. புறச் சமய நிந்தனை (இறைவனை அடைய வேண்டும் என்று வழிபாடு செய்யாமல் ஆசைகளுக்காக புற வழிபாடு செய்வதை நிந்திப்பது)

மயங்கு கின்றாரு மதைத் தெளிந்தாரு
முயங்கி யிருவினை மூழை முகப்பா
யியங்கிப் பெறுவாரே லீறதுக் காட்டிப்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

மயஙகு கினறாரு மதைத தெளிநதாரு
முயஙகி யிருவினை மூழை முகபபா
யியஙகிப பெறுவாரெ லீறதுக காடடிப
பயஙகெட டவரககொர பரநெறி யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

மயங்கு கின்றாரும் அதை தெளிந்தாரும்
முயங்கி இரு வினை மூழை முகப்பு ஆய்
இயங்கி பெறுவாரேல் ஈறு அது காட்டி
பயம் கெட்டு அவர்க்கு ஓர் பர நெறி ஆமே.

பதப்பொருள்:

மயங்கு (மாயையிலேயே மயங்கி) கின்றாரும் (இருக்கின்றவர்களும்) அதை (இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி) தெளிந்தாரும் (தெளிவு பெற்றவர்களும்)
முயங்கி (தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து) இரு (நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான) வினை (வினைகளையும் அறுப்பதற்கு) மூழை (சுழு முனை நாடியின் துளைக்கு) முகப்பு (உச்சியில்) ஆய் (காரணமாக இருக்கின்ற சகஸ்ரதளத்தில்)
இயங்கி (தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து) பெறுவாரேல் (அமிழ்தத்தை பெற முடிந்தால்) ஈறு (முக்தியை) அது (அதுவே) காட்டி (காண்பித்து)
பயம் (இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும்) கெட்டு (அழிந்து போய்) அவர்க்கு (அவர்களுக்கு) ஓர் (ஒரே) பர (பரம் பொருளுடன் சேருவதாகிய) நெறி (முக்திக்கு வழியாக) ஆமே (அதுவே இருக்கும்).

விளக்கம்:

மாயையிலேயே மயங்கி இருக்கின்றவர்களும், இறைவனை அடையும் வழி முறைகளை கடைபிடித்து அதனால் மாயை நீங்கி தெளிவு பெற்றவர்களும், தம்மால் இயன்ற வரை முயற்சி செய்து நன்மை தீமை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் அறுப்பதற்கு காரணமாக சுழு முனை நாடியின் துளைக்கு உச்சியில் இருக்கின்ற சகஸ்ரதளத்தில் தமது மூச்சுக்காற்றை இயக்குவதன் மூலம் குண்டலினி சக்தியை கொண்டு சென்று சேர்த்து அமிழ்தத்தை பெற முடிந்தால் முக்தியை அதுவே காண்பித்து, இறப்பு பிறப்பு ஆகிய இரண்டு விதமான பயமும் அழிந்து போய் அவர்களுக்கு ஒரே பரம் பொருளுடன் சேருவதாகிய முக்திக்கு வழியாக அதுவே இருக்கும்.