பாடல் #724

பாடல் #724: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

விளக்கம்:

உயிர்களின் உடல் அழிந்துவிட்டால் அதனுள்ளிருக்கும் உயிர் நீங்கிவிடும். உறுதியான உடல் வலிமை சீர்குலைந்தால் ஞானத்தை அடைய உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்த முடியாது. உடலை உறுதியாக வைத்து வளர்க்கும் வழியை இறையருளால் அறிந்து கொண்டு அதன் மூலம் உடலை வளர்த்து அதனுள்ளிருக்கும் உயிரையும் வளர்த்தேன்.

கருத்து: இறைவனை அடைவதற்கு கருவியாக பயன்படும் உடலையும் உயிரையும் உறுதியாக நீண்ட காலம் அழியாமல் வளர்த்து இறைவனை அடையலாம்.

பாடல் #725

பாடல் #725: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

விளக்கம்:

உடம்பை முன்பு குறையுடையது என்று எண்ணியிருந்தேன். உடம்புக்குள்ளே உரிமையாளர் இல்லாமல் தானே வந்தடையும் பொருள் ஒன்று இருப்பதை கண்டேன். அந்த பொருள் பரம்பொருளாகிய இறைவன் என்பதையும் அவன் இந்த உடம்புக்குள்ளே கோவில் கொண்டுள்ளான் என்பதை தெரிந்து கொண்டு இந்த உடம்பை யாம் பேணி பாதுகாத்து வருகின்றோம்.

கருத்து: உடம்புக்குள் பரம்மொருளாகிய இறைவன் இருப்பதினால் பிராணாயமம் யோகப்பயிற்சிகள் செய்து உடம்பை பாதுகாத்து வரவேண்டும்.

பாடல் #726

பாடல் #726: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

விளக்கம்:

சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி மூலாதாரத்திலுள்ள அக்கினியால் மூச்சுக்காற்றை சுத்தம் செய்து சுழுமுனை நாடியின் கீழ்புறத்திலிருந்து மேலாகச் செலுத்தினால் சுழுமுனையை நாடி சுத்தம் அடையும். பின்பு அந்த காற்றை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு சேர்த்து அந்த மலரை விரியச் செய்த பிறகு அந்த வாயுவை உடம்பிலுள்ள அனைத்து நாடிகளுக்குள்ளும் செலுத்தும் அகயோகப் பயிற்சியை அறிந்து கொண்டு அதைச் செய்பவர்களின் உடல் நெருப்பில் கருகி வெந்துபோகாமல் என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும்.

கருத்து: சுவாசிக்கும் மூச்சுக்காற்றை மூலாதாரத்திற்கு அனுப்பி சுழுமுனை நாடியை சுத்தப்படுத்தி சகஸ்ரதளத்தில் சேர்த்து பின்பு உடலில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் அனுப்பும் பயிற்சியை செய்பவர்களின் உடல் நெருப்பினால் சுட்டாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #727

பாடல் #727: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

விளக்கம்:

பாடல் #726 ல் உள்ளபடி மூச்சுசுழற்சிப் பயிற்சியை சூரியன் மறையும் சாயந்திர நேரத்தில் செய்தால் கபம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் உச்சியிலிருக்கும் மத்தியான நேரத்தில் செய்தால் வாதம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். இந்தப் பயிற்சியை சூரியன் தோன்றும் காலை நேரத்தில் செய்தால் பித்தம் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் நீங்கும். உடலில் விஷமாக இருக்கும் மூன்றுவிதமான வியாதிகளையும் நீக்கும் வழியாகவே இந்த பயிற்சியை அருளினோம். இந்தப் பயிற்சியை நாள் முழுவதும் செய்துகொண்டே இருந்தால் முடிகள் நரைக்காமல் உடலும் முதுமையடையாமல் இளமையாகவே எப்போதும் நிலைத்து நிற்கும்.

கருத்து: கபம் பித்தம் வாதம் ஆகிய மூன்றும் உடலுக்கு வரும் அனைத்து வியாதிகளுக்கும் காரணம். சரியான நேரத்தில் பாடல் #726 ல் உள்ளபடி அகயோகம் செய்வதன் மூலம் கபம் பித்தம் வாதம் மூன்றையும் நீக்கலாம். அதே யோகத்தை நாள் முழுவதும் செய்தால் உடலில் நோய் இல்லாமல் எப்போதும் இளமையாகவே இருக்கும்.

பாடல் #728

பாடல் #728: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

விளக்கம்:

மூன்று வளைவுகளை உடைய இடகலை பிங்கலை எனும் நாடிகளாக இரண்டு பாம்புகள் எட்டு அங்குல நீளத்திற்கு இருக்கின்றன. இயல்பான சுவாசமானது நாசியிலிருந்து இந்த இரண்டு நாடிகளின் வழியே கீழ் நோக்கி எட்டு அங்குல அளவு செல்லும். இந்த இரண்டு நாடிகளின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்லும் பன்னிரண்டு அங்குல அளவிற்கு சுழுமுனை நாடி இருக்கிறது. முதுகெலும்பு ஆரம்பிக்கும் கழுத்து அது முடியும் இடுப்பு ஆகிய இரண்டு மூட்டுக்களையும் நேராக வைத்து இரண்டு கால்களையும் மடக்கி உடம்பை நேராக வைத்து அசையாமல் அமர்ந்து மூச்சுக்காற்றாகிய இயந்திரத்தை இடகலை பிங்கலை வழியாக எட்டு அங்குலம் கீழ் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் தொடங்கும் சுழுமுனை நாடி வழியே திசை மாற்றி பன்னிரண்டு அங்குலம் மேல் நோக்கி பயணிக்க வைத்து அதன் முடிவில் இருக்கும் சகஸ்ரதள ஆயிரம் தாமரை இதழ்களோடு கலக்க வைக்கும் சுழற்சியான அகயோகத்தை எப்போதும் செய்து கொண்டு இருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

கருத்து: கழுத்தையும் இடுப்பையும் வளைக்காமல் நேராக வைத்துக் கொண்டு அமர்ந்திருந்து மூச்சுக்காற்றை சுழுமுனை நாடி வழியே மேலேற்றி சகஸ்ரதளத்தோடு கலந்து மறுபடியும் உடல் முழுவதும் பரவும் சுழற்சியை செய்து கொண்டிருந்தால் உடல் எவ்வளவு காலம் ஆனாலும் அழியாமல் இருக்கும்.

பாடல் #729

பாடல் #729: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.

விளக்கம்:

பிங்கலை இடகலை நாடிகளின் வழியே மூச்சுக்காற்றை அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வலதும் இடதுமாக உள்ளிழுத்து நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) அடக்கி வைத்து ஆறு மாத்திரை அளவிற்கு (3 வினாடிகள்) சுழுமுனை நாடி வழியே மேல் நோக்கி எடுத்துச் சென்று சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரோடு அறுபது மாத்திரை அளவிற்கு (30 வினாடிகள்) வைத்திருந்து பிறகு நூறு மாத்திரை அளவிற்கு (50 வினாடிகள்) உடலிலுள்ள அனைத்து நாடிகளுக்கும் கொண்டு செல்லும் சுழற்சியைத் தொடர்ச்சியாக செய்தால் ஆயுளை எப்போதும் கூட்டிக்கொண்டே இருக்கலாம்.

கருத்து: அகயோகப் பயிற்சியை முறைப்படி தொடர்ச்சியாக செய்ய ஆயுட்காலத்தை நீட்டிக்கலாம்.

பாடல் #730

பாடல் #730: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

விளக்கம்:

இறைவன் குடியிருக்கும் உடலாகிய கோயிலில் இடதும் வலதுமாக இருக்கும் இடகலை பிங்கலை நாடிகளின் வழியே உள்ளிழுத்த மூச்சுக்காற்றை அடக்கியாண்டு சுழுமுனை நாடி வழியே மேலேற்றிச் செல்லும் பயிற்சியை சாதித்த சாதகனுக்கு மூச்சுக்காற்றின் சுழுமுனை பயணம் புல்லாங்குழலில் புகுந்த காற்றின் இசை போல கேட்கவும் சுழுமுனையின் உச்சியிலிருந்து வெளிப்படும் அமிர்தத்தின் தித்திப்பில் இறைவனின் பேரின்பக் பெருங்கூத்தும் சகஸ்ரதள ஜோதியில் சிவமாகிய ஒளியும் வெளிப்படும் என்பதை குருவிற்கெல்லாம் மஹாகுருவான சதாசிவமூர்த்தியின் மேல் ஆணை.

கருத்து: அகயோகப் பயிற்சியை சாதித்த சாதகர்களுக்கு இசையோடு நடனமும் ஆடும் இறைவனின் பேரின்பப் பெருங்கூத்துத் தரிசனம் கிடைத்து அவர்களுக்குள்ளிருந்தே ஒளியுருவமாக இறைவனும் வெளிப்படுவார்.

பாடல் #731

பாடல் #731: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்
மறிப்பது மந்திர மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

விளக்கம்:

ஒரு மாசுமில்லாத தூய்மையான ஒளியுருவான சிவத்தின் அம்சமாக விளங்கும் அ எனும் எழுத்தையும் மாமாயையின் ஒலியுருவான சக்தியின் அம்சமாக விளங்கும் ச எனும் எழுத்தையும் மனதுக்குள் உச்சரிக்கும்பொழுது தோன்றும் அசபை மந்திரத்தை சத்தமாகச் சொல்லாமல் மனதுக்குள்ளேயே ஓதி மனனம் செய்வது அகயோகத்தைக் கடைபிடிக்கும் யோகியர்களுக்கான தர்ம வழியாகும்.

கருத்து: அகயோகம் செய்யும் யோகியர்கள் அம்ச எனும் அசபை மந்திரத்தை மனதிற்குள்ளேயே ஓதுவது அவர்களுக்கான தர்மவழியாகும். இதை முறைப்படி குருவிடம் பெற்று பயன்படுத்துதல் வேண்டும்.

பாடல் #732

பாடல் #732: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்
சிந்தித் தெழுப்பவே சிவனவ னாமே.

விளக்கம்:

நாசியின் மூலம் தொப்புள் இருக்கும் வயிறு வரை உள்ளிழுத்த மூச்சுக்காற்றை பாடல் #731 இல் கூறிய மந்திரத்தை இறைவனை நினைத்து தியானித்துக் கொண்டே மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்துவிட்டு மூலாதாரத்திலுள்ள மூலாக்கினியை இறைவனை சிந்தித்துக் கொண்டே சுழுமுனை நாடியின் வழியாக மேலே எடுத்துச் சென்று இரண்டு புருவங்களுக்கு மத்தியில் நிறுத்தி வைத்த காற்றோடு சேர்த்து சகஸ்ரதளத்திலுள்ள ஆயிரம் இதழ்கொண்ட தாமரை மலரோடு கலக்கும் சாதகன் சிவனாவான்.

கருத்து: மூச்சுக்காற்றையும் மூலாக்கினியையும் சகஸ்ரதளத்தில் இருக்கும் இறைவனோடு கலந்து அகயோகம் செய்யும் சாதகன் சிவனாவான்.

பாடல் #733

பாடல் #733: மூன்றாம் தந்திரம் – 13. சரீர சித்தி உபாயம் (உடலை பாதுகாத்து இறைவனை அடையும் வழிமுறை)

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.

விளக்கம்:

எப்போதும் மாறாத மலத்தைக் கொண்டிருக்கும் மலத்துவாரத்திற்கு இரண்டு விரற்கடை மேலேயும் சொல்லாமல் உணரும் பாலுணர்ச்சியின் குறிக்கு இரண்டு விரற்கடை கீழேயும் உள்ள இடமே மூலாதாரம் இருக்கும் இடமாகும். அந்த இடத்தின் மேல் எண்ணத்தை வைத்து பாடல் #731 இல் கொடுத்துள்ள மந்திரத்தை மனதிற்குள் தியானித்தால் உடலிலுள்ள ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே அங்கேயும் அக்கினியாக இருக்கிறது என்பதை கண்டு உணரலாம்.

கருத்து: உடலிலுள்ள அனைத்து சக்திமயங்களிலும் இறை சக்தியே இருக்கின்றது. மூலாதாரத்தை எண்ணி மந்திரத்தால் மனதிற்குள் தியானிக்க ஆறு ஆதாரங்களிலும் உள்ள இறை சக்தியே உணரலாம்.