பாடல் #1668

பாடல் #1668: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானமில் லார்வேடம் பூண்டு நரகத்தர்
ஞானமுள் ளார்வேட மின்றெனில் நன்முத்தர்
ஞானமு ளவாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானமில லாரவெடம பூணடு நரகததர
ஞானமுள ளாரவெட மினறெனில நனமுததர
ஞானமு ளவாக வெணடுவொர நககனபால
ஞானமுள வெட நணணிநிற பாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானம் இல்லார் வேடம் பூண்டு நரகத்தர்
ஞானம் உள்ளார் வேடமின்று எனில் நல் முத்தர்
ஞானம் உள ஆக வேண்டுவோர் நக்கன் பால்
ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.

பதப்பொருள்:

ஞானம் (உண்மை ஞானம்) இல்லார் (இல்லாதவர்கள்) வேடம் (பொய்யாக வேடம்) பூண்டு (அணிந்தால்) நரகத்தர் (நரகத்திற்கே செல்வார்கள்)
ஞானம் (உண்மை ஞானத்தை) உள்ளார் (உடையவர்கள்) வேடமின்று (வேடம் அணிந்து இல்லாமல்) எனில் (இருந்தாலும்) நல் (நன்மையான) முத்தர் (முக்தியை பெறுவார்கள்)
ஞானம் (உண்மை ஞானம்) உள (தமக்குள்) ஆக (உருவாக) வேண்டுவோர் (வேண்டும் என்று விரும்புபவர்கள்) நக்கன் (மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின்) பால் (அருகாமையை விரும்பி)
ஞானம் (உண்மை ஞானத்தை பெறுவதற்கு) உள (உள்ள) வேடம் (வேடத்தை) நண்ணி (தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டி) நிற்பாரே (நிற்பார்கள்).

விளக்கம்:

உண்மை ஞானம் இல்லாதவர்கள் பொய்யாக வேடம் அணிந்தால் நரகத்திற்கே செல்வார்கள். உண்மை ஞானத்தை உடையவர்கள் வேடம் அணிந்து இல்லாமல் இருந்தாலும் நன்மையான முக்தியை பெறுவார்கள். உண்மை ஞானம் தமக்குள் உருவாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மகா நிர்வாண நிலையில் இருக்கின்ற இறைவனின் அருகாமையை விரும்பி உண்மை ஞானத்தை பெறுவதற்கு உள்ள வேடத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டி நிற்பார்கள்.

பாடல் #1669

பாடல் #1669: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணாரருள் நண்ணித்
துன்ஞானத் தோர்சமையத் துரியத் துளோர்
பின்ஞானத் துளோரென்று பேசகி லாரே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

புனஞானத தொரவெடம பூணடும பயனிலலை
நனஞானத தொரவெடம பூணாரருள நணணித
துனஞானத தொரசமையத துரியத துளொர
பினஞானத துளொரெனறு பெசகி லாரெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை
நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணி
துன் ஞானத்தோர் சமைய துரியத்து உளோர்
பின் ஞானத்து உளோர் என்று பேச கிலாரே.

பதப்பொருள்:

புன் (இழிவான) ஞானத்தோர் (ஞானத்தை கொண்டவர்கள்) வேடம் (உண்மை ஞானம் கொண்டவர்கள் போல பொய்யாக வேடம்) பூண்டும் (அணிந்தாலும்) பயன் (அதனால் அவர்களுக்கு ஒரு பயனும்) இல்லை (இல்லை)
நல் (நன்மையான) ஞானத்தோர் (ஞானத்தை பெற்றவர்கள்) வேடம் (வேடம்) பூணார் (அணிந்து கொள்வதை விரும்பாமல்) அருள் (இறைவனின் திருவருள்) நண்ணி (கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள்)
துன் (தீமையான) ஞானத்தோர் (ஞானத்தை கொண்டவர்கள்) சமைய (தத்தமது சமயங்களின்) துரியத்து (கொள்கைகளின் மேல் நீங்காத பற்று) உளோர் (உள்ளவர்கள் ஆதலால் தங்களின் சமயமே பெரியது என்று பேசி தவறான வழியில் செல்வார்கள்)
பின் (அதனால் பிறகு) ஞானத்து (உண்மை ஞானத்தை) உளோர் (தாம் கொண்டவர்கள்) என்று (என்று) பேச (பேசுவது) கிலாரே (அவர்களால் முடியாது).

விளக்கம்:

இழிவான ஞானத்தை கொண்டவர்கள் உண்மை ஞானம் கொண்டவர்கள் போல பொய்யாக வேடம் அணிந்தாலும் அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் இல்லை. நன்மையான ஞானத்தை பெற்றவர்கள் வேடம் அணிந்து கொள்வதை விரும்பாமல் இறைவனின் திருவருள் கிடைப்பதையே விரும்பி இருப்பார்கள். தீமையான ஞானத்தை கொண்டவர்கள் தத்தமது சமயங்களின் கொள்கைகளின் மேல் நீங்காத பற்று உள்ளவர்கள் தங்களின் சமயமே பெரியது என்று பேசி தவறான வழியில் செல்வார்கள். அதனால் பிறகு உண்மை ஞானத்தை தாம் கொண்டவர்கள் என்று அவர்களால் பேச முடியாது.

பாடல் #1670

பாடல் #1670: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கு
மவமான சாதன மாகாத தாகி
லவமா மவர்க்கது சாதன நான்கு
முவமான மில்பொரு ளுள்ளுற லாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவஞானி கடகுஞ சிவயொகி கடகு
மவமான சாதன மாகாத தாகி
லவமா மவரககது சாதன நானகு
முவமான மிலபொரு ளுளளுற லாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும்
அவம் ஆன சாதனம் ஆகாது அது ஆகில்
அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும்
உவமானம் இல் பொருள் உள் உறல் ஆமே.

பதப்பொருள்:

சிவ (உண்மையான சிவ) ஞானிகளுக்கும் (ஞானிகளுக்கும்) சிவ (உண்மையான சிவ) யோகிகளுக்கும் (யோகிகளுக்கும்)
அவம் (பயனில்லாதது) ஆன (ஆன) சாதனம் (வழி முறையான சாதனங்கள்) ஆகாது (ஆகாது) அது (அவை) ஆகில் (ஆகி இருப்பதால்)
அவம் (பயனில்லாதது) ஆம் (ஆகும்) அவர்க்கு (அவர்களுக்கு) அது (அந்த) சாதனம் (வழி முறையான சாதனங்கள்) நான்கும் (சன் மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் ஆகிய நான்கும்)
உவமானம் (தமக்கு இணையான உவமையாக) இல் (எதுவும் இல்லாத) பொருள் (பரம் பொருளை) உள் (தமக்குள்) உறல் (உணர்ந்து தெளிவதால்) ஆமே (ஆகும்).

விளக்கம்:

உண்மையான சிவ ஞானிகளுக்கும் சிவ யோகிகளுக்கும் இறைவனை அடைவதற்கான வழி முறைகளான சன் மார்க்கம், சக மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாச மார்க்கம் ஆகிய நான்கும் பயனில்லாதது ஆகும். ஏனென்றால் தமக்கு சரிசமமாக எதுவும் இல்லாத பரம் பொருளாகிய இறைவனை அவர்கள் தமக்குள் உணர்ந்து தெளிந்து விட்டதால்.

பாடல் #1671

பாடல் #1671: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

கத்தித் திரிவர் கழுவடி நாய்போலக்
கொத்தித் திரிவர் குரக்கறி ஞானிக
ளொத்துப் பொறியு முடலு மிருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானியார் களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கததித திரிவர கழுவடி நாயபொலக
கொததித திரிவர குரககறி ஞானிக
ளொததுப பொறியு முடலு மிருககவெ
செததுத திரிவர சிவஞானியார களெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கத்தி திரிவர் கழு அடி நாய் போல
கொத்தி திரிவர் குரக்கு அறி ஞானிகள்
ஒத்து பொறியும் உடலும் இருக்கவே
செத்து திரிவர் சிவ ஞானியார்களே.

பதப்பொருள்:

கத்தி (தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி) திரிவர் (திரிகின்ற பொய்யான ஞானிகள்) கழு (கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு) அடி (அடியில்) நாய் (எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை) போல (போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள்)
கொத்தி (கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று) திரிவர் (திரிவார்கள்) குரக்கு (தமது குரலின் பேச்சுத் திறமையே) அறி (அறிவு என்று எண்ணுகின்ற) ஞானிகள் (பொய்யான ஞானிகள்)
ஒத்து (ஒன்றாக இருக்கின்ற) பொறியும் (ஐந்து புலன்களும்) உடலும் (உடலும்) இருக்கவே (அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு)
செத்து (செத்த பிணத்தைப் போலவே) திரிவர் (எந்த இடத்திலும் கிடப்பார்கள்) சிவ (உண்மையான சிவ) ஞானியார்களே (ஞானிகள்).

விளக்கம்:

தாம் அறிந்த கொண்டவற்றை ஞானம் என்று எண்ணி மற்றவர்களுக்கு அதையே எடுத்து சொல்லி திரிகின்ற பொய்யான ஞானிகள் கழுமரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு அடியில் எப்போது அந்த உடலின் இறைச்சி கிடைக்கும் என்று குரைத்துக் கொண்டு அலைகின்ற நாயை போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் என்று இருக்கின்றார்கள். தமது குரலின் பேச்சுத் திறமையே அறிவு என்று எண்ணுகின்ற பொய்யான ஞானிகள் கழு மரத்தில் ஏற்றி இருக்கும் உடலுக்கு மேலே எப்போது இறைச்சியை கொத்தி உண்ணலாம் என்று திரிகின்ற கழுகுகளைப் போலவே ஏமாளிகள் எப்போது கிடைப்பார்கள் அவர்களை ஏமாற்றி அவர்களிடமிருப்பதை பிடுங்கி உண்ணலாம் என்று திரிவார்கள். உண்மையான சிவ ஞானிகள் ஒன்றாக இருக்கின்ற ஐந்து புலன்களும் உடலும் அதனதன் வேலையை செய்து கொண்டு இருந்தாலும் அவற்றை தமது விருப்பத்திற்கு ஏற்றபடி அடக்கும் வல்லமையோடு செத்த பிணத்தைப் போலவே எந்த இடத்திலும் கிடப்பார்கள்.

பாடல் #1672

பாடல் #1672: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

அடியா ரவரே யடியா ரல்லாதா
ரடியாரு மாகாது வேடமு மாகா
வடியார் சிவஞான மானது பெற்றா
ரடியா ரல்லாதா ரடியாரு மன்றே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அடியா ரவரெ யடியா ரலலாதா
ரடியாரு மாகாது வெடமு மாகா
வடியார சிவஞான மானது பெறறா
ரடியா ரலலாதா ரடியாரு மனறெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அடியார் அவரே அடியார் அல்லாதார்
அடியாரும் ஆகாது வேடமும் ஆகா
அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றார்
அடியார் அல்லாதார் அடியாரும் அன்றே.

பதப்பொருள்:

அடியார் (உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற) அவரே (ஞானிகளே) அடியார் (அடியவர்கள் ஆவார்கள்) அல்லாதார் (அப்படி இல்லாதவர்கள்)
அடியாரும் (அடியவர்களாகவும்) ஆகாது (ஆக மாட்டார்கள்) வேடமும் (அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும்) ஆகா (உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது)
அடியார் (அடியவர் என்பவர்கள்) சிவ (இறைவனது சிவ) ஞானம் (ஞானமாக) ஆனது (இருக்கின்ற உண்மையான ஞானத்தை) பெற்றார் (இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள்)
அடியார் (அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான) அல்லாதார் (எந்த தன்மையும் இல்லாதவர்கள்) அடியாரும் (அடியவர்களாக) அன்றே (ஆக மாட்டார்கள்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தைக் கொண்டு இறைவனின் அடியவர்களாக இருக்கின்ற ஞானிகளே அடியவர்கள் ஆவார்கள். அப்படி இல்லாதவர்கள் அடியவர்களாகவும் ஆக மாட்டார்கள் அவர்கள் போடுகின்ற பொய்யான வேடங்களும் உண்மையான அடியாருக்கான வேடமாக இருக்காது. அடியவர் என்பவர்கள் இறைவனது சிவ ஞானமாக இருக்கின்ற உண்மையான ஞானத்தை இறையருளால் பெற்றவர்கள் ஆவார்கள். அவ்வாறு உண்மையான ஞானம் பெறுவதற்கான எந்த தன்மையும் இல்லாதவர்கள் அடியவர்களாக ஆக மாட்டார்கள்.

பாடல் #1673

பாடல் #1673: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானிக்குச் சுந்தர வேடமு நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஞானமவ் வேடமருண் ஞான சாதன
மானது மாமொன்று மாகாதவ னுக்கே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானிககுச சுநதர வெடமு நலலவாந
தானுறற வெடமுந தறசிவ யொகமெ
ஞானமவ வெடமருண ஞான சாதன
மானது மாமொனறு மாகாதவ னுககெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானிக்கு சுந்தர வேடமும் நல்ல ஆம்
தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே
ஞானம் அவ் வேடம் அருள் ஞான சாதனம்
ஆனதும் ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.

பதப்பொருள்:

ஞானிக்கு (உண்மையான ஞானிக்கு) சுந்தர (எந்த ஒரு அழகிய) வேடமும் (வேடமும்) நல்ல (நல்லதே) ஆம் (ஆகும்)
தான் (அவர்களுக்கு) உற்ற (தானாகவே அமைந்த) வேடமும் (வேடமும்) தன் (அவர்களின்) சிவ (சிவ) யோகமே (யோகமாகவே இருக்கின்றது)
ஞானம் (உண்மையான ஞானமாகவும்) அவ் (அந்த) வேடம் (வேடமே இருக்கின்றது) அருள் (இறைவனின் திருவருள்) ஞான (ஞானத்தை) சாதனம் (பெறுகின்ற சாதனம்)
ஆனதும் (ஆகவும் அதுவே) ஆம் (இருக்கின்றது) ஒன்றும் (ஆதலால் அந்த வேடத்தினால் எந்த விதமான) ஆகாது (பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை) அவனுக்கே (உண்மையான ஞானிகளுக்கு).

விளக்கம்:

உண்மையான ஞானிக்கு எந்த ஒரு அழகிய வேடமும் நல்லதே ஆகும். அவர்களுக்கு தானாகவே அமைந்த வேடமும் அவர்களின் சிவ யோகமாகவே இருக்கின்றது. உண்மையான ஞானமாகவும் அந்த வேடமே இருக்கின்றது. இறைவனின் திருவருள் ஞானத்தை பெறுகின்ற சாதனமாகவும் அதுவே இருக்கின்றது. ஆதலால் உண்மையான ஞானிகளுக்கு அந்த வேடத்தினால் எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படுவது இல்லை.

பாடல் #1674

பாடல் #1674: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

ஞானத்தி னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்தல் தனியாலை யத்தனா
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனா
மேனைத் தவசி யிவனென லாகுமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஞானததி னாறபத நணணுஞ சிவஞானி
தானததில வைததல தனியாலை யததனா
மொனதத னாதலின முததனாஞ சிததனா
மெனைத தவசி யிவனென லாகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஞானத்தின் ஆல் பதம் நண்ணும் சிவ ஞானி
தானத்தில் வைத்தல் தனி ஆலையத்தன் ஆம்
மோனத்தன் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம்
ஏனை தவசி இவன் எனல் ஆகுமே.

பதப்பொருள்:

ஞானத்தின் (உண்மையான ஞானத்தின்) ஆல் (மூலம்) பதம் (இறைவனது திருவடிகளை) நண்ணும் (அடைந்து) சிவ (சிவ ஞானத்தை பெற்ற) ஞானி (ஞானிகள்)
தானத்தில் (தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு) வைத்தல் (கொடுக்கின்றதால்) தனி (அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற) ஆலையத்தன் (ஆலயமாகவே) ஆம் (இருக்கின்றார்கள்)
மோனத்தன் (அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே) ஆதலின் (இருப்பவர்கள் ஆதலால்) முத்தன் (முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்கள்) ஆம் (ஆகவும்) சித்தன் (சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைக்கின்ற சித்தர்கள்) ஆம் (ஆகவும் இருக்கின்றார்கள்)
ஏனை (மற்ற) தவசி (தவசிகளும்) இவன் (இவர்களைப் போலவே இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும்) எனல் (என்பது) ஆகுமே (உண்மையே ஆகும்).

விளக்கம்:

உண்மையான ஞானத்தின் மூலம் இறைவனது திருவடிகளை அடைந்து சிவ ஞானத்தை பெற்ற ஞானிகள் தங்களிடமுள்ள அருளை தம்மை நாடி வருகின்ற தகுதியானவர்களுக்கு கொடுக்கின்றதால் அவர்கள் ஒரு தனித்துவம் பெற்ற ஆலயமாகவே இருக்கின்றார்கள். அவர்கள் சொல்லும் செயலும் மனமும் அடங்கிய மோன நிலையிலேயே இருப்பவர்கள் ஆதலால் முக்தி நிலையில் வீற்றிருக்கின்ற முக்தர்களாகவும் சித்தத்தில் எப்போதும் சிவத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் சித்தர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்களைப் போலவே மற்ற தவசிகளும் இறைவனது திருவடிகளை மட்டுமே எண்ணிக்கொண்டு மோன நிலையில் இருந்தால் இவர்களுடைய நிலையை அடைய முடியும் என்பது உண்மையே ஆகும்.

பாடல் #1675

பாடல் #1675: ஆறாம் தந்திரம் – 11. ஞான வேடம் (உண்மை ஞானம் உள்ளவர்களின் வேடம்)

தானறி தன்மையுந் தானவ னாதலு
மேனைய வச்சிவ மான வியற்கையுந்
தானுறு சாதகர முத்திரை சாத்தலு
மோனமு நந்தி பதமுத்தி பெற்றதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானறி தனமையுந தானவ னாதலு
மெனைய வசசிவ மான வியறகையுந
தானுறு சாதகர முததிரை சாததலு
மொனமு நநதி பதமுததி பெறறதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் அறி தன்மையும் தான் அவன் ஆதலும்
ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும்
தான் உறு சாதகர் முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பத முத்தி பெற்ற அதே.

பதப்பொருள்:

தான் (தான் யார் என்பதை) அறி (அறிந்து கொண்ட) தன்மையும் (தன்மையும்) தான் (தாமே) அவன் (சிவ பரம்பொருளாக) ஆதலும் (ஆகி இருக்கின்ற தன்மையும்)
ஏனைய (தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும்) அச் (அந்த மூலப் பரம்பொருளாகிய) சிவம் (சிவம்) ஆன (ஆகவே இருக்கின்ற) இயற்கையும் (தன்மையும்)
தான் (தாம்) உறு (வீற்றிருக்கின்ற) சாதகர் (சாதகத்தின் நிலையையே) முத்திரை (முத்திரையாக) சாத்தலும் (இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும்)
மோனமும் (மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும் ஆகிய இவை அனைத்தும்) நந்தி (குரு நாதராக இருக்கின்ற இறைவனின்) பத (திருவடிகளை அடைந்து) முத்தி (முக்தியை) பெற்ற (பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு) அதே (அடையாளங்கள் ஆகும்).

விளக்கம்:

தான் யார் என்பதை அறிந்து கொண்ட தன்மையும், தாமே சிவ பரம்பொருளாக ஆகி இருக்கின்ற தன்மையும், தங்களைத் தவிர உலகத்தில் இருக்கின்ற அனைத்தும் மற்றும் நிகழ்கின்ற அனைத்தும் அந்த மூலப் பரம்பொருளாகிய சிவம் ஆகவே இருக்கின்ற தன்மையும், தாம் வீற்றிருக்கின்ற சாதகத்தின் நிலையையே முத்திரையாக இறைவனுக்கு அர்ப்பணிக்கின்ற தன்மையும், மனம் பேச்சு செயல் ஆகிய மூன்றும் அடங்கி இருக்கின்ற மோன நிலையில் வீற்றிருக்கின்ற தன்மையும், ஆகிய இவை அனைத்தும் குரு நாதராக இருக்கின்ற இறைவனின் திருவடிகளை அடைந்து முக்தியை பெற்ற உண்மையான சிவ ஞானிகளுக்கு அடையாளங்கள் ஆகும்.