பாடல் #1512

பாடல் #1512: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சைவச் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவச் சிவந்தன்னைச் சாராமல் நீவுதல்
சைவச் சிவானந்தஞ் சாயுச்சிய மாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சைவச சிவனுடன சமபநத மாவது
சைவந தனையறிந தெசிவஞ சாருதல
சைவச சிவநதனனைச சாராமல நீவுதல
சைவச சிவானநதஞ சாயுசசிய மாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சைவ சிவனுடன் சம்பந்தம் ஆவது
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவ சிவம் தன்னை சாராமல் நீவுதல்
சைவ சிவ ஆனந்தம் சாயுச்சியம் ஆமே.

பதப்பொருள்:

சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவனுடன் (இறைவனுடன்) சம்பந்தம் (நெருங்கிய உறவினர் போல) ஆவது (தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும்)
சைவம் (இந்த நிலையை அடைவதற்கு சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின்) தனை (வழி முறையின் மூலம்) அறிந்தே (இறைவனை அறிந்து கொண்டு) சிவம் (இறைவனை) சாருதல் (மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில்) சிவம் (சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு) தன்னை (தாம் எனும் எண்ணத்தை) சாராமல் (சார்ந்து இருப்பதை) நீவுதல் (நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும்)
சைவ (சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தின் பயனால்) சிவ (சிவப் பரம்பொருளின்) ஆனந்தம் (மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி) சாயுச்சியம் (இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே) ஆமே (இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்).

விளக்கம்:

சைவம் என்று அறியப்படுகின்ற தர்மத்தில் இறைவனுடன் நெருங்கிய உறவினர் போல தாமும் ஆவது சாலோகம் எனும் முதல் நிலையாகும். இந்த நிலையை அடைவதற்கு அந்த வழி முறையின் மூலம் இறைவனை அறிந்து கொண்டு இறைவனை மிகவும் நெருங்கி அவரையே சார்ந்து இருப்பது சாமீபம் எனும் இரண்டாவது நிலையாகும். அந்த தர்மத்திலேயே சிவப் பரம்பொருளை அறிந்து அடைந்த பிறகு தாம் எனும் எண்ணத்தை சார்ந்து இருப்பதை நீக்கி விட்டு தாமே சிவமாக இருப்பதை உணர்ந்து சிவ உருவத்திலேயே இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலையாகும். அந்த தர்மத்தின் பயனால் சிவப் பரம்பொருளின் மேலான பேரின்பத்தை பெற்று அதிலேயே மூழ்கி இறைவனுடனே எப்போதும் சேர்ந்தே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காவது நிலையாகும்.

பாடல் #1513

பாடல் #1513: ஐந்தாம் தந்திரம் – 16. சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருப்பது)

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதல்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாயுச சியஞசாக கிராதீதஞ சாருதல
சாயுச சியமுப சாநதததுத தஙகுதல
சாயுச சியஞசிவ மாதல முடிவிலாச
சாயுச சியமனத தானநத சததியெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சாயுச்சியம் சாக்கிர ஆதீதம் சாருதல்
சாயுச்சியம் உப சாந்தத்து தங்குதல்
சாயுச்சியம் சிவம் ஆதல் முடிவு இலா
சாயுச்சியம் மனத்து ஆனந்த சத்தியே.

பதப்பொருள்:

சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சாக்கிர (இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும்) ஆதீதம் (நினைவு உலகத்திலும்) சாருதல் (விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) உப (அதற்கு உதவுகின்ற) சாந்தத்து (பேரமைதி எனும் நிலையிலேயே) தங்குதல் (தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) சிவம் (தாமே சிவமாக) ஆதல் (ஆகி இறைவனின்) முடிவு (எல்லை) இலா (இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும்)
சாயுச்சியம் (இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது) மனத்து (மனதிற்குள்) ஆனந்த (இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து) சத்தியே (அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்).

விளக்கம்:

இறைவனுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கின்ற நிலையானது இறைவனுடன் இலயித்து இருக்கின்ற ஆழ் நிலையில் மூழ்கி இருந்தாலும் நினைவு உலகத்திலும் விழிப்பு நிலையில் இருப்பது சாலோகம் எனும் முதல் நிலை ஆகும். இந்த நிலைக்கு உதவுகின்ற பேரமைதி எனும் நிலையிலேயே தங்கி இருப்பது சாமீபம் எனும் இரண்டாம் நிலை ஆகும். இந்த நிலையில் தாமே சிவமாக ஆகி இறைவனின் எல்லை இல்லாத ஒளி உருவத்தை பெற்று இருப்பது சாரூபம் எனும் மூன்றாவது நிலை ஆகும். அந்த நிலையில் மனதிற்குள் இறைவனின் பேரின்பத்தில் மூழ்கி இருந்து அவனின் அளவில்லாத சக்தியை அனுபவித்துக் கொண்டே இருப்பது சாயுச்சியம் எனும் நான்காம் நிலை ஆகும்.