சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை அவனொடொப் பார்இங்கும் யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னொளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரை யானே.
விளக்கம்:
சிவத்தோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு எங்கு தேடினாலும் வேறு எந்த தெய்வமும் கிடையாது. அவன் ஈடுஇணை இல்லாதவன். அனைத்து தெய்வங்களுக்கும் மேலானவன். அவனோடு ஒப்பிட்டுப் பார்க்குமளவிற்கு வேறு யாருமே இந்த உலகத்தில் இல்லை. இந்த உலகத்தையும் தாண்டிய பரவெளியில் சூரியனைப் போன்ற ஒளியுடன் பிரகாசித்துக்கொண்டும் சூரியனின் ஒளிக்கற்றைகள் போல மின்னும் சடையைக் கொண்டும் அவன் ஆயிரம் தாமரை மலரின் மேல் வீற்றிருக்கின்றான்.
அழிந்து போகக்கூடிய அண்டசராசரங்களுக்கும் அதிலுள்ள அனைத்து உயிர்களுக்கும் உண்மைப் பொருளாகவும் அனைத்திற்கும் ஆரம்பமாகவும் இருக்கும் இறைவனை மண்ணுலகில் எம்மை வந்து இருக்குமாறு செய்து மண்ணுலக மாயையிலிருந்து விடுபடும் வழியாக தனது திருவடியையும் எமக்கு அருளிய இறைவனை இடைவெளியின்றி பகலிலும் இரவிலும் அவன் பாதங்களைப் பணிந்து அவனைத் துதித்து எம்முள் இருக்கும் மாயையாகிய இருளை நீக்கி அவனுடைய உண்மைப் பொருளை உணர்ந்து இருந்தோம்.
அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் இறைவனை எண்ணிலடங்காத தேவர்கள் தினந்தோறும் போற்றித் தொழுகின்ற இறைவனை தத்துவங்களைக் கடந்து அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் இறைவனை பக்கத்தில் இருந்தாலும் அறிந்துகொள்ள முடியாத இறைவனை யாம் அவனுள் அடங்கி நின்று அவனைத் தியானித்து அவன் புகழைப் போற்றி உரைப்போம்.
இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, இசைத்துப் பாடும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் புனிதமானவனும் நான்கு திசைகளுக்கும் (உலகமனைத்திற்கும்) நன்மை புரியும் மாதுவாகிய சக்திக்குத் தலைவனானவனும். மேற்கூறிய நான்கு திசைகளுக்குள் தென் திசைக்கு தலைவனானவனும் காலத்தின் அதிபதியான எமனை எட்டி உதைத்ததால் காலத்தை வென்றவனும் ஆகிய இறைவனை யான் கூறிகின்றேன்.
இறைவன் ஒருவனே அவனைத்தவிர வேறு தெய்வங்கள் இல்லை. அதாவது உலகத்தில் உள்ள அனைத்து தெய்வங்களும் அண்டசராசரங்களும், அதிலுள்ள அனைத்தும் இறைவன் ஒருவனாகவே இருக்கின்றான்.
ஒன்றாக இருக்கும் இறைவனின் அருளானது இரண்டாக இருக்கின்றது. அசையா சக்தியான இறைவனின் அருள் அவனிடமிருந்து அசையும் சக்தியாக வெளிப்படுகிறது. அதாவது எப்படி கசப்பான மருந்தும் இனிப்பான மருந்தும் நோயைக் குணப்படுத்துகிறதோ அதுபோலவே இன்பம் துன்பம் ஆகிய இரண்டும் இறைவனின் அருளாகும்.
இரண்டாக இருக்கும் இறைவனே பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களாகவும் நின்று படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றுவிதமான தொழில்களையும் புரிகின்றான்.
மூன்றாய் நின்ற இறைவனே உயிர்கள் தன்னை அறிந்துகொள்ள வேண்டும் என்கிற மாபெரும் கருணையில் ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய நான்கு விதமான வேதங்களாகவும் நிற்கின்றான்.
நான்கு வேதங்களாக இருக்கும் இறைவனே நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களகவும் இருக்கின்றான். அதாவது தெய்வம் அருளும் ஐந்து வகை தொழில்களாகிய படைத்தல், காத்தல், மாயையால் மறைத்தல், அருளல், மாயையை அழித்தல் ஆகிய ஐந்தின் தலைவன் அவன் ஒருவனே.
ஐம்பூதங்களாக இருக்கும் இறைவனே உயிர்களின் உடலில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தம், ஆஞ்ஞை ஆகிய ஆறு சக்கரங்களாக விரிந்து இருக்கின்றான்.
ஆறு சக்கரங்களாக விரிந்திருக்கும் இறைவனே மூலாதாரத்தில் குண்டலினி சக்தியாக இருந்து யோகங்கள் புரிவதன் மூலம் ஆறு சக்கரங்களுக்கும் மேலேறி ஏழாவது சகஸ்ரரதளத்திற்கு சென்று அதையும் தாண்டி பரவெளியில் உறைந்திருக்கின்றான்.
ஏழு சக்கரங்களிலும் உறைந்திருக்கும் இறைவனை தனக்குள்ளே உணர்ந்து உயிர்கள் அவனை எட்டுதலே முக்தியாகும்.