பாடல் #1161

பாடல் #1161: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆலிக்குங் கன்னி யரிவை மனோன்மணி
பாலித் துலகிற் பரந்துபெண்ணா ணாகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவ னுகந்துநின் றானே.

விளக்கம்:

பாடல் #1160 இல் உள்ளபடி சாதகரின் உள்ளத்திற்குள் புகுந்து பேரின்பத்தில் வீற்றிருக்கும் இறைவி என்றும் இளமையுடன் இறைவனோடு சேர்ந்து இருக்கின்ற மனோன்மணியானவள் தன்னுடைய பெண் தன்மையில் இறைவனின் ஆண் தன்மையையும் சேர்த்து உலகங்கள் அனைத்திற்கும் பரவி நின்று அருள் பாலிக்கின்றாள். இவள் உலக இயக்கத்திற்கு தலைவியாகவும் வேதங்களின் தலைவியாகவும் இறைவனோடு கலந்து நின்று அருள் புரியும் விதத்தை தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட சாதகர்கள் அவர்களோடு சேர்ந்து தாமும் பேரின்பத்தில் திளைத்து இருப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.