பாடல் #1187

பாடல் #1187: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்
ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்
தோன்று மிலக்குற வாகுதன் மாமாயை
ஏன்றன ளேழிரண் டிந்துவோடு ஈறே.

விளக்கம்:

பாடல் #1186 இல் உள்ளபடி இறைவி கூறியபடி சாதகருக்குள் மூலாதாரத்தில் இருக்கின்ற அக்னி ஆக்ஞையில் இருக்கின்ற சந்திரன் சகஸ்ரதளத்தில் இருக்கின்ற சூரியன் ஆகிய மூன்று மண்டலங்களிலும் இறைவி மாயையின் தலைவியாக சேர்ந்து இருக்கின்றாள். அந்த மாயை நீங்கி இறைவியை அடைவதற்கு பாடல் #1186 இல் இறைவி அருளியபடி சாதகம் செய்து மூச்சுக் காற்றை சுழுமுனை நாடி வழியே அந்த மூன்று மண்டலங்களுக்கும் செலுத்திச் சென்றால் அவளை அடைவதற்கு ஏற்ற விதத்தில் தலை உச்சியிலிருந்து பன்னிரண்டு அங்குல தூரத்தில் சுத்த மாயையின் இருப்பிடமாக இருக்கின்ற பரவெளியில் இறைவி வீற்றிருக்கின்றாள். பாடல் #871 இல் உள்ளபடி சாதகரின் உடலுக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களைக் கடந்து எட்டாவதாக இருக்கும் துவாதசாந்த வெளியைத் தாண்டிய ஒன்பதாவது பரவெளியில் இருக்கும் சந்திர மண்டலத்தை தமது இறுதியான இடமாகக் கொண்டு இறைவி வீற்றிருக்கின்றாள்.

கருத்து:

இறைவனை அடைய வேண்டும் என்று இறைவி கூறிய வழியில் சாதகம் செய்யும் சாதகர்கள் முதலில் தமது மாயையை நீங்கி தலை உச்சியில் இருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரதளத்தைத் தாண்டி எட்டாவதான துவாதசாந்த வெளியில் மாமாயையில் இருக்கும் இறைவியை அறிந்து கொள்வார்கள். இந்த சாதகத்தைத் தொடர்ந்து செய்தால் மாமாயை நீங்கி அதன்பிறகு ஒன்பதாவதாக இருக்கும் சந்திர மண்டலத்தில் வீற்றிருக்கும் இறைவியை உணர்ந்து கொள்வார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.