பாடல் #1182

பாடல் #1182: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

விளக்கம்:

பாடல் #1181 இல் உள்ளபடி இறைவன் வேறு ஆன்மா வேறு என்று பிரிந்து இருக்கும் தன்மையை நீக்கி இறைவனோடு ஒன்றாக சேர்வதற்கு அருளுகின்ற இறைவியானவள் ஆரம்ப நிலையில் சாதகரின் ஆன்மாவை பெரும் கருணையோடு காத்து நின்று இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற அவரின் எண்ணங்களோடு சேர்ந்து நின்று கொம்பின் உயரத்திற்கு ஏற்ப வளர்கின்ற பூங்கொடியைப் போல சாதகரின் எண்ணங்களுக்கு ஏற்ப அருள் புரிகின்ற அழகிய பூங்கொடியாக இருக்கின்றாள். இறைவனை அடைய வேண்டும் என்று நினைக்கின்ற சாதகரின் மனதை அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தி அதனோடு ஒன்றாக சேர்ந்து நின்று அவருக்கு இறைவனை அடைவதற்கு வேண்டிய உண்மை ஞானத்தை அருளி அந்த ஞானத்தோடு கலந்து ஒன்றாக சாதகரின் உயிருக்குள் நிற்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.