பாடல் #1197

பாடல் #1197: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

கொடியதி ரேகை குறியுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழ லீசன்
வடிவது வானந்தம் வந்து முறையே
இடுமுத லாறங்க மேந்திழை யாளே.

விளக்கம்:

பாடல் #1196 இல் உள்ளபடி விசுத்திச் சக்கரத்திலிருந்து கொடி போல மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் உச்ச நிலையில் மின்னல் போன்ற ஒளியையும் சக்தியையும் கொண்டு இருக்கும் இறைவியானவள் அங்கிருக்கும் இறை சக்தியையே முதன்மையாகக் கொண்டு அதனுள் வீற்றிருக்கும் போது அங்கிருந்து கங்கையைப் போன்ற அமிழ்தம் கீழிறங்கும் படி இறை சக்தியானது ஊற்றாகப் பொழிகின்றது. இதுவே பசுமையான பொன் போன்ற திருவடிகளைக் கொண்ட இறைவனின் உருவமாக இருப்பது பேரின்பமாகும். இந்தப் பேரின்பத்தை அருளும் அமிழ்தத்தை சாதகரின் பக்குவத்திற்கு ஏற்றபடி அவருக்குள் இருக்கும் ஆறு ஆதார சக்கரங்களுக்கும் முறையாக அருளுகின்ற தலைவியாக அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவி இருக்கின்றாள்.

கருத்து: இறைவன் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தத்தின் மூலம் பேரின்பத்தை அருளும் உருவமாக இருக்கின்றார். இறைவி அதை ஆறு சக்கரங்களுக்கு கொடுக்கும் சக்தியாக இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.