பாடல் #1443

சரியை முன்னுரை:

இந்த உலகத்திலேயே இறைவனை பற்றி முழுவதுமாக ஆராய்ந்து அறிந்து கொண்டு அவனை அடைந்து சிவமாகவே ஆவதற்கு இறைவனால் அருளப்பட்ட வழிமுறையான சுத்த சைவத்தில் இருப்பது 1. சுத்த சைவம் 2. அசுத்த சைவம் 3.மார்க்க சைவம் 4.கடும் சுத்த சைவம் ஆகிய நான்கு வழி முறைகள் ஆகும். இந்த நான்கு வழிமுறைகளையும் கடைபிடிப்பதற்கு இருப்பது சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு சாதக முறைகள் ஆகும்.

பாடல் #1443: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

நேர்ந்திடு மூலச் சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலங்கி கஞ்சன் மலையின்மா
னோர்ந்திடுங் கந்துருக் கேண்மின்கள் பூதலந்
தேர்ந்திடுஞ் சுத்த சைவத்துயி ராவதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நெரநதிடு மூலச சரிதை நெறியிதென
றாயநதிடுங காலஙகி கஞசன மலையினமா
னொரநதிடுங கநதுருக கெணமினகள பூதலந
தெரநதிடுஞ சுதத சைவததுயி ராவதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நேர்ந்திடும் மூல சரியை நெறி இது என்று
ஆய்ந்திடும் கால் அங்கி கஞ்சன் மலையின் மான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலம்
தேர்ந்திடும் சுத்த சைவத்து உயிர் ஆவதே.

பதப்பொருள்:

நேர்ந்திடும் (இறைவனை சென்று அடைவதற்கு) மூல (மூலமாக இருக்கின்ற) சரியை (சரியை எனும்) நெறி (வழிமுறை) இது (இதுவே) என்று (என்று)
ஆய்ந்திடும் (ஆராய்ந்து அறிந்து கொண்ட) கால் (காலத்தை வென்று) அங்கி (அதை அங்கியாக அணிந்து கொண்டு) கஞ்சன் (வெண்கலம் போன்ற உறுதியான) மலையின் (மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு) மான் (பெருமை சேர்த்த காலாங்கி நாதரும்)
ஓர்ந்திடும் (இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட) கந்துரு (கந்துரு நாதரும்) கேண்மின்கள் (ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள்) பூதலம் (இந்த பூமியிலேயே)
தேர்ந்திடும் (இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும்) சுத்த (சுத்த) சைவத்து (சைவம் எனும் வழிமுறைக்கு) உயிர் (உயிர் ஆதாரமாக) ஆவதே (இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்).

விளக்கம்:

இறைவனை சென்று அடைவதற்கு மூலமாக இருக்கின்ற சரியை எனும் வழிமுறை இதுவே என்று ஆராய்ந்து அறிந்து கொண்ட காலத்தை வென்று அதை அங்கியாக அணிந்து கொண்டு வெண்கலம் போன்ற உறுதியான மலை எனும் பொருளில் பெயர் கொண்ட கஞ்ச மலைக்கு பெருமை சேர்த்த காலாங்கி நாதரும் இதையே ஆராய்ந்து தெளிவாக உணர்ந்து கொண்ட கந்துரு நாதரும் ஆராய்ந்து உணர்ந்து கொண்ட வழிமுறையை நீங்களும் கேளுங்கள். இந்த பூமியிலேயே இறைவனை அடைவதற்கான வழி என்று ஆராய்ந்து உணர்ந்து கொண்டு அதில் தேர்ச்சி பெறும் சுத்த சைவம் எனும் வழிமுறைக்கு உயிர் ஆதாரமாக இருப்பதே சரியை எனும் வழிமுறை ஆகும்.

பாடல் #1444

பாடல் #1444: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

உயிர்க்குயி ராய்நிற்ற லொண்ஞான பூசை
யுயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
யுயிர்பெறு மாவா கனம்புறப் பூசை
செயற்கிடை நேசஞ் சிவபூசை தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

உயிரககுயி ராயநிறற லொணஞான பூசை
யுயிரககொளி நொககல மகாயொக பூசை
யுயிரபபெறு மாவா கனமபுறப பூசை
செயறகிடை நெசஞ சிவபூசை தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை
உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை
உயிர் பெறும் ஆவாகனம் புற பூசை
செயற்கு இடை நேசம் சிவ பூசை தானே.

பதப்பொருள்:

உயிர்க்கு (உயிர்களுக்குள்) உயிராய் (ஆன்மாவாக இறைவன்) நிற்றல் (நிற்கின்ற விதத்தை) ஒண் (தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல்) ஞான (ஆத்ம விசாரமாகிய / நான் யார் என்று அறிந்து கொள்வதாகிய ஞான) பூசை (பூசையாகும்)
உயிர்க்கு (உயிர்களுக்குள்) ஒளி (ஒளியாக இருக்கும் இறைவனை) நோக்கல் (தமக்குள்ளே தரிசித்தல்) மகா (மாபெரும்) யோக (சாதனையாகிய யோக) பூசை (பூசையாகும்)
உயிர் (உருவச் சிலைகள் இறை சக்தியை) பெறும் (பெறும்படி) ஆவாகனம் (மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி) புற (அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற) பூசை (பூசையாகும்)
செயற்கு (எந்தவிதமான பூசைகளை செய்தாலும்) இடை (அந்த பூசைக்கான செயல்களை) நேசம் (இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது) சிவ (மானசீகமாகிய சிவ) பூசை (பூசை) தானே (ஆகும்).

விளக்கம்:

உயிர்களுக்குள் ஆன்மாவாக இறைவன் நிற்கின்ற விதத்தை தமக்குள்ளே ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் ஆத்ம விசாரமாகிய (நான் யார் என்று அறிந்து கொள்வது) ஞான பூசையாகும். உயிர்களுக்குள் ஒளியாக இருக்கும் இறைவனை தமக்குள்ளே தரிசித்தல் மாபெரும் சாதனையாகிய யோக பூசையாகும். உருவச் சிலைகள் இறை சக்தியை பெறும்படி மந்திரங்கள் சொல்லி கிரியைகள் செய்து சக்தியூட்டி அந்த சிலைகளுக்கு அபிஷேகமும் ஆராதனையும் செய்வது வெளிப்புற பூசையாகும். எந்தவிதமான பூசைகளை செய்தாலும் அந்த பூசைக்கான செயல்களை இறைவன் மேல் கொண்ட பேரன்போடு செய்வது மானசீகமாகிய சிவ பூசையாகும். இந்த நான்கு விதமான பூசைகளே சரியை ஆகும்.

பாடல் #1445

பாடல் #1445: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

நாடு நகரமு நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெருமா னென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நாடு நகரமு நறறிருக கொயிலுந
தெடித திரிநது சிவபெருமா னெனறு
பாடுமின பாடிப பணிமின பணிநதபின
கூடிய நெஞசததுக கொயிலாயக கொளவனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நாடும் நகரமும் நல் திரு கோயிலும்
தேடி திரிந்து சிவ பெருமான் என்று
பாடுமின் பாடி பணிமின் பணிந்த பின்
கூடிய நெஞ்சத்து கோயில் ஆய் கொள்வனே.

பதப்பொருள்:

நாடும் (உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும்) நகரமும் (அதிலுள்ள நகரங்களிலும்) நல் (உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள) திரு (இறைவன் வீற்றிருக்கும்) கோயிலும் (கோயில்களையும்)
தேடி (தேடி அலைந்து) திரிந்து (திரிந்து கண்டு பிடித்து) சிவ (அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம்) பெருமான் (எனும் பரம்பொருள்) என்று (என்று எண்ணி)
பாடுமின் (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடுங்கள்) பாடி (பாடி கொண்டே) பணிமின் (இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள்) பணிந்த (அவ்வாறு வணங்கிய) பின் (பிறகு)
கூடிய (அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து) நெஞ்சத்து (பக்தர்களின் நெஞ்சத்தையே) கோயில் (தமக்கு விருப்பமான கோயிலாக) ஆய் (ஆட்கொண்டு) கொள்வனே (அங்கே வீற்றிருக்கும்).

விளக்கம்:

உலகமெங்கும் இருக்கின்ற அனைத்து நாடுகளிலும் அதிலுள்ள நகரங்களிலும் உயிர்களின் நன்மைக்காக அமைக்கப் பட்டுள்ள இறைவன் வீற்றிருக்கும் கோயில்களை தேடி அலைந்து திரிந்து கண்டு பிடித்து அங்கு வீற்றிருக்கின்ற இறை சக்தியை சிவம் எனும் பரம்பொருளாகவே எண்ணி இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பாடி கொண்டே இறைவனைப் பணிந்து தொழுது வணங்குங்கள். அவ்வாறு வணங்கிய பிறகு அந்தக் கோயிலில் வீற்றிருக்கும் இறை சக்தியும் வணங்கித் தொழுத பக்தர்களோடு ஒன்றாக சேர்ந்து அந்த பக்தர்களின் நெஞ்சத்தையே தமக்கு விருப்பமான கோயிலாக ஆட்கொண்டு அங்கே வீற்றிருக்கும்.

கருத்து: ஆலயங்களுக்கு சென்று பக்தியால் போற்றி வணங்கித் தொழுது இறைவனை அடையும் சரியை எனும் முறை இதுவே ஆகும்.

பாடல் #1446

பாடல் #1446: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

பத்தர் சரிதைப் படுவார் கிரிகையோ
ரத்தகு கொண்டா ரருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாக்கரத் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததர சரிதைப படுவார கிரிகையொ
ரததகு கொணடா ரருளவெடத தாகுவொர
சுதத வியமாதி சாககரத தூயொகர
சிததர சிவஞானஞ செனறெயது வொரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பக்தர் சரியை படுவார் கிரியையோர்
அத் தகு கொண்டார் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த வியம் ஆதி சாக்கரத்து தூ யோகர்
சித்தர் சிவ ஞானம் சென்று எய்துவோர்களே.

பதப்பொருள்:

பக்தர் (பக்தர்கள் என்பவர்) சரியை (இறைவனை அடையும் வழிமுறையான சரியையை) படுவார் (மேற் கொண்டு) கிரியையோர் (கிரியைகளை செய்கின்றவர்கள்)
அத் (அந்த கிரியையின் செயலின்) தகு (தன்மையையே) கொண்டார் (தாமும் கொண்டவர்கள்) அருள் (அதன் பயனால் அருள்) வேடத்து (வடிவத்தில் இறை தன்மையாகவே) ஆகுவோர் (ஆகின்றார்கள்)
சுத்த (அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய) வியம் (தமது உடலுக்குள்ளே) ஆதி (ஆதியிலிருந்தே இருக்கின்ற) சாக்கரத்து (ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு) தூ (தூய்மையான) யோகர் (யோகிகள் ஆகின்றார்கள்)
சித்தர் (அதன் பிறகு சித்தர்கள் என்று) சிவ (பரம்பொருளான சிவத்தின்) ஞானம் (உண்மை ஞானத்தை) சென்று (தமக்குள்ளே சென்று) எய்துவோர்களே (உணர்ந்து அடைபவர்கள் ஆகின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை அடையும் வழிமுறையான சரியையை மேற் கொண்டு கிரியைகளை செய்கின்றவர்களே பக்தர்கள் ஆவார்கள். அந்த கிரியைகளின் செயலின் தன்மையையே தாமும் அடைந்து அதன் பயனால் அருள் வடிவத்தில் இறை தன்மையாகவே அவர்கள் ஆகின்றார்கள். அதனால் மும்மலங்களும் நீங்கி சுத்தமாகிய தமது உடலுக்குள்ளே ஆதியிலிருந்தே இருக்கின்ற ஆன்மாவானது எது என்பதை உணர்ந்து கொண்டு தூய்மையான யோகிகள் ஆகின்றார்கள். அதன் பிறகு பரம்பொருளான சிவத்தின் உண்மை ஞானத்தை தமக்குள்ளே சென்று உணர்ந்து அடைந்து சித்தர்கள் ஆகின்றார்கள்.

கருத்து: இறைவனை அடையும் வழிமுறையான சரியையை முறைப்படி கடை பிடிப்பவர்கள் அதனாலேயே யோகியர்களாகவும் சித்தர்களாகவும் ஆக முடியும்.

பாடல் #1447

பாடல் #1447: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சார்ந்தமெஞ் ஞானத்தோர் தானவ னாயற்றோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோ
ராய்ந்த கிரிகையோ ரர்சனை தப்பாதோர்
நேர்ந்த சரிதையோர் நீணிலத் தோர்களே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சாரநதமெஞ ஞானததொர தானவ னாயறறோர
செரநதவெண யொகததர சிததர சமாதியொ
ராயநத கிரிகையொ ரரசனை தபபாதொர
நெரநத சரிதையொர நீணிலத தொரகளெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சார்ந்த மெய் ஞானத்தோர் தான் அவன் ஆய் அற்றோர்
சேர்ந்த எண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள் நிலத்தோர்களே.

பதப்பொருள்:

சார்ந்த (இறைவனை சார்ந்து இருந்து) மெய் (உண்மை) ஞானத்தோர் (ஞானத்தை அடைந்தவர்கள்) தான் (தாமே) அவன் (இறைவனாக) ஆய் (ஆகி) அற்றோர் (தான் எனும் தன்மை இல்லாதவர்கள் ஆகின்றார்கள்)
சேர்ந்த (இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும்) எண் (எண்ணங்களால்) யோகத்தர் (யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள்) சித்தர் (சித்தர்களாக ஆகி) சமாதியோர் (சமாதி நிலையில் இருக்கின்றார்கள்)
ஆய்ந்த (இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு) கிரியையோர் (அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள்) அருச்சனை (பூசைகளை) தப்பாதோர் (முறைப்படி தவறாமல் செய்கின்றார்கள்)
நேர்ந்த (இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு) சரியையோர் (சரியையை செய்கின்றவர்கள்) நீள் (நீண்ட காலம்) நிலத்தோர்களே (இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்).

விளக்கம்:

இறைவனை சார்ந்து இருந்து உண்மை ஞானத்தை அடைந்தவர்கள் தாமே இறைவனாக ஆகி தான் எனும் தன்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். இறைவனோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் எண்ணங்களால் யோகத்தில் மேல் நிலை பெற்ற யோகியர்கள் சித்தர்களாக ஆகி சமாதி நிலையில் இருக்கின்றார்கள். இறைவனை அடைவதற்கான நுட்பங்களை ஆராய்ந்து அறிந்து கொண்டு அதன் படியே கிரியையை செய்கின்றவர்கள் அதற்காக செய்கின்ற பூசைகளை முறைப்படி தவறாமல் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இறைவனை அடைவதையே குறிக்கோளாக கொண்டு சரியையை செய்கின்றவர்கள் நீண்ட காலம் இந்த உலகத்திலேயே இருக்கின்றார்கள்.

பாடல் #1448

பாடல் #1448: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

கிரிகையில் யோகங் கிளர்ஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
யுரியன நேயத் துயர்பூசை யாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கிரிகையில யொகங கிளரஞான பூசை
யரிய சிவனுரு வமா மரூபந
தெரியும பருவததுத தெரநதிடும பூசை
யுரியன நெயத துயரபூசை யாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கிரியையில் யோகம் கிளர் ஞான பூசை
அரிய சிவன் உருவம் ஆம் அரூபம்
தெரியும் பருவத்து தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை ஆமே.

பதப்பொருள்:

கிரியையில் (கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை) யோகம் (எண்ணத்தால் யோகத்தில் செய்வது) கிளர் (தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும்) ஞான (உயர்வான ஞான) பூசை (பூசையாகும்)
அரிய (அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான) சிவன் (சிவ பரம்பொருளின்) உருவம் (உண்மை உருவம்) ஆம் (ஆக இருக்கின்ற) அரூபம் (உருவமே இல்லாத அரூப நிலையை)
தெரியும் (அறிந்து கொள்ளும்) பருவத்து (பக்குவத்தை பெறும் படி செய்து) தேர்ந்திடும் (அதில் தேர்ச்சி பெற்ற) பூசை (பூசைக்கு)
உரியன (ஏற்றதாக இருப்பது) நேயத்து (இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும்) உயர் (உயர்வான) பூசை (மானசீக பூசையே) ஆமே (ஆகும்).

விளக்கம்:

கிரியையில் வெளிப்புறமாக செய்யப்படும் பூசைகளை எண்ணத்தால் யோகத்தில் செய்து தமக்குள் இருக்கும் அறிவை கிளர்ச்சி பெற்று எழுப்பும் உயர்வான ஞான பூசையாகும். அதனால் கிடைப்பதற்கு மிகவும் அரியதான சிவ பரம்பொருளின் உண்மை உருவமாக இருக்கின்ற உருவமே இல்லாத அரூப நிலையை அறிந்து கொள்ளும் பக்குவத்தை பெறலாம். அந்த பக்குவத்தில் தேர்ச்சி பெற்ற பூசைக்கு ஏற்றதாக இருப்பது இறைவன் மீது கொண்ட பேரன்பினால் செய்யப்படும் உயர்வான மானசீக பூசையே ஆகும்.

பாடல் #1449

பாடல் #1449: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சரிதாதி நான்குந் தகுஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சரிதாதி நானகுந தகுஞான நானகும
விரிவான வெதாநத சிததாநத மாறும
பொருளா னதுநநதி பொனனகர பொநது
மருளாகு மாநதர வணஙகவைத தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சரிதை ஆதி நான்கும் தகு ஞானம் நான்கும்
விரிவு ஆன வேத அந்தம் சித்த அந்தம் ஆறும்
பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.

பதப்பொருள்:

சரிதை (சரியை) ஆதி (முதலாகிய) நான்கும் (இறைவனை அடைவதற்கான நான்கு வித வழிமுறைகளையும்) தகு (அவற்றை முயன்று செய்வதற்கு தேவையான) ஞானம் (அறிவாகிய) நான்கும் (நான்கு விதமான ஞானத்தையும்)
விரிவு (அந்த ஞானங்களின் விரிவாக) ஆன (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்தம் (எல்லையாகிய ஆறும்) சித்த (சித்தத்தின்) அந்தம் (எல்லையும் ஆகிய) ஆறும் (ஆறும் ஆகிய வழிமுறைகளையும்)
பொருள் (இவை அனைத்து முறைகளுக்கும் உண்மைப் பொருளாக) ஆனது (இருக்கின்றவனும்) நந்தி (குருநாதனாக இருக்கின்றவனும் ஆகிய இறைவன்) பொன் (தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற) நகர் (தில்லை சிற்றம்பலத்தில்) போந்து (வந்து நுழையும் படி செய்து)
மருள் (அவனை அடையும் வழிமுறையை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு) ஆகும் (இருக்கின்ற) மாந்தர் (மனிதர்களை) வணங்க (தம்மை வணங்கும் படி) வைத்தானே (செய்து அவர்களை ஆட்கொள்கிறான்).

விளக்கம்:

இறைவனை அடைவதற்கான சரியை கிரியை யோகம் ஞானம் ஆகிய நான்கு விதமான வழிமுறைகளுக்கும் அவற்றை செய்வதற்கு தேவையான அறிவாகிய நான்கு விதமான ஞானங்களுக்கும் அந்த ஞானங்களின் விரிவாக இருக்கின்ற வேதத்தின் எல்லையாக இருக்கின்ற காபிலம் காணாதம் பாதஞ்சலம் அட்சபாதம் வியாசம் ஜைமினியம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் சித்தத்தின் எல்லையாக இருக்கின்ற பைரவம் வாமம் காளாமுகம் மாவிரதம் பாசுபதம் சைவம் ஆகிய ஆறு விதமான வழிமுறைகளுக்கும் உண்மைப் பொருளாக இருக்கின்ற குருநாதனாகிய இறைவன் தம்மை அடையும் இந்த வழிமுறைகளை அறியாமல் மாயையில் சிக்கி சுழன்று கொண்டு இருக்கின்ற மனிதர்களை தான் வீற்றிருக்கும் தங்கம் போன்ற தில்லை சிற்றம்பலத்திற்குள் நுழைய வைத்து தம்மை வணங்கும் படி செய்து அவர்களை ஆட்கொள்கிறான்.

கருத்து: மாயையில் இருக்கின்ற மனிதர்களை சரியை முறையில் தான் வீற்றிருக்கும் கோயில்களுக்கு வரவைத்து தம்மை வணங்கும் படி செய்து அதன் பயனால் மாயையை நீக்கி ஞானத்தை கொடுத்து இறைவன் ஆட்கொள்கின்றான்.

பாடல் #1450

பாடல் #1450: ஐந்தாம் தந்திரம் – 5. சரியை (இறைவனை அடைவதற்கு வழிமுறையான சுத்த சைவத்திற்கு ஆதாரமானது சரியை ஆகும்)

சமயம் பலசுத்தி தன்செய லற்றிடு
மமையும் விசேடமு மரன்மந்திர சுத்தி
சமய நிருவாணங் கலாசுத்தி யாகு
மமைமன்னு ஞானமார்க் கம்மபி டேகமே.

பதம் பிரித்தது:

சமயம் பல சுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி
சமய நிருவாணம் கலா சுத்தி ஆகும்
அமை மன்னு ஞான மார்க்கம் அபிடேகமே.

பதப்பொருள்:

சமயம் (சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட) பல (பலவிதமான கோயில்களுக்கு) சுத்தி (சென்று அவற்றை சுற்றி வந்தால்) தன் (தன்னுடைய முயற்சியால்) செயல் (எல்லா செயல்களும்) அற்றிடும் (நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி விடும்)
அமையும் (அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற) விசேடமும் (சிறப்பானதும்) அரன் (பாதுகாக்க கூடியதும் ஆகிய) மந்திர (மந்திர உச்சாடனங்களால்) சுத்தி (தம்மை தூய்மை படுத்தி விடும்)
சமய (அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும்) நிருவாணம் (அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி) கலா (அறிவை) சுத்தி (சுத்தம்) ஆகும் (ஆக்கி விடும்)
அமை (அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில்) மன்னு (இறைவனை நிலைபெறும் படி செய்து) ஞான (இறையருளால் பெற்ற ஞானத்தின்) மார்க்கம் (வழியில்) அபிடேகமே (தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்).

விளக்கம்:

சமயம் சொல்கின்ற முறைப்படி அமைக்கப்பட்ட பலவிதமான கோயில்களுக்கு சென்று அவற்றை சுற்றி வந்தால் தன்னுடைய முயற்சியால் எல்லா செயல்களும் நடக்கின்றன என்ற எண்ணம் நீங்கி அனைத்தும் இறைவனாலே நடக்கின்றது என்ற எண்ணம் வந்து விடும். அதன் பிறகு அந்த கோயில்களில் அமைந்து இருக்கின்ற சிறப்பானதும் பாதுகாக்க கூடியதும் ஆகிய மந்திர உச்சாடனங்கள் தம்மை தூய்மை படுத்தி விடும். அதன் பயனால் சமயம் என்று சொல்லப்படுகின்ற எந்த விதிமுறைகளும் அதனைச் சார்ந்த எண்ணங்களும் நீங்கும் படி அறிவை சுத்தம் செய்து விடும். அதன் பிறகு தன்னுடை சுத்தமான அறிவில் இறைவனை நிலைபெறும் படி செய்து இறையருளால் பெற்ற ஞானத்தின் வழியில் தாம் செய்கின்ற அனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கின்றார்.

குறிப்பு: இந்தப் பாடல் சுவடிகளில் இல்லாததால் பிற்சேர்க்கை பாடலாக இருக்கலாம்.