பாடல் #1221: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
நின்றனள் நேரிழை யோடுட னேர்பட
இன்றெ னகம்படி யேழு முயிர்ப்பெய்துந்
துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்
ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1220 இல் உள்ளபடி சாதகருக்குள் இனிமையாக வீற்றிருக்கும் இறைவியானவள் தமது மேலான நிலைக்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்து கொண்டு சாதகரோடு சேர்ந்து அவருக்குள் நீண்டு பரவி இருக்கும் ஒரு பொழுதிலேயே சாதகருக்குள் இருக்கும் ஏழு சக்கரங்களும் மேன்மையான நிலையில் சக்தியூட்டம் பெறுகிறது. அதன் பிறகு சாதகருக்குள் இருக்கும் பத்து வாயுக்களும் (பாடல் #595 இல் காண்க) ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறி அதில் இறைவியின் நாமம் எப்போதும் இயல்பிலேயே இடைவிடாமல் ஓதிக் கொண்டே இருக்கும் போது இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் உண்மை நிலையை சாதகர் பரிபூரணமாக உணர்ந்து கொள்ளும்படி இறைவி அவருக்குள் நின்று அருள்புரிகின்றாள்.
கருத்து: சாதகரின் உடலுக்குள் இருக்கின்ற பத்து வாயுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உயர்ந்த நிலையில் பிராணனாக மாறும் பொழுது அதில் இறைவியின் நாமம் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் போது சாதகரால் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற உண்மை நிலையை பரிபூரணமாக உணர்ந்து கொள்ள முடியும் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
