பாடல் #1196: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
உள்ளொளி மூவிரண் டோங்கிய வங்கங்கள்
வெள்ளொளி யங்கியின் மேவி யவரொடுங்
கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.
விளக்கம்:
பாடல் #1195 இல் உள்ளபடி சாதகருக்குள் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியானவள் தனது சக்தியின் மூலம் சாதகருக்குள் இருக்கும் ஆறு ஆதாரச் சக்கரங்களுக்கும் உயர்ந்த நிலையை அருளி அவருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியாகிய அக்னியில் பரவி அதனோடு சேர்ந்து நிற்கின்றாள். தேன் நிறைந்து இருக்கும் கொன்றை மலர்களை மாலையாகச் சூடியிருக்கும் அரசனாகிய இறைவனுடன் ஒன்றாகக் கலந்து இறை சக்தியுடனே சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியானவள் சாதகர் தம்மை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளும்படி தொண்டைக்கு அருகில் இருக்கும் விசுத்திச் சக்கரத்தில் இருந்து கொடி போல மேலேறிச் சென்று தலை உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலிருந்து அமிழ்தமாகப் பொழிகின்றாள்.
