பாடல் #1192: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறி
அடங்கிடு மன்பின தாயிழை பாலே.
விளக்கம்:
பாடல் #1191 இல் உள்ளபடி ஐந்து பூதங்களையும் இறைவன் இறைவி ஆன்மாவுடன் ஒன்றாகப் பொருந்தி நின்று செய்கின்ற சாதகத்தையே தவமாக மேற்கொள்ளுகின்ற சாதகர்கள் தங்களின் உடலை மறந்து அதற்கு உள்ளே உணர்ந்து இருக்கின்ற இறை சக்தியை எண்ணிக் கொண்டே இருந்தால் அவர்களின் எண்ணத்தைத் தொடர்ந்து மூலாதாரத்திலுள்ள குண்டலினி சோதியானது எழும்பி சுழுமுனை நாடித் துளை வழியே மேலேறிச் சென்று சகஸ்ரதளத்தில் சோதியாக இருக்கின்ற பேரன்பின் வடிவான சாதகரின் அன்பிற்கு ஏற்ற அழகிய அணிகலன்களை அணிந்திருக்கும் இறைவியிடம் சென்று அடங்கி விடும்.
