பாடல் #1186: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
அதுவிது வென்னு மவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.
விளக்கம்:
உலகப் பற்றுக்களில் அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகின்ற ஆசைகளை அகற்றி விட்டு இறைவியைப் போற்றி வணங்கி தியானத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியே மூச்சுக்காற்றை செலுத்தி மூச்சுக் காற்றையும் இறப்பையும் வென்று என்றும் இறவாமல் இருக்கும் வழி என்று சந்திர மண்டலத்தில் தாமரை மலரில் வீற்றிருக்கும் இறைவியானவள் எம்மிடம் எடுத்துக் கூறிய மண்டலங்கள் மூன்றாகும்.
கருத்து:
இறைவனை அடைய விரும்பி உலக ஆசைகளை விட்டுவிட்டு இறைவியைப் போற்றி வணங்கி சாதகம் செய்பவர்களுக்கு இறைவி காட்டிய வழியில் பாடல் #612 இல் உள்ளபடி மூலாதார சக்கரத்தில் இருக்கும் அக்னி மண்டலம் ஆக்ஞா சக்கரத்தில் இருக்கும் சந்திர மண்டலம் சகஸ்ரதளத்தில் இருக்கும் சூரிய மண்டலம் ஆகியவற்றுக்கு மூச்சுக் காற்றை சுழுமுனை நாடி வழியே செலுத்தினால் மூச்சுக் காற்றை தம் வசப்படுத்தி என்றும் இறப்பு இல்லாத நிலையை அடையலாம்.
