பாடல் #1162: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோ
டுகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.
விளக்கம்:
பாடல் #1161 இல் உள்ளபடி இறைவியோடு கலந்து பேரின்பத்தில் திளைத்து நிற்கின்ற சாதகன் தனது சாதகத்தில் முழுமையை அடைந்த பிறகு தமது ஆக்ஞா சக்கரத்தில் ஒளி பொருந்திய நெற்றிக் கண்ணாக இருக்கின்ற பேரறிவு ஞானத்தைப் பெறுகின்றான். அந்தப் பேரறிவு ஞானத்தை சகஸ்ரதளத்தில் இருக்கும் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலருக்குள் புகுந்து செல்லும்படி செலுத்தி அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் தாங்கியிருக்கும் இறைவியின் தோளோடு தன் தோளையும் சேர்த்து தாங்கி நிற்கின்றான்.
