பாடல் #1243

பாடல் #1243: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்
கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்
பயிற்று முலகினிற் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

விளக்கம்:

பாடல் #1242 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக் கொண்டவர்களுக்கு அவர் கூறிய வழியாவது இறைவனை நினைத்து அவரின் நன்மையான மந்திரங்களை ஓதி நறுமணம் மிக்க மலர்களைத் தூவி தூய்மையான வாசனை மிக்க தூபத்தைக் காட்டி மனதையும் ஐந்து புலன்களையும் அடக்கி வைத்து எண்ணங்கள் முழுவதையும் தூய்மைப் படுத்தி கவர்ந்து கொள்கின்ற தூய்மையான நெய்யில் எரிகின்ற தீபத்தை ஏற்றி வைத்து வேத ஆகமங்கள் அருளிய முறைப்படி இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து உலகங்களுக்கும் தலைவனாகிய இறைவனுக்கு பூசை செய்து அனைத்து உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இறைவனையும் இறைவியையும் சென்று அடையும் வழி இதுவே என்று அருளுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.