பாடல் #1225

பாடல் #1225: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தானிகழ் மோகினி சார்வான யோகினி
போன மயமுடை யாரடி போற்றுவர்
ஆனவ ராவியி னாகிய அச்சிவத்
தானாம் பரசிவ மேலது தானே.

விளக்கம்:

பாடல் #1224 இல் உள்ளபடி ஐந்து தொழில்களையும் புரியும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்ட சாதகர் அவருக்குள் எப்போதும் இயங்கிக் கொண்டு இருக்கின்ற குண்டலினி சக்தியையும் அதைச் சார்ந்து இருக்கின்ற யோகத்தின் காரியமாக விளங்கும் சக்தியையும் தாண்டி மேல் நிலைக்குச் சென்று பராசக்தியின் தன்மையை அடைந்து அவளின் திருவடியைப் போற்றி வணங்குவார்கள். அவ்வாறு இறைவியின் திருவடிகளைப் போற்றி வணங்கிக் கொண்டு இருக்கும் சாதகர்களின் ஆன்மா பரம்பொருளாகிய இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடைந்து அதையும் தாண்டி அனைத்திற்கும் மேலான நிலையில் இருக்கும் அசையா சக்தியாகிய பரசிவத்தோடு ஒன்றாகக் கலந்துவிடும்.

கருத்து:

பராசக்தியின் நிலையை அடைந்த சாதகர்கள் அவளின் திருவடிகளை போற்றி வணங்கிக் கொண்டே இருந்தால் இறைவனின் அம்சமான சிவம் எனும் நிலையை அடைந்து அதன் பிறகு அனைத்திற்கும் மேலான அசையா சக்தியாகிய பரசிவத்தோடு கலந்துவிடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.