பாடல் #1207

பாடல் #1207: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சூடிடு மங்குச பாசத் துளைவழி
கூடு மிருவளை கோலக்கைக் குண்டிகை
நாடு மிருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடு சீர்புனை யாடக மாமே.

விளக்கம்:

பாடல் #1206 இல் உள்ளபடி சந்திர மண்டலத்தில் நறுமணம் வீசுகின்ற மலர்களை சூடிக்கொண்டு இருக்கின்ற இறைவியானவள் தனது கைகளில் ஆணவத்தை அடக்குகின்றா அங்குசத்தையும் உயிர்களின் பிணைப்பாகிய பாசக் கயிறையும் வைத்துக் கொண்டு சுழுமுனை நாட வழியே சென்று அடைகின்ற இடமாக வீற்றிருக்கின்றாள். இரண்டு கைகளிலும் வளைகள் அணிந்து பேரழகு வாய்ந்த அவளது திருக்கரங்களில் உடுக்கையையும் நெருப்பு சட்டியையும் வைத்துக் கொண்டு சாதகர்கள் நாடுகின்ற இறைவன் இறைவி எனும் இரண்டு திருவடிகளைக் கொண்டு நன்மையின் வடிவமாக முலாதாரத்திலிருந்து சகஸ்ரதளம் வரை நீண்டு இருக்கும் சுழுமுனை நாடியில் உருத்திர நடராஜ வடிவமாக நின்று திருநடனம் புரிந்து கொண்டு இருக்கின்றாள். சீரும் சிறப்பும் மிக்க அவளோடு சாதகர்கள் ஒன்று சேர்ந்து விட்டால் அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாக திருநடனம் புரிகின்ற அம்பலமாக மாறிவிடும்.

கருத்து:

சந்திர மண்டலத்தில் பேரொளியாக வீற்றிருக்கும் இறைவியை தமக்குள் அறிந்து கொண்டு உணர்ந்து விட்ட சாதகர்கள் அவளோடு தாமும் ஒன்றாக சேர்ந்து விட்டால் அவரது உள்ளமே இறைவனும் இறைவியும் சேர்ந்து நடராஜ உருவமாக திருநடனம் புரிகின்ற அம்பலமாக ஆகிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.