பாடல் #1211

பாடல் #1211: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்
சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்
கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோ
டேலவந்து ஈண்டி யிருந்தனள் மேலே.

விளக்கம்:

ஆலகால விஷத்தை தாம் ஏற்றுக் கொண்டு அமரத்துவம் தருகின்ற சிவ அமிழ்தத்தை விண்ணுலகத்தில் இருக்கும் தேவர்களுக்கு அருளிய இறைவனின் திருவடிகளை சரணாகதியாக கொண்டு வீற்றிருக்கும் சாதகர்களுக்கு இறைவன் தாம் தேவர்களுக்கு அருளிய சிவ அமிழ்தத்தைக் கொடுத்து இறப்பில்லாத நிலையை அருளுகின்றார். அதன் பிறகு அவர்கள் சிவ அமிழ்தம் அருந்தியதின் பயனாக சிவ இன்பமும் கிடைக்கப் பெற்று அதிலேயே இறைவனோடு சேர்ந்து வீற்றிருப்பார்கள். அப்போது குண்டலினி சக்தி வந்து சேருகின்ற இடமாகிய சுழுமுனை நாடியின் உச்சித் துளையில் நின்று ஆடுகின்ற இறைவியும் முன்னதாகவே வந்து இறைவனோடு சேர்ந்து தலை உச்சியிலுள்ள சகஸ்ரதளத்தில் வீற்றிருப்பாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.