பாடல் #1223

பாடல் #1223: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமது அங்கியு மாதியு மீசனும்
மாமது மண்டல மாருத மாதியும்
ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்
கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே.

விளக்கம்:

பாடல் #1222 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் காணும் இறைவனின் மேல் பேரன்பு கொண்ட இறைவியின் திருவுருவமானது அக்னியாகவும் ஆதிப் பரம்பொருளாகவும் இறைவனாகவும் மிகப் பெரியதாக விரிந்து பரவி இருக்கும் அக்னி சூரிய சந்திர ஆகிய மூன்று மண்டலங்களாகவும் வாயு முதலாகிய ஐந்து பூதங்களாகவும் அதிலிருந்து உருவாகி உலகத்திற்கு இறங்கி வருகின்ற உயிராகவும் அந்த உயிரைத் தாங்கி இருக்கின்ற உடலாகவும் அதற்குள் உண்மையை மறைத்துக் கொண்டு இருக்கும் மாயையாகவும் இருக்கின்றது. அந்த இறைவியே மேன்மை மிகுந்த மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கும் பேரழகு பொருந்திய கூந்தலுடன் சாதகரின் உடலைத் தாங்கிக் கொண்டு நடுவில் இருகின்ற சுழுமுனை நாடியாகவே இருக்கின்றாள்.

கருத்து:

பாடல் #1222 இல் சாதகருக்குள் காட்சி கொடுத்த இறைவியின் திருவுருவம் சாதகருக்குள் இருக்கின்ற விதத்தை இந்த பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.