பாடல் #1157

பாடல் #1157: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மாதுநல் லாளு மணாள னிருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப்பெய வல்லீரேல்
வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

விளக்கம்:

பாடல் #1156 இல் உள்ளபடி சாதகரின் ஐந்து புலன்களையும் தடுத்தருளி பேரழகுடன் நன்மையின் வடிவமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் இறைவனுடன் சேர்ந்து அவனில் சரிபாதியாக இருக்கின்ற போது ஜோதி வடிவத்தில் பூரண சக்தியாக வீற்றிருக்கின்றாள். இந்த இறைவியை தமது உயிருக்குத் துணையாக பெற்றுக் கொள்ள முடிந்த சாதகர்களுக்கு வினைகளினால் வரும் துன்பங்களைத் தீர்த்து அவர்களோடு இருக்கும் மாசு மலங்களை அகற்றி தூய்மையாக்கி அருளுகின்றாள் இறைவி.

கருத்து: இறைவி தன்னுடைய பெண் அம்சத்திலேயே இருந்தாலும் சரி பாதி ஆண் அம்சத்திலும் இறைவனோடு சேர்ந்து வீற்றிருக்கிறாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.