பாடல் #1227

பாடல் #1227: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

மார்க்கங்க ளீன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கு மறிய அரியா ளவளாகும்
வாக்கும் மனமும் மருவியொன் றாய்விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாகுமே.

விளக்கம்:

பாடல் #1226 இல் உள்ளபடி பிரணவ மந்திரத்துக்குள் அடங்கி இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் இறைவனை நோக்கி சென்று அடைகின்ற வழிகளை கொடுத்து அருளிய இறைவியானவள் இறைவனும் இறைவியும் சேர்ந்த மனோன்மணியாக நன்மையின் வடிவமாகவே இருக்கின்றாள். எவராலும் அவ்வளவு எளிதில் அறிந்து கொள்வதற்கு மிகவும் அரிதானவளாக அவள் இருக்கின்றாள். சிற்றறிவின் சிந்தனைகளையும் அதன் மூலம் நிகழும் செயல்களையும் விட்டு விட்டு இறைவனோடு ஒன்றாகிவிட்ட பேரறிவை நோக்கி செல்லுகின்ற சிறப்பை பெற்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இறைவியே இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.