பாடல் #1185

பாடல் #1185: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

இருந்தன ளேந்திழை யென்னுள்ள மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னி
நிரந்தர மாகிய நீர்திசை யோடு
பொருந்த விலக்கிற் புணர்ச்சி யதுவே.

விளக்கம்:

பாடல் #1184 இல் உள்ளபடி சாதகர்களோடு கலந்து இன்பமாக வீற்றிருக்கின்ற இறைவியானவள் எவ்வாறு கலந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம். இறைவியானவள் பேரழகுடன் ஆபரணங்களை அணிந்து கொண்டு எமது உள்ளதிற்குள் புகுந்து வீற்றிருந்து எம்மோடு கலந்து இருப்பதில் மேல் நிலை பெற்றதை யாம் பரிபூரணமாக எமக்குள் உணர்ந்து அதையே எப்போதும் மனதிற்குள் எண்ணிக்கொண்டு இறைவியோடு இருப்பதே என்றும் நிரந்தரம் என்கிற உணர்வோடு பத்து திசைகளிலும் வீற்றிருக்கின்ற இறைவியோடு யாமும் சேர்ந்து இருப்பதையே குறிக்கோளாக வைத்து இருப்பது இறைவியோடு உண்மையாகக் கலந்து இருக்கும் நிலையாகும்.

கருத்து: இறைவி தமக்குள் கலந்து இருப்பதை உணர்ந்திருப்பதைப் போலவே தம்மைச் சுற்றி இருக்கும் பத்து திசைகளிலும் இருக்கும் இறைவியோடு தாமும் கலந்து இருப்பதே இறைவியோடு உண்மையாகக் கலந்து இருக்கும் நிலையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.