பாடல் #1219

பாடல் #1219: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள்
ஆகிநின் றார்களி லாருயி ராமவள்
ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்
தாகிநின் றானவ னாயிழை பாடே.

விளக்கம்:

பாடல் #1218 இல் உள்ளபடி ஆதியும் அந்தமுமாக சாதகருக்குள் வீற்றிருக்கும் இறைவியாகவே மாறி விடுகின்ற சாதகர்கள் காலமாகவும் கலைகளாக இருக்கின்ற ஐம்பத்தொரு தத்துவங்களாகவும் ஆகி நிற்கின்ற போது அவருடைய ஆருயிராக இறைவியே இருக்கின்றாள். இவ்வாறு இறைவியாகவே ஆகி நிற்கின்ற சாதகருடன் இறைவியும் சேர்ந்து நின்று சக்தி மயங்களாக வீற்றிருக்கும் போது இறைவனும் அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் இறைவியுடன் சரிபாகமாக சேர்ந்து வீற்றிருக்கின்றார்.

கருத்து: சாதகருடைய ஆருயிராகவே இறைவி வீற்றிருக்கும் விதத்தை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.