பாடல் #1201

பாடல் #1201: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத் தம்மூலத்தி லேவைத்து
நிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்
சந்தியில் வைத்துச் சமாதிசெய் வீரே.

விளக்கம்:

பாடல் #1200 இல் இறைவி தமது சிந்தையில் வைத்து அருளிய திருவடிகளை சாதகர்கள் தமது தலைக்கு உச்சியில் இருக்கும் சகஸ்ரதளத்திலும் சகஸ்ரதளத்திற்கு முன்பு இருக்கின்ற ஆதார சக்கரங்களிலும் இறுதியில் இருக்கின்ற மூலாதாரத்திலும் வைத்து தம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தில் மாயையால் நடக்கும் நன்மை தீமைகளில் எண்ணங்களைப் போக விடாமல் இறைவனைப் பற்றி மட்டுமே எண்ணுகின்ற எண்ணங்களில் இறைவியின் திருவடிகளை வைத்து பிறகு அனைத்திலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒருமுகமாக ஒரே இடமாக்கி வைத்து சமாதி நிலையில் தியானித்து இருங்கள்.

கருத்து:

ஏழு ஆதார சக்கரங்களிலும் எண்ணங்களிலும் இறைவியின் திருவடிகளை வைத்து தியானித்த பிறகு இப்படி எட்டு இடங்களிலும் வைத்த இறைவியின் திருவடிகளை ஒரே இடமாக்கி வைத்து தியானிக்கும் போது சமாதி நிலையை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.