பாடல் #1323

பாடல் #1323: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடு முன்னே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கு
நின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

கணடிடுஞ சககரம வெளளிபொன செமபிடை
கொணடிடு முனனெ குறிதத வினைகளை
வெனறிடு மணடலம வெறறி தருவிககு
நினறிடு சககரம நினைககு மளவெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

கண்டிடும் சக்கரம் வெள்ளி பொன் செம்பு இடை
கொண்டிடும் முன்னே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே.

பதப்பொருள்:

கண்டிடும் (சாதகர் கண்டு அறிந்த) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம்) வெள்ளி (வெள்ளி போன்ற தூய்மையுடனும்) பொன் (பொன் போன்ற பிரகாசத்தோடும்) செம்பு (செம்பு போன்ற உறுதியுடனும்) இடை (மனதிற்கு உள்ளே)
கொண்டிடும் (உள் வாங்கி வைக்கும் போது) முன்னே (இந்த பிறவிக்கு முன்பே) குறித்த (குறிக்கப்பட்ட / முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும்) வினைகளை (அனைத்து வினைகளையும்)
வென்றிடும் (வென்று அழித்துவிடும்) மண்டலம் (இந்த சக்தி மண்டலம்) வெற்றி (ஐந்து புலன்களையும் வெற்றி) தருவிக்கும் (பெறுவதற்கும் வழி கொடுக்கும்)
நின்றிடும் (உறுதியாக நிற்கின்ற) சக்கரம் (இந்த நவாக்கிரி சக்கரமானது) நினைக்கும் (எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ) அளவே (அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1322 இல் உள்ளபடி சாதகர் கண்டு அறிந்த நவாக்கிரி சக்கரத்தை சாதகத்தின் மூலம் வெள்ளி போன்ற தூய்மையுடனும், பொன் போன்ற பிரகாசத்தோடும், செம்பு போன்ற உறுதியுடனும் மனதிற்கு உள்ளே உள் வாங்கி வைக்கும் போது சாதகரின் இந்த பிறவிக்கு முன் பிறவியிலிருந்தே தொடர்ந்து வரும் அனைத்து வினைகளையும் இந்த சக்கரத்தின் சக்தி மண்டலமானது வென்று அழித்துவிடும். ஐந்து புலன்களையும் வெற்றி பெறுவதற்கும் வழி கொடுக்கும். இந்த நவாக்கிரி சக்கரமானது எந்த அளவிற்கு சாதகர் தியானிக்கின்றாரோ அந்த அளவுக்கு நிலை பெற்று நிற்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.